Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | அஞ்சலி | சிறுகதை | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | வாசகர்கடிதம் | முன்னோடி | ஹரிமொழி | கவிதைபந்தல் | அன்புள்ள சிநேகிதியே
Tamil Unicode / English Search
கதிரவனை கேளுங்கள்
ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-18f)
- கதிரவன் எழில்மன்னன்|அக்டோபர் 2021|
Share:
முன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்துகொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து இதை வடிவமைத்துள்ளேன். ஆனால் இது வெறும் தமிழாக்கமல்ல. இதில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்ட உத்தேசம்.

கேள்வி: நான் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க உள்ளேன். ஆரம்பிக்கும் முன்னமே என் யோசனையைப் பற்றி பொது ஆரம்பநிலை அனுபவமும் நிபுணத்துவமும் உடையவர்களிடமும், வருங்கால வாடிக்கையாளர்களிடமும் கலந்தாலோசிப்பது அத்தியாவசியம் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் அப்படிச் செய்தால் யாராவது என் யோசனையைத் திருடி என்னுடனேயே போட்டிக்கு வந்து விடுவார்கள் என்று நான் தயங்குகிறேன். என் தயக்கம் சரியானதா? அல்லது, அதைத் தள்ளி வைத்துவிட்டுக் கலந்தாலோசிப்பதே நல்லதா? விளக்குங்களேன்.

(தொடர்கிறது)

கதிரவனின் பதில்: கலந்தாலோசித்தே தீர வேண்டும் என்று ஆணித்தரமாகக் பதிலளித்து விளக்க ஆரம்பித்தேன். முதலில், ஏன் அப்படி அடித்துச் சொல்கிறேன் என்பதற்கான காரணங்களை மேலோட்டமாகப் பட்டியலிட்டோம்:

1. ஒரு டாலருக்குப் பத்து யோசனைகள். (முக்கியத்துவம் மிகக் குறைவு)
2. வளர்ச்சியில் (அல்லது தோல்வியில்) நேரும் யோசனை மாற்றங்கள்
3. கரப்பான் பூச்சிகள் (என்னடா இது என்கிறீர்களா, பொறுமை! பின்பு விளக்குகிறேன்!)
4. இறகுபோல் மெல்லிய யோசனை: ஊதினால் பறந்து விடுமோ?

இப்போது மேற்கண்டவற்றை ஒவ்வொன்றாக விவரித்து வருகிறோம். முதலாவதாக, யோசனைகளின் மதிப்பு மலிவு, குழுவின் திறனுக்கும் வலிமைக்குமே அதிக மதிப்பு என்பதை விளக்கினோம். அடுத்து, ஆரம்பநிலை நிறுவனங்கள் பெரும்பாலும் தத்தம் போக்கில் சில யோசனை மாற்றங்களை அனுபவித்த பிறகுதான் வெற்றி அடைகின்றன என்பதைப்பற்றிக் கூறி, அப்படிப்பட்ட மாறக்கூடிய யோசனையைப் பதுக்கத் தேவையில்லை; அதைப்பற்றிக் கலந்தாலோசித்துச் சரியான பாதையைத் தேடுவதே சரி என்றும் கூறினோம். மேலும் கலந்தாலோசிக்கும் நிபுணர்கள் தங்கள் பாதையில் கவனமாயிருப்பார்களே ஒழிய உங்கள் யோசனையைத் திருடும் நோக்கில் இருப்பதில்லை என்றும் உணர்த்தினோம்.

அதன்பின், உங்கள் யோசனை ஒன்றும் அப்படியே தனித்துவம் வாய்ந்ததல்ல என்றும், ஒரே சமயத்தில் பற்பல குழுக்கள் (கண்ணில் தென்படாத கரப்பான் பூச்சிகள்!) கிட்டதட்ட ஒரே மாதிரியான யோசனையை மையமாக வைத்து நிறுவனம் ஆரம்பிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்றும் விவரித்தோம். உங்கள் நிறுவனம் அவ்வாறு ஈடுபடும் மற்ற முயற்சிகளிலிருந்து எத்தகைய வித்தியாசம் வாய்ந்தது என்பது முக்கியம் என்றும் கண்டோம்.

இப்போது நான்காவது காரணமான "இறகுபோல் மெல்லிய யோசனை: ஊதினால் பறந்து விடுமோ?" என்பதை விளக்குவோம். இதைப்பற்றி முன்பே நிபுணர்களைக் கலந்தாலோசிப்பதைப் பற்றி விவரிக்கையில் குறிப்பிட்டிருந்தோம். உங்கள் யோசனையை மேலோட்டமாகக் கலந்தாலோசித்தாலே யாரோ எளிதாகத் திருடித் தாங்களே நடைமுறைப்படுத்த முடிந்தால் அது இறகுபோல் மெல்லியதாகும்! அவ்வாறு மெல்லிய யோசனையாக இருந்தால் அதை மையமாக வைத்து ஒரு நிறுவனத்தை வளர்க்க இயலாது!

ஏனெனில், உங்கள் யோசனை எப்படியாவது வெளிப்பட்டே தீரும். அந்த யோசனையில் வாடிக்கையாளர்களுக்கும் பயனர்களுக்கும் நல்ல பலன் இருந்தால் அதைப் பல நிறுவனங்கள் நடைமுறைப்படுத்த முன்வருவார்கள். அது மற்ற புதிய நிறுவனங்களாக இருக்கலாம், அல்லது ஏற்கனவே உள்ள நிறுவனங்கள் தங்களின் விற்பொருள் அல்லது சேவையின் மற்றொரு அம்சமாக அளிக்க முற்படுவார்கள். மெல்லிய யோசனை என்பதால் அவர்கள் எளிதாக அவ்வாறு செய்யமுடியும். அதனால் கூடிய சீக்கிரம் உங்கள் நிறுவனம் கழுத்தளவுக்குப் போட்டியாளர் கும்பலில் ஆழ நேரிடும். அதனால் எளிதாகப் பிரதி செய்யமுடியாத (copy or duplicate) அளவுக்கு உங்கள் யோசனை ஆழமானதாக இருக்கவேண்டும்.

ஆரம்பநிலை முதலீட்டாரும் யோசனையில் வித்தியாசமும் ஆழமும் உள்ளதா என்று பரிசோதனை செய்துதான் முதலிட முன்வருவார்கள். (அவர்களுக்கு மிகப் பரிச்சயமான, மிக பலமுள்ள குழு என்றால் இந்த நிபந்தனையைச் சற்று தளர்த்தலாம். ஆனால் அது அபூர்வம்,)

ஆழமுள்ள வித்தியாசங்களைப் பற்றி விவரிக்குமுன், எனக்குச் சற்றும் பிடிக்காத ஒரு விஷயத்தைப் பற்றிச் சொல்ல விரும்புகிறேன். "முதல் முனைவோர் அனுகூலம்" (First Mover Advantage) என்பதுதான் அது! எனக்குப் பிடிக்காதது என்பதால் அதற்கு வேடிக்கையான சுருக்கமாக முமுகூலம் என்று இனிமேல் குறிப்பிடுவேன். 2001-இல் டாட்காம் உருக்கரைப்பு (dotcom meltdown) ஆகும் முன் இந்த முமுகூலம் மிகப்பிரபலமாக இருந்தது! அதாவது, எந்த விஷயமானாலும் சரி, அதற்கு யார் முதலில் ஒரு டாட்காம் இணையதளத்தை உருவாக்கி ஒரு மில்லியன் பயனர்களைப் பதிப்பித்துக் கொள்கிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவது உறுதி என்ற ஒரு பொய்யான கணிப்பு இருந்தது.

பயனர்களைக்கூட அக்காலத்தில் வெறும் கண்களாக எண்ணிவிட்டார்கள்! 'விழிப்பந்து எண்ணிக்கை' (number of eyeballs) என்னும் குறியீட்டை வைத்தே எந்த இணையதளம் முன்னணியில் உள்ளது என்று கணிக்கும் கெட்ட வழக்கமும் வளர்ந்தது. அந்த இணையதளம் வருமானம் பெற வாய்ப்புள்ளதா, பல வருடங்களுக்குப் பிறகாவது லாபம் பெற வாய்ப்புள்ளதா என்பதை எல்லாம் கண்டுகொள்ளவே இல்லை!

சில மாதங்களுக்கு அந்த விழிப்பந்துக் கணிப்பும் முமுகூலமும் கொடிகட்டிப் பறந்தது என்னவோ உண்மைதான். அதனால், ஆழமான வித்தியாசமே தேவையில்லை, முதலில் முனைந்து மில்லியன் பயனர்களை, இல்லை இல்லை, இரண்டு மில்லியன் விழிப்பந்துகளைக் கவர்ந்தால் போதும் என்று தொழில்முனைவோர் எண்ண ஆரம்பித்தனர். ஆனால் 2001ல் டாட்காம்கள் உருகிக் கவிழ்ந்ததும்தான் அவர்களுக்குச் சற்று நல்லபுத்தி வர ஆரம்பித்தது. முதலில் முனைந்தால் மட்டும் போதாது, பயனர்கள் நன்கு பயனடைந்து, விளம்பரம் மற்றும் மின்வலை வணிகம் மூலம் நல்ல வருமானம் பெற்றே தீரவேண்டும் என்ற நன்னிலை வந்தது. சமூக வலையில் ப்ரெண்ட்ஸ்டர் முதலில் முனைந்தாலும், அப்புறம் வந்த முகநூல் பெரிய வெற்றி பெற்றதை இங்கு நினைவுகூர வேண்டும்!

அதனால், துறையில் திறன்பெற்ற எவருடனும் கலந்தாலோசிக்காமல், ரகசியமாக அவசர அவசரமாக முதலில் முனைந்து வெற்றி பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தைத் தவிர்க்க வேண்டும்.

அப்படியானால், யோசனை இறகுபோல் லேசானதாக இருந்தாலும் பரவாயில்லை, பயனர்கள் பெருமளவில் பயன்படுத்தினால் வெற்றி பெற்றுவிடலாம் என்ற எண்ணம் வரக்கூடும் அல்லவா!

அடுத்து அந்தக் கேள்வியைப் பற்றியும், கலந்தாலோசிக்க வேண்டும் என்பதற்கான நான்காவது காரணத்தின் மற்ற அம்சங்களைப் பற்றியும் மேற்கொண்டு காண்போம்.

(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline