Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | பொது
Tamil Unicode / English Search
கதிரவனை கேளுங்கள்
ஆரம்பநிலை நிறுவன யுக்திகள்
- கதிரவன் எழில்மன்னன்|அக்டோபர் 2020|
Share:
(பாகம்-17b)
முன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து இதை வடிவமைத்துள்ளேன். ஆனால் இது வெறும் தமிழாக்கமல்ல. இதில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்ட உத்தேசம்.

★★★★★


கேள்வி: நான் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து விற்பொருள் தயாரித்து, முதல் சில வாடிக்கையாளர்களையும் பெற்றுவிட்டேன். இந்நிலையில், ஒரு சூறாவளியோடு (tornado) ஒட்டிக்கொண்டால் வேகமாக வளர வாய்ப்புள்ளது என்று கேள்விப்பட்டேன். அப்படியென்றால் என்ன அர்த்தம்? சூறாவளி வணிகச் சந்தையில் களேபரம் விளைவிக்குமே, அத்தோடு ஒட்டினால் நாம் சுக்கு நூறாகிவிட மாட்டோமா? எப்படி வேகமாக வளர வாய்ப்புக் கிட்டும்? சூறாவளியில் நானே மாட்டிக்கொண்டது போலத் தலை சுற்றுகிறது. சற்று விளக்குங்களேன்!

கதிரவனின் பதில் (தொடர்ச்சி): சென்ற பகுதியில், நம் செயல்பாட்டுப் பரப்பில் சூறாவளி என்றால் வெகுவேகமாக வளரும் விற்பொருட்கள், நிறுவனங்கள் மற்றும் வணிகச்சந்தைகள் என்பதாகக் கண்டோம். மேலும், சூறாவளியைச் சார்ந்து செயல்பட்டதால் தாங்களும் வேகமாக வளர்ந்த உதாரணங்கள் சிலவற்றையும் பார்த்தோம். இப்பகுதியில், அவ்வாறு சார்ந்து செயல்படுவதற்கான சில வழிமுறைகளை விவரிப்போம்.

முதற்படியாக நீங்கள் சார்ந்துகொள்ள வேண்டிய சூறாவளி எது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். சில நிறுவனங்களுக்கு அது மிக எளிதான விஷயம். நாம் உதாரணமாகக் கூறியபடி நொவெல் நிறுவனத்துக்கு தனிக்கணினிச் சந்தையின் வெகுவேக வளர்ச்சி, அதைச் சாரவேண்டும் என்பதை வெகு எளிதாக, தெளிவாகப் புலப்படுத்தியது.

இத்தகைய நிறுவனங்கள் பல, ஒரு மேடையைச் சார்வதற்கென்றே ஆரம்பிக்கப்படுகின்றன. அதாவது, சூறாவளி மேடையாக உள்ளது, வேகமாக வளர்கிறது என்பதை உணர்ந்து, ஆரம்பத்திலிருந்தே அதைச் சார்ந்தே வணிகப் போக்கை வைத்துச் செயல்படும் திட்டம்.

அந்தச் சந்தையைப் பயன்படுத்துபவர்களுக்குத் தேவையான, அல்லது அம்மேடையின் அம்சங்களைப் பயன்படுத்தி எதாவது ஒரு நல்ல விற்பொருளையோ, சேவையையோ தயாரிப்பதற்காகவே அம்மாதிரி நிறுவனத்தை ஆரம்பிப்பதுண்டு. மின்வலையின் வளர்ச்சியைத் தழுவி ஆரம்பிக்கப் பட்ட நெட்ஸ்கேலர் நிறுவனத்தை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். அதை இதற்கும் உதாரணமாகக் கூறலாம்.

ஆனால், சில நிறுவனங்கள் ஏற்கனவே வேறு வணிகப் போக்கில் செயல்பட்டுக் கொண்டிருப்பினும், ஒரு சூறாவளியைப்பற்றி உணர்ந்து கொண்டதும் தங்கள் வணிகப் போக்கை ஒட்டுமொத்தமாக அந்தச் சூறாவளி சார்புக்கு மாற்றிவிடுவார்கள்.
அதற்கு இரண்டு விதமான உதாரணங்களை அளிக்கிறேன். ஒன்று ஏற்கனவே குறிப்பிட்ட எக்ஸொடஸ் நிறுவனம். அது ஆரம்ப காலத்தில், நிறுவனங்களுக்கு மின்வலைத் தொடர்பு அளிக்கும் வணிகத்தில் ஈடுபட்டிருந்தது. ஆனால், திடீரெனப் பல வாடிக்கையாளர்கள் தங்கள் சேவைக் கணினிகளை உங்கள் தகவல்மையத்திலேயே நிறுவவேண்டும், ஏனெனில் மின்வலைப் பட்டையின் அளவு போதவில்லை, மேலும் அவ்வளவு கணினிகளை கவனித்துக்கொள்ளவும் ஆள் பற்றாக்குறை என்று கூறினர். இது வளரும் வேகத்தைப் பார்த்து, நாங்கள் அசந்தே போனோம்! அதனால் ஒரு முக்கிய முடிவுக்கு வந்தோம். நிறுவனங்களின் கட்டிடங்களுக்கு மின்வலைத் தொடர்பு அளிக்கும் சேவையை மூட்டை கட்டி வைத்துவிட்டு, மின்வலைத் தகவல் மைய சேவைக்குத் தாவினோம்! அந்த அளவுக்கு இணையச் சேவை சூறாவளியாக எக்ஸொடஸ் நிறுவனத்தை ஈர்த்தது.

மற்றொரு விதமான உதாரணம்: நிறுவன மாற்றத்துக்குப் பதில் ஒரு விற்பொருள் மாற்றம். அதே மின்வலை இணையத்தள சூறாவளி, மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தையும் தன் விற்பொருள் வணிகப் போக்கை மாற்றிக்கொள்ள வைத்தது. நெட்ஸ்கேப் (NetScape) நிறுவனம் தனது இணைய உலாவியை (Web Browser) வெளியிட்டு மிக அதிக வரவேற்பையும் பரபரப்பையும் பெற்றது.

அப்போது, மைக்ரோஸாஃப்ட் நிறுவனம் இணையத்தைப் பற்றி கவனிக்காமல், தனது MSN network மேல் அதிகவனம் செலுத்திக் கொண்டு, அதற்காக Blackbird என்னும் உலாவியையும், சேவை மென்பொருளையும் உருவாக்கிக் கொண்டிருந்தது. இணைய உலாவிக்கு முன் கரும்பறவை பற்றி வணிகச்சந்தையில் பரபரப்பு இருந்தது.

ஆனால், நெட்ஸ்கேப் நிறுவனம் இணைய உலாவியை வெளியிட்டதும் வணிகச்சந்தையில், நுகர்வோரும் நிறுவனப் பயனரும் (enterprise users) இனிமேல் இணைய உலாவியின் மூலம் மட்டுமே அனைத்துக் கணினிப் பயன்பாடுகளையும் (applications) அணுகிப் பயன்படுத்துவார்கள் என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். பல பெரும் நிறுவனங்கள் நெட்ஸ்கேப் நிறுவனத்தின் உலாவியை விலை கொடுத்து வாங்கி அவ்வாறு பயன்படுத்தவும் ஆரம்பித்தனர்.

அப்படி அனைத்துப் பயன்பாடுகளையும் இணைய உலாவி மூலமாகவே அனைவரும் பயன்படுத்தினால் இணைய உலாவியில் பெரும்சக்தி பெற்ற நெட்ஸ்கேப் நிறுவனம் கணினித் துறையில் ஆதிக்கம் பெறும் என்றும் பேச்சு எழுந்தது. அதுவரை கணினித் துறை முழுவதும் ஆதிக்கம் செலுத்தி, கணினி மென்பொருள் நிறுவனங்கள் அனைத்தையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்துக்கு இனிமேல் சரிவு காலந்தான் என்றுகூடப் பேச்சு எழுந்தது. அவ்வளவுதான்! மைக்ரோஸாஃப்ட் நிறுவனம் சிலிர்த்துக் கொண்டு, இணைய வாய்ப்பின்மேல் பாய்ந்து நெட்ஸ்கேப்பையும் ஆக்ரோஷத்துடன் தாக்க ஆரம்பித்தது. அடுத்து என்ன நடந்தது என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதானே!

இருப்பினும் இந்த விஷயத்தில் எப்படி மைக்ரோஸாஃப்ட் தன்னை மாற்றிக் கொண்டது, அதன் விளைவுகள் என்ன, என்பதையும் சூறாவளி மேடைகளோடு சார்ந்து வளர்வதற்கான மற்ற சில நுட்பங்களையும் அடுத்த பகுதியில், விவரிப்போம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline