'சொல்வேந்தர்' சுகி சிவம்
|
![](images/pg-tit-curve.jpg) |
|
![](http://www.tamilonline.com/media/Jun2010/hdrImages/pirabhakar-sundarrajan-hdr.jpg) |
![](http://www.tamilonline.com/media/Jun2010/4/376edb18-6f8c-4ca0-bbe3-e141db5d33c9.jpg) |
ஏப்ரல் 2010ல் அங்க்கீனா நெட்வர்க்ஸை (Ankeena Networks) தன்னில் இணைத்துக்கொள்வதற்கான திட்டவட்ட ஒப்பந்தம் ஒன்றை ஜூனிபர் நெட்வர்க்ஸ் செய்துகொண்டது. அங்க்கீனாவின் முதன்மைத் தொழில்நுட்ப அலுவலர் பிரபாகர் சுந்தர்ராஜன் மற்றும் அவரது சகாக்களுக்கு இது ஒரு முக்கிய மைல்கல். முதலில் நோக்கீனா நெட்வர்க்ஸ் என்ற பெயரில் அங்க்கீனா 2008ல் தொடங்கப்பட்ட போது பிரபாகர் சுந்தர்ராஜன் அதன் தலைவர். இதே அங்க்கீனாவை '2010 Hot Company' என்று தொழில்நுட்ப சஞ்சிகையான நெட்வர்க் ப்ராடக்ட்ஸ் கைடு அறிவித்தது. ஊடக வழங்கல் முறைகளில் (Media Delivery Systems) முன்னணி நிறுவனமான இதனை ஜூனிபர் இணைத்துக் கொண்டதில் வியப்பில்லை.
![](images/audicon.gif) ஒலி வடிவத்தில் கேட்க - Audio Readings by Saraswathi Thiagarajan
![](images/audio-play.jpg) ![](images/audio-STOP.jpg)
பிரபாகர் சுந்தர்ராஜனைத் தென்றல் வாசகர்கள் 'கதிரவன் எழில்மன்னன்' என்ற பெயரில் அறிவார்கள். 'சூரியா துப்பறிகிறார்', 'கதிரவனைக் கேளுங்கள்' போன்ற தொடர்களைத் தென்றல் தொடங்கிய காலத்திலிருந்தே எழுதி வருகிறார். தமிழ் அமெரிக்கர்களில் மிக வெற்றிகரமான தொழில்முனைவார்களில் ஒருவரான இவரைத் தென்றலுக்காக மினி நேர்காணல் செய்தோம். அந்த நறுக் கேள்விகளும் நச் பதில்களும்....
கேள்வி: நீண்ட, வெற்றிகரமான தொழில்முறைப் பாதை உங்களுடையது. இன்று நீங்கள் இருக்கும் இடத்துக்கு உங்களைக் கொண்டு வந்த முக்கியமான 2 நிகழ்வுகளை நினைவுகூர முடியுமா?
பதில்: முதலாவது, நான் IISC பொறியியல் பட்டப் படிப்புக்கு முதல் பத்துப்பேரில் ஒருவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கணம். அமெரிக்காவில் மேல் படிப்புக்கு வரவேண்டும் என்ற எண்ணம் தோன்ற அது காரணமானது. இரண்டாவது முக்கியத் தருணம், IBM-ல் உயர்நிலைப் பதவி ஒன்றை உதறிவிட்டு எக்ஸோடஸ் கம்யூனிகேஷன்ஸ் அமைப்பைத் தொடங்கியவரில் ஒருவனாகச் சேர்ந்த கணம். அப்போதுதான் இணையம் பரவத் தொடங்கியிருந்தது. அப்போதே இரண்டு தொடக்கநிலை நிறுவனங்களில் எனக்கு அனுபவம் இருந்தது. (ட்ரான்ஸார்க் நிறுவனத்தை ஐபிம் எடுத்துக்கொண்ட போதுதான் ஐபிஎம்முக்குப் போனேன்). எக்ஸோடஸில்தான் நான் ஒரு நிறுவனத்தைச் சிறிதுசிறிதாகத் தொடங்குவதில் நேரடி அனுபவத்தைப் பெற்றேன்.
கே: தொடக்கநிலைத் தொழில்முனைவோருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
![](images/caption1.jpg) | ஒத்த மனம் உள்ள, திறமையான கூட்டாளிகளைக் கண்டுபிடியுங்கள். திறன்வாய்ந்த, ஒற்றுமையாக உழைக்கும் குழு, ஒருவர் மற்றொருவருக்கு ஆற்றல் தரும், உதவி தரும். ஆரம்பகாலத் தடைகளைக் கடக்க இது அவசியம். | ![](images/caption2.jpg) |
ப: ஒத்த மனம் உள்ள, திறமையான கூட்டாளிகளைக் கண்டுபிடியுங்கள். திறன்வாய்ந்த, ஒற்றுமையாக உழைக்கும் குழு, ஒருவர் மற்றொருவருக்கு ஆற்றல் தரும், உதவி தரும். ஆரம்பகாலத் தடைகளைக் கடக்க இது அவசியம். முன்னனுபவம் கொண்ட தொழில்முனைவோரை வழிகாட்டிகளாகக் கொள்ளுங்கள்; டாட்காம் குமிழிக் காலத்தில் வந்த திடீர்ப் பணக்காரர்களையல்ல. அவர்கள் ஏற்றத் தாழ்வுகளைச் சமாளித்து எழுந்து நின்று வெற்றி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பெரிய, விரைந்து வளரும் சந்தையில் உங்களுக்கான பாதையைத் தேர்ந்தெடுங்கள். எல்லாத் தொடக்கநிலை நிறுவனங்களும் ஒரே பாதையில் சென்று வெற்றியடைவதில்லை. ஆனால், வளர்ந்து வரும் பெரிய சந்தை தருகின்ற எண்ணற்ற, மாறுபட்ட வாய்ப்புகளை, நல்லதொரு வழிகாட்டியைக் கொண்ட நல்லதொரு குழு பயன்படுத்தி வெற்றிபெற முடியும்.
கே: நீங்கள் தென்றல், TIE (The Indus Entrepreneurs) போன்ற மாறுபட்ட அமைப்புகளில் ஈடுபாடு கொண்டவராக உள்ளீர்கள். இந்தப் பொறுப்புகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?
ப: முன்னொரு முறை தென்றல் நேர்காணலில் இதே கேள்விக்கு விடை கூற்யிருக்கிறேன். இன்னமும் அதே பதில்தான். முக்கியமான செயல்பாடுகளுக்குப் போதிய நேரத்தை ஒதுக்க வேண்டும். குடும்பம், பணி, சமூகம், அறப்பணி - எல்லாமே வாழ்க்கையின் முக்கிய அங்கங்கள்தாம். இவற்றைத் திறம்பட நிர்வகிக்கும் அதிர்ஷ்டசாலி நான்.
கே: உங்களுடைய 'அடுத்த பெரிய திட்டம்' என்ன?
ப: திரும்பத் தருதல் - தொழில்முறையிலும், அறச்செயலிலும். தொழில்முனைவோர் குழுக்களுக்கள் வெற்றியை எட்டும் வகையில் அவர்களோடு எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதேபோல, இங்கேயும் உலக அளவிலும் தர்ம காரியங்களுக்கான நிதி உதவவும், சொந்த முயற்சிகளைச் செய்யவும் நேரம் ஒதுக்க விரும்புகிறேன்.
தொழில் முறையில் TIE இருக்கிறது. நற்பணி செய்ய 'உதவும் கரங்கள்'. அதைப்பற்றித் தென்றலில் நிறைய எழுதியுள்ளேன். India Literacy Project மற்றும் சில திட்டங்களையும் ஆதரித்துள்ளேன். இன்னும் நிறையச் செய்வதற்கான நேரம் வரும். அவற்றுக்கான நேரம் ஒதுக்க இன்னும் இரண்டு ஆண்டுகளாவது ஆகும். அதற்குள் Ankeenaa-வை Juniper Networks-உடன் இணைப்பது முழுமை பெற்றுவிடும்.
கே: சில நல்ல தகவல் ஆதாரங்களைத் தாருங்கள் (வலைப்பக்கம், புத்தகம், சஞ்சிகை எதுவானாலும்)?
ப: news.com தொழில்நுட்பச் செய்திகளைப் பெற மிக நல்லதொரு தளம். உலகளாவிய பொருளாதாரத் தகவல்களைப் பெற 'த எகனாமிஸ்ட்'. சமநிலையான செய்திகளை அது தருகிறது. நமது கேபிள் செய்திச் சேனல்கள் அவ்வாறில்லை. டேல் கார்னகியின் 'How to Stop Worrying and Start Living', ஜாஃப்ரி மூர் எழுதிய 'Crossing the Chasm' ஆகியவற்றைப் பரிந்துரைக்கிறேன்.
கே: தொழில்முறையில் நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியப் பாடம்?
ப: வாய்ப்புகள் பெரும்பாலும் சவால் போல வேடமிட்டு வரும் என்பது.
கே: மறக்க முடியாத ஒரு தலைவர், ஏன்?
ப: மஹாத்மா காந்தி. பணக்கார பாரிஸ்டர் ஒருவர் தலைவராக உருமாறி, ஒரு தேசத்தை வழிநடத்தியதோடு, மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்றவர்களுக்கும் அஹிம்சைப் பாதையில் முன்னோடி ஆனது. அவர் தனது எழுத்துகளால் பொருளாதாரம், சமுதாய முன்னேற்றம் ஆகியவற்றுக்கும் நிரம்பப் பங்களித்துள்ளார். என்னுடைய தொடக்கநிலை நிறுவனங்கள் ஒவ்வொன்றிலும் அவர் வாடிக்கையாளரைப் பற்றிக் கூறிய பொன்மொழி ஒன்றை வைத்ததுண்டு. "வருங்காலத் தலைமுறைகள் இப்படி ஒருவர் இந்த பூமியில் சதையும் ரத்தமுமாக நடந்தார் என்பதையே நம்ப மறுக்கும்" என்று ஐன்ஸ்டைன் சொன்னது நினைவுக்கு வருகிறது. |
|
![](http://www.tamilonline.com/media/Jun2010/4/4366adbe-ea8b-4478-958e-fcf1624056d1.jpg) |
கே: நீங்கள் படித்த புத்தகத்திலிருந்து மறக்க முடியாத ஒரு வாக்கியம்...
ப: "தற்போது இருக்கும் நிலைகுறித்துக் கவலைப்படுவது எதையும் சாதிக்காது, அது சக்தியை உறிஞ்சிவிடும். பிரச்சனையைத் தீர்க்க முயலுங்கள்" என்று டேல் கார்னகி கூறியது.
கே: நேர நிர்வாகத்துக்கு ஒரு நல்ல வழி...
![](images/caption1.jpg) | தனிநபரின் தேவைகளும் அவனது நிதிப் பற்றாக்குறையும் எவ்வாறு அவனது முடிவுகளைத் தீர்மானிக்கிறது என்பதைப் பொறுத்ததே நுண்பொருளாதாரம். | ![](images/caption2.jpg) |
ப: எனக்கே எதற்கும் நேரம் போதுவதில்லை. இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல நான் சரியான ஆள்தானா என்பதே சந்தேகம். 'Time Management for Dummies' படிப்பது உதவலாம்.
கே: அழுத்தத்தைச் சமாளிக்க ஒரு வழி...
ப: ஆழ்ந்து மூச்சுவிடுவது மூலம் அமைதியைப் பெறக் கற்றுக் கொள்ளலாம்.
கே: விழுமியம் (value) என்பதன் விளக்கம் என்ன?
ப: ஒரு வரியில் சொல்ல முடியாது. சொல்லியே ஆக வேண்டுமானால், உங்கள் இதயத்தில் மிகச் சத்தியமானதும் உயர்ந்ததும் எதுவோ அது என்பேன்.
கே: முரண்பாடுகளைத் தீர்க்க ஒரு வழி...
ப: இருவருக்கும் வெற்றி (win-win) ஆக அமையும் வழியைக் கண்டுபிடியுங்கள். எல்லோரும் கேட்பதெல்லாம் கிடைக்காமல் போகலாம். ஆனால் பெரும்பாலானோருக்குத் தேவையானதைக் காண முடியும்.
கே: பயணத்தின்போது விரும்பிச் செய்வது...
ப: இதுபோன்ற வினாக்களுக்கு விடையளிப்பது! பயண காலத்தில் இதுபோன்ற பல விட்டுப்போன விஷயங்களை செய்ய முடிகிறது.
கே: பெரும்பொருளாதார மாறிகளில் (macroeconomic variables) நீங்கள் கவனிக்கும் ஒன்று...
ப: நான் பொருளியலாளனல்ல. macroeconocmics என்பதற்கு எனக்கு ஸ்பெல்லிங் தெரியாது. பயிற்சி அதிகமில்லாத எனக்குக் கூட, வாடிக்கையாளர் நம்பிக்கை என்பது பொருளாதாரத்தின்மீது பெரும் தாக்கம் செலுத்துவதாகத் தெரிகிறது. வேலை வாய்ப்பு அளவீடு அதனைத் தற்போது பிரதிபலிப்பதாகத் தோன்றுகிறது.
கே: நுண்பொருளாதார மாறிகளில் நீங்கள் கவனித்துவரும் ஒன்று...
ப: இதற்கு பதில் சொல்லவும் எனக்குத் தகுதியில்லை. இருப்பினும், தனிநபரின் தேவைகளும் அவனது நிதிப் பற்றாக்குறையும் எவ்வாறு அவனது முடிவுகளைத் தீர்மானிக்கிறது என்பதைப் பொறுத்ததே நுண்பொருளாதாரம் என்று நான் நினைக்கிறேன். பயிற்சியில்லாத என் பார்வையில், உண்மையான வருமானத்தைப் பொறுத்ததே இது என்று தோன்றுகிறது.
கே: வருங்கால வாழ்க்கையில் தொடர விரும்பும் ஒரு கனவு...
ப: தொழில்முனைவோர் குழுவொன்றை பயங்கரமாக வெற்றிபெறச் செய்து, அவர்களும் திருப்பித் தர உள்ளூக்கம் தருவது.
கே: உங்களுடைய தலைமைப் பண்புக்கு ஒரு அறிகுறி...
ப: நான் தலைவனா என்று தெரியாது, ஆனால் நான் விஷயங்களை நிர்வகிக்கிறேன், மனிதர்களுக்குத் தலைமையேற்கிறேன் என்பது எனக்குத் தெரியும்.
கே: ஒரு விருந்தில் சந்திக்கவும் அவரிடமிருந்து கற்கவும் நீங்கள் விரும்பும் ஒரு நபர் யார்?
ப: பில் கேட்ஸ் - வணிக முனைவோராகத் தொடங்கி, சமுதாய முனைவோராக மாறியவர்.
கே: மறக்க முடியாத ஓர் ஆசிரியர்...
ப: எனது இரண்டாம் வகுப்பின் ராணி டீச்சர். எப்போதும் இன்னும் சிறக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தவர். கணிதத்தில் 99 மார்க் வாங்கியபோது, "நன்றாகத்தான் செய்திருக்கிறாய். ஆனால், கணக்கில் நூறு சதவீதம் பெறுவது சாத்தியம். அடுத்தமுறை அதை நீ வாங்கி நான் பார்க்கவேண்டும்" என்று கூறினார். அடுத்த முறை சற்றே அதிகம் முயற்சித்து நான் நூற்றுக்கு நூறு வாங்கினேன். அவர் முகத்தில் தோன்றிய புன்னகையை என்னால் மறக்க முடியாது.
கே: மிகப் பெருமிதமான தருணம்...
ப: பல உண்டு. மிகச் சிறந்தது எதுவென்று சொல்ல முடியாது. இதோ அதில் ஒன்று: அங்க்கீனாவை ஜூனிபர் இணைத்துக்கொள்ளத் தீர்மானித்ததும் என்னுடன் பணிசெய்த ஒருவர் "என் குடும்பத்துக்கு எனக்கும் இது எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்குத் தெரியாது. 2000ம் ஆண்டின் டாட்காம் வெடிப்பிலிருந்து நாங்கள் சிரம தசையில் இருக்கிறோம். கொஞ்சம் தலையைத் தூக்கியதும் 2008ல் அடுத்த அடி விழுந்தது. என் குழந்தைகளின் கல்விக்கு இந்தத் திருப்பம் பெரிதும் உதவும்" என்று என்னிடம் வந்து கூறினார். அவர் தன்னைப்பற்றி அல்ல, தன் குழந்தைகளைப் பற்றிச் சிந்தித்தார். நான் என்னைக்குறித்து மிகவும் அப்போது பெருமைப்பட்டேன். அவரைக் குறித்தும்தான்.
ஆங்கிலத்தில்: அம்பாள் பாலகிருஷ்ணன் தமிழ்வடிவம்: மதுரபாரதி |
|
![](images/pg-tit-separeter.jpg) |
More
'சொல்வேந்தர்' சுகி சிவம்
|
![](images/pg-tit-separeter.jpg) |
|
|
|
|
|