|
தென்றல் பேசுகிறது... |
![](images/add.jpg) ![](images/view.jpg) ![](images/refer.jpg) |
- | செப்டம்பர் 2020 |![](/thendral/images/rating/5.gif) ![](images/rating-ar.jpg) | (1 Comment) |
|
|
|
![](http://www.tamilonline.com/media/Sep2020/47/Thendral-Pesukirathu-600.jpg) |
மாட்சிமைதங்கிய சக்ரவர்த்தி ட்ரம்ப் அவர்களின் மேட்டிமைத்தனம் எல்லை கடந்து போகிறதோ என அஞ்ச வேண்டியிருக்கிறது. ஒரு ஜனநாயக நாட்டின் முதல் பிரதிநிதி என்கிற முறையில், பொறுமையோடு விவாதித்தல், பொதுநலம் கருதி முடிவெடுத்தல், கலந்தாலோசித்துச் செயல்படுத்தல் என்பவற்றை உதறித்தள்ளிவிட்டு, உண்மைக்குப் புறம்பானவற்றை அள்ளி வீசுதல், திடீர்க் கோபத்தில் வெளிநடத்தல், மனம்போனபடி அவசரச் சட்டங்களை அறிவித்தல் என்பவற்றை வழக்கப்படுத்திக் கொண்டுவிட்டார் ட்ரம்ப். அரசாணைகள் ட்வீட்டுகளாக வெளியிடப்படுகின்றன! மகளும் மருமகனும் மனைவியும் அரசின் தூண்களாகச் செயல்பட அனுமதிக்கப் படுகிறார்கள். அனுசரணையாக இல்லாத உயரதிகாரிகள் விடிவதற்குள் பதவி விலகவைக்கப் படுகிறார்கள். அஞ்சலகங்கள் சரிவரச் செயல்பட்டால் எங்கே அஞ்சல்வழி வாக்குகள் எதிராளிக்குச் சாதகமாகிவிடுமோ என்ற அச்சத்தில் அஞ்சல்துறையின் அச்சு முறிக்கப்படுகிறது. இது போதாதென்று வெளிநாடுகளின் உதவி நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்கவும், வரவேற்கவும் படுகிறது.
இவை எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்ததுபோல, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் பிரம்மாண்டமாகத் தோற்றுள்ளது இந்த அரசு. இந்தத் தொற்றினால் லட்சக்கணக்கானோர் இறந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், இதைத் தடுக்க உலக சுகாதார அமைப்பு எடுக்கும் முயற்சிகளில் பங்கேற்கவில்லை. உள்நாட்டில் தடுப்பூசி, மருந்து ஆகியவை கண்டுபிடிப்பதில் பணம் செலவழிக்காமல், 250 மில்லியன் டாலரை, அரசின் மெத்தனத்திலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்பும் விளம்பரத்துக்குச் செலவழிக்கிறதாம்.
ஏதோ அங்குமிங்குமாக முறைகேடு இருந்தாலும், அமெரிக்கா நேர்மை, நாணயத்தின் முன்னோடி நாடு என்கிற பிம்பம் மாறி, ஒழுங்கீனமே புதிய ஒழுங்கு என நினைக்குமளவுக்குப் போய்விடுமோ என்ற அச்சம் தலை தூக்குகிறது. புலம்பி ஆகப் போவதில்லை. தேர்தல் வெகு தூரத்தில் இல்லை. புழுத்த அரசியலை வேரோடு களைவது நம் கையில்தான் இருக்கிறது. வாய்ப்பைத் தவறவிடக் கூடாது.
★★★★★
பாலகணேசன், பாகேஸ்வரி தம்பதியர் நாதஸ்வர உலகில் புதிய நட்சத்திரங்களாக வலம் வருகிறார்கள். இவர்களுடைய உழைப்பு, பயிற்சி மற்றும் அனுபவங்கள் துளித்துளியாகச் சுவைக்கத் தக்கவை - இவர்களின் இசையைப் போலவே.
வீடற்றோரின் விடிவெள்ளியாகத் தேர்தல் களத்தில் கட்சி சார்பின்றி இறங்கியிருக்கிறார் லாஸ் ஏஞ்சலஸின் நித்யா ராமன். இவர்களின் நேர்காணல்கள் இந்த இதழுக்குப் பொலிவூட்டுகின்றன. சிறுகதை, கவிதை, மேலோர் வாழ்வில் என்று உங்களுக்கு மகிழ்வூட்டுபவை பலவுண்டு. வாருங்கள், தோரண வாயிலைத் தாண்டி நடப்போம்...
வாசகர்களுக்கு ஆசிரியர் தின, உழைப்பாளிகள் தின வாழ்த்துகள். |
|
தென்றல் செப்டம்பர் 2020 |
|
|
|
|
|
|
|