Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | தகவல்.காம்
Tamil Unicode / English Search
நேர்காணல்
தென்கச்சி கோ. சுவாமிநாதன்
டாக்டர் வெங்கடா பாலநேத்திரம், விஜி பாலநேத்திரம்
- காந்தி சுந்தர்|மே 2009|
Share:
Click Here Enlargeதேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகையில் மிச்சிகனிலிருந்து கடந்த மூன்றாண்டுகளாக இயங்கி வரும் வானொலி நிகழ்ச்சி 'தமிழ் அமுதம்'. வாரந்தோறும் ஞாயிறன்று ஒலிபரப்பாகும் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர்கள் அதன் இயக்குநர்களான டாக்டர் வெங்கடா பாலநேத்திரம், அவரது துணைவியாரான திருமதி விஜி பாலநேத்திரம் ஆகியோர்.

டாக்டர் பாலநேத்திரம் சென்னை ஐ.ஐ.டி.யில் உலோகவியல் (மெடலர்ஜி) பட்டம் பெற்றவர். சென்னையிலும் ஜாம்ஷெட்பூரிலும் பணிபுரிந்த பின்னர் 1990ல் கொலம்பஸ் பல்கலைக்கழகத்தில் (ஒஹையோ) டாக்டர் பட்ட ஆய்வு மேற்கொள்வதற்காக அமெரிக்கா வந்தார். அவருடன் அவர் மனைவி விஜியும், ஒன்பது மாதக் குழந்தை ஹரீஷும் வந்தனர். தற்போது ஹரீஷ் மருத்துவத்தில் இளங்கலை படித்து வருவதோடு, தந்தையின் தமிழ் அமுதம் இணையதளத்தையும் நிர்வகித்து வருகிறார். சென்னையிலுள்ள S.I.E.T.யில் வணிகவியல் பட்டம் பெற்ற விஜி, மேற்கொண்டு அஞ்சல்வழியே அதிலேயே முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். சென்னையில் வசித்தபோது தனது சகோதரிகளுடன் சேர்ந்து பல மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த அனுபவத்தினால் தற்போது டெட்ராய்டிலும் அப்பணியைச் செய்து வருகிறார். சென்னையில் விஜியிடம் பயின்ற மாணவர்களுள் திரைப்பட நடிகர் விஜய், இயக்குநர் ஹரி ஆகியோரும் அடக்கம்.

பாலநேத்திரம், விஜி பாலநேத்திரம் இருவருமே தமது பெற்றோர்களையே முன்னோடிகளாகக் கொண்டுள்ளனர். அவர்களைத் தென்றலுக்காகச் சந்தித்தபோது....

கே: உங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்!

பாலா: எனது தாயார் திருமதி ஜெயலக்ஷ்மி. எனது தந்தையார் காலஞ்சென்ற திரு சுப்பிரமணியம், பள்ளி ஆசிரியராகப் பணி புரிந்தவர். திடீரென்று அடுத்த சில ஆண்டுகளில் அவர் கண் பார்வையை இழந்து விடுவார் என மருத்துவர்கள் கூறினர். ஆனால் இதனைச் சவாலாக எடுத்துக் கொண்ட என் தந்தை, அப்பொழுதே தாம் ஓர் அந்தகர் போல வாழப் பழகிக் கொண்டார். மூன்றாண்டுகளில் தம்மைப் பார்வையற்றோர் பள்ளிக்கு மாற்றிக் கொண்டவர், அங்கிருந்த விழியிழந்த மாணவர்களுக்கு ஆசிரியராகப் பணிபுரிந்தார். அரசாங்க ஊழியர்கள் கண்பார்வை இழக்க நேர்ந்தால் அவர்களுக்கு வேறு தொழில் வாய்ப்புகள் அமைத்துத் தர வேண்டுமென்ற சட்டத்தை சென்னையில் கொண்டு வருவதற்குக் காரணம், இவரது சேவைதான். என் தாயார் தந்தைக்குப் பக்கபலமாக இருந்தார். எனக்கு மூன்று தம்பிகள். எங்கள் கடைசித் தம்பியைத் தவிர எங்கள் மூவரையும் தமிழ் மீடியத்தில்தான் பெற்றோர்கள் படிக்க வைத்தனர். அந்த அளவிற்கு இருவருமே தமிழ்ப்பற்று உள்ளவர்களாக இருந்தனர்.

ஒவ்வொரு குறளுக்கும் எளிய விளக்கத்தை விஜி தமிழிலும், நான் ஆங்கிலத்திலுமாகக் கூறுவோம். இதற்கும் வரவேற்பும் பாராட்டும் கிடைத்தது. குறிப்பாகத் தமிழக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவரது பிளாகில் எங்கள் தமிழ் அமுதத்திற்கு லிங்க் அமைத்துள்ளார்.
விஜி: என் தந்தையின் பெயர் ரகுபதி. தாயார் திருமதி ராஜம். எங்கள் சொந்த ஊர் விழுப்புரம். எங்கள் வீட்டில் நாங்கள் 10 குழந்தைகள். நான்தான் கடைக்குட்டி. என் தந்தை நல்ல ஜாலி டைப். எல்லோரிடமும் அன்பாய், சகஜமாய்ப் பழகுவார். என் தாயார் எப்போதும் சொல்வார், ‘ எப்போதும் நல்லதே நினை! கல்வியைப் பரப்பு. என்றும் அதுதான் அழியாச் சொத்து' என்று. அதன் தாக்கம்தான் நான் இன்றுகூட படிப்புச் சொல்லிக் கொடுப்பது. என் கல்லூரியின் மகளிர் கிரிக்கெட் அணியில் நான் விளையாடியிருக்கிறேன். படிப்பு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் விளையாட்டும் என்பது என் கருத்து.

கே: உங்கள் தமிழார்வம் வளர்ந்தது எப்படி?

பாலா: நான் சென்னையில் எம்.சி.டி.எம். பள்ளியில் படித்தபோது ம.ப. ஷண்முகம் என்ற தமிழ் ஆசான் எங்களுக்குப் பாடம் நடத்துவார். அவர் அன்று போட்ட வித்துதான் இன்று அமுதமாகப் பிரவாகம் எடுத்திருக்கிறது. நாங்கள் தமிழில் வாதப் பிரதிவாதம் செய்யும் அளவுக்கு பயிற்சி தந்து வளர்க்கப்பட்டோம். ஐ.ஐ.டி.யில் படித்தபோது நான் 'இளங்கண்ணன்' என்ற புனைபெயரில் மரபுக் கவிதைகள் எழுதத் தொடங்கினேன். ஏறத்தாழ 450 கவிதைகள் இன்றுவரை எழுதியிருக்கிறேன். பள்ளியில் படித்தபோது ‘மகாத்மா காந்தி நூற்றாண்டு விழா' கட்டுரைப் போட்டியில் மாநிலத்திலேயே முதல்பரிசு எனக்கு கிடைத்தது. பரிசினை வழங்கியவர் அப்போதைய ஜனாதிபதி திரு வி.வி. கிரி அவர்கள்.

விஜி: பள்ளி, கல்லூரி நாட்களில் நான் பல பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெற்றிருக்கிறேன். கிரேசி மோகனின் ‘எமனே நீ வாழ்க' நாடகத்தில் நடித்த அனுபவமும் எனக்குண்டு.

கே: தமிழ் வானொலி தொடங்க வேண்டுமென்ற எண்ணம் எப்படித் தோன்றியது?

பாலா: விஜிக்குக் குழந்தைகளுடன் விளையாடவும், பாடம் கற்பிக்கவும் ரொம்பப் பிடிக்கும். கவிதைகளைப் படித்துக் காண்பிக்கும் போது இவர் குரல் கம்பீரமாக ஒலிக்கும். வீட்டில் விளையாட்டாக அறிவிப்புச் செய்யும்போதும் அவரது குரல்வளம் மிக நன்றாக இருக்கும். நான் இத்துறையில் இறங்கினால் விஜியின் ஈடுபாடும், ஒத்துழைப்பும் கிடைக்கும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதேசமயம் தமிழ் சினிமாப் பாடல்கள் பலவற்றை நான் சேகரித்து வைத்திருந்தேன். வெறும் பாடல்கள் மட்டுமல்லாமல் அவை இடம்பெற்ற திரைப்படம், ஆண்டு, இசையமைப்பாளர், பாடலாசிரியர் போன்ற பல விவரங்கள் என்னிடம் இருந்தன. பல பாடல்களுக்குப் பின்னால் ஒரு கதையுண்டு. அதுவும் கவிஞர் கண்ணதாசன் பாடல்கள் பலவற்றிற்கு கூடவே ஒரு துணுக்குச் செய்தியும் இருக்கும். இவற்றை நான் சேகரித்து வைத்திருந்தேன். அந்தச் சமயம் பார்த்து டெட்ராய்ட் வானொலியில் ஒரு விளம்பரம் வந்தது. அதாவது ஒரு குறிப்பிட்ட தொகைக்கு யார் வேண்டுமானாலும் தமது சொந்த நிகழ்ச்சியை, குறிப்பிட்ட நேரத்திற்கு வானொலியில் வழங்கலாம் என்று. சந்தர்ப்பம் வீடுதேடி வருவதை உணர்ந்த நான் உடனே அதைப் பயன்படுத்திக் கொண்டேன்.

கே: தமிழ் அமுதம் என்று பெயர் வைக்க ஏதேனும் சிறப்பான காரணம் இருந்ததா?

பாலா: அது முழுக்க முழுக்க விஜியின் தேர்வு.

கே: ஆட்டோமொடிவ் கம்பெனியில் முழுநேர வேலை பார்க்கும் உங்களால் இவ்வேலைப் பளுவை எப்படிச் சமாளிக்க முடிகிறது?

விஜி: நாங்கள் குடும்பமாக இம்முயற்சியில் இறங்கியிருக்கிறோம். ஆகவே, இது எங்களுக்கு ஒரு பளுவே இல்லை. சுகமான அனுபவம் தான். பாலாவும் எங்கள் மூத்த மகன் ஹரீஷும் இணைந்து இணையதளத்தை உருவாக்கினர். இன்று அதன் முழு பராமரிப்பும் ஹரீஷ் தான். இந்த ஒருமணி நேர நிகழ்ச்சியில் நாங்கள் நிறையச் சிறப்பு நிகழ்ச்சிகள் அளித்து வருகிறோம். பாடலை அறிவிப்பது, துணுக்குச் செய்தி அளிப்பது போன்றவற்றை நாங்கள் இருவரும் மாறி மாறிச் செய்வோம். இடையே செய்திகள் வாசிப்பது நான். எங்கள் நிகழ்ச்சி டைரக்டர் 9 வயதான எங்கள் இளைய மகன் அபிலாஷ். நாங்கள் ஆரம்பம் முதல் எங்கள் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டுதான் ஒலிப்பதிவு ஸ்டூடியோவுக்குச் செல்வோம். ஹரீஷ் இரண்டாண்டுகளாக UFMல் படிப்பதால் அபிலாஷ் தவறாமல் எங்களுடன் வருவார். ‘ஸ்மைல்' என்று எப்போதும் ஊக்குவிப்பார். இன்னும் சொல்லப்போனால் 'உடல் உறுப்புகள்' போன்ற சில தலைப்புகளை வைத்து சிறப்பு நிகழ்ச்சி செய்யும் எண்ணம் கூட அபிலாஷிடமிருந்து வந்ததுதான்.

கே: உங்கள் நிகழ்ச்சியில் ‘கதை அமுதம்' என ஒரு பாகம் உள்ளதே, அது என்ன?

விஜி: எங்கள் நிகழ்ச்சிகளைப் பாராட்டி உலகின் பல பகுதிகளிலிருந்தும் மின்னஞ்சல்கள் வரத் தொடங்கின. பாராட்டும், வரவேற்பும் அதிகமாகவே, குழந்தைகளுக்காக, எளிய தமிழில் புரியும்படி கதை சொல்வது என முடிவு செய்தோம். அப்படி உருவானது தான் எங்கள் நீதிக்கதைப் பகுதியான கதை அமுதம். இதில் தெனாலிராமன், மரியாதை ராமன், அக்பர், பீர்பால் எனப் பல கதைகளைக் கூறியுள்ளோம். தெனாலிராமன் கதை 40 வாரங்களும், மரியாதை ராமன் கதை 20 வாரங்களும், அக்பர்-பீர்பால் கதை 30 வாரங்களும் இடம் பெற்றன. இதில் அதிசயம் என்னவென்றால் குழந்தைகளுக்கு எனத் தொடங்கிய இந்நிகழ்ச்சி பெரியவர்களிடையேயும் அதிகம் பிரபலமானது தான். அவர்கள் இக்கதைகளைக் கேட்டு தங்கள் குழந்தைகளுக்குச் சொல்கிறார்கள். அதிலும் எங்கள் இணையதளத்தின் ஆர்க்கைவ் மூலம் அதனைக் கேட்கின்றனர் என்பதை எங்களுக்கு வரும் ஹிட்களால் உணர்ந்து கொண்டோம். தற்போது நாங்கள் இக்கதைகளை சி.டி.யில் பதிவு செய்து விற்பனைக்கு வைத்துள்ளோம். ஒவ்வொரு கதையையும் எளிய நடையில் பேச்சுத் தமிழில் எழுதுவதே ஒரு சவாலாக இருந்தது.

கே: திருக்குறளுக்கு உங்கள் நிகழ்ச்சிகளில் அதிக முக்கியத்துவம் தருகிறீர்கள். அது குறித்து...

பாலா: நியூயார்க்கில் வசிக்கும் ரங்கசுவாமி பார்த்தசாரதி என்பவர் பல பிரபல பின்னணி இசைக்கலைஞர்களை வைத்து திருக்குறள் இசைத்தட்டை வெளியிட்டுள்ளார். இப்பாடல்களை நாங்கள் எங்கள் நிகழ்ச்சியில் ஒலிபரப்பினோம். இடையிடையே ஒவ்வொரு குறளுக்கும் எளிய விளக்கத்தை விஜி தமிழிலும், நான் ஆங்கிலத்திலுமாகக் கூறுவோம். இதற்கும் வரவேற்பும் பாராட்டும் கிடைத்தது. குறிப்பாகத் தமிழக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவரது பிளாகில் எங்கள் தமிழ் அமுதத்திற்கு லிங்க் அமைத்துள்ளார்.
Click Here Enlargeகே: இதுவரை என்னென்ன சிறப்புத் தலைப்புகளைக் கையாண்டுள்ளீர்கள்?

ப: நாங்கள் இதுவரை கடந்து வந்துள்ள 220 வாரங்களில் 2000த்திற்கும் மேற்பட்ட பாடல்களை ஒலிபரப்பியுள்ளோம். ஆனால் அவற்றுள் 10 பாடல்கள் வரைதான் ரிபீட் செய்யப்பட்டவை. அவையும் பெப்ஸி கன்னம், கண்ணும் கண்ணும் நோக்கியா, சேலை வியாபாரம் பற்றிய பாடல்கள் மட்டுமே! மேலும் பண்டைய இலக்கியங்களைத் தமிழ் சினிமாவில் கையாள்வதும் உண்டு. உதாரணம் கம்பரின் காப்புச் செய்யுளுடன் வரும் சினிமா பாட்டு. திரிகூட ராசப்பக் கவிராயரின் பாட்டு இவற்றைச் சொல்லலாம். 'முதன் முதலாக' என்ற தலைப்பில் ஒரு குறிப்பிட்ட கவிஞர் அல்லது பாடகரின் முதல் பாடல், அதன் துணுக்குச் செய்தியை ஒலிபரப்பியுள்ளோம். சமர்ப்பணம் என்ற வரிசையில் பாரதியார், நாமக்கல் கவிஞர், புகழேந்தி, கொத்தமங்கலம் சுப்பு, பத்மினி, நாகேஷ் போன்றவர்களைப் பாடல்கள் மூலம் நினைவு கூர்ந்துள்ளோம்.

பழமொழிகள், திசைகள், காலங்கள், உடல் உறுப்புக்கள், பழங்கள், பிராடக்ட் பிளேஸ்மெண்ட் போன்றவை பற்றி நிகழ்ச்சிகள் தந்துள்ளோம். கணித மேதை ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாற்றினைப் பதிவு செய்துள்ளோம். அத்துடன் 1,2,3 என எண்களாக வரும் பாடல்களை ஒலிபரப்பியிருக்கிறோம்.

கவிஞர் விவேகா, லேனா தமிழ்வாணன், மலேசியா வாசுதேவன், இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், பஞ்சு அருணாசலம், பன்னிரு திருமுறையைப் பரப்பி வரும் ஆறுமுகப் பிள்ளை ஆகியோருடன் நாங்கள் நடத்திய நேர்காணலைத் தொகுத்து வழங்கியுள்ளோம். இனிவரும் காலத்தில் டி.எம்.எஸ்., சுசீலா, நடிகர் விஜய் ஆகியோரின் பேட்டிகளைக் கேட்கலாம். கேன்டன், மிச்சிகனிலுள்ள தமிழ் வகுப்புக் குழந்தைகள் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி, மிச்சிகனில் தமிழ் அன்பர்களை ஊக்குவித்துப் பாட வைப்பது போன்ற சில முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளோம். மேலும் மிச்சிகன் ஆலயங்களின் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒலிபரப்புதல், தமிழ்ச் சங்கம் மற்றும் மாநகர நிகழ்ச்சி அறிவிப்பு போன்றவையும் உள்ளடக்கம்.

கே: உங்கள் நிகழ்ச்சிக்கு மக்களின் ஆதரவு எப்படி உள்ளது?

ஒருமுறை இலங்கை வானொலி பிரபலர் வி.எச். அப்துல் ஹமீது அவர்களைச் சந்தித்தேன். அவர், ஒரு ஒரு மணி நேர நிகழ்ச்சியில் 12 விளம்பரங்களுக்கு மேல் இருந்தால் அது கேட்பவர்களுக்கு அலுப்புத் தட்டக் கூடும் என்றார்.
பாலா: டெட்ராய்டில் வாழும் தமிழ் மக்கள் மிக்க ஆர்வத்துடன் எங்கள் முயற்சிகளுக்கு ஆதரவு தந்து ஊக்குவித்து வருகின்றனர். மிச்சிகன் தமிழ்ச் சங்கம், டாக்டர் ராஜாராமன் நடத்தும் தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் ஆகியோரும் எங்களை எப்போதும் ஊக்குவித்தே வருகின்றனர். இங்குள்ள டாக்டர் வெங்கடேசன் அவர்களின் நாடகக் குழுவில் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்நாடகங்களில் நான் பேசும் வசனங்களுக்குக் கிடைத்த பாராட்டே கூட ஒரு விதத்தில் நான் வானொலி முயற்சியில் இறங்க ஊக்குவித்தது என்று சொல்லலாம்.

கே: தமிழ் அமுதம் இணையதளம் பற்றி....

விஜி: எங்கள் இணையதளம் எங்கள் கடந்த நிகழ்ச்சிகளைக் கேட்கக் கூடிய ஒரு தளம் மட்டுமல்ல; அதில் வேலைவாய்ப்பு, உபகாரச் சம்பளம், வீட்டில் துன்புறுத்தப்படுவோர் அணுக வேண்டிய சங்கங்கள், தமிழ்க் கல்விக்கான இதர மையங்கள் என பல உபயோகமான செய்திகள் உள்ளன. எங்கள் முகவரி www.tamilamudham.com. இதில் உலக அளவில் எங்களுக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்தது எங்கள் தமிழ்க்கல்வி மைய இணையக் குறிப்புகள்தாம் என்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.

கே: உங்கள் நிகழ்ச்சிக்கு நிறைய விளம்பரங்கள் வருகின்றனவா?

பாலா: மிக்சிகன்வாழ் தமிழ் அன்பர்கள் மூலமே எங்களுக்கு நிறைய விளம்பரங்கள் வருகின்றன. ஒருமுறை இலங்கை வானொலி பிரபலர் வி.எச். அப்துல் ஹமீது அவர்களைச் சந்தித்தேன். அவர் ஒரு அரிய தத்துவத்தைக் கற்றுக் கொடுத்தார். அதாவது, ஒரு ஒரு மணி நேர நிகழ்ச்சியில் 12 விளம்பரங்களுக்கு மேல் இருந்தால் அது கேட்பவர்களுக்கு அலுப்புத் தட்டக் கூடும் என்றார். இதை வேத வாக்காகக் கொண்டு நாங்கள் 12 விளம்பரங்கள் மட்டுமே ஒலிபரப்புகிறோம்.

கே: பாலா, நீங்கள் பேடண்ட் (Patent) உரிமையாளரும் கூட. அதைப் பற்றிக் கொஞ்சம்...

பாலா: நான் ‘பிளாஸ்டிக்' துறையில் 3 பேடன்ட்களின் உரிமையைக் கொண்டுள்ளேன். உலோகத் தகடு பற்றி நான் வெளியிட்ட ஆராய்ச்சியை மையமாகக் கொண்டு வேறொருவர் இதனை இருதயத்திற்குத் தயாரிக்கும் ஸ்டெண்ட்-டியூப் தயாரித்து வருகின்றார் என்பதைக் குறித்து நான் பெருமை அடைகிறேன்.

பாலா, விஜி ஆகியோரின் குழந்தைகள் அமெரிக்காவில் வசித்தபோதும் மிகவும் நன்றாகவும், அழகாகவும், சுத்தமாகவும் தமிழ் பேசுகின்றனர். தென்றல் இதழை விடாமல் படித்து வரும் இவர்கள், ‘கலையும் திறனும் எங்கிருந்தாலும், அதை வெளிக் கொணர்வதில் தென்றலுக்கு இணை தென்றலே' என்று பெருமையுடன் கூறுகின்றனர். இவர்களது தமிழ்ப்பணி தொடர தென்றலின் வாழ்த்துக்களைக் கூறி விடைபெற்றோம்.

தமிழ் அமுதம் நிகழ்ச்சி ஒலிபரப்பாவது 1640AM, 5-6PM, ஞாயிறு தோறும்.

காந்தி சுந்தர்
மேலும் படங்களுக்கு
More

தென்கச்சி கோ. சுவாமிநாதன்
Share: 




© Copyright 2020 Tamilonline