Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சிறப்புப் பார்வை | தமிழக அரசியல் | பயணம் | சினிமா சினிமா
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வாசகர் கடிதம் | பொது | சமயம் | Events Calendar
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
மாயமாய் மறைந்த மெமரிகள் - (பாகம் - 3)
- கதிரவன் எழில்மன்னன்|மார்ச் 2002|
Share:
(முன் கதைச் சுருக்கம்: Silicon Valley - இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, எதேச்சையாக யாரோ ஒருவரின் வீட்டில் நகை காணாமல் போன போது, துப்பறிந்து யார் எடுத்தது என்று கண்டு பிடித்து விடுகிறார். அன்றிலிருந்து அவரது துப்பறியும் திறமையைப் பற்றிப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாட ஆரம்பிக்கவே, சூர்யா முதலில் பொழுது போக்காகவும், பிறகு முழு நேரமாகவும் துப்பறிய ஆரம்பிக்கிறார். வக்கீல் நிறுவனம் வைத்திருந்த அவரது நண்பர் ஒருவரின் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண் MBA படித்து பங்கு வர்த்தகம் புரிபவன். ஆனால் துப்பறியும் ஆர்வத்தால் சூர்யாவிடமே நிறைய நேரம் செலவழிக்கிறான்! அவனுக்கு மிகப் பிடித்தவை வேகமான கார்கள், வேகமான பெண்கள், வேகமான எலக்ட்ரானிக்ஸ்! ஷாலினி Stanford மருத்துவ மனையில் மருத்துவராகவும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். அவ்வப்போது தேவைப் படும் போது மட்டும் சூர்யாவுக்கு உதவுகிறாள்.

சூர்யாவுக்கு, அவரது நண்பன் குமாரிடமிருந்து ஒரு கலவரமான மின்னஞ்சல் வந்தது. குமாரின் ஹோலோஸ்டோர் நிறுவனம் தயாரித்து வந்த 3D ஹோலோக்ரா·பிக் மெமரிகள் சில காணாமல் போய்விட்டன, சில கெடுக்கப் பட்டு விட்டன. இன்னும் சில நாட்களுக்குள் சூர்யா மறைந்து விட்ட மெமரிகளைக் கண்டு பிடித்து கொடுக்காவிட்டால் குமாரின் நிறுவனமே சிதைந்து போய்விடக் கூடிய நிலைமை வந்து விடக் கூடும். கண்டு பிடிக்க, சூர்யாவும் கிரணும் சான்டா க்ளாராவில் உள்ள குமாரின் நிறுவனத் துக்கு சென்றனர். சூர்யா குமாரின் லேபை அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ந்தார். மெமரிகள் எப்படி வேலை செய்கின்றன என்று அறிந்து வியந்தனர்! ஷீலா என்னும் ஒரு எஞ்சினீயர்தான் மிகவும் சந்தேகிக்கப் படுவதாகக் குமார் கூறினார். மேலும் தொடர்வோம்...)

லேபிலிருந்து வெளியில் வந்தவுடன் சூர்யா ஷீலாவின் ஆ·பீஸை நன்றாக நோட்டம் விட்டார். கிரண் ஷீலாவை நன்றாக நோட்டம் விட்டான்!

லேப் எவ்வளவு தூய்மையாகவும் நேர்த்தி யாகவும் இருந்ததோ, ஷீலாவின் ஆ·பீஸ் அவ்வளவுக்கு நேர் மாறாக, குப்பைக் கூளம் போலிருந்தது! காகிதங்கள் மேஜை மேல் கும்பல் கும்பலாக குவிக்கப் பட்டிருந்தன. சர்க்யூட் போர்டுகளும், சோல்டரிங் அயர்ன் களும், பல வித வர்ணங்களில் ஒயர்களுமாக பல இடங்களில் தாறு மாறாகக் கிடந்தன.

சூர்யாவின் பார்வை போன இடங்களைப் பார்த்த குமார், "இவ எப்பவும் இப்படித்தான். கொஞ்சமாவது நீட்டா வச்சுக்கன்னா கேக்கற தே கிடயாது. அதனாலதான் லேப் கிட்டயே பின்னாடியா தள்ளி வச்சுட்டோம் இவ க்யூபை!" என்றார்.

அப்போதைக்கு ஷீலாவின் தோற்றமும், அவள் ஆ·பீஸைப் போலத்தான் நிலைகுலைந் திருந்தது! அவள் தலை முடி கலைந்து முகத்தின் மேல் விழுந்திருந்தது. விசித்து அழுது கொண் டிருந்ததால் அவள் கண்கள் சிவந்து சற்றே உப்பியிருந்தன. ஆனாலும், சாதாரணமாக இருந்தால் அவள் மிக அழகாவே இருப்பாள் என்பது கிரணின் பழகிய கண்களுக்கு நன்றாகத் தெரிந்தது!

ஷீலா சிக்கென சிறிய உருவம். உடலுடன் ஒட்டிய மாதிரி கவர்ச்சியாக ஒரு ஆடை அணிந்திருந்தாள். தலைமுடியும் கவர்ச்சியாக வெட்டப் பட்டு ஸ்டைல் செய்யப் பட்டிருந்தது! உடலில் வேண்டிய இடத்தில் வேண்டிய வளைவுகள் தாராளமாகவே இருந்து கிரணை மயங்கச் செய்தன! அவள் மேலிருந்து கண்களை எடுத்து வேறிடத்தில் பார்க்கக் கிரண் பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது!

தன் பார்வைப் பரிசோதனையை முடித்துக் கொண்ட சூர்யா, எதோ முடிவுக்கு வந்தது போல் தனக்குத் தானே தலையாட்டிக் கொண் டார். ஷீலாவை விசாரிக்க ஆரம்பித்தார்.

"கடைசியா மெமரிகள எப்பப் பாத்தீங்க?"

"வெள்ளிக்கிழமை சாயங்காலம்."

"அப்ப பத்தும் சரியா இருந்ததா"

தலையாட்டினாள். "ஆமாம், நான் தான் கிளம்ப றத்துக்கு முன்னால கேபினெட்டில வச்சு பூட்டினேன்." சூர்யாவின் முகத்தில் ஒரு விநோத ஒளி வீசி மறைந்தது.

"அப்ப இங்க யாரெல்லாம் இருந்தாங்க?"

"லேப் மேனேஜர் ரமேஷ், குமார், மார்க், பீட்டர் - அவ்வளவுதான். மீதிப் பேரெல்லாம் அன்னிக்குக் கொஞ்சம் சீக்கிரமா ஒரு கம்பனில கூட வேலை செய்யற ஒருத்தரோட பர்த்டே பார்ட்டிக்குக் கிளம்பிட்டாங்க."

"வெள்ளிக்கிழமை இரவு என்ன செஞ்சிக் கிட்டிருந்தீங்க?"

"நானும் அந்த பிறந்த நாள் பார்ட்டில தான் இருந்தேன்."

"எப்ப பார்ட்டியிலிருந்து வீட்டுக்குப் போ னீங்க? கிளம்பின பிறகு யாராவது உங்கள பாத்தாங்களா?"

"இரவு பனிரெண்டு மணிக்கு கிளம்பிட்டேன். நேரா வீட்டுக்குப் போய்த் தூங்கிட்டேன்.

யாரும் பாக்கல."

"சமீபத்துல கொஞ்சம் அப்செட்டா இருக் கீங்க போலிருக்கு. அத பத்தி...?"

ஷீலாவின் முகம் இன்னும் இருண்டது. தலையசைத்து மறுத்துக் கொண்டு வெளிப் படையாகவே விசும்ப ஆரம்பித்து விட்டாள். "அத பத்தி சொல்லி ஒண்ணும் ஆகப் போற தில்ல. என்னை யாரும் நம்ப மாட்டாங்க."

சூர்யா சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தார். "கொஞ்சம் இருங்க, கிரண் நீ இவங்களோட பேசிட்டு இரு. நான் ஷாலினியுடன் கொஞ்சம் பேசிட்டு வரேன்" என்று கூறி விட்டு மூடியிருந்த ஒரு கான்பரன்ஸ் ரூமுக்குள் மறைந்தார்.

சில நிமிடங்களில் வெளிப்பட்ட சூர்யா, "குமார், நான் லேபிலேயும், இங்கேயும் பாத்தத வச்சு ஷாலினி கிட்ட டிஸ்கஸ் பண்ணேன். இந்தக் காரியத்தை ஷீலா செய்யலன்னுதான் நான் நினைக்கிறேன்!" என்றார்.

சூர்யா வீசிய அந்தப் பெரிய குண்டைக் கேட்ட குமார், அசந்தே போனார்! சூர்யாவின் அதிரடி அறிவுப்புகளைப் பல முறை கேட்டுப் பழகி விட்டிருந்த கிரணும் கூடத்தான் திகைத்தான்!

ஷீலாவும், இருண்டிருந்த தன் வாழ்வில் சூர்யா வீசிய ஒளிக் கதிரைப் பலமாகப் பிடித்துக் கொண்டு மிக்க ஆச்சரியத்துடனும் நன்றி யுடனும், புது நம்பிக்கையுடனும் சூர்யாவைப் பார்த்து ஒரு மெல்லிய புன்னகை வீசினாள். சூர்யா அதை கவனிக்காவிட்டாலும், தாமரை யாக மலர்ந்த அவள் முகம், மேகத்தை விட்டு வெளி வந்த நிலவைப் போல் வீசிய ஒளியில் கிரண்தான் கொஞ்சம் கிறங்கினான்! அவளைப் பார்த்து, ஆதரவாக ஒரு பதில் புன்னகை ஓட்டினான்.

குமாரின் பிளந்த வாய் இன்னும் மூடவில்லை! கஷ்டப் பட்டு சுதாரித்துக் கொண்டு, "எப்... எப்படி சொல்றீங்க சூர்யா?! என... எனக்கு ரொம்ப சந்தோஷந்தான்! ஷீலா என் பொண்ணு மாதிரி! அவ செய்யலன்னா, என்ன விட யாரும் சந்தோஷப் பட முடியாது! ஆனா இவ்வளவு சீக்கிரம் எப்படி அது ஷீலா இல்லன்னு முடிவு கட்டினீங்க?! ஷாலினிங்கறது யாரு?" என்றார்.

சூர்யா மெல்ல தலையசைத்து விட்டு, "ஷாலினி கிரணுடைய அக்கா, Stanford Hospital-ல

டாக்டரா இருக்கா. Psychologist கூட. நான் கவனிச்சத வச்சி, அவ கூட பேசிப் பாத்ததுல ஷீலா இத செஞ்ச profile மாதிரி தெரியல." என்றார்.

"அப்படி என்ன கவனிச்சீங்க?"

"அது என்ன விவரம்னு இப்போ சொல்ல முடியாது.

யாரு செஞ்சாங்கன்னு கண்டி பிடிச்சு மெமரி கள மீட்கணுமில்லயா? அத செய்யலாம் வாங்க. அடுத்தது யார் கூட பேசலாம்?"

"மார்க் எஞ்சினீயரிங் மேனேஜர். இப்போ ஒரு மீட்டிங்கில இருக்காரு. இப்போதைக்கு இன் னொரு எஞ்சினீயர் பீட்டர் கிட்ட பேசலாம்."

சூர்யா ஷீலாவிடம் ஒரு பிஸினஸ் கார்டில் ஒரு ·போன் நம்பரை எழுதிக் கொடுத்து விட்டு, "உடனே கூப்பிட்டு பேசுங்க, நல்லது" என்று கூறிவிட்டு நகர்ந்தார். குமாரின் பார்வை அளித்த கேள்விக் குறிக்கு ஒன்றும் பதில் கூற வில்லை. கிரணுக்கு, அது என்ன என்று நன்றாகத் தெரிந்தி ருந்ததால், அவனும் ஒன்றும் பேசவில்லை. மூவரும் பீட்டரின் க்யூபுக்கு வந்து சேர்ந்தனர்.

பீட்டர் நல்ல உயரம். ஆஜானுபாகுவாக உடல் வளம். பயில்வான் போல் கட்டு கட்டாக muscles! பார்க்க லட்சணமாக, சினிமா ஹீரோ போல் இருந்தான்.

பீட்டரின் க்யூபும் ஷாலினியின் க்யூப் போலவே குப்பைக் கூளமாகக் காட்சியளித்தது! பீட்டர் ஹெட் ·போனில் இசை கேட்டுக் கொண்டு அவர்களை லட்சியம் செய்யாமல் கம்ப்யூட்டரில் எதோ தட்டிக் கொண்டிருந்தான். குமார் ஒரு கனைப்பு விட்டதும், அவசரமாகத் திரும்பி மேஜையிலிருந்த காபி கோப்பையைத் தட்டி விட்டு, ஒரே களேபரம்!

குமார் புன்னகையுடன் "இவனும் என்சினீயர்! எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டை தான்!" என்றார்!

சூர்யா சிரித்தார்! "பரவாயில்ல விடுங்க! நானும் ஒரு காலத்துல அப்படித்தான் இருந் தேன்! இதோ கிரண் இருக்கானே, இவன் இப்ப வும் இப்படித்தான்!"

கிரண் நுணுக்கிக் கொண்டான்! "ஆமாம், நான் klutz-தான்! ஆனா, கூல் klutz! சில பேர் போல நெர்ட் இல்ல!"

சூர்யா மீண்டும் வேலைக்குத் திரும்பினார். "பீட்டர்! How are you?! நான் சூர்யா. இது கிரண். நாங்க காணாமப் போன மெமரிகளக் கண்டு பிடிக்க வந்திருக்கோம். உங்கள சில கேள்விகள் கேட்கணும்"

பீட்டர் ஒன்றும் பேச வில்லை. வெறும் தலையசைப்பு-"என்ன பெரிசா கண்டுபிடிச்சிடப் போறீங்க?! பாக்கலாம்" என்னும் தோரணை.

"நீங்க கடைசியா மெமரிகள எப்போ பாத்தீங்க?"

"நான் லேபுக்குள்ள போயே பல நாளாயாச்சு. ஷீலாதான் எப்பவும் அங்க போய் கிட்டே இருக்கா. அவள கேக்கறதுதானே?"

"நீங்க வெள்ளிக்கிழமை ராத்திரி என்ன செஞ்சிகிட்டிருந்தீங்க?"

பீட்டர் கொதித்து எழுந்தான். "என்ன இது, இப்ப என் மேலேயே சந்தேகப் படறீங்களா? நான் ஒரு லாயர் வச்சுக்கணும் போலிருக்கே? அப்படி நான் செஞ்சிருந்தா மெமரிகள டெஸ்ட் பண்ண சொல்லி, கெட்டுப் போச்சுன்னு கண்டு பிடிக்க வச்சிருப்பேனா?!"

குமாரின் முகத்தில் கோபம் கொந்தளித்தது. "பீட்டர், நீ பேசற விதம் சரியில்ல. சூர்யா என்ன கேட்டாலும் பதில் சொல்லித்தான் தீரணும். மெமரிகள கண்டுபிடிக்க அவர் என்ன செஞ்சா லும் சரிதான்." என்றார்.

சூர்யா சமாதானமாக கை எடுத்துக் காட்டி னார். "பீட்டர், நான் எல்லாரையும் இதே மாதிரிதான் கேட்கப் போகிறேன். உங்கள சந்தேகிக்கறதா அர்த்தம் இல்ல. கம்பனில இருக்கறவங்க எல்லாம் எங்க இருந்தாங்கன்னு தெரிஞ்சுகிட்டா கண்டு பிடிக்க உதவியா இருக்கும்." என்றார்.

பீட்டர் மொத்தமாக சாந்தமடையா விட்டா லும், மீண்டும் அமர்ந்து கொண்டு சுளித்த முகத் துடன் மீண்டும் பேசத் தொடங்கினான்.

"நான் என் கேர்ள் ·ப்ரண்டோட ஒரு டின்னர், மூவிக்குப் போயிட்டு ரெண்டு பேரும் அவளோட அபார்ட்மென்ட்டுக்குப் திரும்பிட்டோம்."

கிரணிடமிருந்து ஒரு சிறு கிளுக்! பீட்டர், சூர்யா இருவரும் அவனை முறைக்கவே, சட் டென்று வேறு புறம் திரும்பிக் கொண்டான்!

"அப்புறம்?"

"அப்புறம் என்ன, கொஞ்ச நேரம் கழிச்சு, perhaps 1 மணிக்கு என் வீட்டுக்குப் போயிட் டேன்."

சூர்யா தொடர்ந்தார், "அடுத்த படி எப்ப வேலை பக்கம் வந்தீங்க?"

"இன்னிக்குக் காத்தால குமார் கூப்பிட்டப் புறந்தான்."

"மெமரிகள யார் எடுத்திருப்பாங்கன்னு நினைக்கறீங்க?"

பீட்டர் அசிரத்தையாகத் தோள்களைக் குலுக்கி விட்டுக் கொண்டான். "எனக்கெப்படித் தெரியும். ஷீலாதான்னு பேசிக்கறாங்க. இருக்க லாம். போன வாரத்திலிருந்து ராணியம்மா கொஞ்சம் விசித்திரமாவேத்தான் இருந்தா?!"

"வேற யார் மேலயாவது டவுட் இருக்கா?"

பீட்டர் தலையசைத்தான். "எனக்குத் தெரி யாது. ஆள விடுங்க"

சூர்யா அவனுக்கு நன்றி கூறிவிட்டு நகர்ந்தார். குமாரின் ஆ·பீஸ¤க்குப் போனதும், கிரண், "ஷீலா செய்யலன்னா, இந்தப் பீட்டர் செஞ் சிட்டு, அவ மேல பழி போட்டிருக்கலாம்னு தோணுது. முணுக்குன்னா அவள பத்தி கோண லாப் பேசறானே? ரொம்ப கோவக்காரன் கூட போலிருக்கு?!" என்றான்.

சூர்யா, "அப்படியும் இருக்கலாம். ஆனா அந்த மாதிரி முடிவுக்கு வர இது ரொம்ப சீக்கிரம். மீதிப் பேரோடப் பேசிப் பாத்துட்டு யோசிக் கணும். அடுத்தது யாரு?" என்றார்.

"மார்க் மீட்டிங் முடிச்சாச்சு, பேசலாம் வாங்க" என்றார் குமார். மூவரும், மார்க்கின் ஆ·பீ ஸ¤க்கு நடந்தனர்.

மார்க் மேஜை பின்னாலிருந்து எழுந்து வந்து சூர்யாவின் கையைக் குலுக்கினான். "எங்களுக்கு உதவி செய்யறத்துக்கு ரொம்ப நன்றி சூர்யா. குமார் உங்களப் பத்தி ரொம்ப சொன்னார். என்ன ஹெல்ப் வேணும்னாலும் சொல்லுங்க ஏற்பாடு பண்றேன்" என்றான்.

மற்ற இருவரின் ஆ·பீஸ் இருந்த கோலத்தைப் பார்த்த பிறகு, மார்க்கின் தூய்மையான,

நேர்த்தியான ஆ·பீஸைப் பார்த்து, குமார் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்! அவர் பார்த் ததையும், பெருமூச்சையும் கவனித்து விட்ட சூர்யா, மனத்துக்குள் சிரித்துக் கொண் டார். "பாவம் குமார், இதையெல்லாம் பற்றிக் கூட கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறாரே?!"

சூர்யா தன் பார்வையை மார்க்கின் மீது திருப்பினார்.
மார்க் சாதாரண உயரம்தான். முக அழகிலும் சுமார் என்றுதான் கூறலாம். ஆனால் முகம் முழுவதும் பரவிய புன்னகை மிக நேயத்துடன் பழக அழைத்தது. அவனது கை குலுக்கலும் மிக்க நட்புடன், ஆனால் கை நொறுங்கி விடாமல், இருந்தது! கிரண் குமாரின் அதிரடி கை குலுக்கலை நினைவு படுத்திக் கொண்டு, மார்க்குக்கு மனத்துக்குள் நன்றி கூறிக் கொண்டான்!

பீட்டரின் சீறலுக்குப் பிறகு மார்க்கின் இனிமையான, படபடப்பில்லாத போக்கு ஒரு நல்ல மாற்றமாகத்தான் இருந்தது! யாவரும், மார்க்கின் மேஜையைச் சுற்றி உட்கார்ந்து பேச ஆரம்பித்தனர். அதற்கு முன் சூர்யா கிரணைத் தனியாக ஒரு பக்கம் அழைத்து அவன் காதில் எதோ கிசுகிசுத்தார். அவன் மிக வியப்புடன் சரி என்று தலையாட்டினான்.

சூர்யா சகஜமாக, "மார்க், உங்க ஜாகுவார் கார் நீங்க இருக்கற லாஸ் ஆல்டோஸ் ஹில்ஸ் ஏரியால ஒட்டறத்துக்கு ரொம்ப நல்லா இருக்கும். ரொம்ப நல்ல ஹேண்ட்லிங்! இதோ இருக்கானே கிரண், அவனுக்கும் அந்த மாதிரிக் கார் ரொம்ப பிடிக்கும்!"

மார்க் திடுக்கிட்டான்! "அதுக்குள்ள எங்க பர்ஸனல் ·பைல்களையெல்லாம் பாத்திட் டீங்களா? அதுல கூட என் ஜாகுவார் கார் பத்தி ஒண்ணுமில்லையே?" என்றான்.

குமாரும் சூர்யாவை வியப்புடன் பார்த்தார். "நானும் ஒண்ணும் சொல்லலியே?!"

சூர்யா புன்னகையுடன் "ஒண்ணும் மந்திர மேயில்ல. மார்க்தான் மேஜை மேல ரொம்ப அழகா வரிசையா வச்சிருக்கார் பாருங்க. இதோ அவருடைய எலக்ட்ரிசிடி பில். அதுல அவரோட அட்ரஸ் இருக்கு. இங்க பாருங்க ஜாகுவார் கார் சாவி, அப்புறம் கார்

·போட்டோ எல்லாம். அதுனாலதான் சொன் னேன்."

மார்க் சிரித்து விட்டான். "அவ்வளவு தானா? நான் என்னவோன்னு நெனச்சுட்டேன்!

சரி விஷயத்துக்கு வாங்க. நான் எப்படி உங்களுக்கு உதவ முடியும்?"

"முதல்ல கொஞ்சம் routine கேள்விகள் கேட்க வேண்டியிருக்கு, தப்பா எடுத்துக்க வேண்டாம்"

"அதுக்கென்ன தாராளமாக் கேளுங்களேன். இந்த நிலைமைய solve பண்றத்துக்கு நான் என்ன வேணா செய்யத் தயார்."

"வெள்ளிக்கிழமை இரவு நீங்க எங்கிருந் தீங்க?"

பெருமூச்சு! "ஹ¥ம்... நான் ஒரு தனிக் கட்டை, வீட்டுலதான் இருந்தேன்."

"சனிக்கிழமை எப்போ வேலைக்கு வந்தீங்க?"

"நிதானமா, மத்தியானமா வரலாம்னு இருந் தேன். எங்க முடிஞ்சது? காலைலயே, ரமேஷ் அடிச்சு கிட்டு மெமரிகள காணோம்னுட்டு ·போன் பண்ணிட்டானே?!"

குமார் துயரத்துடன் தலையாட்டிக் கொண் டார்.

"core எஞ்சினீயரிங், அப்புறம் டெஸ்டிங் லேப் எல்லாத்தையும் நீங்கதான் நடத்தறீங்களா?"

மார்க்கின் முகத்தில் ஒரு விதமான பாவனை ஒரு கண நேரம் தோன்றி மறைந்தது! "எல்லாம்னு சொல்ல முடியாது, product எஞ்சினீயரிங்னு சொல்லலாம். மூலமான டெக்னாலஜி எல்லாம், Prof. Chang தான் பாத்துக்கறாரு. அப்புறம் இந்தியாவுல எங்க ளுக்கு ஒரு software சென்டர் இருக்கு. எல்லாத்தையும் சேத்து நடராஜ்னு ஒருத்தர் நடத்தறாரு."

"நடராஜ் இப்போ எங்கே, இங்க இருக்கா மாதிரி தெரியலயே"

குமார் குறுக்கிட்டார். "இந்தியா சென்டருக்கு ஒரு வாரத்துக்குப் போயிருக்காரு."

சூர்யா மேலும் மார்க்குடன் தொடர்ந்தார்.

"ஷீலா, பீட்டர், ரமேஷ் எல்லாரும் உங்க டீம் தான் இல்லயா?"

பெருமிதம்! "ஆமாம், ரொம்ப அற்புதமான டீம்!"

"ரமேஷ் கூப்பிட்டு இங்க வந்ததும் என்ன செஞ்சீங்க? லேப் எல்லாம் களேபரமா இருந் திருக்குமே? க்ளீன் பண்ணச் சொன்னீங்களா?"

"இல்லயே, நீட்டாத்தான் இருந்தது. மேலும் ஒண்ணும் தொடக் கூடாது, விசாரணைன்னு வருமே, அப்படியே இருக்கணும்னு சொன் னேன். மெமரிகள மட்டும் டெஸ்ட் பண்ணச் சொன்னேன், ஆனா, டெஸ்டுக்கப்புறம், இருந்தா மாதிரியே வக்கச் சொல்லிட்டேன். எல்லா ரையும், கவனமா க்ளோவ்ஸ் போட்டுக் கிட்டு செய்யச் சொன்னேன். ·பிங்கர் ப்ரிண்ட்ஸ் கலையக் கூடாதுன்னுட்டு."

சூர்யா தலையாட்டினார். "அது நல்லதுதான், ஆனா, இது ஒரு அதி புத்திசாலி செஞ்சிருக்கற வேலை. ·பிங்கர் ப்ரிண்ட் எல்லாம் உதவாதுன் னுதான் நினைக்கிறேன். சரி, ஒரு முக்கியமான விஷயம். உங்களூக்கு ஷீலா மேலதான் கொஞ்சம் சந்தேகம் போலிருக்கு?"

மார்க் சோகமாக தலையாட்டினான். "என் டீம்ல யார் மேலயும் சந்தேகப் படக் கூடாது தான். ஆனா, என்ன செய்யறது? இது யாரோ நல்லா விஷயம் தெரிஞ்சவங்க செஞ்சது. உள்ளாட்கள்ல ஒருத்தராத்தான் இருக்க முடி யும். அதுனால, யாரா இருக்கலாம்னு குமார் கேட்டார். நானும் ரொம்ப யோசிச்சுப் பாத் தேன். என் விருப்பத்துக்கும் மாறா, ஒரு பேர சொல்லணும்னா, ஷீலாவா இருக்க முடியும்னு சொன்னேன்."

"ஏன் அப்படி?"

"இந்த விஷயம் எல்லாத்துலயும் அவதான் ரொம்ப எக்ஸ்பர்ட். லேப்ல நிறைய தனியாவும் வேலை செய்யறா. எல்லாத்தையும் விட, ஒரு வாரமா, அவ போக்கே சரியில்ல. என்னையும் உட்பட, எல்லார் மேலயும் எரிஞ்சு விழுந்துகிட்டு வேலையும் சரியா செய்யாம இருக்கா. சரி சமாளிச்சுடலாம்னு நான் இன்னிக்கு வரைக்கும் குமார் கிட்ட கூட ஒண்ணும் சொல்லல்ல. நடராஜுக்கு மட்டும் ஒரு சின்ன email ரிப்போர்ட் அனுப்பியிருந்தேன்."

அப்போது மேஜை மேலிருந்த ஒரு பேப்பர் வெயிட்டுடன் விளையாடிக் கொண்டிருந்த கிரண், அதை சற்று வேகமாகச் சுற்றி விடவே, அது பக்கத்திலிருந்த, பல பேனாக்களைச் சொருகி வைத்திருந்த ஒரு கப்பைக் கவிழ்த்துப் பேனாக்களைச் சிதறடித்தது. கிரண், "ஹே, ரொம்ப சாரி, நான் ஒரு சரியான super klutz!" என்று கூறி, பேனாக்களை எடுத்து திரும்ப வைக்க ஆரம்பித்தான்.

மார்க்கின் முகம் ஒரு கணம் இருண்டு விகார மாக ஆயிற்று! நேர்த்தியாக வைக்கப் பட்டிருந்த தன் மேஜையை கிரண் ஒரு கணத்தில் யுத்த களம் போல் ஆக்கி விட்டதை அவனால் தாங்க முடியவில்லை. ஆனாலும் சுதாரித்துக் கொண்டு, "பரவாயில்லை விட்டுடுங்க, நான் பாத்துக் கறேன்" என்று கூறி விட்டு, கப்பையும், பேனாக் களையும் சுற்றியிருந்த பேப்பர்களையும் முதலி லிருந்த படியே அடுக்கி வைக்க ஆரம்பித்தான்.

சூர்யா, கிரணைப் பார்த்து ஒரு கடும் முறைப்பு விட்டு, ஒதுங்கியிருக்குமாறு ஒரு சைகை செய்துவிட்டுக் கேள்விகளைத் தொடர்ந்தார்.

"பீட்டர் செஞ்சிருக்க முடியுமா?"

"முடியும், ஆனா அப்படியிருக்கும்னு தோணல. எனக்கு பீட்டரை ரொம்ப நல்லாத் தெரியும். அவன் கம்பனிக்கு ரொம்ப devoted. இது வரைக்கும் சந்தேகப் படும்படியா ஒண்ணும் செஞ்சதேயில்ல."

"மீதியிருக்கற மெமரிகளை சீக்கிரம் சரிப் படுத்த முடியுமா? குமார் நீங்க ஒரு எக்ஸ் பர்ட்டுன்னு சொல்றாரே?"

மார்க் முடிவாகத் தலையசைத்து மறுத்தான். "அது கெடுக்கப் பட்டிருக்கற விதத்துல, நிச்சயமா முடியாது. புதுசாத்தான் செஞசா கணும். இன்னும் 8 to 12 weeks ஆகும்."

குமார் முகத்தைத் தன் கைகளுக்குள் புதைத்துக் கொண்டார்.

சூர்யா இரண்டு பேர்களையும் சிறிது நேரம் மௌனமாகப் பார்த்து விட்டு மேலும் தொடர்ந்தார்.

"மார்க், ஷீலா போன வாரத்துக்கு முன்னால எப்பவாவது இப்படி இருந்தாளா?"

"இல்ல. சரியாத்தான் இருந்தா"

சூர்யா அவனைக் கூர்ந்து பார்த்தார். "ஏன் இப்படி திடீர்னு மாறிட்டான்னு தெரியுமா?"

மார்க் தோள்களை குலுக்கி விட்டுக் கொண் டான். "எனக்கு எப்படித் தெரியும்? அவ ஒரு மாதிரி அமுக்கம். எதுவும் வெளியில சொல்ற தில்ல"

ஒரு சில நொடி மவுனத்துக்குப் பிறகு சூர்யா திடீரென எழுந்தார். "ரொம்ப தேங்க்ஸ், மார்க்! அப்புறம் இன்னும் எதாவது வேணும்னா கூப்பிடறேன். குமார், நாம லேப் மேனேஜரோட பேசணும், வாங்க" என்றார்.

லேப் மேனேஜர் ரமேஷ் கூறியது சூர்யாவுக்கு ஒரு சிக்கலை அளித்தது. அந்த முடிச்சை சூர்யா அவிழ்த்து, விளக்கிய மர்மம் குமாரை கதி கலங்க வைத்தது!

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline