|
| தென்றல் பேசுகிறது... |
   |
- | மே 2026 |![]() |
|
|
|
|
 |
இந்தியாவில் சமீபத்திய தேர்தலுக்கு முன் 'சிறப்பு தீவிர திருத்தம்' (SIR - Special Intensive Revision) என்னும் அருமையான நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் எடுத்துச் செய்தது. வழக்கம்போல எதிர்க்கட்சிகள் இதை 'மகா மோசமான செயல், எங்களுக்கு எதிரானது' என்றெல்லாம் வர்ணித்துப் போராடின. சில மாநிலங்களில், இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் தாக்கப்பட்டனர். ஆனால், தேர்தல் நாளன்று, இது எத்தனை உத்தமமான நடவடிக்கை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. வாக்களித்தோர் சதவிகிதம், முன்னெப்போதும் காணாதபடி, தமிழ்நாட்டில் 84.7%, மேற்கு வங்கத்தில் 92.49% என்பதில் இருந்தே SIR எவ்வளவு பயன்மிக்கது என்பதை அறியலாம். இறந்தோரின் பெயர்கள், ஒரே நபரின் பெயர் பல இடங்களில், போலி வாக்காளர்கள் என்று நிரம்பி வழிந்து கொண்டிருந்தது பட்டியல். அதுதான் திருத்தப்பட்டது. வாக்களிக்கும் வயதை எட்டிவிட்டவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டன. இதுதான் நிஜமான வாக்காளர் பட்டியல் என்பதை வாக்களித்தோர் சதவிகிதம் நிரூபித்துவிட்டது. மிகப்பெரிய ஜனநாயக நாடு, நேர்த்தியாகச் செயல்படும் நாடாகவும் ஆகிவிட்டதில் இந்தியர் அனைவருக்கும் பெருமையே.
★★★★★
தமிழகத்தைச் சேர்ந்த ஏ.எஸ். ஷர்வானிகா, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்டோருக்கான உலக அதிவேக மற்றும் கிளாசிகல் செஸ் சாம்பியன்ஷிப்களை வென்று இந்தியாவுக்கு உலக அளவில் பெருமை சேர்த்துள்ளார். மனமார்ந்த பாராட்டுகள்! இந்திய செஸ் திறமைக்கு மற்றொரு வைரமகுடம் வைஷாலி ரமேஷ்பாபு. FIDE Women's Candidates Tournament-ஐ வென்ற முதல் இந்திய செஸ் வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். சீனாவைச் சேர்ந்த உலக சாம்பியன் ஜூ வென்ஜூனை வெல்லும் பட்சத்தில் உலக மகளிர் செஸ் சாம்பியன் ஆகும் வாய்ப்பு வைஷாலிக்கு உள்ளது. சதுரங்கத்தில் உலக அளவில் இந்தியா அழுத்தமான முத்திரை பதிப்பதற்குத் தமிழ்நாட்டில் முளைத்துத் தழைக்கும் திறனாளிகள் முக்கியக் காரணம் என்பதில் ஐயமில்லை. முன்னோடி விஸ்வநாதன் ஆனந்த் அவர்களோடு சேர்ந்து நாமும் மகிழ்ச்சியும் பெருமையும் அடையலாம்.
★★★★★
"எங்களுக்கு மெக்ஸிகோ போன்ற நாடுகளிலிருந்து போதைப் பொருள் கடத்தும் கும்பல்களைப் பிடிக்காது. அதனால் நாங்களே இங்கே கஞ்சா, அபின் போன்றவை சரளமாகக் கிடைக்க ஏற்பாடு செய்துகொள்கிறோம்" என்று சொல்வதைப் போல அமெரிக்கச் சட்டம் திருத்தப்பட்டிருக்கிறது. துப்பாக்கிச் சூட்டால் உயிர் போவதைவிட, அது எழுப்பும் ஒலியால் காது செவிடாவதுதான் மக்களுக்குச் சிரமம், எனவே சைலன்ஸர் வாங்குவதை எளிதாக்குகிறோம் என்று ஒரு சட்டத் திருத்தம் வந்ததையும் நாம் முன்னர் இங்கே குறிப்பிட்டிருந்தோம். மக்கள் நலன் என்பதற்குப் புதிய விளக்கங்களை அமெரிக்கா அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
★★★★★
பத்மஸ்ரீ திருத்தணி சுவாமிநாதன் ஓதுவார், சுவாமி சிவானந்தர், எழுத்தாளர் நவீனன் வாழ்க்கைக் குறிப்புகள், சிறுகதை என்று வாசிக்கத் தெவிட்டாத பல அம்சங்களோடு வருகிறது தென்றல்.
வாசகர்களுக்கு புத்த பூர்ணிமா வாழ்த்துகள். |
|
|
தென்றல் மே 2026 |
|
|
|
|
|
|
|
|
|
|