கவிஞர் தங்கம் மூர்த்தி, வாழ்வியல் உணர்வுகள் மேலோங்கி இருக்கும் இயல்பான கவிதைகளைத் தருபவர். இனிய, எளிய கவிதை மொழிக்குச் சொந்தக்காரர். 'அன்பில் தோய்ந்த வார்த்தைகளால் மனதைக் குளிர்விக்கும் கவிதைகளைப் படைப்பவர்' எனப் போற்றப்படுபவர். கவியரங்குகளில் 'சுழலும் கவியரங்கம்' என்ற புதுமையைத் தந்தவர். புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கத் தலைவர். கவிஞர், எழுத்தாளர், கல்வியாளர், சமூக சேவகர், சொற்பொழிவாளர் எனப் பல திறக்குகளில் சாதனைகளை நிகழ்த்தி வருபவர். ஹைக்கூ, கவிதை, கட்டுரை எனத் தொடர்ந்து எழுத்துலகில் இயங்கிக் கொண்டிருப்பவர். தமிழ்நாட்டில் நிகழும் பல்வேறு கவியரங்குகளில் கவிதைகள் வழங்கி வருபவர். ஓய்வறியாத உழைப்பாளியாக இயங்கிக் கொண்டிருக்கும் இவரது வாழ்க்கைத் துளிகள் இங்கே.
பிறப்பு, கல்வி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊர் அறந்தாங்கி. அங்குள்ள சுப்பிரமணியபுரம் என்ற சிற்றூரில், டாக்டர். திரு கே.கே. தங்கம், திருமதி ஜெயலெட்சுமி தம்பதியருக்கு, ஆகஸ்ட் 19, 1964 நாளன்று மகனாகப் பிறந்தார் மூர்த்தி என்பது இயற்பெயர். தங்கம் மூர்த்திக்கு நான்கு சகோதரர்கள். ஒரு சகோதரி. குமார், நாகராஜன், செல்வராஜன், ராமு மற்றும் மகாலெட்சுமி. மூர்த்தி, இளவயது முதலே கவிதை ஆர்வமும் இலக்கிய ஆர்வமும் கொண்டிருந்தார். அறந்தாங்கி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்புவரை படித்தார். மேல்நிலை வகுப்பு பயிலும்போதே கவிதைகள் எழுதத் தொடங்கிவிட்டார். 'மழை நேரத்து மரங்கள்' என்னும் தலைப்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் வாசித்த கவிதை பாராட்டைப் பெற்றது. பள்ளிக் கல்விக்குப்பின் புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் பயின்றார். அது வாழ்வின் திருப்புமுனை ஆனது. அங்கு பேராசிரியராகப் பணியாற்றிய இரா. பாலச்சந்திரன் என்னும் பாலா, தங்கம் மூர்த்தியின் திறமையை அறிந்து ஊக்கப்படுத்தினார். அவரால் உள்ளூர் இலக்கியம் முதல் உலக இலக்கியம் வரையிலான அறிமுகம் ஏற்பட்டது. இளங்கலை பட்டத்தைத் தொடர்ந்து, திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றார். புதுக்கோட்டை கல்வியியல் கல்லூரியில் பி.எட்., எம்.எட். பட்டங்கள் பெற்றார்.

முதல் கவியரங்கம் கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் அறந்தாங்கியில் 'சாகித்ய அகாடமி' விருது பெற்ற பொன்னீலன் தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில் தங்கம் மூர்த்தி கவிதை வாசித்தார். அது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து பல கவியரங்குகளில் பங்கேற்றார். கவிக்கோ அப்துல் ரகுமான், மு. மேத்தா, பேராசிரியர் அப்துல் காதர் போன்றோரின் தலைமையில் பாடிய தங்கம் மூர்த்தி, நாளடைவில் தாமும் பல கவியரங்கங்களுக்குத் தலைமையேற்றார். தாயகத்தைத் தாண்டிப் பல்வேறு நாடுகளில் கவியரங்க நிகழ்ச்சிகளுக்குத் தலைமை ஏற்றார், இலக்கிய விழாக்களில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.
புகழ் வெளிச்சம் பாய தமிழ்நாடு முழுவதும் பயணப்பட்டு, பல கவியரங்குகளில் கலந்துகொண்டார். டெல்லி, பெங்களூரு, கல்கத்தா, ஹரித்துவார், எர்ணாகுளம், அஸ்ஸாம் போன்ற பல இடங்களுக்கும் சென்று இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றார்.
முதல் நூல் தங்கம் மூர்த்தியின் முதல் நூல் ஒரு ஹைக்கூக் கவிதைத் தொகுப்பு. பெயர், 'முதலில் பூத்த ரோஜா'. 1994ம் ஆண்டில் மீரா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அதில் வெளிவந்த பல கவிதைகள் சக கவிஞர்களாலும், வாசகர்களாலும் பாராட்டப்பட்டன. தொடர்ந்து நான்கு பதிப்புகள் வெளியாகி அந்நூல் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இலக்கியச் செயல்பாடுகள் தங்கம் மூர்த்தி, புதுக்கோட்டையில் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையைத் தொடங்கி, அதன் மாவட்டச் செயலராகப் பணியாற்றினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தில் இணைந்து செயல்பட்டார். த.மு.எ.க.ச-வின் நகரத் தலைவராகப் பணியாற்றினார். பல இளம் எழுத்தாளர்களை, கவிஞர்களை ஊக்குவித்தார். மாவட்டக் குழு உள்ளிட்ட பொறுப்புகளில் அங்கம் வகித்தார். கலை இரவு மேடைகளிலும், கம்பன் விழாக்களிலும் கவியரங்கத் தலைமையேற்று உரையாற்றினார். முற்போக்கு எழுத்தாளர் சங்கச் சார்பில் 200 கவிஞர்களைக் கொண்டு ஒரே இடத்தில் ஒரே நாளில் புதுக்கோட்டையில் கவிதை பாட வைத்தார்.
சாகித்ய அகாடெமி தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினராக 2008 முதல் 2012 வரை பணியாற்றினார். இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் மறக்கப்பட்ட பலரை பல நிகழ்வுகள் மூலம் நினைவுக்குக் கொண்டுவந்தார். கவியரங்கம், கருத்தரங்கங்களைப் பள்ளி, கல்லூரிகளின் உதவியோடு பல நகரங்களில் நடத்தினார்.

நூல்கள் தங்கம் மூர்த்தி பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். இவரது கவிதைகள் ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு, மலாய், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. 'கவிதை நெடுஞ்சாலை' என்னும் இவரது தொடர் சிறந்த வரவேற்பைப் பெற்றது. இவரது ஹைக்கூ நூலிலிருந்து சில கவிதைகள் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 'நவீன இலக்கியங்கள்' என்ற வகைப்பாட்டில் பாடநூலாக வைக்கப்பட்டது. பல்கலைக்கழகப் பாடத்திட்டம் மற்றும் பல தன்னாட்சிக் கல்லூரிகளின் பாடத்திட்டங்களில் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இவர் எழுதிய 'கல்வி கரையினிலே' என்ற கட்டுரை நூல் இவரின் கல்விச் சிந்தனைக்குக் கிடைத்த அங்கீகாரமாக ஐம்பதாயிரம் பிரதிக்கு மேல் விற்பனையானது.
இவரது கவிதைகளைக் குறித்துப் பல மாணவர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். பேராசிரியர் முனைவர் செ. ரவிசங்கர், தங்கம் மூர்த்தியின் 2 படைப்புகளை முனைவர் பட்டத்திற்கு ஆய்வுசெய்ததோடு, தனி நூலாகவும் வெளியிட்டார். புதுக்கோட்டை ஸ்ரீசுபபாரதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிப் பேராசிரியை முனைவர் க. உஷாநந்தினி தங்கம் மூர்த்தியின் கவிதைகளை ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
தங்கம் மூர்த்தியின் ஹைக்கூ கவிதைகளான 'மழையின் கையெழுத்து, 'Sign of Rain' என்ற ஆங்கில மொழியாக்க நூலாகவும் வெளியாகியுள்ளது. இயக்குநர் முரளி அப்பாஸின் இயக்கத்தில் வெளியான 'சொல்லச்சொல்ல இனிக்கும்' திரைப்படத்தில் பாடலொன்றையும் எழுதியுள்ளார்.

பொறுப்பு பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவைச் செயலாளர், பேலஸ் சிட்டி சுழற்சங்கத் தலைவர், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர், கலை இலக்கிய சமூக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எனப் பல பொறுப்புகளை வகித்தார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினராகப் பணியாற்றினார். புதுக்கோட்டை புத்தகக் காட்சிப் பணிகளில் முன் நின்றார். புதுக்கோட்டை நூலக வாசகர் வட்டத் தலைவராகப் பணியாற்றினார்.
குடும்ப வாழ்க்கை தங்கம் மூர்த்தியின் மனைவி திருமதி அஞ்சலி தேவி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு இரு மகள்கள்.
தங்கம் மூர்த்தி எழுதிய நூல்கள் * முதலில் பூத்த ரோஜா, ஹைக்கூ கவிதைகள் * தங்கம் மூர்த்தி கவிதைகள் * பொய்யெனப் பெய்யும் மழை * என் பண்டிகையின் நாட்குறிப்பிலிருந்து * கல்வி கரையில, கல்வி பற்றிய கவிதைகள் * கவிதை வெளியினிலே * மழையின் கையெழுத்து * கவிதையில் நனைந்த காற்று * ஹைக்கூ 100, மேன்மை வெளியிடு * தேவதைகளால் தேடப்படுபவன் * அந்த வானவில்லுக்கு எட்டு நிறங்கள் * கூடு திரும்புதல் எளிதன்று
பள்ளி தங்கம் மூர்த்தி புதுக்கோட்டையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி என்ற கல்விக் கூடமொன்றை நிறுவினார். இவரது பள்ளியின் சிறப்பு, குழந்தைகள் மகிழ்ச்சியாகக் கற்றல் என்பது. பலவிதமான கற்றல் கற்பித்தல் களங்களையும், கற்றல் சூழல்களையும் மாணவர்கள் விரும்பும் வண்ணம் உருவாக்கித் தந்து வருகிறார். பல்வேறு விழாக்களை நடத்தியும், போட்டிகளை வைத்தும் மாணவர்களை ஊக்கப்படுத்துகிறார். அமைதியான சூழலில் மாணவர்கள் கற்கும் வகையில் பல ஏற்பாடுகளைச் செய்துள்ளார். குறிப்பாகப் பள்ளி இறுதி மற்றும் மேல்நிலை வகுப்புப் பயிலும் மாணவர்கள் மன அழுத்தமின்றிப் பயிலும் வகையில் பல முயற்சிகளை முன்னெடுத்துள்ளார்.
இலக்கியம் மற்றும் கல்வியியலில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தி, மென்மேலும் பல சாதனைகளை நிகழ்த்துமளவிற்குத் தம் மாணவர்களை உருவாக்கி வருகிறார். |