Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
புதுவை சந்திரஹரி
- அரவிந்த்|ஜூன் 2025|
Share:
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலிருந்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் தொண்டாற்றியவர்கள் பலர் உண்டு. பாரதிதாசன், வாணிதாசன், புதுவைச்சிவம், தமிழ் ஒளி போன்ற கவிஞர்கள் மற்றும் சிறுகதை இலக்கியத்துக்குப் பங்களித்த பிரபஞ்சன் போன்ற எழுத்தாளர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அந்த வரிசையில் இடம்பெறத்தக்க ஒருவர் புதுவை சந்திரஹரி.

கும்பகோணத்தில் டி.கே. நடராஜ ராவ் - என்.தனலட்சுமி பாய் இணையருக்கு செப்டம்பர் 22, 1946-ல் பிறந்தார். இயற்பெயர்: என். ஹரிதாஸ். தொடக்கநிலை மற்றும் இடைநிலைப் பள்ளிக் கல்வியைக் கும்பகோணத்தில் கற்றார். புதுச்சேரி பெத்தி செமினார் ஆண்கள் பள்ளியில் மேல்நிலைக் கல்வி பயின்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் பயின்று தாவரவியலில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். மைசூரிலுள்ள Regional College of Education கல்லூரியில் பி.எட். பட்டம் பெற்றார். ஆந்திராவிலுள்ள வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில், தத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்றார். எம்.எட். பட்டத்தை 1978-ல், ஹிமாச்சல பிரதேச பல்கலைக்கழகத்தில் கற்றார்.

1970ல் புதுச்சேரி குருசுகுப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1979 முதல் புதுவை கலவைக் கல்லூரி அரசு மேல்நிலைப் பள்ளியில் தத்துவ ஆசிரியராகப் பணியாற்றினார். 1989 முதல் அதே பள்ளியில் துணை முதல்வராகப் பணிபுரிந்தார். 1998 முதல் வில்லியனூர் விவேகானந்தர் அரசு மேல்நிலைப் பள்ளியில் துணை முதல்வராகவும், 2000 முதல் என்.மே.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல்வராகவும் பணியாற்றினார். 2004 முதல் காலாப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல்வராகப் பணிபுரிந்தார். 2005-6ல் 'அனைவருக்கும் கல்வி இயக்க'த்தில் மாநிலத் திட்ட இயக்குநராகப் பணியாற்றினார். நல்லாசிரியர் விருது பெற்றார்.



இவரது மனைவி சந்திரகாந்தி. இவர்களுக்கு ஈஸ்வரதாஸ். ஆனந்தலட்சுமி, விஷ்ணுதாஸ் என மூன்று பிள்ளைகள். மனைவியின் பெயரை இணைத்து 'சந்திரஹரி' என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கினார். 1966ல் 'காதல் ஒரு கழுதை' என்ற தலைப்பில் நாடகம் ஒன்றை எழுதி அரங்கேற்றினார். 1967ல் 'பகோடா', 'ஹலோ ராமா ஹலோ கிருஷ்ணா' என்னும் வார இதழ்களைத் தொடங்கி நடத்தினார். முதல் சிறுகதை 1984ல், 'டேக் 28' என்ற தலைப்பில் குமுதத்தில் வெளியானது. தொடர்ந்து 'புதுவை சந்திரஹரி' என்ற புனைபெயரில் தமிழின் முன்னணி இதழ்கள் பலவற்றிலும் எழுதினார். தமிழில் வெளியாகும் வெகுஜன இதழ்கள் பலவற்றிலும் சந்திரஹரியின் சிறுகதைகள் வெளியாகின. சில சிறுகதைகள் இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட பரிசுகளைப் பெற்றன. சந்திரஹரி சிறுகதைப் போட்டிகள் பலவற்றில் பங்கேற்றுப் பரிசுகள் வென்றார். நூற்றுக்கும் மேற்பட்ட ஒரு பக்கச் சிறுகதைகளையும் 350க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் புதுவை சந்திரஹரி எழுதியுள்ளார்.

நேஷனல் புக் ட்ரஸ்ட்டிற்காக, 'இருண்ட வீடு' என்ற தலைப்பில், பாரதிதாசனின் கவிதைகளை எளிய நடையில் முதியோர் கல்விக்காக எழுதினார். 'கண் திறந்தது' என்ற தலைப்பில் முதியோர் கல்விக்கான மற்றொரு நூலையும் எழுதினார்.

சந்திரஹரி பெண்ணியத்திற்கு, பெண்ணின் உணர்வுகளுக்கு, உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பல சிறுகதைகளை எழுதினார். சமூகச் சீர்கேடுகளைச் சாடும் சில படைப்புகளை எழுதினார். அழகப்பா பல்கலைக்கழகத்தில் இவரது சிறுகதைகள் எம்.ஃபில். படிப்பிற்காக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இவரது 'புதுச் செருப்பு' சிறுகதை 'வலி' எனும் திரைப்படமாக இயக்குநர் விஜயசேகரால் எடுக்கப்பட்டது. இவரது 'குறிஞ்சிப் புன்னகை' என்னும் புதுக்கவிதை நூல், ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தால் தேர்வு செய்யப்பட்டு 2005ல் ஜெர்மனில் மொழியாக்கம் செய்யப்பட்டது.

புதுவை சந்திரஹரி நூல்கள்
சிறுகதைத் தொகுப்புகள்: விளாம்பழ ஓடு, நத்தைக் கூடு, சிறியவர்கள்-பெரியவர்கள், வேகத்தடைகள், மேடுகள் பள்ளங்கள், காலங்கள் - கோலங்கள், வெண்பனிக் கனவுகள்
குறுநாவல்: கவிஞனின் காதல், ஆன்ம ராகம், விதை நெல்
நாவல்: காதலடி நீ எனக்கு, அயல் மகரந்தம்
சிறார் படைப்புகள்: தம்பிக்கொரு பாட்டு, பாட்டுப் பூக்கள்
கவிதை நூல்கள்: குறிஞ்சிப் புன்னகை, கறுப்புத் தாஜ்மகால்
கட்டுரை நூல்கள்: கம்ப நயம் (இரண்டு பாகங்கள்)


புதுவை சந்திரஹரி 7 சிறுகதைத் தொகுதிகள், 4 கவிதை நூல்கள் 2, நாவல்கள் 2, சிறுவர் நூல்கள், கட்டுரை நூல்கள் என 15க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

இவருடைய 'விளாம்பழ ஓடு', 'மேடுகள் பள்ளங்கள்' ஆகிய சிறுகதைத் தொகுதிகளும், 'அயல் மகரந்தம்' என்னும் புதினமும் புதுவை அரசின் கம்பன் விருதைப் பெற்றன. 'காதலடி நீ எனக்கு' எனும் புதினம் தமிழ் எழுத்தாளர் கழக இலக்கியப் பரிசைப் பெற்றது. புதுவை எழுத்தாளர் சங்கம் மனித உரிமை ஆய்வு மற்றும் உயர்வுறுதல் சங்கம் - மக்கள் காப்புரிமை மாத இதழ் இணைந்து நடத்திய புதினப் போட்டியில் இவரது 'அயல் மகரந்தம்' நாவல் பரிசைப் பெற்றது. கலைமகள் சபா அளித்த சிறந்த எழுத்தாளர் விருது, புதுவை அரசின் கலைமாமணி விருது உள்படப் பல்வேறு விருதுகளைப் புதுவை சந்திரஹரி பெற்றுள்ளார். புதுவை சந்திரஹரி puduvaichandrahari.blogspot.com என்ற வலைத்தளத்தில் தனது படைப்புகளை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline