Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
அலமாரி
கொத்தமங்கலம் சுப்பு
- அரவிந்த்|ஜூன் 2025|
Share:
கே: தங்களது இளமை நாட்கள் தங்களைத் திரையுலகிற்கு எவ்வாறு திருப்பின? பின்னர், இலக்கிய வாழ்வுக்குள் எப்படிப் புகுத்தின?
ப: நான் ஒரு கணக்கப்பிள்ளை. கணிதத்தில் இன்பத்தைக் காண்பது அப்பொழுது என் பொழுதுபோக்கு. கணிதம், கலையில் திருப்பிவிட்டது. சம்பளமின்றி நாடகத்தில் நடிக்கப் போனேன். வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு துயரச் சம்பவத்தால் சினிமாவில் புகுந்தேன். அங்கும் தமிழ்த்தாய் என்னைத் தடுத்தாட்கொண்டாள். 'ஒருவனைப் பற்றி ஓரகத்திரு' என்பதுபோல் நல்ல முதலாளிகளைத்தேடி அடைந்தேன். ஸ்ரீ வாஸன் அவர்களால் என் வாழ்க்கை வளம் பெற்றது. திரியிட்டு, நெய்யிட்டு, தீபத்தை ஏற்றித் தூண்டிவிட்டுக் காப்பதுபோல் என்னை அவர்கள் காப்பாற்றுகிறார்கள். ஏதேனும் பிரகாசம் இருந்தால், அது அவர்கள் செய்த உதவி. ஒளவை ஒன்றே என் பரம்பரைக்குப் போதும். அதைவிடச் சிறந்ததை இனி நான் செய்ய முடியுமென்று கனவிலுங்கூடக் காண முடியாது. இறைவன் கருணை வடிவானவன். அவன் ஆட்டுவிக்கிறான்; நாம் ஆடுகின்றோம். அவன் வடிக்கின்றான்; நாம் பருகுகின்றோம். அவன் அருளாலே அவன் தாள் வணங்குவதுதான் நாம் செய்யக் கூடியது.

'காந்தி மகான் கதை', 'தில்லானா மோகனாம்பாள்' ஆகியவற்றை நான் கனவிலும் கண்டதில்லை. நம்பினேன். நல்லவரைப் பாதுகாவலராகத் தந்தான். நல்ல வழியில் போகச் செய்தான். நல்ல பெயர் கிடைக்கச் செய்தான். இன்னும் இன்னும் அத்தனை நற்கருமங்களிலும் ஈடுபடுத்த வேண்டும். என் பிறவியைப் பயனுடையதாக ஆக்கவேண்டும் என்பதுதான் என் இடையறாத பிரார்த்தனை. நன்றியும் பிரார்த்தனையும் கலந்துதான் நான் வாழ்கின்றேன். அவன் கருணையை நினைக்க என் உள்ளம் நெகிழ்கின்றது: கண்ணீர் மல்குகின்றது; நா தழுதழுக்கின்றது. உணர்ச்சி வசப்படுகிறேன். 'என்னை நல்லவனாகவே வைத்திரு; எஞ்சிய நாட்களை உன் பணிக்கே எடுத்துக் கொள்' என்று இதய பூர்வமாய் வேண்டுகின்றேன். தமிழ்ப் பணியே அவன் அருள் பணியாகக் காண்கின்றேன். அதிலே இன்பம் அடைகின்றேன். பதினெட்டு மணி நேரம் எழுதுகிறேன். உடல் நைகின்றது. நான் எழுதும் காகிதத்தில் என் கண்ணீர் கொட்டுதலும், என் சிரிப்பு, வெற்றிலை எச்சிலைச் சிதறுவதும், நான் அனுபவிப்பதும்தான் முக்கியமான இன்பங்கள்.

கே: ஆட்சி மொழியாக அரியணை ஏறியுள்ள நம் தமிழ்மொழி தெருவெல்லாம் முழங்க அரசினருக்குத் தாங்கள் கூற விரும்பும் ஆலோசனைகள் என்னென்ன? பத்திரிகைகளின் மூலம் இப்பணி செயற்பட வழி என்ன?
ப: யோசனை சொல்லவே வேண்டாம். தமிழன் அறிவாளி; தமிழன் பண்புடையவன். அறிவால் அவனுக்கு ஒரு சண்டை ஏற்பட்டாலும், அன்பால் அவன் என்றும் ஒன்றானவன். தமிழகம் உயர்ந்து விட்டது. அரசியல் கொந்தளிப்புகள் இன்னும் பத்து வருஷத்தில் அடங்கி ஒரு நிலைப்பட்டு விடும். உலகில் சிறந்த தமிழ்நாடு பொழுது மறுபடியும் ஓங்கும். அதை நாம் எல்லோரும் காண்போம்.

கே: இன்றுள்ள அரசியல் வெறும் சூதாட்டமாக மாறிவிட்டதென்று முடிவுகட்டத் தோன்றுகிறது, இப்போதைய தேர்தல் நாடகத்தை வைத்துப் பார்க்கும் போது. உங்களுடைய எண்ணம் என்ன?
ப: அரசியல் எப்பொழுதுமே சூதாட்டம்தான். வாழ்க்கையே அநித்யமானது. ஆன்ம வாழ்வு தான் பெரிது என்று போதிக்கப்பட்ட நாட்டில் - அதைக் கடைப்பிடிக்கும் நாட்டில் - மண் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் குழப்பமாகத் தான் இருக்கும். அதிலே ஆன்ம வாழ்வு கலந்தார் காந்தி மகாத்மா. அவரால்தான் நாமெல்லோரும் அரசியலைத் திரும்பிப் பார்த்தோம். இன்று காந்தி மகாத்மா இல்லை. நம் கண் அரசியலிலிருந்து ஆன்மத் துறையில் சீக்கிரமே திரும்பிவிடும். அரசியல் ஒழுங்காக நடக்கும். ஆனால், இவ்வளவு அரசியல் குழப்பங்களும் சூதாட்டங்களும் மாறியும் விடும். தேசத்தின் வாழ்வில் அது பெரிதாகத தோன்றாது.

ஒரு நல்லவன் கெட்டவனாவதும், கெட்டவன் நல்லவனாவதும் ஒருவரையொருவர் பகைப்பதும் மனிதன் விருப்பு வெறுப்பு முதலிய குணங்களை வெளியே கொண்டு வந்து கொட்டுவது தேர்தல் காலத்தில் இயற்கை. ஒருவிதத்தில் பார்க்கப் போனால் இதுவும் தேவைதான். புயலுக்கு பின் அமைதி வருகின்றதல்லவா? உச்சக்கட்ட உணர்ச்சிகள் இந்தச் சந்தர்ப்பத்தில் கொட்டப்பட்டு விடுகின்றன. இது ஒரு போக்கு மடை. இனி, குளத்திலே தெளிந்த நீரைப் பார்க்கலாம்.

கே: பத்திரிகைகளுக்காக வாசகர்களா? வாசகர்களுக்காகப் பத்திரிகைகளா?
ப: பத்திரிகைகளுக்காகத்தான் வாசகர்கள். அது ஒரு குருபீடம். கடமையை உணர்ந்த ஆசிரியன் தானும் வாழ்ந்து உலகுக்கும் நலம் பல செய்வான். மக்கள் நோக்கத்தைப் பின்பற்றுகிறேன் என்று சொல்லி, வண்டியை விட்டு இறங்கி, காளைகளுக்கு அவன் முன்னே ஓடுவது முரண்பாடு.

கே: 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்!' காரணங்கள் எவை?
ப: அதுவேதான் காரணம். தாயை நத்துவதற்குக் காரணம் வேண்டுமா? தமிழைப் போற்றுவதற்கு காரணம் வேண்டுமா? இன்று தமிழ்நாட்டில் ஆளுக்கு ஒரு ஏக்கர் நிலம் கிடைக்குமா என்பது தகராறு. பிரித்து கொடுத்தால், ஆளுக்கு ஒரு நல்ல நிலம் கிடைக்கும். தமிழனின் பெருஞ் செல்வம் நம்முடைய இன்பக் களஞ்சியங்கள். நம் வாழ்வை வகுத்தவர்கள் தமிழ்ப் புலவர்களே யாவர். வாழ்க்கைத் துறையில் வள்ளுவரும் ஒளவையும் பாரதியும் வாழ்க்கையை வகுத்தார்கள். கம்பனும் இளங்கோவும் அதற்குக் கற்பூர மணமிட்டார்கள். திருவாசகமும் திருவாய்மொழியும் அருட்பாவும் அன்புப் பயிரை வளர்த்தன. அன்பு, அறிவு, ஆற்றல் ஆகிய மூன்றையும் தாய்ப் பாலாகப் புகட்டியது தமிழ்மொழி. தமிழ் என்பார் பிறர்; தாய் என்போம் நாம்.

கே: இன்றைய நிலையிலே. தமிழில் மறுமலர்ச்சி இயக்கம் விரும்பத் தகுந்த அளவில் செல்கிறதென்று நீங்கள் நினைக்கிறீர்களா?
ப: மறுமலர்ச்சி என்பது ஒரு புரியாத புதிர். பண்புக்கு முரணான கருத்துதான் மறுமலர்ச்சியா, பழைமையை ஒழிப்பதுதான் மறுமலர்ச்சியா என்பது எனக்குப் புரியவில்லை. எந்தப் பழத்திலும் பூ முற்றி காயாகி, காய் முற்றி கனி ஆவதுதான் இயற்கை, பூவும் வேண்டும்; பழமும் வேண்டும் என்பதுதான் மறுமலர்ச்சி. அம்மாதிரி பார்க்கப்போனால், மாதுளம்பழம் ஒன்றுதான் இருக்கிறது. அதிலே மேலே பூவும் உண்டு: உள்ளே பழமும் உண்டு. அம்மாதிரி மறு மலர்ச்சிக் கனியில் ஒளி வீசும் மாதுளை முத்துக்கள் வரவேண்டுமென்பதுதான் என்ஆசை. ஆனால், இன்று நான் காணுவது பெரும்பாலும் முந்திரிப் பழங்களையே. முந்திரிப் பழத்தில் பழத்திற்கு முன்பு கொட்டை ஒட்டியிருக்கும். முந்திரிக் கொட்டை இலக்கியம் காறும்: புளிக்கும். அம்மாதிரி மறுமலர்ச்சி என்னால் விரும்பத் தகுந்தது அல்ல. பாடுபட்டு பெரியோர்கள் கண்ட அந்தப் பழைய பண்பாடுகளை ஒரே நாளில் இடித்துவிட முயற்சிப்பது, ஐயாயிரம் வருஷத்தில் செய்த அபிவிருத்தியை ஐந்து நாளில் தகர்த்து எறிவது போலாகும்.

கே: கவிதைகளில் புலமையைவிட கருத்துக்களை அதிகம் புகுத்துவது அநேகருடைய குறிக்கோள். இதைக் குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள் ?
ப: கவிதை என்பது கற்கோயில். அதற்குக் கட்டட அழகும் வேண்டும்; உள்ளே கடவுளும் வேண்டும். வெறும் கருத்து கவிதை ஆகி விடாது. கல்லும் கோவிலாகி விடாது. இலக்கணமும் கருத்தும் இரண்டறக் கலந்ததே கவிதை. இலக்கணம் வெளியே தெரியக் கூடாது. கருத்துத்தான் தெரிய வேண்டும். நாவுக்கு இசைந்தால் தான் பாவுக்கு இசையும். இன்று வரும் கவிதை இலக்கியம் புதிய இலக்கணத்தை உண்டாக்குவதாக இருந்தாலும் இருக்கலாம்.

கே: இன்று வாழும் எழுத்தாளர்களில் கவிஞர்களில், கலைஞர்களில் சிலர் கட்சிச் சார்பில் வாழ்கிறார்கள். இவர்களுக்குக் கட்சி தேவையா? இதனால் இவர்களுக்கு இருக்க வேண்டிய பொது நோக்கு பாழ்பட்டு விடாதா?
ப: உண்மைக் கலைஞனையும் கவிஞனையும் எல்லா நிகழ்ச்சிகளும் பாதிக்கும். அவன் உணர்ச்சி வசப்பட்டவன். அவன் உள்ளம் பழுத்துக் காய்ந்து கொண்டேயிருக்கிறது. ஆதலால், கட்சிகளை அவன் சாராவிட்டாலும், அவனுடைய இதயமாகிய கண்ணாடியில் எந்த நிழலும் விழத்தான் செய்யும். கண்ணாடி உருவத்தை எடுத்துக் காட்டுமே யொழிய, அது உருவமாக மாறி விடாது. ஆதலால் கலைஞன் கட்சிக்காரனாக முடியாது. தள்ளி நின்று வண்டியை ஓட்டச் செய்வதுதான் அவன் வேலை.

கே: 'ஆனந்த விகட'னில் சிறுகதை, நாவல் என்று போட்டிகள் நடத்தப்படுவதைப் போன்று, திரைக்கதைக்கும் ஜெமினி ஒரு போட்டி நடத்த தாங்கள் ஏற்பாடு செய்வீர்களா? பிற மொழிகளை நம்பாமல் தாய்மொழிக் கதைகளையே படத்தில் புகுத்த நல்வாய்ப்பு ஏற்படுமே? - டைரெக்டர் என்ற அளவில் இக்கேள்வியைக் கேட்கிறேன்.
ப: இது ஸ்ரீவாசன் அவர்களைக் கேட்க வேண்டிய கேள்வி. அவர் ஓர் அறிவுக் களஞ்சியம். உங்களுக்குத் தகுந்த பதிலை அவர் அளிப்பார்.

கே: தாங்கள் தில்லானா மோகனாம்பாளை உருவாக்கியதன் மூலம் பேராசிரியர் கல்கி அவர்கள் அடைந்த புகழைச் சம்பாதித்து வருகிறீர்கள். பெரும்பாலானோர் கருத்தும் இதுவே. 'கல்கி' மாதிரி தாங்களும் சரித்திரத் தொடர் கதைகள் எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.
ப: கல்கி அவர்கள் அடைந்த புகழை நான் அடைந்து விடவில்லை. அப்படி ஒருவர் அடையவும் முடியாது. கல்கி அவர்கள் கரும்பைக் கற்கண்டாக்கிக் கொடுத்தார். நான் கரும்பாகத்தான் கொடுக்கிறேன். அவருடைய நடையின் ஹாஸ்யமும், இன்னும் நூறு வருஷங்களுக்கு ஒருவராலும் பின்பற்ற முடியாதது. சரித்திரத் தொடர் கதை எழுதவேண்டுமென்றுதான்ஆவல்.

ஈழ நாட்டுச் சரித்திரங்களையும் மலாய் நாட்டுச் சரித்திரங்களையும் தமிழ்க் கண்ணோடு ஆராய்ந்து வருகிறேன். இறைவன் திருவருள் துணை செய்தால் எழுதுவேன்.

கே: 'கலைமணி' என்ற பெயரில் தங்கள் தொடர்கதை 'ஆனந்த விகட'னில் இடம் பெற்று வருகிறதே! இதே புனைபெயரில் வேறு சிலரும் எழுதி வருகிறார்களே?
ப: 'கலைமணி' என்ற பெயர் எனக்குக் கிடைத்த பல பட்டங்களில் ஒன்று. வரகவி திரு சுப்பிரமணிய பாரதியாரால் பெரம்பூரில் வழங்கப்பட்டது. ஒரு புனை பெயருக்கு அவசியம் வந்தபோது, அதை உபயோகப் படுத்திக் கொண்டேன். அம்மாதிரிப் பெயரில் வேறு சிலர் இருக்கிறார்களென்பது எனக்கு அப்போது தெரியாது. தெரிந்திருந்தால் தயங்கியிருப்பேன்.

கே: தமிழ்நாடு அமைப்பு முறை தங்களுக்கு விருப்பம் தானே?
ப: 'தமிழ்நாடு' அமையவேண்டும். அதுவே மத்திய அரசாங்கமாகவும் ஆகவேண்டும். ஆனால், இந்தியா ஒன்றாகத்தான் இருக்க வேண்டுமென்பது என் ஆசை.

கே: இந்தியாவுக்குப் பொது மொழி தேவைதானா? எந்த ஒரு மொழிக்கு அந்த இடம் தருவீர்கள்?
ப: சிக்கலான கேள்வி. ஹிந்தி ஒரு வளமற்ற மொழி. தமிழே இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆவது எதிர்பார்க்க முடியாதது. பொதுமொழி தேவை தான். அது ஆங்கிலமாகவே இருந்தாலும் போதும் என்று சொல்லத்தான் எனக்குத் தோன்றுகிறது.

கே: பத்திரிகைகள் வாயிலாகக் கவிதை வளர்ச்சி பெறுமா? அல்லது திரை மூலமாகவா?
ப: பாடப்படுவது பாட்டு. பாட்டைத்தான் கவிதை என்கிறார்கள். பத்திரிகைகளில் பல சந்தங்களையும் வைத்து எழுதினால் படிப்பவர்கள் திணறுகிறார்கள். சினிமாவில் கவிதைகளைப் பாடமுடியும். அதிலே அதிக வளர்ச்சிக்கும் இடம் உண்டு.

நாடோடிக் கவிதைகளைப் பற்றிய சுருக்கமான வரலாறு வேண்டும். கடலைச் சுருக்குவதற்கு நான் அகத்தியன் அல்ல. அதை இன்னொரு கட்டுரையில்தான் விளக்க வேண்டும்.

கே: உமா பற்றிய கருத்தைத் தெரிவிப்பீர்களா?
ப: 'உமா' - அழகிய பெயர். ஆக்கும் தாய் பராசக்தி. அவளுடைய பெயர் உமை. உங்கள் பத்திரிகை நான் விரும்பிப் படிக்கும் பத்திரிகை. அது வெறியூட்டவில்லை. நெறியை ஊட்டுகின்றது. நல்ல பத்திரிகை. நாட்டுக்கு நலம் செய்யும்.

கே: நாடகம், சினிமா ஆகியவை ஒன்றுக்கொன்று உதவியான கலையா? போட்டிக் கலையா? அவை ஒன்றுக்கொன்று உதவ முடியுமா?
ப: கலையில் போட்டியே கிடையாது. நாடகம் தாய்: சினிமா குழந்தை. டெலிவிஷன் பேரன், பேத்தி! இவை மாறிக்கொண்டே வரும்.

கே: சினிமா பார்ப்பது தவறு என்று முன்னர் ராஜாஜியும். ஈ.வெ.ரா.வும் சொன்னார்கள். இது குறித்துத் தங்கள் முடிவு என்ன....?
ப: பெரியவர்கள் எப்போழுதும் புத்தி சொல்லுவார்கள். அதை அவர்கள் பொது மக்களுக்கு சொல்வதைக் காட்டிலும் தொழில் சம்பந்தப்பட்டவர்களுக்குச் சொல்லியிருந்தால், தொழில் முன்னேறும். அவர்கள் நினைக்கும் நன்மைகள் வரும்.

கே: ம.பொ.சி, கல்கி, திருவாளர்கள் வாஸன், ராஜாஜி ஒவ்வொரு துறையிலும் பிரபலமான இப்பெயர்களைப் பற்றி உங்கள் நினைவுகளை அறிய ஆவல்.
ஸ்ரீ வாசன்: என் சிறுமைகளை மன்னிப்பவர். என் பெருமைக்குக் காரணமானவர். மனிதர்கள் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு எடுத்துக்காட்டு. எளிமையே உருவானவர். இதயத்தில் கடல் போன்றவர். பிறருக்கு இன்னலே செய்யாதவர், ஈட்டல், அதை நல்வழியில் செலவிடல் என்பதற்கு உவமை அவர்.
ராஜாஜி: உலகத்தில் சிறந்த அறிவாளி. தனி அறிவு. ஒளி வீசும் ஞாயிறு. அதன் அருகில் விட்டில் மாத்திரமல்ல, கருடனும் செல்ல முடியாது. அவர் தனியாய் நிற்பவர்.
ஸ்ரீ ம.பொ.சி: தமிழனுக்காகவே வாழ்பவர். நல்லது கெட்டது என்றுகூடப் பாராமல், குழந்தைகளை அரவணைக்கும் தாய்போல, தமிழ் மக்களுக்கு உழைப்பவர். அவரைப் போல் ஒரு பிறவியைக் காண்பது அரிது.
ஸ்ரீ கல்கி: தமிழ் வயலிலே புதிதாக விளைந்த செல்வம். மறுமலர்ச்சி என்றால் அவர்தான் உண்மையான மறுமலர்ச்சி செய்தவர்.

கே: தாங்கள் விரும்பும் பத்திரிகாசிரியர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் யார், யார்?
ப: சர்க்கரை, கற்கண்டு, பனங்கற்கண்டு, பழம், லட்டு, அல்வா - எல்லாமே இனிப்புதான்; எல்லாமே சுவையுடையவைகள்தான். இதைப் போல் எல்லோருடைய எழுத்தும் இதயத்திலிருந்துதான் வருகின்றது. எல்லாக் கவிஞர்களும் எல்லா எழுத்தாளர்களும் எல்லா ஆசிரியர்களும் எனக்கு ஆசிரியர்கள். நான் பள்ளிப் படிப்பு அதிகம் படித்ததில்லை. இவர்கள்தான் எனக்குக் குருவாக விளங்குகிறார்கள். சில சமயங்களில் அவர்கள் யாரையேனும் வைதால் அதை நான் விரும்பிப் படிப்பதில்லை. வெறுப்பையும் நெருப்பையும் வளர்ப்பது பேனாவின் வேலையல்ல. வாள் முனையைக் காட்டிலும் பேனா முனை சிறந்தது என்பதன் கருத்து, வாள் முனையால் அழிக்கத்தான் முடியும்; பேனா முனையால் ஆக்க முடியும் என்பதைத்தான் எடுத்துக் காட்டுகிறது. ஏர் முனையும் பேனா முனையும் ஒன்று. ஏர் முனை வயிற்றை வளர்ப்பது. பேனா முனை வாழ்வை வளர்ப்பது. எல்லா ஆசிரியர்களுமே என் வணக்கத்திற்கு உரியவர்கள்

உரையாடல்: பூவை எஸ். ஆறுமுகம்
நன்றி: உமா, மார்ச், 1957 இதழ்
தொகுப்பு: அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline