Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
குவான்ட்டம் கணினியின் குழப்பம்! (பாகம்-10)
- கதிரவன் எழில்மன்னன்|ஜூன் 2025|
Share:
முன்கதை: சிலிக்கான் மின்வில்லைத் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன்! தன் தொழில் பங்கு வர்த்தகமானாலும், சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலுத்துகிறான். ஷாலினி ஸ்டான்போர்ட் மருத்துவ மனையில் மருத்துவராகவும், உயிரியல் மருத்துவ நுட்ப (bio-med tech) ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.

இதுவரை: ஷாலினிக்குப் பரிச்சயமான பெண்மணி மேரி தன் குவான்ட்டம் ஒளிக்கணினி (Quantum optical computer) தொழில்நுட்ப நிறுவனம் திடீரென ஒரு பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி, கிரண், சூர்யா மூவரும் பெர்க்கலி, கலிஃபோர்னியாவில் உள்ள மேரியின் ஆராய்ச்சிக் கூடத்துக்கு விரைகின்றனர். மேரி குவான்ட்டம் கணினி எப்படி வேலை செய்கிறது, அதன் இடையூறுகள் என்னென்ன, அவற்றைத் தங்கள் தனிச்சிறப்பான நுட்பங்களால் எப்படி நிவர்த்தித்தனர் என்று விவரித்தாள். பிறகு, திடீரென இரண்டு வாரமாக நுட்பங்கள் சரியாகப் பலனளிக்கவில்லை என்றும், முந்தைய தினமே திருட்டு நிகழ்ந்தது என்றும் கூறினாள். குவான்ட்டம் கணினியின் குழப்பத்தைச் சூர்யா எப்படி நிவர்த்திக்கிறார் என்பதை தொடர்ந்து பார்ப்போம் வாருங்கள்...

★★★★★


குவான்ட்டம் கலையலால் (decoherence) உயர்வு போய், சிலமுறை குறைவாகிவிட வாய்ப்புள்ளதாக மேரி கூறிவிட்டு, தங்கள் நுட்பத்தின் தனிச்சிறப்புக்களில் ஒன்று மிக தனித்துவமுள்ள அபூர்வமண் கலவையால் க்யூபிட்கள் உருவாக்குவதால் கலையல் குறைவு என்றும், கணினிக்குள்ளேயே ஊதா நிற லேஸர் கதிரை மிகக்குறைந்த சக்தியில் மிக அதிக வேகத்தில் தகவல் துளிகளை நகர்த்துவது மற்றொரு தனிச்சிறப்பு என்றும் கூறினாள். மற்ற குவான்ட்டம் கணினி முயற்சிகளால் குவான்ட்டம் உயர்வு (quantum superiority) அளிக்க இயலவில்லை என்றும் முன்கூறிய அந்த இரண்டு அதிஉயர்வு நுட்பங்களோடு மேலும் பல சிறு சிறு முன்னேற்றங்களைச் சேர்த்ததால்தான் தங்கள் கணினி, சாதாரணக் கணினிகளை விடப் பன்மடங்கு குவான்ட்டம் உயர்வைத் தொடர்ந்து காட்டியதாகக் கூறினாள். ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக அந்தத் தனிச்சிறப்பு நுட்பங்கள் ஏன் சரியாகப் பலனளிக்கவில்லை என்று நிறுவனத்தின் நிபுணர்கள் ஆராய்ந்து கொண்டிருந்த போது முந்தைய தினம் திடீரெனத் திருட்டு நடந்து விட்டதால் ஷாலினிக்கு அவசரச் செய்தி அனுப்பியதாகவும் விளக்கினாள்.

"எந்தப் பொருட்கள் திருடப்பட்டன. அவற்றின் முக்கியத்துவம் என்ன?" சூர்யா கேட்டார்:

மேரி விவரித்தாள், "திருடியவர்கள் மிகவும் நுட்பங்கள்மேல் குறிவைத்துத்தான் திருடியிருக்கிறார்கள். குவான்ட்டம் கலையலைக் குறைக்கப் புது மாதிரியான க்யூபிட்களை உருவாக்குவதற்கான அபூர்வமண் பொருட்கள் வைக்கப் பட்டிருந்த சிறு பெட்டிகள் சில, அப்படிப்பட்ட நூதன க்யூபிட்களைத் தயாரிப்பதற்கான சாதனம் ஒன்று, வயலெட் லேஸர் சாதனம் ஒன்று, அவற்றை உருவாக்கவும் பயன்படுத்தவும் வழிமுறை மென்கோப்புக்களைச் சேமித்திருந்த கணினி ஒன்று இவற்றைத்தான் திருடியிருந்தார்கள். வேறு எதையும் சேதம் செய்யவும் இல்லை, எடுத்துப் போகவும் இல்லை."

கிரண் பிரமித்தான், "வாவ், சரியாத்தான் குறிவச்சு அடிச்சிருக்காங்க. பலே கில்லாடிங்கதான்!"

மேரி ஆமோதித்தாள். "ஆமாம். எங்க தனிச்சிறப்பு நுட்பங்களைப் பத்தி ரொம்ப நல்லாத் தெரிஞ்சுகிட்டு அவற்றை மட்டும் திருடியிருக்காங்க!"

ஷாலினி கேட்டாள். "மேரி, நீ செய்தி அனுப்பியப்போ போலீஸ் விசாரணையில்லாம நிவாரணம் வேணும்னு சொல்லியிருந்தயே, ஏன்?"

மேரி பெருமூச்சுடன் விளக்கினாள். "திருடினவங்க கதவு ஜன்னல் எதையும் உடைக்கல. நாங்க எல்லாம் நடமாடறபடி நேரடியா கதவைத் திறந்துதான் நுழஞ்சிருக்கணும். மேலும் பொருட்களை எடுக்கவும் எந்தப் பூட்டையும் உடைக்கல. லாகவமாத் திறந்து எடுத்துட்டு, பூட்டாம போயிருக்காங்க. எந்தச் சேமிப்புக் கணினியில நூதன க்யூபிட் மற்றும் வயலெட் லேஸர் வழிமுறைகள் இருக்குன்னும் அவங்களுக்கு நல்லாத் தெரிஞ்சிருக்கு. மீதிக் கணினிகளையெல்லாம் தொடக்கூட இல்லை. அதை மட்டும் வலையிலிருந்து அகற்றி எடுத்திருக்காங்க."

சூர்யா யோசனையோடு கேட்டார். "உள்நபர் யாரோ அந்தத் திருடர்களுக்கு உதவியிருக்கணும் அல்லது அப்படிப்பட்ட நபரேகூடத் திருடியிருக்கலாம்னு நினைக்கறீங்க, அதுனாலதான் போலீஸ் விசாரணை வேண்டாம்னு சொன்னீங்கன்னு நான் முதல்லயே குறிப்பிட்டேன் – நீங்ககூட அதிர்ந்து போய் எங்களையே சந்தேகிச்சீங்களே... அப்படி உள்நபர் சம்பந்தப் பட்டிருக்கறதுதானே போலீஸ் வேண்டாங்கறத்துக்குக் காரணம்? ஆனா ஏன் வேண்டாம்? போலீஸ் விசாரணையால யாருக்கு என்ன பாதிப்பு நேரும்?"

மேரி சிலாகித்தாள். "நல்ல கேள்வி, உள்நபர் சம்பந்தம் இருக்குன்னு நீங்க முதல்லயே பிரமாதமா யூகிச்சீங்க. அதுல முக்கிய விஷயம் என்னன்னா அப்படிப்பட்ட உள்நபர் சாதரணமானவரா இருக்க முடியாது. எங்க நுட்பங்களைப் பற்றியெல்லாம் நல்லா அறிஞ்ச முக்கியக் குழு உறுப்பினராத்தான் இருக்கணும். அதனாலதான் ..."

மேரி பேச்சை மெல்ல இழுத்தி நிறுத்தவும், சூர்யா தூண்டினார். "உம். மேல சொல்லுங்க. முக்கிய குழு உறுப்பினரா இருந்தாலும் ஏன் போலீஸ் விசாரணை நடக்கக் கூடாது?"

மேரி மீண்டும் பெருமூச்சுடன் தொடர்ந்தாள். "நிறுவனம் ஒரு முக்கியக் கட்டத்துல இருக்கு. நீங்ககூட மின்னஞ்சலப் பாத்து யூகிச்சிங்களே. முதலீட்டுக்கு முன்வந்திருக்காங்க. அப்படிப்பட்ட நிலையில நுட்பம் தகராறு கொடுக்குது, மேலும் உள்நபர் ஒருத்தரே திருட்டை நிகழ்த்தியிருக்கார்னு செய்தி வெளிப்பட்டுதுன்னா மூலதனம் தடைப்படும் இல்லன்னா குறைஞ்ச பட்சம் பல கேள்விகள் எழுப்பப்பட்டு, ரொம்ப தள்ளிப் போயிடும். அப்படி ஆயிடுச்சுன்னா நிறுவனத்தையே மூடவேண்டி வரலாம். அதனால காதும் காதும் வச்சமாதிரி அமுக்கமாக் கண்டுபிடிச்சு நிவர்த்திச்சுட்டா மூலதனம் தடுமாறாமல் சமாளிக்க முடியுங்கற நம்பிக்கைலதான் போலீஸ் விசாரணையில்லாம நிவர்த்திக்க முயற்சி செய்யறேன். அதுக்காகத்தான் நீங்க இங்க வந்திருக்கீங்க. அப்படி முடியுமா? ப்ளீஸ் உதவுங்க சூர்யா!"

சூர்யா மெல்லத் தலையாட்டி அங்கீகரித்தார். "சரி, புரியுது புரியுது! எங்களால ஆன அளவு நிச்சயமா முயல்கிறோம். இப்போ அந்தத் திருட்டைப் பத்தின முழு விவரங்களையும் தெரிஞ்சுக்கணும். முதல்ல அவங்க எப்படி உள்ள வந்தாங்கன்னு காட்டுங்க."

மேரி அவர்களை ஆராய்ச்சிக் கூடத்தின் முன்வாசலுக்கு அழைத்துச் சென்று கை காட்டினாள். இதோ இந்த வாசல் வழியாத்தான் நாங்க எல்லாம் உள்ள வரமாதிரிதான் வந்திருக்கணும்."

கிரண் குழம்பினான். "வெய்ட் எ மினிட்! ஒரே ஒரு வாசலா? வேற வாசலே கிடையாதா?"

மேரி விளக்கினாள. "உள்ள நுழையறத்துக்கு ஒரே ஒரு வாசல்தான். அதுவும் பயோமெட்ரிக் முறையில முழுக் கைரேகை வச்சுத்தான் நுழைய முடியும்."

ஷாலினி இடைமறித்தாள். "எங்க ஆராய்ச்சிக் கூடத்துக்குள்ள நுழையறத்துக்கும் ஒரு வாசல்தான். ஆனா திடீர் ஆபத்துன்னா வெளியேற இன்னும் ரெண்டு வாசல் உள்ளேர்ந்து மட்டும் வெளியில அவசரமாத் திறக்கற மாதிரி இருக்கு. அப்படி எதாவது?"

மேரி ஆமோதித்தாள், "யெஸ், யெஸ், யெஸ்! அவசரமா வெளியேறும் வாசலும் ஒண்ணு எதிர்ப்புறத்துல இருக்கு. ஆனா அதுல உள்ள நுழைய முடியாதே? அதனாலதான் அந்த நுழைவாசல் வழியாத்தான், அதுவும் பயோமெட்ரிக் பயன்படுத்தித்தான் வந்திருக்கணும்னு சொல்றேன்."

மேரி கூறியதைக் கேட்ட சூர்யா சில நொடிகள் யோசித்துவிட்டு ஒரு கேள்வி கேட்டார்.

அக்கேள்வி மேரியைப் பெருவியப்பில் ஆழ்த்தியது!

சூர்யா கேட்ட கேள்வி என்ன, குவான்ட்டம் கணினியின் குழப்பத்தை எவ்வாறு மேற்கொண்டு துப்பறிந்தார் என்பவற்றை இனிவரும் பகுதிகளில் காண்போம்!

(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline