|
கடவுளைப் புறக்கணித்தல் |
   |
- | ஜூன் 2025 |![]() |
|
|
|
 |
ஒரு ராஜா தனக்குச் சொர்க்கத்தைத் தரப்போகும் குரு ஒருவரைத் தேடிக்கொண்டு இருந்தார். ராஜா மிகவும் கர்வம் கொண்டவராக, அதிகார போதையில் இருந்ததால், சொர்க்கத்துக்குப் போகும் தகுதி தனக்கு இருப்பதாக எண்ணினார். யாராவது வழிகாட்ட முன்வந்தால், பதிலே சொல்ல முடியாத கேள்விகளைக் கேட்பார், அவருடைய திமிரைக் கண்டு அவர்கள் திகைத்துப் போவார்கள். ராஜா அவர்களைச் சிறையில் தள்ளிவிடுவார்.
கடைசியில் ஒருவர் வழி காட்டுவதாக உறுதியளித்தார். அவர் அரசவைக்கு அழைத்து வரப்பட்டார். ஆனால் அவர் அரசனைப் பொருட்படுத்தவில்லை. அரசவையைச் சேர்ந்தவர்கள், சேவகர்கள், ஏவலாளிகள் ஆகியோருடன் உரையாடத் தொடங்கினார். அவர்களுடைய உடல்நலத்தை விசாரித்து, நலம்பெற வாழ்த்தினார். தன்னை அலட்சியப் படுத்தியதைக் கண்டு கோபமடைந்த அரசன், அவரை அழைத்துப் போய் சவுக்கடி கொடுக்குமாறு வீரர்களுக்கு ஆணையிட்டான்.
அதற்கு அந்த மனிதர், "என்னை அழைத்துச் செல்வதற்கு முன்பு, ஒன்றை உங்களுக்குச் சொல்கிறேன்: நான் முதலில் உங்களை மதிக்காமல், உங்களைத் தவிர்த்து மற்ற ஊழியர்களுடன் பேசியதற்காக என்னை அடிப்பது சரிதான். கடவுள் ராஜாதி ராஜா, அனைத்து உலகங்களுக்கும் சக்ரவர்த்தி. நீங்கள் அவரைப் புறக்கணிக்கிறீர்கள். அவரை அசட்டை செய்கிறீர்கள். வேலைக்காரர்களிடம் மட்டுமே பேசுகிறீர்கள். இதற்காக உங்களுக்கு என்ன தண்டனை கிடைக்க வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள்" என்றார். மன்னர் தனது தவற்றை உணர்ந்தார். கர்வத்தின் திரையை அகற்றியதற்காக அந்த ஆச்சாரியருக்கு நன்றி தெரிவித்தார்.
நன்றி: சனாதன சாரதி, பிப்ரவரி 2025 |
|
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா |
|
|
|
|
|
|
|