|
தென்றல் பேசுகிறது... |
   |
- | ஜூன் 2025 |![]() |
|
|
|
 |
ஏப்ரல் 24ஆம் தேதி நெற்றியில் சிந்தூரப் பொட்டு வைத்த அவளது கண்முன்னே கணவனைச் சுட்டுக் கொன்றுவிட்டு "மோதியிடம் போய்ச் சொல்" என்றான் ஒரு கொடூரன். மே 7, 8 தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் தனக்குத் தகவல் வந்து சேர்ந்துவிட்டது என்பதைச் சில மணி நேரத்தில் 'ஆப்பரேஷன் சிந்தூர்' மூலம் காண்பித்தார் மோதி. அது உலகை ஒருசேர அதிரவும் வியக்கவும் வைத்தது. பாகிஸ்தானின் வன்முறைக் கூடாரங்களை, சுத்திகரித்த அணுப்பொருள் சேமிப்புகளை இம்மி பிசகாமல் தாக்கின இந்திய ட்ரோன்களும் ஏவுகணைகளும். நவீனக் கருவிகளால் செய்யும் போர் எப்படி இருக்கும், இருக்கவேண்டும் என்பதற்குச் செயல்முறை உதாரணமாக இது அமைந்தது. சீனா மற்றும் அமெரிக்காவில் தயாரான பாதுகாப்புக் கருவிகளின் முழுத்தோல்வியை நிரூபித்தது. பாகிஸ்தான் அலறி அடித்துக்கொண்டு போர்நிறுத்தம் கேட்டது. தனது முயற்சியால் போர் நிறுத்தப்பட்டதாக ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டார் அதிபர் ட்ரம்ப். 'ஆப்பரேஷன் சிந்தூர்' உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்தது. நவீன இந்திய ஆயுதங்களை வாங்கும் எண்ணத்தைப் பல நாடுகளுக்கு உண்டாக்கியுள்ளது.
உலகின் மிகப்பெரிய அணு ஆயுத வல்லரசுகளில் ஒன்றான ரஷ்யாவுக்கு உள்ளே பல ஆயிரம் கி.மீ. தொலைவு உள்ளே போய் உக்ரைன் ரஷ்யப் போர் விமானங்கள் பலவற்றைச் சின்னா பின்னம் ஆக்கியுள்ளதை இந்தச் சமயத்தில் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியாது. இந்தியாவிலும் அமிர்தசரஸ் பொற்கோவில் உட்படப் பல இடங்களைத் தகர்க்கும் முயற்சியில் பாகிஸ்தான் பெருத்த நஷ்டத்தை எதிர்கொண்டது உலகறிந்த விஷயம். இது புதிய பாரதம்.
★★★★★
ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்கக் கூடாதென ட்ரம்ப் அரசு கூறியுள்ளது. 'தன் காலில் சுட்டுக்கொள்வதில்' அதிபர் மிகவும் சமர்த்தர் ஆகி வருகிறார். இதன் பொருளாதார ரீதியான, மனிதவளம்சார்ந்த எதிர்விளைவுகள் மிகப்பெரிது. சுற்றுலாத்துறையிலும் இதனால் பெருமளவு இழப்பு ஏற்படும். மொத்தத்தில் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்கிற திகில் படம் போல ஆகிவிட்டது அமெரிக்க நடப்பு.
★★★★★
பறை இசைக் கலைக்கே தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட வேலு ஆசானுக்கு 'பத்மஸ்ரீ' விருது கொடுத்து பாரத அரசு பெருமைப்படுத்தியுள்ளது. அற்புதர் ஜட்ஜ் சுவாமிகள், எழுத்தாளர் புதுவை சந்திரஹரி குறித்த கட்டுரைகளும் மனதைக் கவர்வன. மருங்கர் எழுதிய 'புரிதல்' சிறுகதை நெஞ்சில் நுண்ணதிர்வுகளை எழுப்ப வல்லது.
வாசகர்களுக்கு வைகாசி விசாகம், பக்ரீத் பண்டிகை வாழ்த்துகள். |
|
தென்றல் ஜூன் 2025 |
|
|
|
|
|
|
|