|
|
 |
மாயா ஹவாய் ரிசார்ட்டின் மாடி முன்முற்றத்தில் கால் வைத்தாள். உப்புக்காற்று முகத்தை வருடிச் சென்றது. அவள் கண்ட காட்சி அற்புதமாக இருந்தது. முடிவில்லா நீலநிற நீர், அடிவானத்தில் தங்கச் சூரியனின் காலில் விழுவது போன்று இருந்தது. கரையை நோக்கித் தாளமாக உருளும் அலைகளின் ஓசை, பனை ஓலைகளின் சலசலப்புடன் கலந்து, அங்கே ஓர் இனிய மெல்லிசையை உருவாக்கியது. அலைகளின் மீது சறுக்கிச் செல்லும் சர்ஃபர்களையும், நீலப்பரப்பில் மிதக்கும் பாய்மரப் படகுகளையும் பார்க்கவே ஒரு சுவர் ஓவியம்போல இருந்தது.
மாயா சிவப்பு மற்றும் கடல்நீல மலர்கள் நிறைந்த ஹவாய் உடை அணிந்திருந்தாள். மெல்லிய சூரிய ஒளியில் அவளது மாநிறம் பிரகாசித்தது. வயது அவள் நரையில் சற்றுத் தெரிந்தாலும், அவளது கூர்மையான கண்கள் அதை மறைத்தன.
அப்பொழுது, அவளது தோள்களை பின்பக்கத்தில் இருந்து ஒரு கை அணைத்தது. சஞ்சய். சராசரி உயரம், வெளிர் தாடி. பாதங்களைச் சற்று மறைக்கும் தொப்பை!
ஒரு பக்கம் புன்னகையுடன் அவள் தலைமுடியைக் கோதும் காற்று, மறுபக்கம் சஞ்சயின் அரவணைப்பு. அவளது மகிழ்ச்சி இரட்டிப்பானது.
அறையின் உள்ளிருந்து பாடல் சன்னமாகக் கேட்டது.
மாய நதி இன்று…
மார்பில் வழியுதே…
தூய நரையிலும்…
காதல் மலருதே…
அந்தச் சமயத்தில் அவனது கைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. என்ன என்பதுபோல அவனைப் பார்த்தாள் மாயா.
"நம்ம பசங்கதான்! லஞ்ச் ஹால்ல வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. வா போகலாம்" என்றான்.
இவர்களுக்குக் கரண், கவிதா என்று இரண்டு குழந்தைகள். அவர்களது முப்பதாவது திருமண நாளை நண்பர்களுடன் ஹவாயில் கொண்டாடக் குழந்தைகள் செய்த ஏற்பாடுதான் இது. சஞ்சயின் அறுபதாவது பிறந்தநாள் வருடம் வேறு! பதினைந்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த நிகழ்வை அவர்களுடன் கொண்டாடுகிறார்கள்.
அடுத்த நாள்.
வரவேற்பு மண்டபம், வண்ணமயமான கோலங்கள் மற்றும் பாரம்பரியப் பட்டுத் திரைச்சீலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பின்னணியில் இளையராஜாவின் இசை மென்மையாக ஒலித்தது, நேர்த்தியான புடவைகளில் பெண்களும், வேஷ்டிகளில் ஆண்களும் ஜொலித்தனர். தென்னிந்திய உணவு வகைகளின் மணமும், மல்லிகை மற்றும் தூபங்களின் செழுமையான மணமும் காற்றில் தவழ்ந்தது.
நம்ம ஊர் டி.ஜே. ஒருவர், பழைய எல்.ஆர். ஈஸ்வரி பாடலைப் போட்டு அனைவரையும் அழைத்தார்.
ஆடவர் எல்லாம் ஆட வரலாம்
காதல் உலகம் காண வரலாம்
பாவையர் எல்லாம் பாட வரலாம்
பாடும்பொழுதே பாடம் பெறலாம்
ஆடலும் பாடலும் அரங்கை நிறைத்தன. சிறிது நேரத்தில், ஆடிய களைப்பில் தத்தம் இருக்கைகளுக்குச் சென்று அமர்ந்தனர்.
சஞ்சயின் நண்பர் விமல் ஒலிபெருக்கியில்
"நண்பர்களே! நாம் 'நீங்கள் எவ்வளவு நன்கு அறிந்திருக்கிறீர்கள்?' போன்ற வினாடி வினா விளையாட்டு ஒன்றை விளையாட இருக்கிறோம். சஞ்சய் மற்றும் மாயா ஒருவருக்கொருவர் தொடர்பான 20 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்" என்று சொன்னவுடன் அரங்கில் ஆர்வம் தொற்றிக்கொண்டது.
விமல் தொடர்ந்தான்.
"சஞ்சய் 20 கேள்விகளுக்கும் சரியாக பதிலளிப்பேன் என்று சவால் விட்டு உள்ளான். அந்தச் சவாலை முறியடிக்கும் ஜோடிக்கு, இலவச ஸ்பா மசாஜ் வவுச்சர் கொடுப்பதாக சஞ்சய் கூறியுள்ளான். ஒரு கேள்விக்காவது அவனை மண்ணைக் கவ்வ வைக்கணும். மாயா இந்த ஆஃபர் கொடுக்கவில்லை. சஞ்சய் மட்டும்தான் கொடுத்துள்ளான். முக்கியமாக, பொருத்தமற்ற கேள்விகளை கேட்கக்கூடாது." என்று சொல்லி முடித்தான்.
கூட்டத்தில் இருந்த ஒரு நண்பர், திருவிளையாடல் நாகேஷ் பாணியில் பரிசுத்தொகை எவ்வளவு என்று கேட்டு மிமிக்ரி செய்தார். அரங்கம் சிரிப்பில் மூழ்கியது.
சஞ்சய்க்கு அலுவலக விஷயங்களாகட்டும், குடும்ப சம்பந்தப்பட்ட விஷயங்களாகட்டும் தனக்கு எல்லாம் தெரியும் என்ற கர்வம் உண்டு. மற்றவரைவிட தனக்கு எல்லாம் தெரியும் என்ற ஒரு நினைப்பு. அவனிடம் இருப்பது தன்னம்பிக்கை இல்லை, கர்வம்.

உங்கள் துணையின் கனவு விடுமுறை என்ன? முதல் வேலை என்ன? பிடித்த உணவு எது? எங்கே வளர்ந்தார்? பள்ளியில் அவருக்குப் பிடித்த பாடம் எது? இனிமையான குழந்தைப் பருவ நினைவு என்ன? பல கேள்விகள் கேட்கப்பட்டன. இதுவரை 19 கேள்விகள் ஆகிவிட்டன. எதிர்பார்த்தபடி சஞ்சீவ் எல்லாக் கேள்விகளுக்கும் சரியாக பதிலளித்தான், ஆனால், மாயா சில கேள்விகளைத் தவறவிட்டாள்.
கடைசிக் கேள்வி. சஞ்சய் ஸ்பா மசாஜ் வவுச்சரை உயரப் பிடித்தபடி "யாருக்கு வேண்டும்? யாருக்கு வேண்டும்? கடைசிக் கேள்வி!" என்று பரிகாசம் செய்தான்.
அங்கிருந்த மாயாவின் நெருங்கிய தோழி மாலாவுக்கு சுர்ரென்று கோபம் தலைக்கு ஏறியது.
"சஞ்சய், நான் ஒரு கேள்வி கேட்டா, அதுக்கு உன்கிட்ட பதில் இருக்காது!" என்று சொல்லிவிட்டு மாயாவைப் பார்த்தாள்.
அவள் கேட்காதே என்பதுபோல கண்களால் கெஞ்சினாள்.
மாயாவைப் பற்றி எனக்கு எல்லாமே தெரியும் என்று எகத்தாளமாகச் சிரித்தான்.
மாயா ஏதோ சொல்ல வந்தாள். அதை மாலா கண்டுகொள்ளாமல், "அவளுக்குப் பிடித்த செல்லப்பிராணி எது?" என்று கேட்டாள்.
சிரித்துக்கொண்டே சஞ்சய் "இதுக்குதான் இவ்வளவு பில்டப்பா? வெரி ஈஸி கொஸ்டின்! எங்களுக்கு எந்த வகையான விலங்குகள் மீதும் ஆர்வம் இல்லை. குறிப்பாக நாய்கள் மீது." என்று சொல்லிவிட்டு நக்கலாக மாலாவைப் பார்த்தான்.
மாலா அவன் அருகில் வந்தாள். அவன் கையில் இருந்த வவுச்சரை பிடுங்கிக் கொண்டு, "சாரி! தப்பான பதில். அவளுக்கு நாய்கள்னா உயிர்! இலவச மசாஜ் வவுச்சருக்கு நன்றி!" என்று சொல்லிவிட்டு கெத்தாக நடந்து சென்றாள். கைதட்டலும் விசில் சத்தமும் அறையை நிரப்பியது.
சஞ்சயால் நம்பமுடியவில்லை. மாயாவைத் திரும்பிப் பார்த்தான். அவள் ஆம் என்று சொல்வதுபோல லேசாகத் தலையை அசைத்தாள். அவன் சற்று ஒடிந்து போனான். விமல் அதைப் பார்த்ததும், அந்தத் தருணத்தை இலகுவாக்க, மைக்கில் "டின்னர் டைம்!" என்று அறிவித்தான். அந்தத் தருணத்தை மேலும் இலகுவாக்க டீ.ஜே. ஒரு கானா பாடலைப் போட்டார்.
சிறிது நேரம் கழிந்தது.
உணவு மேசையில் மாயாவும், மாலாவும் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். மாலா ஏதோ சொல்லி மாயாவைச் சமாதானப்படுத்த முயன்றாள்.
இறுகிய முகத்தோடு சஞ்சய் அவர்கள் அருகில் வந்து அமர்ந்தான். "எனக்கு சின்ன வயசுல தெருநாய்களால ஒரு பயங்கரமான விபத்து ஏற்பட்டுச்சு! பதினைந்து நாள் ஆஸ்பத்திரியில இருந்தேன். அதுக்குப் பிறகு, நாய்மேல இருக்கற பயம் குறையவே இல்லை. டாக் ஃபோபியா! எங்கள் திருமணத்திற்குப் பிறகு நான் இதைப்பற்றி மாயாவிடம் சொன்னேன். அவள் எப்பொழுதும் எனக்கு ஆதரவாகத்தான் இருந்தாள்" என்று சொல்லிவிட்டு சற்றுக் குழப்பத்துடன் அவர்களைப் பார்த்தான்.
மாலா அவனைப் பார்த்து "மாயாவுக்கு சின்ன வயசுல இருந்தே நாய் வளர்க்கணும்னு ரொம்ப ஆசை. பெற்றோர் ஒத்துக்கல. உன் பயத்தைப் பத்திக் கேள்விப்பட்டு, அவ தன் ஆசையை அடக்கிகிட்டா. அவ ஏன் வாரத்திற்கு ஒரு முறையாவது என் வீட்டுக்கு வரான்னு நினைக்கிறே? எங்க வீட்ல இருக்கிற பப்பிகளோட விளையாடத்தான்!" என்று சொன்னதும் அவன் மாயாவைப் பார்த்தான். அவள் கண்கள் கலங்கிக் கண்ணீர் துளிக்கும் நிலையில் இருப்பதைக் கண்டான்.
மறுநாள் காலை!
சஞ்சயும் மாயாவும் கடற்கரையில், ஒன்றாகக் கைகோத்து நடந்து செல்லும் பொழுது, சற்றுத் தொலைவில் அவர்கள் தங்கள் குழுவில் இருந்த சில குழந்தைகள் யாரோ ஒருவரின் நாயுடன் விளையாடுவதைக் கண்டார்கள்.
சஞ்சய் மாயாவைப் பார்த்து "இதிலிருந்து மீள எனக்குக் கொஞ்சம் நேரம் தேவை. நீ போய் அவர்களுடன் நேரம் இரு. நான் இங்கே காத்திருக்கிறேன்" என்று அமைதியாகச் சொன்னான்.
ஒருவரை அறிவது என்பது வெறும் பழக்கமான விவரங்களைப் பற்றியது மட்டுமல்ல, வெளிக்கொணரக் காத்திருக்கும் முடிவற்ற ஆச்சரியங்களைப் பற்றியது என்பதை அவன் உணர்ந்தான். சில நேரங்களில், காதல் என்பது கவனமாகக் கேட்பது, அதற்கும் அப்பாற்பட்ட மௌனத்தையும் உணர்வதைப் பற்றியது என்ற உண்மை அவனுக்குப் புரிந்தது! |
|
மருங்கர் |
|
|
|
|
|
|
|