தமிழர்களின் தொன்மையான இசைக் கருவிகளுள் ஒன்று பறை. மனிதர்களின் தொடக்க கால வாழ்க்கையில் மனிதர்களின் சீழ்க்கை ஒலியும், கை தட்டுதல் ஒலியும் பிற்காலத்தில் பல்வேறு இசைக் கருவிகள் தோன்றக் காரணமாக அமைந்தன. அவற்றுள் ஒன்று பறை. திட்டைப் பறை, தொண்டகப் பறை, தொண்டகச் சிறுபறை, அரிப்பறை, மன்றோல் சிறுபறை, மென்பறை, இன்னிசைப்பறை, பொருநர் பறை, ஆடுகளப் பறை எனச் சங்க இலக்கியங்களில் பல்வேறு பெயர்களில் பறை பற்றிய குறிப்புகள் உள்ளன.
அந்தப் பறையைச் சிறுவயது முதலே வாசிக்கக் கற்று, பிற பணிகள் செய்யும் சூழல் அமைந்தாலும், அவற்றை நிராகரித்து, பறை இசைக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, அதனை உலகம் முழுக்கப் பரப்பி வருபவர் வேலு ஆசான். அமெரிக்கா தொடங்கி உலகெங்கிலும் அவரது சீடர்கள் நிறைந்துள்ளனர். 'கலைமாமணி' விருது பெறவேண்டும் என்று ஆசைப்பட்டவருக்கு, 2025ல் கேளாமல் வந்து கௌரவம் சேர்த்திருக்கிறது. இந்திய அரசின் உயரிய விருதான 'பத்மஸ்ரீ'. இது அவருக்கு மட்டுமல்ல; அந்தக் கலைக்கும் ஒரு கௌரவமாய் அமைந்திருக்கிறது. காரணம், பலரும் பறையிசையைத் தொழிலாகப் பார்த்த நிலையில், அதனைக் கலையாகப் பார்த்தவர், அர்ப்பணிப்போடு அதனைப் பரப்பி வருபவர் வேலு ஆசான்.
பறை இசைக் கலைஞர், ஆசான் வேலுவின் வாழ்க்கை சுகமான வாழ்க்கையல்ல. பொருளாதாரச் சிக்கல்களும், கரடுமுரடும் நிறைந்தது. வறுமையான சூழலிலும் கலையை விடாது நேசித்து இந்த உயரிய கௌரவத்தைப் பெற்றிருக்கிறார் வேலு ஆசான்.

வேலு ஆசானின் இயற்பெயர் வேல்முருகன். சொந்த ஊர் மதுரை அலங்காநல்லூர். அவரது தந்தை ராமையாவும் பறை இசைக் கருவியை வாசிக்கக் கூடியவர். தந்தைவழி தனயனுக்கும் சிறுவனாக இருந்தபோதே இக்கருவி மீது ஆசை வந்துவிட்டது. தந்தையிடமே பறை வாசிக்கக் கற்றார். படிப்பு ஐந்தாம் வகுப்பு வரைதான். மதுரை அலங்காநல்லுாரில் ஆண்டுதோறும் திருவிழா ஒன்று நடக்கும். அது ஐந்து நாள் திருவிழா. சாமி சிலை உருவாக்கும் போது உடையாமல் இருக்க அருள் ஏற்ற 28 நாள் வாசிப்பர். 30வது நாள் திருவிழா நடக்கும். திரளாக ஊர்மக்கள் அதில் கலந்து கொள்வர். அதில் கலந்துகொண்ட வேல்முருகன், அருள் வந்து ஆட, அதைக் கண்ட தந்தை ராமையாவின் நண்பரான சேவுகன் வாத்தியார், பறை ஒன்றை வேல்முருகனின் கையில் கொடுத்து வாசிக்கச் சொன்னார். மிகச் சிறப்பாகப் பறை அடித்து அனைவரது கவனத்தையும் கவர்ந்தார் வேல்முருகன். விளைவு, தொடர்ந்து ஆங்காங்கே நடக்கும் திருவிழாக்களுக்கு சேவுகன் வாத்தியார் பறை அடிக்க வேல்முருகனை அழைத்துச் சென்றார். சேவுகன் வாத்தியாரிடமிருந்து பறையின் நுட்பங்களை அறிந்துகொண்டார் வேல்முருகன்.
மிகவும் உற்சாகமாக அந்நிகழ்வுகளில் பறையோடு சென்று கலந்துகொண்டார் வேல்முருகன். ஆனால், அவர் பறை அடிப்பது அவருடைய உறவினர்களுக்குப் பிடிக்கவில்லை. பலவாறாக எதிர்த்தனர். வாக்குவாதங்கள் அதிகரித்தன. 'பறை அடித்தால் வீட்டுக்கு வரக்கூடாது' என்று சில உறவினர்கள் கூற, வேறு வழியில்லாமல், வேல்முருகன் பறை அடிப்பதிலிருந்து விலகிநிற்க நேர்ந்தது. 1981 முதல் பறை இசைக்காத நாளில்லை என்னுமளவுக்கு அதனோடு ஒன்றியிருந்தவர் பறையைத் தொடாமல் சில ஆண்டுகாலம் இருக்க நேர்ந்தது. ஆனால், பாடியவன் வாயும், ஆடியவன் காலும் சும்மா இருக்காது என்பதுபோல, தாளம் வாசிக்காமல் வேல்முருகனால் இருக்க முடியவில்லை. அதனால் தகர ஷீட்டுகள், இரும்பு டெலிபோன் கம்பங்கள் என காணக் கிடைத்த பொருட்களில் எல்லாம் தாளம் போட்டார். கொட்டுச் சத்தம் கேட்டாலும், பாட்டுச் சத்தம் கேட்டாலும் வேல்முருகன் தன்னை மறந்து கையில் கிடைக்கும் கருவியில் தாளம்போட ஆரம்பித்து விடுவார்.

வயிறு பிழைக்கச் சைக்கிள் கடையில் பணியாற்றினார். சர்க்கரை மில், உரக்கடை, லோடுமேன், மருத்துவமனையில் லிஃப்ட் பாய், வார்டு பாய் எனப் பல வேலைகளைச் செய்தார். எதுவும் மனநிறைவு தரவில்லை. இக்காலக்கட்டத்தில் திருமணம் ஆனது. பார்த்த வேலை எதுவும் திருப்தி தராமல் போகவே மீண்டும் பறை இசைக்க விரும்பினார். 1995க்குப் பின் பல இடையூறுகளைக் கடந்து மீண்டும் பறையைக் கையில் எடுத்தார் ஆனால், மீண்டும் தொடங்கியபோது சரியாக அடிக்க வரவில்லை. பின் முருகன் வாத்தியார் என்பவரிடம் புதிய அடி புதிய ஆட்டம் கற்றுக் கொண்டார். அது அவருக்குள் இருந்த பறை இசைக் கலைஞனை மீண்டும் எழுப்பியது. மேலும் சில ஆசிரியர்களிடமும் பறையின் நுணுக்கங்களை நேர்த்தியாகப் பயின்றார். முன்னிலும் உற்சாகத்துடன் வாசித்தார்.
புது அடி, புது ஆட்டம் பழகியபின், பழைய அடியின் சிறப்பு வேல்முருகனுக்குப் புரிந்தது. மீண்டும் பழைய அடியை நினைவுக்குக் கொண்டுவந்து வாசித்தார். அதே அடி ஆட்டத்தில் ஆடி, புது யுத்தி கண்டுபிடித்து, புதிய பறை ஆட்டத்தை வடிவமைத்தார். அதுவரை தனியாக வாசித்துக் கொண்டிருந்தவர், தனக்கென ஒரு குழுவை உருவாக்கினார். பல மாணவர்களுக்குப் பறை இசைக் கலையைப் பயிற்றுவித்தார். அலங்காநல்லூர் தப்பிசைக் குழுவை உருவாக்கினார். தென்னாட்டின் சிறந்த பறை இசைக் கலைஞராகப் பரிணமித்தார்.
செய்திப் பறை, சந்தோஷப் பறை, கொண்டாட்டப் பறை, வீரப் பறை, மஞ்சுவிரட்டுப் பறை, சிலம்பப் பறை, புலிப் பறை, சாமி வேட்டைப் பறை என்று ஏராளமான வகைகள் உள்ளன. அனைத்தையும் குழுவினருடன் சென்று, தொடர்புள்ள நிகழ்வுகளில் வாசித்து, மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
தனது குழுவினருடன், மதுரை தமிழ்நாடு இறையியல் கல்லுாரி, 2004ல் தலித் கலைவிழா, 2006ல் சென்னை சங்கமம் எனப் பல்வேறு மேடைகளில் பறை இசைத்தார். பெயரும், புகழும், வாய்ப்புகளும் தேடி வந்தன. வேல்முருகன், வேலு ஆசானாக உயர்ந்தார். 'சமர்' என்ற கலைக்குழுவை ஏற்படுத்தினார். அதன்மூலம் பல மாணவர்களை உருவாக்கினார். தனது பறையிசைக் குழுவில் பெண்களுக்கும் இடமளித்தார். குழுவினருடன் 2008ல் சீனா சென்று பரத நாட்டியம் ஆடிப் பறை இசைத்தார். உலகளாவிய நிலையில் வேலு ஆசானின் பறை இசைக்கென்று ரசிகர்கள் ஏற்படத் தொடங்கினர். அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, துபாய், ஆஸ்திரேலியா, இலங்கை போன்ற நாடுகளுக்கெல்லாம் சென்று வாசித்தார். அங்கு ஆர்வமுள்ளவர்களுக்குக் கலையைப் பயிற்றுவித்தார்.

திரைப்பட வாய்ப்புகளும் வேலு ஆசானைத் தேடி வந்தன. குட்டிப்புலி படத்தில் சிறு காட்சியில் நடித்தார். 'கும்கி' படத்தில் 'சொய் சொய்' பாடலுக்கு பறை இசைத்தார். விஜய் சேதுபதி படத்தில் 'மக்க கலங்குதப்பா' பாடலில் பறை இசைக் கலைஞராக நடித்துப் பலராலும் அறியப்பட்டார். என்னை அறிந்தால், பேட்ட, வீரம், மெர்சல், விஸ்வாசம் போன்ற படங்களிலும் பறை இசைத்தார். அண்மையில் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக நடைபெற்ற 'ஆயிரம் பறைகள்' என்ற கின்னஸ் சாதனை முயற்சியில் பறை இசைத்துள்ளார்.
வேலு ஆசானின் பறை இசையின் கலைப் பாங்குக்காகப் பல்வேறு விருதுகள் தேடி வந்தன. மக்கள் கலைஞன் விருது, ஞானப்பறை, பறையிசைச் சிற்பி, கிராமிய கலைச்சுடர், பாவலர் ஓம் முத்துமாரி விருது, அய்யா அழகர்சாமி விருது போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தக்கன. வேலு ஆசானின் விருது மகுடத்தில் மேலும் ஓர் உயரிய சிறகாய், 2025ம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருதை வழங்கிச் சிறப்பித்தது இந்திய அரசு. இந்த விருது பற்றி வேலு ஆசான், ”எனக்கு மத்திய அரசு வழங்கியுள்ள 'பத்மஸ்ரீ' விருதை எனது குருநாதன் சேவுகன் வாத்தியாருக்குச் சமர்ப்பிக்கிறேன். அவர் பறையையும் அந்தக் குச்சியையும் என்னிடம் வழங்காமல் விட்டிருந்தால் இன்றைக்கு நான் வேலு ஆசான் கிடையாது” என்று சிலிர்ப்போடு குறிப்பிடுகிறார்.
வேலு ஆசானின் மகன் முனீஸ்வரன், தனது தந்தையிடம் பறையிசை பயின்று, மற்றவருக்கும் பயிற்றுவித்து வருகிறார்.
தந்தை, மகன், பேரன் என்று தலைமுறையாய்ப் பறையிசையை வளர்த்து வரும் வேலு ஆசான், பத்மஸ்ரீயோடு மேலும் பற்பல உயரிய விருதுகள் பெறத் தகுதியானவர் என்பதில் ஐயமில்லை. கலைஞர்களை வாழ்த்துவோம்; கலைகளை வளர்ப்போம். |