கொ.மா.கோ. இளங்கோ
"குழந்தைகளுக்குத் தேவை பரிவும், வழிகாட்டலுமே அன்றி, போதனைகள் அல்ல" என்ற ஆன் சலிவன் கூற்றை அடிப்படையாகக் கொண்டு எழுத்துலகில் இயங்கி வருபவர் கொ.மா.கோ. இளங்கோ. சிறார் இலக்கிய வளர்ச்சிக்காகக் காத்திரமாக உழைத்து வரும் இவர், அக்டோபர் 24, 1972 அன்று ராஜபாளையத்தில் பிறந்தார். பெற்றோர் கொ.மா. கோதண்டம் - ராஜேஸ்வரி கோதண்டம் இருவரும் எழுத்தாளர்கள். இலக்கியச் சூழலில் வளர்ந்த இளங்கோவுக்குச் சிறு வயதிலேயே எழுத்தார்வம் வந்துவிட்டது. வீட்டில் இருந்த நூலகமும் புத்தகங்களும் அவரது வாசிப்பார்வத்தை வளர்த்தன. பெ.தூரன், வாண்டுமாமா, டாக்டர் பூவண்ணன், பொன்ராசன் போன்றோரின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டார். ராதுகா பதிப்பகம் மூலம் வெளியான ரஷ்யப் படைப்புகள் இவரது எழுத்தார்வத்துக்கு விதையாகின. 'கோகுலம்' சிறார் இதழின் அறிமுகம் இவருள் எழுத்தார்வத்தை விதைத்தது. பூந்தளிர், ரத்னபாலா போன்ற இதழ்கள் வாசிப்பார்வத்தைத் தூண்டின. கோகுலம் சிறுவர் சங்கத்தில் உறுப்பினர் ஆனார். அழ. வள்ளியப்பாவின் குழந்தைப் பாடல்களால் ஈர்க்கப்பட்டு சிறு சிறு கவிதைகள் எழுதத் தொடங்கினார். தந்தை கொ.மா. கோதண்டம் மூலம் மரபிலக்கியம் அறிமுகமானது. அவ்வழியிலும் பாடல் எழுதுவதில் தேர்ந்தார்.

இளங்கோ பள்ளி மாறுவேடப் போட்டியில் துப்புறவுத் தொழிலாளியாக



ராஜபாளையம் மணிமேகலை மன்றத்தின் வெள்ளிவிழாவில், சிறுவர் சங்கத் தொடக்கவிழா நடைபெற்றது. அதில் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா முன்னிலையில் 11 வயதுச் சிறுவனான இளங்கோ,

"முத்து எங்கள் முத்துவாம்
முரண்டு செய்யும் முத்துவாம்
சத்த மின்றி வந்துமே,
தட்டி விட்டு ஓடுவான்.."


எனத் தொடங்கும் பாடலை வாசித்தார். அதனை ரசித்துப் பாராட்டிய வள்ளியப்பா, அப்பாடலை அடுத்த மாத கோகுலம் இதழில் வெளியிட்டு ஊக்குவித்தார். அதுதான் இளங்கோவின் அச்சில் வந்த முதல் படைப்பு. இளங்கோவின் முதல் சிறுகதையான 'உயிர்களிடத்தில் அன்பு வேணும்' என்ற கதையையும் கோகுலத்தில் வெளியிட்டு உற்சாகப்படுத்தினார் வள்ளியப்பா. ராஜபாளையம் கோகுலம் சிறுவர் சங்கத்தின் செயலாளராக இருந்து வானொலி மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் இளங்கோ. பள்ளிகளில் நடக்கும் நாடகம் மற்றும் மாறுவேடப் போட்டிகளிலும் பங்கேற்றுப் பரிசுகள் வென்றார். இளநிலை இயந்திரவியல், முதுநிலை வணிக மேலாண்மை படிப்புகளை நிறைவு செய்தார். கட்டுமானத் துறை, சிமெண்ட் உற்பத்தித் துறைகளில் இந்தியா மற்றும் ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா போன்ற பல தேசங்களில் பணியாற்றினார். இவரால் அக்கால கட்டத்தில் படைப்பிலக்கிய முயற்சியில் ஈடுபட இயலவில்லை. 2011-க்குப் பிறகே இவர் தீவிரமாக எழுத ஆரம்பித்தார். ஆரம்பத்தில் கவிதைகளிலேயே இவரது கவனம் சென்றது. எழுத்தாளர் யூமா வாஸூகி தந்த உந்துதலால் தூண்டப்பெற்று சிறார் கதைகள் மற்றும் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டார்.



ஹிரோஷிமா-நாகசாகி குண்டுவெடிப்பின் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறாரின் வாழ்வை மையப்படுத்தி ஜப்பானிய மொழியில் தோசி மாருகி எழுதிய 'மாயி சான் - ஹிரோசிமாவின் வானம்பாடி' என்ற நூல்தான் இளங்கோவின் முதல் மொழிபெயர்ப்பு நாவல். அதற்குக் கிடைத்த வரவேற்பு இவரைத் தொடர்ந்து எழுதத் தூண்டியது. சிறார் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகள், கதைப் பாடல்கள் என்று எழுத்துலகில் தீவிரமானார்.

"குழந்தைகளுக்குச் சிறுவயதில் வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டால், கற்பனை வளம் அதிகரிக்கும்; படைப்புத்திறன் ஊக்கம் அடையும். எதிலும் புதிதாகக் கண்டறிய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். தேடுதல் இருந்தால், வாழ்வின் உயர்ந்த நிலைக்குச் செல்லலாம். அந்தத் தேடுதலை புத்தகங்களே துவக்கி வைக்கும். குழந்தை இலக்கியங்களில், நீதிபோதனைகள் மட்டுமே அறிமுகப்படுத்தப் படுவதில்லை. அறிவியல், கணிதம், இலக்கியம், கருணை, அன்பு என எல்லாமுமே அறிமுகப்படுத்தப்படுகிறது. வாழ்வின் நீண்ட பயணத்துக்கு, இது அடிப்படையாகத் துணைபுரியும்" என்பது இளங்கோவின் கருத்து.



இளங்கோவன், தனது கதைகளில் சாமியார்கள், வரம், சாபம், மந்திரவாதிகள் போன்றோருக்கு முக்கியத்துவம் தருவதில்லை. குழந்தைகளுக்குத் தற்காலத்தில் மிகத் தேவையான அன்பு, கருணை, இரக்கம், விட்டுக் கொடுக்கும் பண்பு, தூய நட்பு, உண்மை, நேர்மை, உழைப்பு, மனித நேயம் போன்றவற்றை மையமாக வைத்தே எழுதி வருகிறார். "குழந்தைகளுக்கு வழிகாட்டினால், பிற்காலத்தில் அவர்கள் நம் சமூகத்துக்கு நல்வழி காட்டுவர்" என்பதே இளங்கோவின் கொள்கை. இவரது படைப்புகள் பற்றி எழுத்தாளரும், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தலைவருமான உதயசங்கர், "குழந்தை இலக்கிய மொழிபெயர்ப்புப் படைப்புகளில் அவருடைய (இளங்கோ) தேர்வு குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் வாசிப்பதற்கு ஏற்ற மொழிநடையும், கதை சொல்லும் பாணியும், அவரை குழந்தை இலக்கிய எழுத்தாளர்களில் முக்கியமானவராக மிளிரச்செய்கிறது." என்று மதிப்பிடுகிறார்.



இவரது பல படைப்புகள் சிறாரிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. 'ஜிமாவின் கைபேசி' நாவல் மூலம், கைபேசியின் வழியாக எதிர்காலத்தில் செயல்படுத்தக்கூடிய பல புதிய அறிவியல் தொழில்நுட்ப விஷயங்களை அறிமுகப்படுத்துகிறார். இதுவே தமிழின் முதல் சிறார் அறிவியல் புனைவாக மதிப்பிடப்படுகிறது. சொந்த வாழ்க்கை அனுபவத்தின் வெளிப்பாடான 'சஞ்சீவி மாமா' சிறார்களை மட்டுமல்ல; பெரியவர்களாலும் வரவேற்கப்பட்டது. 'தோட்டிகள்' என அழைக்கப்படும் மலம் அள்ளும் சமூகத்தைச் சேர்ந்தவரான 'சஞ்சீவி' என்பவருடனான தனது சிறு வயது அனுபவங்களை சிறுவர்கள் மனதில் பதியுமாறு இந்நாவலில் காட்சிப்படுத்தியுள்ளார் இளங்கோ. அக்கால சமூகத்தில், இந்த மக்களுக்கு இருந்த இடம் என்ன, அவர்கள் பட்ட துயரங்கள் என்ன, சமூகத்தில், பிற குடும்பங்களில் அவர்களுக்கு இருந்த உண்மையான மதிப்பு என்ன என்பவற்றை இந்நாவலில் காட்டியிருக்கிறார். இவர் பள்ளி மாணவராக இருந்தபோது அத்தகைய 'தோட்டி'யாக மாறுவேடம் பூண்டு முதல் பரிசு வென்றதன் புகைப்படமும் நூலில் உள்ளது.



சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகள், கதைப் பாடல்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களைத் தந்துள்ளார் கொ.மா.கோ. இளங்கோ. இவரது படைப்புகள் சில ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளன.

கொ.மா.கோ. இளங்கோ நூல்கள்
சிறார் நாவல்கள்: சஞ்சீவி மாமா, பச்சை வைரம், எட்டுக்கால் குதிரை, பஷிராவின் புறாக்கள், ஜிமாவின் கைபேசி, வானத்தை எரித்தது யார்?, பிரியமுடன் பிக்காசோ, தீப்பறவை, வாசிக்காத புத்தகத்தின் வாசனை மற்றும் பல.

சிறார் சிறுகதைகள்: சூரியனை ஒளித்து வைத்த சிறுமி, நட்சத்திரக் கண்கள், ஆயிரங்கால் பூச்சி, மந்திரக் கைக்குட்டை, ஓநாய் கண்டறிந்த உண்மை, குட்டி டாக்டர் வினோத், தேனென இனிக்கும் தீஞ்சுவைக் கதைகள், மலைபூதம் வாய் பிளந்த மர்மம் மற்றும் பல.

மொழிபெயர்ப்பு நூல்கள்: மாயி-சான் - ஹிரோசிமாவின் வானம்பாடி (தோஷி மாருகி), குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள் (லியோ டால்ஸ்டாய்), ராஜா வளர்த்த ராஜாளி (லியோ டால்ஸ்டாய்), விடுமுறை வந்தாச்சு (ரவீந்திரநாத் தாகூர்), மறக்கமுடியாத விலங்குகள் (ரஸ்கின் பாண்ட்), ஆர்த்தரின் சூரியன் (ஹட்ஜாக் குல்னஷரியன்), ஆரோல்டும் ஊதாக்கலார் கிரேயானும், (க்ரோகட் ஜான்சன்) மந்திர விதைகள் (மித்சுமாசா அனோ) ஷாலுவின் புளூபெர்ரி (ராபர்ட் மெக்லோஸ்கே), பெர்டினன் (மன்ரோ லீப்), உயிர் தரும் மரம் (ஷெல் சில்வர்ச்டீன்), மக்கு மாமரம் (ஏ. என். பெட்னேகர்), ரெட் பலூன் (ஆல்பர்ட் லாமொரிஸ்), அன்புக்குரிய யானைகள் (யுகியோ சுசியா), காக்கைச்சிறுவன் (டரோ யஷிமா), அன்பின் பிணைப்பு (புஷ்பா சக்சேனா), குட்டித் தாத்தா (நடாலே நோர்டன்), ஆப்பிள் ஜானி (அலிகி), மாஷாவின் மாயக்கட்டில் (கலினா லெபெதெவா), சிங்கத்தின் குகையில் சின்னக்குருவி (எலிசா கிலேவேன்), தப்பியோடிய குட்டிமுயல் (மார்கரெட் வைஸ் பிரவுன்), தேனீக்களின் விந்தை உலகம் (எஸ்.ஐ.பரூக்). வேட்டைக்காரன் மெர்கேன் (கென்னடி பாவ்லிஷின்), சிவப்புக்கொண்டை சேவல், (க. ஓவ்சீனிக்கவ்), எலி எப்படிப் புலியாச்சு! (மர்சியா ப்ரௌன்), ஸ்னிப்பியும் ஸ்னப்பியும் (வண்ட கக்), அழகிய பூனை (வண்ட கக்), குட்டன் ஆடு (மன்ரோ லீப்), ராஜாவின் காலடி (ரால்ப் மில்லர்), வில்லி எலி (அல்டா தபோர்), நீங்க என்னோட அம்மாவா? (பி.டி. ஈஸ்ட்மன்), கதைப் புதையல் பாகம் 1 & 2, சிறகடிக்க ஆசை (டி.சுஜாதா தேவி - தெலுங்கில் பால சாகித்ய விருது பெற்ற நூல்) மற்றும் பல.


பல்வேறு விருதுகளும் பாராட்டுதல்களும் பெற்றிருக்கிறார் கொ.ம.கோ. இளங்கோ. சிறந்த சிறுவர் இலக்கியப் படைப்பாளிக்கான ஐஸ்வர்யா இலக்கிய விருதை ராஜபாளையம் மணிமேகலை மன்றம் இவருக்கு வழங்கியுள்ளது. சிறந்த குழந்தை இலக்கிய நூல் பிரிவில், 'ஜிமாவின் கைபேசி' நூலுக்காக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருது கொடுத்துள்ளது. அதே நூலுக்கு 2016ம் ஆண்டில் திருப்பூர் இலக்கிய விருது கிடைத்தது. 'மக்கு மாமரம்' நூலுக்கு, சிறந்த சிறுவர் இலக்கியப் புத்தகப் பிரிவில் திருப்பூர் தமிழ்ச்சங்கம் விருது வழங்கியது. 'எட்டுக்கால் குதிரை' நாவலுக்கு தமிழ் கலை இலக்கியப் பெருமன்றம் விருது வழங்கியுள்ளது. 2017ம் ஆண்டின் சிறந்த எழுத்தாளர் விருது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் வழங்கப்பட்டுள்ளது. 'சூரியனை ஒளித்து வைத்த சிறுமி' நூலை 2020ம் ஆண்டின் சிறந்த சிறுவர் இலக்கியம் என்று வாசகசாலை இலக்கிய அமைப்பு தேர்ந்தெடுத்து விருது வழங்கியது. 2021ம் ஆண்டின் சிறந்த குழந்தை இலக்கிய எழுத்தாளருக்கான 'குழந்தைக் கவிஞர்' அழ. வள்ளியப்பா விருதினை தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI) வழங்கியுள்ளது.



ஜெர்மன் நாட்டைத் தலைமை இடமாகக்கொண்டு இயங்கி வரும் 'அனைத்துலகத் தமிழ்க் கல்வி பண்பாடு அறிவியல் மேம்பாட்டு இணையம்' உருவாக்கியுள்ள புலம்பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான ஐந்து, ஆறு மற்றும் ஏழாம் நிலைப் பாடப் புத்தகங்களில், 'செட்டை கிழிந்த வண்ணத்துப்பூச்சி', 'உப்பளத்துக்கு வந்த வெள்ளையானை', 'கதிரவனை ஒளித்த சிறுமி' ஆகிய கதைகள் இடம் பெற்றுள்ளன. பாரதி புத்தகாலயத்தின் 'புக் ஃபார் சில்ட்ரன்' பதிப்பகம் தொடர்ந்து இவரது நூல்களை வெளியிட்டு வருகிறது. 'நேஷனல் புக் ட்ரஸ்ட்' மூலமாகவும் இவரது நூல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் ஹிந்துவின் மாயா பஜார், தினமலரின் பட்டம், புதிய பாரதி போன்றவற்றிலும் சிறார் கதைகளை எழுதி வருகிறார். மாணவர்கள், பள்ளிச் சிறுவர்களுடனான கலந்துரையாடல், கதை சொல்லல் நிகழ்வுகள் மூலம் சிறார் இலக்கியம் வளர்த்து வருகிறார். மனைவி வித்யா ஆசிரியர். மகன்கள் இருவரும் உயர்கல்வி பயில்கின்றனர்.



சிறார் இலக்கிய வளர்ச்சிக்காகத் தன்னலமின்றி உழைத்துவரும் கொ.மா.கோ. இளங்கோவின் எழுத்துப் பணி போற்றத்தகுந்த ஒன்று.



தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com