தென்றல் சிறுகதைப் போட்டி 2014
வெற்றிக் கதைகள்

தென்றல் சிறுகதைப் போட்டி 2014க்கு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், பிற நாடுகளிலிருந்தும் 208 சிறுகதைகள் வந்திருந்தன. (2011ம் ஆண்டு போட்டிக்கு வந்தவை 79). ஒருவரே எத்தனை கதைகள் வேண்டுமானாலும் எழுதலாம் என்றிருந்ததை மாற்றி அதிகபட்சம் மூன்றுதான் என்று வரையறை இட்ட போதிலும் கதைகளின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. தவிர, வந்திருந்த கதைகளின் வீச்சும், ஆழமும், மொழிச்செறிவும் மலைக்கச் செய்தன என்றால் மிகையல்ல.

இந்தியாவில் ஆங்கில/தமிழ் பத்திரிகைகள் சிறுகதை வெளியிடுவதை நிறுத்திவிட்ட அல்லது குறைத்துவிட்ட இந்தக் காலகட்டத்தில், புனைகதை எழுத்தாளர்கள் இத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைக் காண ஒருபக்கம் வியப்பும் ஒருபக்கம் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. வாழ்க்கையின் வெவ்வேறு பரிமாணங்களை அப்படியே எழுத்தில் படம் பிடிக்கும் நேர்த்தியும், கதை சொல்லும் திறனும் எண்ணற்ற படைப்புகளில் பரிமளிப்பதைக் காண முடிந்தது.



அதன் காரணமாகவே, முதலில் அறிவித்ததைவிட அதிக எண்ணிக்கையில் தென்றல் பரிசுகளைக் கொடுக்க முன்வந்துள்ளது. முதல் மூன்று பரிசுகளைத் தவிர இன்னும் மூன்று சிறுகதைகளைச் சிறப்புத் தேர்வுகளாகக் கொண்டு அவற்றுக்கும் பரிசு வழங்குகிறோம். ஆனாலும், இன்னும் பல கதைகளுக்குப் பரிசு கொடுத்திருக்கலாமே என்கிற எண்ணம் எழாமலில்லை. செம்மையாகச் செதுக்கப்பட்ட கதைகள் அத்தனை!

பரிசு பெற்றோருக்கு வாழ்த்துகள். பங்கேற்ற அனைவருக்கும் நன்றிகள். பரிசு பெற்றவை தவிரப் பல கதைகள் பதிப்புக்குத் தகுதி பெற்றுள்ளன. அவற்றின் பட்டியல் அடுத்த இதழில் வெளியாகும். முதல் இரண்டு பரிசுக் கதைகள் இந்த இதழில் வெளியாகியுள்ளன. மற்றவை அடுத்தடுத்த இதழ்களில் தொடரும்.

முதல் பரிசு: கப்பல் பறவை - எஸ். பட்டம்மாள், அட்லாண்டா, ஜார்ஜியா
இரண்டாம் பரிசு: காத்திருப்பு - ஆனந்த் ராகவ், பெங்களூரு, இந்தியா
மூன்றாம் பரிசு: இருளெனும் அருள் - கோவர்தனன் ராமச்சந்திரன், கேன்டன், மிச்சிகன்


சிறப்புத் தேர்வுகள்:
1. பெரியமனசு - நிர்மலா ராகவன், மலேசியா
2. சொல்லாயோ, வாய் திறந்து... - T.D. ராஜேஸ்வரன், கொடுங்கையூர், சென்னை
3. இது ஒரு இந்தியா - காகுத்தன், சிகாகோ

தென்றல் ஆசிரியர் குழு

© TamilOnline.com