கோவை ஞானி
பெயருக்கேற்றாற் போல கோவையில், ஞான நிலையில், அமைதியாக வாழ்க்கை நடத்திவந்த ஞானி (85), முதுமை காரணமாகக் காலமானார். இயற்பெயர் பழனிசாமி. எழுத்தாளர், கவிஞர், திறனாய்வாளர், பதிப்பாளர், பத்திரிகை ஆசிரியர் எனப் பலவிதங்களில் தமிழுக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் சிறந்த பங்களிப்புகளைத் தந்தவர். தம்மைத் தேடி வரும் ஆய்வு மாணவர்களுக்குத் தகவல்களைத் தந்து இலக்கிய ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்ல வழிகாட்டி உதவியவர். இளமையில் கொடிய வறுமையை அனுபவித்தவர். கல்வியே தம்மை உயர்த்தும் என முனைந்து படித்துப் பட்டதாரியானார். ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, எழுத்தாளராக, திறனாய்வளராக உயர்ந்தார்.

கலை, இலக்கியம், வரலாறு, தத்துவம், மெய்யியல், அறிவியல் எனப் பல்துறை ஆர்வம் மிக்கவர். வாசிப்புப் பழக்கமும் சுய ஆய்வுகளும், சிந்தனைகளும் ஞானியின் பார்வயை விசாலமாக்கின. மார்க்சிய சிந்தனை இவரைப் பெரிதும் ஈர்த்தது. இலக்கியம், வரலாறு, தத்துவம், திறனாய்வு எனப் பல களங்களில் மார்க்சியப் பார்வையில் ஆய்வுகளை மேற்கொண்டார். 'புதிய தலைமுறை', 'நிகழ்' உள்ளிட்ட பல இதழ்களைத் தொடங்கி நடத்தினார். இலக்கிய அமைப்புகளையும் நிறுவித் தமிழ் வளர்த்தார். சிறந்த எழுத்தாளர்களைக் கண்டறிந்து அடையாளப்படுத்தினார். (அப்படி ஞானியால் அடையாளம் காணப்பட்டவருள் ஒருவர் ஜெயமோகன்) 'வானம்பாடி' கவிதை இயக்கத்துடன் தொடர்பு கொண்டவர். 'வானம்பாடி' இதழிலும் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.

நாவல்கள், சிறுகதைகள் குறித்து ஞானி எழுதியிருக்கும் மதிப்புரைகள், ஆய்வு நூல்கள் முக்கியமானவை. பார்வை இழப்பு ஏற்பட்டபோதும் மனம் தளராமல் உதவியாளர்கள் மூலம் தனது வாசிப்பையும் எழுத்தையும் தொடர்ந்தார். அனைவரிடமும் அன்புடன் பழகும் இனிய பண்பாளர். குறிப்பாக இளைஞர்கள்மீது அன்பும் அக்கறையும் கொண்டு நெறிப்படுத்தினார்.

'செம்மொழி ஞாயிறு', கனடா 'தமிழ் இலக்கியத் தோட்டம்' வழங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கான 'இயல் விருது', எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கிய 'பரிதிமாற் கலைஞர் விருது' உட்படப் பல்வேறு விருதுகளும் சிறப்புகளும் பெற்றுள்ளார். (வாசிக்க)

© TamilOnline.com