அய்க்கண்
பேராசிரியரும், தமிழ் எழுத்தாளருமான அய்க்கண் (85) மறைந்தார். இயற்பெயர் அய்யாக்கண்ணு. கோட்டையூரில் செப்டம்பர் 1, 1935 அன்று பிறந்தார். பள்ளிப்படிப்புக்குப் பின்னர், அழகப்பா பல்கலைக் கழகத்தில் கற்றுப் பட்டம் பெற்றார். திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் அமர்ந்தார். ஏழை மற்றும் பின் தங்கிய மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்துக்கு உதவுதல், வாழ்க்கை மேம்பாட்டு ஆலோசனை அளித்தல் என பல நற்பணிகளைச் செய்தவர், தமிழ்த்துறைத் தலைவராகிப் பின் பணி ஓய்வு பெற்றார்.

அய்க்கண், இளவயது முதலே எழுத்தார்வம் கொண்டிருந்தார். இவரது முதல் சிறுகதை, ஆனந்த விகடன் இதழில் வெளியானது. தொடர்ந்து பல இதழ்களில் சிறுகதை, கட்டுரைகளை எழுதினார். கலைமகள், அமுதசுரபி குறுநாவல் போட்டி, தினமணி கதிர் வரலாற்று நாவல் போட்டி, கல்கி சிறுதைப் போட்டி ஆகியவற்றில் இவரது கதைகளுக்கு முதல் பரிசு கிடைத்தது. தமிழக அரசு ஆங்கிலம் உள்ளிட்ட 22 மொழிகளில் பெயர்த்து வெளியிட்டுள்ள சிறந்த சிறுகதைகளில் இவரது சிறுகதையும் இடம்பெற்றுள்ளது. இலக்கியத்தில் குறிப்பிடப்படும் வரலாற்றுச் சம்பவங்களை ஆராய்ந்து நாவல், கட்டுரைகள் படைப்பதில் தேர்ந்தவர்.

கதை, கட்டுரை, திறனாய்வோடு நாடக வளர்ச்சிக்கும் இவர் குறிப்பிடத்தக்க பங்காற்றினார். இவரது நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பப்பட்டதுடன் பரிசுகளையும் வென்றுள்ளன. அகில இந்திய வானொலி நிலையம் நடத்திய நாடகப் போட்டியில் முதல் பரிசு பெற்ற இவரது நாடகம், 19 தேசிய மொழிகளில் பெயர்க்கப்பட்டு ஒலிபரப்பானது. நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், சிறுவர் கதைகள், இலக்கியக் கட்டுரைகள் என இவரது படைப்புகள் நூல்களாக வெளிவந்துள்ளன. ஆங்கிலம், இந்தி, வங்காளி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒரியா போன்ற பல மொழிகளில் சில சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி பல்கலைக் கழகங்களிலும், தன்னாட்சிக் கல்லூரிகளிலும் சிங்கப்பூர்ப் பள்ளிகளிலும் பாட நூல்களாக வைக்கப்பட்ட பெருமை இவருடைய படைப்புகளுக்கு உண்டு. தமிழக அரசின் மேல்நிலை வகுப்புத் துணைப்பாட நூல்களிலும் இவரது சிறுகதை இடம்பெற்றுள்ளது. உலகத் தமிழ் எழுத்தாளா் சங்கத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவராக இருந்தவர். தமிழக அரசின் கலைமாமணி விருது, அண்ணா விருது பெற்றவரும் கூட. சிறுநீரகப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தர், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் இதய அதிர்ச்சியால் காலமானார். (அய்க்கண் பற்றி வாசிக்க)

தென்றலின் அஞ்சலிகள்!

© TamilOnline.com