தமிழ்நாட்டில் திங்களூர் என்ற கிராமத்தில் அடிகளார் ஒருவர் இருந்தார். அவர் அப்பர் பெருமானின் ஆன்மிகப் பெருமையைக் கேள்விப்பட்டு, அவர்மீது மிகுந்த மரியாதையை வளர்த்துக் கொண்டார். எனவே அப்பரின் பெயரில் சத்திரங்களைக் கட்டினார்; தனது பிள்ளைகளுக்கு அவருடைய பெயரைச் சூட்டினார்; அவர் பார்த்தே இராத மகானின் பெயரில் நிலங்களையும் வீடுகளையும் நன்கொடையாக வழங்கினார். விசுவாசம் எவ்வாறு அனுபவத்திற்கு முன்னோடியாக இருந்தது என்பதை இங்கே பார்க்கலாம். தங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு முன்பு அனுபவம் வேண்டும் என்கிறவர்களும் உள்ளனர். முதல் பாதை சிலிர்ப்பூட்டுவது, நீடித்து நிற்பது.
ஒருநாள் வழி தவறியதால், அப்பர் திங்களூருக்கு வந்தார். நகரத்தில் எங்கு பார்த்தாலும் அப்பர் சத்திரம், அப்பர் தொண்டு நிறுவனம் என்றிருப்பதை கவனித்த அவர், தன் பெயர் எப்படி இங்கு வந்தது என்று ஆச்சரியப்பட்டார். அடிகளார் அப்பர் பெருமானை நாடி, வீட்டிற்கு அழைத்துச் சென்று அவருக்கெனப் பெரிய விருந்தைத் தயார் செய்தார். அவரது மூத்த மகன் இரவு உணவிற்கு வாழை இலை அறுக்கத் தோட்டத்திற்குச் சென்றபோது, ஒரு பாம்பு அவனைக் கடித்தது. அங்கேயே அவன் இறந்தான்.
இருப்பினும், அடிகளார் சிறிதும் பாதிக்கப்படவில்லை; சடலத்தை உலர்ந்த இலைகளால் மூடி மறைத்து வைத்துவிட்டார். நீண்டகாலமாகத் தேடிக் கண்ட குருவுக்கு விருந்தோம்பலைத் தொடர்ந்தார். அப்பர் பெருமான் உண்பதற்கு முன்னர், அடிகளாரின் குழந்தைகள் யாவரும் தன்னைச் சுற்றி அமரவேண்டும் என்று வற்புறுத்தினார். "போய் அனைவரையும் இங்கே அழைத்து வருக" என்று கட்டளையிட்டார். அடிகளார் குருவின் கட்டளைப்படியே சென்று மகனை அழைத்தார். இறந்த மகன் எழுந்து வந்தான்! அவனும் மற்றவர்களுடன் இரவு உணவிற்கு அமர்ந்தான். நடந்ததை அறிந்த அப்பர் பெருமான், "உமது பக்தி என் சக்தியைவிடப் பெரியது" என்றார்.
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா |