மற்றவர்களிடம் பொறுமை காட்டுங்கள்
உங்கள் முன்னேற்றத்தை அளவிடவே சோதனைகள் விதிக்கப்படுகின்றன. எனவே துக்கத்தைக் கண்டு தயங்க வேண்டாம். இறைவன் உங்களைச் சோதிக்க முடிவு செய்யும்போது நல்லதொன்றை வழங்குகிறார், ஏனெனில் அவர் உங்கள் சாதனையால் ஈர்க்கப்பட்டு, அவரது அங்கீகார முத்திரையை அதன்மீது பதிக்க விரும்புகிறார். சோதனையின் மட்டத்துக்கேற்ப உயருங்கள், அதுவே கடவுளை மகிழ்விக்கும் வழி.

ஒருமுறை ஒரு பெரிய பக்தர் சோதனையில் தோல்வியடைந்ததால் சான்றிதழைப் பெற முடியாமல் போயிற்று. தினமும் மதியத்தில் அருமையான உணவு அளிப்பதற்காக ஏழை விருந்தாளி ஒருவரைக் கண்டுபிடிப்பார். இவ்வாறு பல ஆண்டுகள் போயின. ஒருநாள், ஒரு பலவீனமான முதியவர் இரவு உணவு கேட்டு வீட்டில் வந்து உட்கார்ந்தார். வயது நூறாண்டுக்கும் மேல்!

பக்தரிடம் உணவளிக்கும் விரதம் இருந்தது, ஆனால் அந்த விரதத்தின் பலனைப் பெறுவதற்கான விவேகம் இல்லை. உலர்ந்த மணல் படுகையில் ஊற்றப்பட்ட தண்ணீரைப் போல, அது அவரது வளர்ச்சிக்கு உதவவில்லை. தினமும் மதியத்தில் தர்மத்தின் தண்ணீர் ஊற்றப்பட்டாலும், அவரது இதயம் வறண்டே இருந்தது. விவேகம் இல்லாத இதயத்தை தானம் செழிப்படையச் செய்யவில்லை. அவர் சடங்குகளைச் செய்வதில்தான் கண்டிப்பாக இருந்தார்.

முதிய விருந்தினர் பசியில் தளர்ந்திருந்தார். முதல் உணவுப் பண்டம் பரிமாறப்பட்டவுடன், அவர் கடவுளின் பெயரை உச்சரிக்காமல் ஒரு பெரிய துண்டை எடுத்து விழுங்கினார். அவரது நாத்திக நடத்தையில் எரிச்சலடைந்த பக்தர், "பட்டினி கிட, அல்லது வெயிலில் பிச்சை எடு" எனக் கிழவரைச் சபித்து, கதவுக்கு வெளியே தள்ளினார்.

அன்றிரவு அவர் ஒரு கனவு கண்டார், அதில் அவரது கொடிய நடத்தைக்காகக் கடவுள் அவரைக் கடிந்து கொண்டார். "நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, நான் அந்த மனிதனை என் கண்ணின் கருமணியைப் போல அன்புடன் பார்த்துக் கொண்டேன். அவன் ஒருமுறைகூட என் பல திருநாமங்களில் எதையும் சொன்னதில்லை. அன்பனே, அவனை உன்னால் சில நிமிடங்கள் சகித்துக் கொண்டிருக்க முடியாதா?" என்று கேட்டார் கடவுள்.

நன்றி: சனாதன சாரதி, ஏப்ரல் 2026

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா

© TamilOnline.com