ஏப்ரல் தென்றல் இதழில் தென்றல் பேசுகிறது பகுதியில் தாங்கள் குறிப்பிட்டுள்ள அத்தனை விஷயங்களும் எதிர்காலத்தின் கேள்விக் குறிகளாகவே உள்ளன. எதை நோக்கிப் பயணிக்கின்றோம் என்பதே தெளிவில்லாமல் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. ஏதோ ஒருவிதத்தில் மனக்கலக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
சிறப்புப்பார்வை பகுதியில் எஸ்.கே.எம். மயிலானந்தன் அவர்களைப் பற்றியும், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற வேண்டும் என்று அவர்களுக்குத் தேவையான வசதிகளையும், தொழில் நுட்பங்களையும் சரியான முறையில் வழங்கியிருப்பது மிகவும் போற்றுதற்கு உரியது.
'நன்மை பயக்கும் எனின்' வித்தியாசமான சிறுகதை. 'பாட்டி யாருக்கு' தற்சமயம் நடைமுறையில் நடக்கும் சம்பவங்களைச் சுவைபடச் சொல்கிறது. இரண்டு சிறுகதைகளும் மிக அருமை. அலமாரி பகுதியில் அரு. ராமநாதன் நேர்காணல் மிகச் சிறப்பாக இருந்தது.
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் ,சின்னக்கதை 'பாதையில் ஒரு முள்' சிந்திக்க வைத்த கதை. மிக அற்புதம்.
இந்தியர்கள் என்றும் மறக்காமல் நினைவில் நிறுத்த வேண்டிய சாதனைப் பெண்மணி சகோதரி நிவேதிதாவைப் பற்றிய விஷயங்கள் மிகமிக அருமை.
எழுத்தாளர் பூபதி பெரியசாமி அவர்கள்தான் புதுவை சுபா என்றுஅறிந்து மகிழ்ந்தேன். அவரது படைப்புக்கள் யாவும் அற்புதம். 'நீ நீயாகவே இரு' ஒரு படிப்பினை தரும் சிறுகதை.
முன்னோடி பகுதியில், தமிழில் பல்வேறு இலக்கண இலக்கிய நூல்களை எழுதிப் பாவலரேறு என்று போற்றப்பட்ட ச. பாலசுந்தரம் அவர்களைப் பற்றி நிறைய விஷயங்களைத் தெரிந்துகொண்டோம்.
எப்போதும் சரியான சிந்தனைகளைச் சரியான நேரத்தில் தந்துவரும் தென்றல் இதழுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி.
சசிரேகா சம்பத்குமார், யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா |