ஓர் இளைஞனுக்கு ஒருநாள் காலை 9 மணிக்குத் திருமணம் நடந்தது. மாலையில் புதுமணத் தம்பதிகள் நடைப்பயிற்சி செய்யப் புறப்பட்டனர். மண வாழ்க்கையின் முதல் நாளில், அந்த இளைஞனின் மனம் தனது மனைவியின் நலனிலே மூழ்கி இருந்தது. அவர்கள் அருகருகே நடந்தார்கள். இளைஞன் வழியில் ஒரு முள்ளைக் கண்டான். மனைவி அதை மிதிப்பதை அவன் விரும்பவில்லை. எனவே மனைவியைச் சரியான நேரத்தில் முள் குத்தாமல் இழுத்தான்.
ஆறு மாதங்கள் கழிந்தன. அவர்கள் மீண்டும் நடந்து போய்க் கொண்டிருந்த போது வழியில் ஒரு முள் இருப்பதைக் கண்டான். மிகவும் சாதாரணமாக அவன், "வழியில் முள் கிடக்கிறது, பார்த்து நட" என்றான். மணமானவுடன் முதல் நாளில் இருந்ததைப் போல அவன் பதறவில்லை.
ஒரு வருடம் கழிந்தது. அவர்கள் ஓரிடத்திற்கு நடந்து சென்றபோது, வழியில் ஒரு முள் இருப்பதைக் கண்டான். மனைவி கவனிக்காமல் நடந்து கொண்டிருந்தாள். அவன் கோபத்துடன் மனைவியிடம், "முள் இருப்பதுகூடத் தெரியவில்லையா? உன் கண் என்ன குருடா?" என்று கடிந்துகொண்டான். ஒரு வருடத்திற்குள், கணவன் தன் மனைவியிடம் வைத்திருக்கும் அன்பு எப்படி மாறிவிடுகிறது என்பதை கவனியுங்கள்.
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா நன்றி: சனாதன சாரதி, ஜனவரி 2026 |