கஜமுகன் என்ற புனைபெயரில் எழுத்துலகில் இயங்கியவர் ஆர்.எஸ். வெங்கட்ராமன். ஏப்ரல் 14, 1923 அன்று, மன்னார்குடிக்கு அருகிலுள்ள ராதாநரசிம்மபுரம் என்ற கிராமத்தில், சாம்பசிவ ஐயர் – கல்யாணி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். பள்ளியிறுதி வகுப்புவரை படித்தார். 1945-ல் டெல்லியில் உள்ள ஆகாஷ்வாணியில் (அகில இந்திய வானொலி) தென்கிழக்காசிய ஒலிபரப்புப் பிரிவில் அறிவிப்பாளராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் புதிதாகத் தொடங்கப்பட்ட தமிழ் செய்திப் பிரிவில் மொழிபெயர்ப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றினார். இந்தியா சுதந்திரம் அடைந்த மறுநாள், ஆகஸ்ட் 16, 1947 அன்று, அதிகாலை 5.45 மணிக்கு, தென்கிழக்கு ஆசிய ஒலிபரப்பில் பாரதம் சுதந்திரம் அடைந்த செய்தியை அறிவித்தவர் இவர்தான்.
வானொலியில் 20 ஆண்டுகள் செய்தித் துறைக்குத் தலைமை தாங்கி வழிநடத்தினார். இந்தியாவின் விடுதலை, குடியரசு தினம், இந்தியாவின் சீன, பாகிஸ்தான் போர்கள், பங்களாதேஷ் விடுதலை, எமர்ஜென்ஸி நாட்கள், இலங்கை கலவரங்கள் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணங்களில், செய்திகளைக் கவனமாக மொழிபெயர்த்து அளிக்கும் பொறுப்பில் இருந்தார்.

ஓய்வுபெற்ற பிறகும், 86 வயதுவரை தற்காலிக அடிப்படையில் செய்திப் பிரிவில் பணியாற்றினார் என்பது அவரது திறமைக்கும், மேதைமைக்கும் சான்று.
வெங்கட்ராமன் ஆனந்த விகடன், கல்கி போன்ற இதழ்களை வாசித்து இலக்கியத்தின்பால் ஈர்க்கப்பட்டார். 'கஜமுகன்' என்ற புனைபெயரைச் சூட்டிக் கொண்டு இதழ்களுக்கு எழுதத் தொடங்கினார். மனைவி ஜெயலட்சுமி இவரது எழுத்துப் பணிக்கு உறுதுணையாக இருந்தார். இவர்களுக்கு பாக்யம், மனோரமா, பார்கவி என மூன்று மகள்கள். கஜமுகனின் சிறுகதைகள், சுதேசமித்திரன், பாரதமணி, சக்தி, கலைமகள், கல்கி, சிவாஜி, பாரிஜாதம் போன்ற பல இதழ்களில் வெளியாகின. கதைக்கோவையின் நான்காம் தொகுதியிலும் கஜமுகனின் சிறுகதை இடம்பெற்றது. இவர் எழுதிய பல்வேறு சிறுகதைகள் பரிசுபெற்றன. 'பாரிஜாதம்' இதழில் வெளியான 'மல்லிகை மணம்' என்ற சிறுகதை சிறந்த கதைக்கான பரிசைப் பெற்றது.
கஜமுகன் எழுத்தைத் தவிர சமூகப் பணிகளிலும் ஆர்வம் கொண்டிருந்தார். டெல்லி தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், துணைத்தலைவராகவும் பணியாற்றினார்.
கஜமுகன், பிப்ரவரி 04, 2025 அன்று, தனது 102-ம் வயதில் சென்னையில் காலமானார்.
அரவிந்த் |