ஜட்ஜ் சுவாமிகள் (பகுதி-2)
சென்னையில் செல்வாக்கு, புகழ் மற்றும் மிகுந்த வருவாயுடன் வாழ்ந்து வந்த ஜட்ஜ் சுவாமிகள், தனது அழைப்பை ஏற்று திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு வருவாரா என்ற ஐயம் திருவிதாங்கூர் மன்னருக்கு ஏற்பட்டது. அதனால், ஸ்ரீ அனந்த பத்மநாப ஸ்வாமியின் பிரசாதத்தோடு பிரதிநிதி ஒருவரைச் சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

சமஸ்தானத்தின் தர்மாதிகாரிகளுள் ஒருவரான அந்தப் பிரதிநிதி ஜட்ஜ் சுவாமிகளைச் சந்தித்தார். பிரசாதங்களை சுவாமிகளுக்கு அளித்து மன்னரின் விருப்பத்தைச் சொன்னார்.

சிறிது நேரம் யோசித்த ஜட்ஜ் சுவாமிகள், இந்த அழைப்பை அனந்தபத்மநாப சுவாமியின் அழைப்பாகவே கருதினார். ஆகவே, வருமானம் குறைந்தாலும் பரவாயில்லை, அனந்தனை அனுதினமும் தரிசித்து ஆனந்தமாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் ஒப்புக்கொண்டார்.

சென்னையில் தனது பதவியைத் துறந்து, நல்லதொரு நாளில் சமஸ்தானத்திற்குப் புறப்பட்டார்.

சமஸ்தானத்தில்...
சமஸ்தானத்தை அடைந்த ஜட்ஜ் சுவாமிகளை, தக்க மரியாதைகளோடு மன்னர் வரவேற்றார். அவர் குடும்பத்துடன் வசதியாகத் தங்கப் பெரிய மனை ஒன்றையும் வேலையாட்களையும் ஏற்பாடு செய்தார்.

நல்லதொரு நாளில் அனந்தபத்மநாபனைத் தொழுது, பிரதம நீதிபதியாகப் பொறுப்பேற்றார் ஜட்ஜ் சுவாமிகள்.

புதிய நீதிபதியாகப் பொறுப்பேற்றதும் உலக வழக்கு, நூல் வழக்கு, நாட்டு வழக்கு, குலமுறை வழக்கு என நான்கு முறைகளையும் ஆராய்ந்து நீதி வழங்கினார். மன்னரால் மிகவும் மதிக்கப்பட்டார். மக்களாலும் அங்கீகரிக்கப்பட்டார்.

வழக்குகளுக்காகப் புதிதாக மலையாளமும் கன்னடமும் கற்றார். வடமொழி உள்ளிட்ட சில மொழிகளில் நூல்கள் சிலவற்றை இயற்றி வெளியிட்டார். வாழ்க்கை இனிமையாகவே சென்று கொண்டிருந்தது.

வழக்கும் சிக்கலும்
இக்காலகட்டத்தில் ஜட்ஜ் சுவாமிகளின் முன் ஒரு வழக்கு வந்தது. அது ஒரு கொலை வழக்கு. சந்தர்ப்பம், சாட்சிகள் அனைத்தும் குற்றவாளிக்கு எதிராகவே இருந்தன. அவனே குற்றவாளி என அவை கூறின. ஆனால், பிரதம நீதிபதியான ஜட்ஜ் சுவாமிகளுக்கு அவனைப் பார்த்ததும் குற்றமற்றவன் என்று தோன்றியது. விசாரணை ஏழு நாட்கள் நடந்தது. அவனைக் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். ஆனால், ஜட்ஜ் சுவாமிகளின் மனதிற்கு அவன் குற்றவாளியாகத் தோன்றவில்லை.

அதனால் தீர்ப்பை எழுத முடியாமல் தவித்தார். எத்தனையோ வழக்குகளை வாதாடிய அவரால், பல வழக்குகளில் வெற்றி கண்ட அவரால், தீர்ப்பு வழங்கமுடியவில்லை. அவன் நிரபராதி என்று மனம் தெளிவாக எடுத்துக் காட்டினாலும், சட்டத்தின்படி அவனுக்கு எதிராகவே தீர்ப்பு வழங்க வேண்டியிருந்தது. அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார்.

சட்டமா, தர்மமா என்ற கேள்வி எழுந்தது. சட்டத்தைவிட தர்மமே முக்கியம் என்று அவர் கருதினார். எனவே, 'சட்டம் தந்த இந்தப் பதவி வேண்டாம். தர்மம்தான் நிலைக்கும்' என்று முடிவு செய்தார். 'இப்பதவி எனக்கு எதற்கு?' என்ற எண்ணம் உறுதிப்பட்டது. "என் உயிர், குடும்பம் இவற்றைத் தக்க வைக்கவா? குற்றவாளியாக வந்து நிற்பவன் நீதியற்ற முறையில் என்னால் தண்டிக்கப்பட, அவன் மனைவி, மக்கள் அவனை இழப்பதைவிட, நான் என் மனைவி மக்களை இழப்பது சிறந்தது" என்று கருதினார்.

"தனக்குரிய கடமையைச் செய்ய அஞ்சி ஒடுகிறான் என்று உலகம் தூற்றக் கூடும். பரவாயில்லை. சித்தக் குழப்பம் என்று சிலர் நகைக்கக் கூடும். பாதகமில்லை. இல்லத்தில் சச்சரவு என்று சிலர் கதை கட்டக் கூடும். சொல்லட்டும். எல்லாவற்றையும் இழந்தாலும் எதை வாழ்க்கையில் இழக்கக்கூடாதோ அதை அடைய விரும்புகிறேன். அதையே தேடிச் செல்வேன்" என்று சிந்தித்தார். வைராக்ய சிந்தனை கொண்டார்.

உடனே ஆசனத்தில் இருந்து எழுந்தார். யாவரும் திகைக்க வழக்கு மன்றத்திலிருந்து வெளியேறினார். அதனைக் கண்டவர் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் ஜட்ஜ் ஓய்வெடுக்கப் போகிறார் என்று நினைத்தனர். ஆனால், ஜட்ஜ் சுவாமிகளோ, யாரிடமும் சொல்லாமல், கொள்ளாமல் அந்த ஊரைவிட்டே வெளியேறினார். சகல செல்வாக்கோடும் புகழோடும் வாழ்ந்த அவர் ஒரு நொடியில் எல்லாவற்றையும் துறந்து வெளியேறினார்.

ஆன்மிகப் பயணம்
"எதனை இழந்தாலும் சகல படைப்புக்களிலும், தன்னிலும் இறையை உணரும் தன்மையை எவரும் இழந்துவிடக் கூடாது. நான் அறியாவண்ணம் என்னிலே மறைந்து என்னை இயக்கும் ஒன்றை, பிறவி இருக்கும்போதே அறிந்து தெளியவேண்டும்" என்ற வைராக்கிய சித்தத்துடன் ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கினார்.

காடு, மலைகளில் சுற்றினார். நல்லதொரு குருவைத் தேடி நாடெங்கிலும் அலைந்தார். கிடைத்ததை உண்டார். கட்டாந்தரையில் படுத்து உறங்கினார். இவரது திருமுகத்தைப் பார்த்துப் பலரும் உணவிட்டனர். சிலர் புறக்கணித்தனர். சுவாமிகள் யாரிடமும் எதுவும் பேசவுமில்லை. மாறுபாடுகளைக் காட்டவும் இல்லை. உணவு கிடைத்தால் உண்பார். கிடைக்கா விட்டால் பட்டினி. கோயில் கோயிலாகச் சென்று தரிசித்தார். பல ஜீவ சமாதிகளுக்குச் சென்று தியானம் செய்தார். அவரது பிரார்த்தனை ஒன்றேதான், ‘நல்லதொரு சத்குருவை எனக்குக் காட்டி அருள் இறைவா!' என்பதுதான்.

சுவாமிகள், திருநெல்வேலி, திருச்செந்தூர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், சிதம்பரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய தலங்களுக்குச் சென்றார். காஞ்சியில் காமாட்சியையும், ஏகாம்பர நாதரையும், வரதராஜப் பெருமாளையும் தரிசித்தார். காஞ்சி காமகோடி பீடத்திற்குச் சென்று தொழுதார்.



உபநிஷத மடம்
காஞ்சிபுரத்தில் உள்ள, பண்டைப் பெருமை மிக்க உபநிஷத மடத்துக்குச் சென்றார். அதன் தலைவராக இருந்த சுவாமி, ஜட்ஜ் ஸ்வாமிகளை, "பொறுமையாக இரு. நீ எதிர்பார்ப்பது விரைவில் நடக்கும்" என்று ஆசிர்வதித்தார். அங்கேயே தங்கியிருக்கும்படி வேண்டிக் கொண்டார்.

அவ்வாறே பிரம்மேந்திர சரஸ்வதி சுவாமிகளால் தொடங்கப்பட்ட உபநிஷத மடத்தில் ஜட்ஜ் சுவாமிகள் சுமார் ஐந்து ஆண்டுக் காலம் தங்கினார். ஆன்மிக, ஞான, சமயப் பயிற்சிகளைத் தீவிரமாக்கினார். உபநிஷதங்களை, அவற்றின் ஆழ்ந்த உண்மையை அங்கிருந்த குருவின் மூலம் கற்றார். வேத சாஸ்திரங்களில் தேர்ச்சிபெற்று தத்துவ நுட்பங்களை உணர்ந்தார். பின்னர் குருவின் ஆசியுடன் காஞ்சிபுரத்திலிருந்து காளஹஸ்திக்குப் பயணப்பட்டார்.

காளஹஸ்தியில்...
காளஹஸ்தியில் ஞானாம்பிகை சமேத காளத்தீஸ்வரைக் கண்டு தொழுதார். கண்ணப்பனுக்கு அருள் புரிந்ததுபோல் தனக்கும் அருள் புரிய வேண்டும் என்றும், தக்கதொரு சத்குருவைத் தனக்குக் காட்ட வேண்டுமென்றும் கண்கலங்கி அழுதார்.

உண்மையான தேடலும், வேண்டுதலும் பலிக்காமல் போகுமா? பலித்தது.

குரு தரிசனம்
காளஹஸ்தியில் பாரத்வாஜ முனிவர் தவம் செய்த பாரத்வாஜ குளக்கரையில் ஸ்ரீராமகிருஷ்ண அவதூத மகராஜ் சுவாமிகள் வந்து தங்கியிருந்தார். குடில் அமைத்து அங்கே அவர் நித்ய தவம் செய்து வந்தார். அவர் யாரிடமும் பேசுவதில்லை. உணவு படைக்கப்பட்டாலும் சில சமயம் உண்பார். சில சமயம் உண்ணாமல் இருப்பார். ஆனால், அடிக்கடி தன் குடிலை விட்டு வெளியே வந்து, யார் வரவிற்கோ காத்திருப்பது போல் இங்கும் அங்கும் உலவுவார். பின் குடிலுக்குள் சென்று தவத்தில் ஆழ்ந்து விடுவார்.

அப்படிப் புனிதரான மகான் ஒருவர் குளக்கரையில் இருக்கிறார் என்பதை ஜட்ஜ் சுவாமிகள் அறிந்தார், அந்தக் குடிலை நோக்கிச் சென்றார். 'அவரே தன்னை ஆட்கொள்ள இருக்கும் அருட்குரு' என்பதை அறிந்தார். பிற பக்தர்களோடு பக்தராய் ஜட்ஜ் சுவாமிகள் காத்திருந்தார்.

ராமகிருஷ்ண அவதூத மகராஜ் சுவாமிகள் வழக்கம்போல் குடிலுக்கு வெளியே வருவார். அங்கும் இங்கும் உலவுவார். பின் குடிலுக்குள் சென்று விடுவார். ஜட்ஜ் சுவாமிகளைக் கண்டதுபோல் காட்டிக் கொள்ளவில்லை.

ஆனாலும், ஜட்ஜ் சுவாமிகள் அந்த இடத்தை விட்டுச் செல்லாமல் குடிலின் முன்பே சில நாட்கள் காத்திருந்தார்.

தீட்சை
இப்படி ஒரு வாரம் சென்றது. அததற்கு உற்ற காலம் வரவேண்டும் அல்லவா? அது வந்தது. ஒருநாள் திடீரென ஸ்ரீராமகிருஷ்ண அவதூத மகராஜ் சுவாமிகள் குடிலை விட்டு வெளியே வந்தார். அவர் பேசினார்.

ஜட்ஜ் சுவாமிகளைப் பார்த்து "நாராயண, நாராயண" என்றார். கண்ணீர்ப் பெருக்குடன், சத்குருவை நாடி ஓடிச் சென்று பாதம் பணிந்தார் ஜட்ஜ் சுவாமிகள். அவரைத் தொட்டு எழுப்பிய அவதூத சுவாமிகள், தீட்சை அளித்து ரகசிய மந்திரத்தை உபதேசித்தருளினார். "இன்றுமுதல் அவதூத ஆசிரமம் ஏற்று, 'சதாசிவ அவதூதர்' என்கிற தீட்சா நாமத்துடன், நெரூருக்குச் சென்று அருள் பெறுவாயாக" என்று ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார்.

தல யாத்திரை
ஜட்ஜ் சுவாமிகளும் குருவை வணங்கி, அவதூத கோலத்தில் சதாசிவ பிரம்மேந்திர மகான் அருளாட்சி நடத்தும் நெரூருக்குச் சென்றார். அங்கு தவம் செய்து சதாசிவ பிரம்மேந்திரரின் அருள் பெற்றார். பின் பத்ரிநாத், கேதார்நாத், இமாலயம் போன்ற இடங்களுக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டு, சில வருடங்களுக்குப் பின் மீண்டும் தென்னாட்டுக்கு வந்தார்.

மானாமதுரையில் உள்ள சிவாலயத்தில் சதாசிவ பிரம்மேந்திரரின் ஐந்தாவது சமாதி எனக் கருதப்படும் ஆலயத்தின் பின்புறத்தில் தனிமையில் தவம் செய்தார். அங்கு கிருஷ்ணமூர்த்தி என்ற இளைஞன் சுவாமிகளுக்குப் பணிவிடை செய்து வந்தார். அவருக்குக் கடும் சோதனைகளுக்குப் பின் தீட்சை வழங்கினார் ஜட்ஜ் சுவாமிகள். அவரே ஜட்ஜ் ஸ்வாமிகளின் பிரதான சீடராக, 'ஸ்வயம்பிரகாச சுவாமிகள்' என்ற பெயரில் பின்னாளில் அறியப்பட்டார்.

ஜட்ஜ் சுவாமிகள் பல்வேறு அவமானங்களையும், ஏச்சு பேச்சுக்களையும் சகித்தார். அவதூறுகளை எதிர்கொண்டார். எதற்கும் எதிர்வினை ஆற்றாமல் அமைதியாகத் தனது யாத்திரைகளைத் தொடர்ந்தார்.

ஒரு சமயம் திருச்சி தாயுமானவ சுவாமிகள் ஆலயத்தில் தவம் செய்து கொண்டிருந்த போது அந்திம காலம் நெருங்குவதை உணர்ந்தார். தனக்கான சமாதி இடம் புதுக்கோட்டை என்பதை அறிந்தார். உடனே புறப்பட்டு நார்த்தாமலை என்று இன்று அழைக்கப்படும் நாரதர் மலைக்குச் சென்றார். அங்குள்ள புகழ்பெற்ற சிவன் கோவிலுக்குச் சென்று நிஷ்டையில் ஆழ்ந்தார்.

அங்குள்ள பக்தர்கள் சுவாமிகளின் வருகையை அறிந்து திரளாக வந்து தரிசித்தனர். அவர்களில் சிலர், சுவாமிகள் சமாதி அடையப் போகிறார் என்பதை எப்படியோ உணர்ந்தனர். அவரது சமாதிக்கான இடம் புதுக்கோட்டை என்று தேர்ந்தனர். அதனால், சுவாமிகளை அந்தச் சமாதி நிலை கலையாமல் அப்படியே புதுக்கோட்டைக்குச் சிவிகையில் தூக்கிச் சென்றனர். புதுக்கோட்டை பல்லவன் குளக்கரையின் வடகரையில் இருந்த மடத்துக்கு ஊர்வலம் சென்று சேர்ந்தது.

சமாதி
அங்கு சென்று சேர்ந்ததும் தாம் வந்த காரியம் முடிந்தது, எடுத்த பிறவி பயனடைந்தது என்பதை உணர்ந்த ஸ்ரீ ஜட்ஜ் சுவாமிகள் என்னும் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திர ஸரஸ்வதி அவதூத ஸ்வாமிகள், நிர்விகல்ப சமாதி அடைந்தார். மெய்ப்பொருளான பரம்பொருளில் ஒன்றினார்.

ஆலயம்
நடந்த நிகழ்வு மன்னருக்குத் தெரிய வந்தது. புதுக்கோட்டை மன்னரின் திவானாக இருந்த வெங்கட்ராமதாச நாயுடு உடனே புறப்பட்டு வந்தார். அவர் சென்னையில் வழக்குரைஞராகப் பணியாற்றியவர். ஜட்ஜ் சுவாமிகளுடன் பயின்றவர். அவரை நன்கு அறிந்தவர். அவர் அங்குள்ளவர்களுக்கு ஜட்ஜ் சுவாமிகளின் வரலாற்றை எடுத்துரைத்தார். பின் மன்னரின் உத்தரவுப்படி, சிறந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு ஜட்ஜ் சுவாமிகளின் உடல் சமாதி செய்விக்கப்பட்டது.

பிற்காலத்தில் அந்த இடம் மக்களால் மறக்கப்பட்டது. பின்னர் சீடர் ஸ்வயம்ப்ரகாச சுவாமிகளால் அவ்விடம் அடையாளம் காணப்பட்டது. அங்கு ஓர் ஆலயம் அமைக்கப்பட்டது. அங்கு புவனேஸ்வரி அன்னை எழுந்தருளினாள். பின் வந்த ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகளால் ஆலயமும் அதிஷ்டானமும் சீரும் பொலிவும் பெற்றன. பின் வந்த ஸ்ரீ ஓங்காரனந்த சுவாமிகள் ஆலயத்தை மென்மேலும் வளர்த்தெடுத்தார்.

வழிபாடு
புதுக்கோட்டை ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானம் அமைந்துள்ள புவனேஸ்வரி அம்மன் ஆலயத்துள் நுழைந்ததும், நேரே அதிஷ்டானத்தில் தரிசனம் தருகிறார் ஜட்ஜ் ஸ்வாமிகள். அவரது திருமேனி சமாதி கொண்ட இடத்தில் ஒரு சிவலிங்கம் அமைந்துள்ளது. ஸ்ரீமாதா புவனேஸ்வரி தனிச்சன்னிதியில் காட்சி அளிக்கிறாள், சன்னிதிமுன் ஸ்ரீசக்ர மகாமேரு உள்ளது. விநாயகர், முருகன், அஷ்டாதசபுஜ மகாலட்சுமி, மஹாதுர்கை, பதினெண் சித்தர்கள், ஸ்ரீ சதாசிவன், பஞ்சமுக ஆஞ்சநேயர், பஞ்சமுக ஹேரம்ப கணபதி, தட்சிண காளி, ஐயப்பன், முனீஸ்வரன் என்று பல தெய்வங்கள் இங்கு காட்சி அளிக்கின்றனர்.

கும்பாபிஷேகம்
நாள்தோறும் பூஜை ஹோமங்களும், மாதந்தோறும் சிறப்பு விழாக்களும் இங்கு நடக்கின்றன. வரும் ஜூன் 05, 2025ல் புதுக்கோட்டை புவனேஸ்வரி மற்றும் ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டான ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் சிறப்புற நடக்க இருக்கிறது. அதற்காக ஆலயம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள புவனேஸ்வரி பீடம், ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானம் உள்ளிட்ட மூன்று மண்டபங்களில் 93 துாண்கள், 744 சிற்பங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜையும் நடக்க இருக்கிறது.

மாதா ஸ்ரீ புவனேஸ்வரியைத் தொழுவோம், மகான் ஜட்ஜ் சுவாமிகளின் அருளைப் பெறுவோம்.

பா.சு. ரமணன்

© TamilOnline.com