சுமதிக்குத்தான் அந்த மசால்தோசை என்றால் எவ்வளவு ஆசை! பத்து ஆண்டுகளுக்கு முன்பு, கல்யாணமான புதிதில் அவளை ஒருமுறை பட்டணத்து ஓட்டல்களைப் பார் என்று அந்த நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துப் போய் வாங்கிக் கொடுத்தது. அப்போதே அதன் விலை ஒன்பது ரூபாய் ஐம்பது காசு.
இத்தனை ஆண்டுகளாகியும் அவள் மனதில் பசுமையாகவும் நாக்கில் இனிமையாகவும் நின்றுபோன சுவை அது.
அடிக்கடி அவள் அதை நினைவு கூர்ந்திருக்கிறாள்.
"என்னமா வெண்ணெய் மாதிரி மிருதுவா... நெய் நெறைய ஊத்தியிருப்பாங்க போலருக்கு. மசாலாகூடக் காரமும் இல்லாம சப்புன்னும் இல்லாம... ப்.பா.. என்ன ருசி! இப்பக்கூட நாக்கிலேயே நிக்குதுங்க' என்று சமீபத்தில் கூடச் சொன்னாள்.
தற்போது அந்த மசால் தோசையின் விலை இருபத்து மூன்று ரூபாய் என்று தெரிந்து கொண்ட கணபதி, தனக்கு வாழ்க்கைப்பட்டு மாடாய் உழைத்துத் தேய்ந்து, வரிசையாக மூன்று குழந்தைகளைப் பெற்று, நாளும் அல்லாடும் சுமதிக்கு, மூக்குத்தியா... கம்மலா... கேவலம் அவள் ஆசைப்படும் ஒரு மசால்தோசை கூட வாங்கித்தரத் தன் ஊதியம் இடந்தரவில்லையே என்று புழுங்கினான்.
ஜவுளிக் கடையில் கிடைக்கும் அறுநூறு ரூபாய் சம்பளத்தில் குடும்பத்தோடு வந்து நட்சத்திர ஹோட்டலில் ஒருமுறை அந்தத் தோசை சாப்பிட வேண்டுமென்றால் நடக்கக் கூடியதா? ஓரு தோசையின் விலையில் ஒரு நாளையே தள்ளிவிடலாம் என்கிற நிலையில் இதெல்லாம் எங்கே சாத்தியம்?
ஓட்டலில் சர்வர் வேலை பார்ப்பவர்க்காவது டிப்ஸ் என்று மேல் வரும்படிக்கு வழியுண்டு. ஜவுளிக் கடையில் பீஸ் துணி அழித்துக் கொடுப்பவனுக்கு என்ன கிடைக்க வாய்ப்புண்டு? ஒரு நாளைக்குக் கிடைக்கிற நாலு ரூபாய் பேட்டாவில் என்னதான் சிக்கனமாக டீ சாப்பிட்டுக்கொண்டு நாள் ஒன்றுக்கு ஒரு ரூபாய் என்று மிச்சம் பிடித்தாலும் இருபத்து மூன்று ரூபாய் சேர்ப்பதற்குள் ஒன்றுகிடக்க ஒன்று என்று செலவு வந்துவிடுகிறது. கடைக்குட்டிக்கு சிலேட்டு; கோபுவுக்கு காய்ச்சல் என்று மருந்து வாங்க வேண்டி வரும். பெரியவளுக்குக் கட்டுரை நோட்டு வாங்க வேண்டியிருக்கும். இரண்டாமவன் பலகையை உடைத்துக் கொண்டு அழுவான். அல்லது சுமதி ரேஷனில் பாமாயில் கொடுக்கிறார்கள் என்பாள். எனவே குடும்பநலம் முக்கியம் என்னும் பட்சத்தில் தோசை வாங்கித்தரும் திட்டம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும்.
இருப்பினும் ஒருநாள் சுமதிக்கு அந்த மசால் தோசையை வாங்கிப்போய் அவள் சற்றும் எதிர்பாராத விதத்தில் அவள்முன் வைத்து அவளை ஆச்சரியப்படுத்த வேண்டும் என்ற ஆசை மட்டும் தலைதூக்கிக் கொண்டே இருந்தது.
அன்று பலநாள் சேமித்த இருபத்தைந்து ரூபாயைப் பையில் போட்டுக்கொண்டு அந்த பிரம்மாண்டமான ஓட்டலில் நுழைந்தான் கணபதி. வாட்ச்மேன், கண்ணாடிக் கதவைத் திறந்து அவனுக்கு வழிவிடுவதா என்று அவனை ஏளனமாகப் பார்த்தான். தன்னை எங்கே உள்ளே அனுமதிக்காது மறுத்து விடுவார்களோ என்று பயந்த கணபதி "முதலாளி பார்சல் வாங்கிவரச் சொன்னார்" என்று பொய் சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தான். மசால்தோசை ஆர்டர் செய்துவிட்டு அந்தக் குளிர் அறையில் நாற்காலிகள் இருந்தும்கூட உட்கார அஞ்சி ஒதுங்கி நின்றிருந்தான். ஒரு வழியாக, கவர்ச்சியான பாலிதீன் பையில் பார்சல் வரவும் பெற்றுக் கொண்டான். பில் தொகைக்கு சர்வரிடமே இருபத்தைந்து ரூபாய் கொடுத்து, மீதி சில்லறைக்காகக் காத்திருந்து அது வராது போகவே, 'இங்கேயெல்லாம் டிப்ஸ் தரவேண்டுமே... அதைத்தான் எடுத்துக் கொண்டார்கள் போலும்' என்று தன்னைத் தேற்றிக்கொண்டு வெளியில் வந்தான்.
பேருந்தில் செல்வதற்குக்கூட காசில்லாத நிலையில், 'அதுவும் சரிதான். நடத்தால்தான் நேரம் போகும். பிள்ளைகளும் தூங்கி விடுவார்கள். சுமதியும் தனியாக இருப்பாள்' என்று நினைத்தபடியே தாமதமாக வீட்டை அடைந்தான்.
"ஏங்க... இவ்வளவு நேரம்.."
"பசங்க தூங்கிட்டாங்களா?"
"எப்பவோ தூங்கிட்டாங்களே... ஏன்?"
"சரி... உள்ளே வா..." என்று அவளை அழைத்துச் சென்று பையிலிருந்த பார்சலை எடுத்துப் பிரித்தான். "நீ சொல்லுவியே.. பெரிய ஓட்டல் மசால் தோசைன்னு... இதுதான்... இந்தா.. சாப்பிடு சுமதி" அவள்முன் வைத்தான்.
"என்னமா நெய் வாசனைங்க.. அது மாறவேயில்லைங்க" என்ற சுமதி சட்டென்று, "சசி, கலா, கோபு.. எந்திரிங்க... அப்பா என்ன வாங்கி வந்திருக்கார் பாருங்க" என்று படபடவென்று தட்டி மூன்று பிள்ளைகளையும் எழுப்பிவிட்டாள்.
கணபதி... "கமதி! என்ன இது... ஏன் பிள்ளைகளை எழுப்பறே..?" என்பதற்குள், 'ஹை...தோசை' என்று மூன்று பிள்ளைகளும் தோசையைச் சூழ்ந்துகொண்டு ஆளுக்கு ஆள் கைவைத்து தோசையைப் பிய்த்துத் தின்னத் தொடங்கிவிட்டனர்.
சற்றைக்குள் இலையில் ஒரு சிறு துண்டு தோசையும் மிகச்சிறிதளவு மசாலாவும்தான் மீதமிருந்தது. அதை அள்ளி வாயில் போட்டுக் கொண்டு இலையை வழித்து விரலை வாயில் வைத்துச் சூப்பிய சுமதி, "நல்லா இருக்குங்க" என்றாள் சிரித்தபடியே.
"என்ன சுமதி... இப்படி செய்திட்டே.." கேட்க நினைத்த கணபதியின் கண்களில் கண்ணீர் முத்திட்டது.
நிறைவோடு சிரித்துக்கொண்டிருந்த கமதியைப் பார்த்து, "ஒரு துளி மட்டுமே சாப்பிட்ட இவளால் எப்படி முழு தோசையையும் வயிற்றுக்குள் இறக்கிய திருப்தியை அடைய முடிந்தது?' என வியந்தவனுக்கு, "அம்மா...ம்மா... தோசை நல்லா இருந்திச்சில்லே?" என்ற குழந்தைகளின் குரல், 'அன்று மனைவி சுமதிக்கு இருந்ததோ ஒரு வயிறு. இன்று அன்னை சுமதிக்கு இருப்பதோ பல வயிறுகள்' என்ற உண்மையை உணர்த்திற்று.
புதுவை சந்திரஹரி |