Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2003 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
மருமகள் வாக்கு
- கிருஷ்ணன் நம்பி|நவம்பர் 2003|
Share:
Click Here Enlargeமறுநாள் தேர்தல். பூனைக்கும் கிளிக்கும் இருமுனைப் போட்டி. கிளி அபேட்சகர் வீரபாகுக் கோனாரும் பூனை அபேட்சகர் மாறியாடும் பெருமாள் பிள்ளையும் உயிரைக் கொடுத்து வேலை செய்தார்கள். ஊர் இரண்டுபட்டு நின்றது.

சமையல் வேலைக்குச் செல்பவர்களும் கோவில் கைங்கர்யக்காரர்களும் நிறைந்த அக்ரகாரத்துப் பிள்ளையார் கோவில் தெரு, கிளியின் கோட்டை என்று சொல்லிக் கொண்டார்கள். அந்தக் கோட்டைக்குள் பல குடும்பங்களுக்குக் கடனுக்குப் பால் வார்த்துக் கொண்டிருந்தவர் வீரபாகுக் கோனார்தான்.

மீனாட்சி அம்மாளிடம் சொந்தமாகப் பசு இருந்தது. வேளைக்குக் கால்படி பால் வீட்டுக்கு எடுத்துக் கொண்டு மிச்சத்தை நியாயமாகத் தண்ணீர் சேர்த்து விலைக்கு விற்றுவிடுவாள். ரொக்கம் தான். கடனுக்குத் தான் இந்தக் கடன்கார வீரபாகுக் கோனார் இருக்கிறானே!

மீனாட்சி அம்மாள் அப்படியொன்றும் வறுமைப்பட்டவள் அல்ல. இருந்த வீட்டுக்கும், ஊரடியில் அறுபத்தாறு சென்ட் நஞ்சைக்கும் அவள் சொந்தக்காரி. தாலுக்கா பியூனாக இருந்து சில வருஷங்களுக்கு முன் இறந்து போன அவள் கணவன் அவள் பெயருக்கே கிரையம் முடித்து வைத்த சொத்து இது. ராமலிங்கம் ஒரே பையன். ஸாது, தகப்பனின் வேலையைப் பாவம் பார்த்துப் பையனுக்கே சர்க்கார் கொடுத்து விட்டது அவனுடைய அதிர்ஷ்டந்தான். கல்யாணமும் பண்ணி வைத்துவிட்டாள் மீனாட்சி அம்மாள். தள்ளாத வயதில் உதவிக்கு ஒரு மருமகள் வேண்டும் அல்லவா? ருக்மிணி மெலிந்து துரும்பாக இருந்தாலும் வேலைக்குக் கொஞ்சமும் சளைக்காதவள். அதிகாலையில் வாசலில் சாணம் தெளித்துக் கோலம் போடுவதிலிருந்து, படுக்கப் போகுமுன் மாட்டுக்கு வைக்கோல் பிடுங்கி வைப்பதுவரை எல்லா வேலைகளையும் அவள் அப்பழுக்கில்லாமல் செய்துவிடுவாள். சமையலில் அவளுக்கு நல்ல கைமணம். வெறும் வத்தக்குழம்பும் கீரைக் கறியும் பண்ணிப் போட்டால்கூடப் போதும்; வாய்க்கு மொரமொரப்பாக இருக்கும் (மாமியார்கள் எப்போதும், ஏதேனும் குற்றம் குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். எல்லாம் மருமகள்காரிகள் திருந்துவதற்கும், மேலும் மேலும் முன்னேறுவதற்கும்தானே).

ருக்மிணிக்கு நன்றாகப் பால் கறக்கவும் தெரிந்திருந்தது. பால் கறந்தால் நெஞ்சு வலிக்கும் என்று பக்கத்து வீட்டுப் பெண்கள் சொல்வதுண்டு. ஆனால் பலரும் பலதும் பேசுவார்கள்; ஒன்றையும் காதில் போட்டுக் கொள்ளக் கூடாது; பதில் பேசவும் கூடாது; ஏன் யாரிடமும் எதுவுமே பேசாமலிருப்பது ரொம்ப ரொம்ப உத்தமம்; நாம் உண்டு, நம் காரியம் உண்டு என்று இருந்துவிட வேண்டும். இப்படி, மருமகள் வந்த அன்றே மாமியார் புத்திமதிகள் கூறியாகி விட்டது. மேலும் கல்யாணத்திற்கு முன்பே ருக்மிணிக்கு லேசாக மார்வலியும், இளைப்பும் உண்டு. டாக்டர்கள் அவளைப் பரிசோதித்திருந்தால் "ட்ராப்பிகல் ஈஸ்னோபீலியா'' என்றிருப்பார்கள். ஆனால், ஏன் அப்படிப் பரிசோதிக்க வேண்டும்? வைத்தியம் செய்கிறேன் என்று வருகிறவர்கள் பணத்துக்காக என்ன வேணுமானாலும் செய்வார்கள். அவர்களுக்குக் காசு ஒன்றுதான் குறி. மீனாட்சி அம்மாளுக்குத் தெரியாததா? அவள் வயசு என்ன? அனுபவம் என்ன? ஒரு குழந்தை பிறந்து விட்டால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்று சொல்லிவிட்டாள் அவள். டாக்டரிடம் போவதற்கு இங்க யாரும் சாகக் கிடக்கவில்லையே.

மருமகளை ஏவி விட்டுவிட்டு மாமியார் மீனாட்சி அம்மாள் ஒன்றும் கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருந்து விடவில்லை. அவளுக்கும் வேலைகள் உண்டு. பாலுக்குத் தண்ணீர் சேர்ப்பது, அளந்து விற்பது, வருகிற காசுகளை (ராமலிங்கம் சம்பளம் உட்பட) வாங்கிக் கணக்கிட்டுப் பெட்டியில் வைத்துப் பூட்டுவது, பார்த்துப் பார்த்துச் செலவு செய்வது, தபால் சேவிங்ஸில் பணம் கொண்டு போய்ப் போடுவது எல்லாம் அவள் பொறுப்புதான். அது மட்டுமா? ஓய்ந்த நேரங்களில், ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் என்று ஒரு நோட்டுப் புத்தகத்தில் லட்சத்துச் சொச்சம் தரம் எழுதி அக்ரகாரத்துப் பெண்களை அதிசயத்தில் ஆழ்த்தி விட்டிருக்கிறாள். சாவதற்குள் பத்து லட்சத்து ஒன்று எழுதி முடித்து விடவேண்டும் என்பது அவள் திட்டம்.

ருக்மிணியும் மாமியாரும் என்றுமே சேர்ந்துதான் சாப்பிடுவார்கள். பரிமாறியபடியே, ''பெண்டிர்க்கழகு உண்டி சுருக்குதல்'' என்று மீனாட்சி அம்மாள் அட்சர சுத்தத்துடன் கணீரெனக் கூறுகையில், அந்த அரிய வாக்கை மீனாட்சி அம்மாளே அவளது சொந்த அறிவால் சிருஷ்டித்து வழங்குவது போல் தோன்றும். ருக்மிணிக்கு மேலும் அதிகமாகச் சாப்பிட்டால் ஊளைச்சதை போட்டுவிடும் என்று மாமியார் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது என்று மருமகள் ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று. (ரொம்பவும் பொறுக்க முடியாமல் போய் யாரும் அறியாதபடி ருக்மிணி அள்ளிப் போட்டுக் கொண்டு தின்றது இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில்தான்.)

மருமகள் என்று வருகிறவர்களின் வாயைக் கிளறி எதையாவது பிடுங்கிக் கொண்டு போய் மாமியார்க்காரியிடம் கோள்மூட்டி, சண்டை உண்டாக்கி வேடிக்கை பார்க்கவிட்டால் ஊர்ப் பெண்களுக்குத் தூக்கம் வராதல்லவா? ஆனால் ருக்மிணியிடம் அவர்கள வித்தைகள் எதுவும் செல்லுபடியாகாமல் போனது அவர்களுக்குப் பெருத்த ஏமாற்றமாகிவிட்டது. சதா வீட்டோடு அடைந்து கிடக்கும் அவள் எப்போதாவது கோவிலுக்கோ குளத்துக்கோ அனுப்பப்படும் போது, அவளை விரட்டிக் கொண்டு பின்னால் ஓடிய பெண்கள் இப்போது ஓய்ந்து, ''இந்தப் பெண் வாயில்லாப் பூச்சி என்று ஒதுங்கிக் கொண்டு விட்டார்கள்.

இரவு நேரத் திண்ணை வம்புகளின்போது ''மாட்டுப் பெண் எப்படி இருக்கா?'' என்று துளைக்கிறவர்களிடம், அவளுக்கென்ன, நன்னார்க்கா!'' என்று மேல் அண்ணத்தில் நா நுனியை அழுத்திப் பதில் சொல்லி அடைத்துவிட்டு, அடுத்த விஷயத்துக்கு நகர்ந்து விடுவாள் மீனாட்சி அம்மாள். ''அவளா? அவளை ஜெயிக்க யாரால் முடியும்'' என்பார்கள் ஊர்ப் பெண்கள் ஒருவித அசூயையுடன்.

தேர்தலுக்கு முன்தின இரவுப் பேச்சுக் கச்சேரியில் தேர்தல் விஷயம் பிரதானமாக அடிபட்டதில் ஆச்சரியம் இல்லை. மீனாட்சி அம்மாள் வாக்கு யாருக்கு என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் ''ஒங்க ஓட்டு கிளிக்குத்தானே மாமி?'' என்று விஷமமாக வாயைக் கிளறினாள் ஒருத்தி. ''ஏண்டி...எல்லாம் தெரிஞ்சு வெச்சிண்டே என்னைச் சீண்டறயா?'' என்றாள் மீனாட்சி அம்மாள். ''ஒங்க மாட்டுப் பொண் ஆருக்குப் போடப் போறாளோ?'' என்று இன்னொருத்தி கண்ணைச் சிமிட்டவும், மீனாட்சி அம்மாளுக்குக் கோபம் வந்துவிட்டது.

''பொண்டுகளா...என்னையும் அவளையும் பிரிச்சா பேசறேள்; நானும் அவளும் ஒண்ணு. அது தெரியாதவா வாயிலே மண்ணு'' என்று அவள் ஒரு போடு போடவும் எல்லாரும் பெரிதாகச் சிரித்தார்கள்.

காலையில் வாக்குப் பதிவு சற்று மந்தமாகவும் மதியத்துக்கு மேல் ரொம்பச் சுறுசுறுப்பாகவும் இருந்தது. மீனாட்சி அம்மாள் முதல் ஆளாகப் போய் வோட்டுப் போட்டுவிட்டு வந்து விட்டாள். வீட்டிலிருந்து கூப்பிடும் தூரத்தில் ஆற்றுக்குப் போகிற வழியில் இருக்கிற தொடக்கப் பள்ளிதான் சாவடி. ராமலிங்கம் குளித்துவிட்டுத் திரும்புகிற வழியில் ஆட்கள் பிடித்திழுக்க, ஈரத்துணியோடு அவன் ஓட்டளிக்கும்படி ஆயிற்று.

மத்தியான உணவுக்குப் பிறகு வழக்கமாகிவிட்ட சாப்பாடு மயக்கத்தில் மீனாட்சி அம்மாள் தாவாரத்து நிலைப்படியில் மாட்டுக்குத் தவிடும் தண்ணீரும் காட்டிக் கொண்டிருந்தாள். கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் அது கமட்டுக் கட்டுக்கு ஒரு கட்டுப் புல் தின்று தீர்த்திருந்தது. அது குடிப்பதையும் தின்பதையும் பார்த்துக் கொண்டே இருப்பது ருக்மிணியின் மிகப் பெரிய சந்தோஷம்; மாமியாரின் அதிகார எல்லைகளுக்கு வெளியே கிடைக்கிற சந்தோஷம், ''சவமே...வயதாவிக் கொண்டே எம்பிட்டுத் தின்னாலும் ஒம்பசி அடங்காது'' என்று பொய்க் கோபத்துடன் அதன் நெற்றியைச் செல்லமாய் வருடுவாள். ''மாடுன்னு நனைக்கப்படாது... மகாலக்ஷ்மியாக்கும்... ஒரு நாழி கூட வயிறு வாடப்படாது... வாடித்தோ... கறவையும் வாடிப்போயிடும்... கண்ணும் கருத்துமா கவனிச்சுக்கணும்...'' என்பது மீனாட்சி அம்மாளின் நிலையான உத்தரவு. ''பசுவே, நீ மட்டும் பெண்டிர் இல்லையா? உண்டி சுருக்கற நியாயம் ஒனக்கும் எங்க மாமியாருக்கும் மாத்ரம் கெடயாதா, சொல்லு!'' என்று அதன் முதுகில் தட்டுவாள் ருக்மிணி. அவளுக்குச் சிரிப்புச் சிரிப்பாய் வரும். அதன் கழுத்துத் தொங்குசதையைத் தடவிக் கொடுப்பதில் அவளுக்குத் தனியான ஒரு ஆனந்தம். அதற்கும் இது பிடிக்கும். முகத்தை இவள் பக்கமாகத் திருப்பி இவள் பக்கமாக ஒட்டிக் கொள்ளும். நான் இன்னைக்கு ஓட்டுப் போடப் போறேன். நான் ஆறுக்குப் போடணும் நீ சொல்லு... சொல்லுவியா... நீ ஆருக்குப் போடச் சொல்றேயோ அவாளுக்குப் போடறேன் ஒனக்குப் பூனை பிடிக்குமா? கிளி பிடிக்குமா? சொல்லு... எனக்கு ஆரப்பிடிக்குமோ, அவாளத்தான் ஒனக்கும் பிடிக்கும் இல்லியா...? நெஜமாச் சொல்றேன் எனக்குக் கிளியைத் தான் பிடிக்கும். கிளி பசேல்னு எம்பிட்டு அழகா இருக்கு! அதமாதிரிப் பறக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. பூனையும் எனக்குப் பிடிக்கும். ஆனா அதைவிடக் கிளியப் பிடிக்கும், ஆனா பூனைக்கு கிளியக் கண்டாலே ஆகாது.''

வாளியில் தண்ணீர் தணிந்து விடவே, குடத்திலிருந்து மேலும் தண்ணீரைச் சரித்துத் தவிடும் அள்ளிப் போட்டாள். அதற்குள் பசு அழியிலிருந்து ஒரு வாய் வைக்கோலைக் கடித்துக் கொண்டு, அப்படியே தண்ணீரையும் உறிஞ்சத் தொடங்கவே, எரிச்சலுடன் அதன் வாயிலிருந்து வைக்கோலை அவள் பிடுங்கி எறியவும் வாளி ஒரு ஆட்டம் ஆடித் தண்ணீர் கொஞ்சம் சிந்தியது. ''சவமே, எதுக்கு இப்படிச் சிந்தித் செதறறாய்? தேவாளுக்காச்சா, அசுராளுக்காச்சா? ஒழுங்கா வழியாக குடியேன்'' என்று அதன் தாடையில் ஒரு தட்டுத் தட்டினாள். அது இடம் வலமாய்த் தலையை ஆட்டி அசைக்க, தவிட்டுத் தண்ணீர் பக்கங்களில் சிதறி ருக்மிணியின் மேலும் பட்டது. அவள் ஸாரித் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள். இப்போது தண்ணீரை உறியாமல், வாளியின் அடிமட்டத்துக்கு வாயைத் தணித்து, பிண்ணாக்குக் கட்டி ஏதாவது கிடைக்காதா என்று துழாவ, தண்ணீர் மேல் மட்டத்தில் காற்றுக் குமிழிகள் களகளவென வெளிப்பட்டன. மூச்சு முட்டிப் போய் முகத்தை சடக்கென அது வெளியே, தலையை மேல் நிமிர்த்தி மூசுமுசென்றது. அதன் முகத்தைச் சுற்றி விழுந்திருந்த தவிட்டு வளையத்தைப் பார்த்த அவளுக்குச் சிரிப்பு வந்தது. ''கேட்டயா பசுவே... நீ இப்போ மட்டும் இப்படிக் கறந்தாப் போராது. எனக்குக் கொழந்தை பொறந்தப்பறமும் இப்பிடியே நெறயக் கறந்துண்டிருக்கணும். எங் கொழந்தை ஒம்பாலைக் குடிக்க வேண்டாமா? ஒங்கொழந்தை குடிக்கிற மாதிரி எங்கொழந்தையும் ஒம் மடீல பால் குடிக்க ஸம்மதிப்பியோ...? எங்காத்துக்காரர் சொல்றாப்ல, எனக்குத்தான் மாரே கெடயாதே. மார்வலிதான் இருக்கு. மாரில்லாட்டப் பாலேது? ஆனா நிச்சயமா எனக்கும் கொழந்தை பொறக்கத்தான் போறது. பெறப் போறவள், எங்க மாமியார் சொல்றாப்ல, எப்பவாவது ஒருதரம் படுத்துண்டாலும் பெறத்தான் செய்வாள். பெறாதவ என்னிக்குமே பெறப் போறதில்லை... யுத்தத்திலே செத்துப் போனானே எங்கண்ணா மணி, அவன்தான் எனக்குப் புள்ளையா வந்து பொறக்கப் போறான்; தெரியுமோ ஒனக்கு, கொம்பக் கொம்ப ஆட்டு... ஓரெழவும் தெரியாது ஒனக்கு, நன்னாத் திம்பாய்...'' பசு பொத்தென்று சாணி போட்டு, ஒரு குடம் மூத்திரத்தையும் பெய்தது. உடன் அவள் அவசரத்துடன் சாணியை இரு கைகளாலும் லாவகமாக அள்ளிக் கொண்டு போய் சாணக் குண்டில் போட்டுவிட்டு வந்தாள். புல் தரையில் கையைத் துடைத்துவிட்டு, மீந்திருந்த தண்ணீருடன் வாளியையும் குடத்தையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள். பசு அவளை நிமிர்ந்து பார்த்து ''ம்மா'' என்று கத்திற்று. ''போறேன், போய் ஓட்டுப் போட்டுட்டு வந்து கன்னுக் குட்டியக் குடிக்க விடறேன். மணி மூணு கூட இருக்காதே... அதுக்குள்ள ஒனக்கு அவசரமா?'' பால் கட்டி, மடிபுடைத்து காம்புகள் தெறித்து நின்றன.
மீனாட்சி அம்மாள் சொல்லி வைத்திருந்தபடி, பக்கத்து வீட்டுப் பெண்கள் சிலர் ருக்மிணியையும் சாவடிக்கு அழைத்துச் செல்ல, இருப்பதில் நல்ல உடைகளணிந்து வந்திருந்தனர். கிணற்றடியில் கை, முகம் எல்லாம் கழுவிக் கொண்டு ருக்மிணி வீட்டிற்குள் வந்தாள். ''சரி, சரி தலய ஒதுக்கிண்டு, நெத்திக் கிட்டுண்டு பொறப்படு'' என்று மாமியார் முடுக்கவும், ருக்மிணி அலமாரியைத் திறந்து சிறிய சிறிய பச்சைப் பூக்கள் போட்ட ஒரு வாயில் ஸாரியைக் கையில் எடுத்துக் கொண்டு ஒரு மறைவுக்காக ஓடினாள். முகத்தின் மூன்றில் ஒரு பங்கு தெரிகிற கையகல வட்டக் கண்ணாடியில் முகம் பார்த்து, சீப்பு சமயத்துக்குத் தட்டுப்படாமல் போனதால் விரல்களாலேயே முடியை ஒதுக்கி விட்டுக் கொண்டு நெற்றியில் ஏதோ ஒரு இடத்தில் குங்குமம் வைத்துக் கொண்டு வாசல் பக்கத்துக்கு ஓடோடி வந்தாள். வந்திருந்த பெண்களில் ஒருத்தி மீனாட்சி அம்மாள் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, ''ஏண்டி... எம்பிட்டு நேரம் டீ?'' என்று கேட்கவும் ருக்மிணிக்குத் துணுக்கென்றது. ''தலையக்கூட சரியா வாரிக்காமன்னா ஓடிவர்றேன்'' என்று அவள் அடைக்கிற குரலில் சொல்லி முடிப்பதற்குள், ''சரி, சரி கிளம்புங்கோ'' என்று எல்லோரையும் தள்ளிவிட்டாள் மாமியார் அம்மாள். படி இறங்கியவளைக் கையைத் தட்டி, ''இந்தா, சொல்ல மறந்துட்டேனே... ஒரு நிமிஷம் இங்க வந்துட்டுப் போ'' என்று வீட்டுக்குள் கூட்டிப் போனாள். குரலைத் தணித்து, ''ஞாபகம் வெச்சிண்டிருக்கியா...தப்பாப் போட்டுடாதே... ஒரு சீட்டுத் தருவா... பூனைப் படமும் கிளிப் படமும் போட்டிருக்கும். பூனைப் படத்துக்குப் பக்கத்துல முத்திரை குத்திடு. வழீல இதுகள்ட்ட வாயக் குடுக்காதே... போ'' என்றாள்.

சாவடி அமைதியாக இருந்தது. பல வளைவுகளுடன் ஒரு பெண் வரிசையும், சற்று நேராக ஒரு ஆண் வரிசையும். பெண் வரிசையின் நீளம் சற்று அதிகம். வர்ணங்கள் நிறைந்த பெண் வரிசை, மலர்கள் மலிந்த ஒரு கொடி போலவும், ஆண் வரிசை ஒரு நெடிய கோல் போலவும் தெரிந்தது. வோட்டளித்து வெளிவந்த சில ஆண் முகங்களில் தந்திரமாய் ஒரு காரியம் நிகழ்த்திவிட்ட பாவனை தென்பட்டது. ஒரு சாவுச் சடங்கை முடித்து வருவது போல் சில முகங்கள் களையிழந்து வெளிப்பட்டன. அநேகமாய், பெண்கள் எல்லாருமே மிதமிஞ்சிய, அடக்கிக் கொள்ள முயலும் சிரிப்புகளுடன் வெளியே வந்தனர். ருக்மிணிக்கு ரொம்ப ரொம்பச் சந்தோஷம். எல்லாமே அவளுக்குப் பிடித்திருந்தது. அந்த பள்ளிக் காம்பவுண்டுக்குள் அங்கங்கே செழிப்பாக வளர்ந்து நின்ற வேப்ப மரங்களை அவள் மிகவும் விரும்பி நோக்கினாள். வெயில் மந்தமாகி, லேசுக் காற்றும் சிலுசிலுக்க, அது உடம்பை விடவும் மனசுக்கு வெகு இதமாக இருப்பதாய் அவள் உணர்ந்தாள். கண்ணில் பட்டதெல்லாம் அவளைக் குதூகலப்படுத்திற்று. ''இன்னிக்கு மாதிரி என்னிக்காவது நான் சந்தோஷமா இருந்திருக்கேனா என்று அவள் தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள். ஆ! அதோ அளிச மரம். ஒரு கோடியில், ஒரு கிணற்றடியில் ஒட்டினாற்போல் அது நிற்கிறது. அது அளிச மரம்தானா? ஆம், சந்தேகமே இல்லை. வேம்பனூரில்தான் முதன் முதலாக அவள் அளிச மரம் பார்த்தாள். அதற்குப் பின் இத்தனை வருஷங்களில் வேறு எங்குமே அவள் அளிச மரம் பார்க்கவில்லை. உலகத்தில் ஒரே ஒரு அளிசமரம்தான் உண்டு; அது வேம்பனுர் தேவசகாயம் ஆரம்பப் பாடசாலைக் காம்பவுண்டுக்குள் இருக்கிறது என்று உறுதிப்படுத்திக் கொண்டிருந்தவள் இவ்வூரில் இன்னொன்றைக் கண்டதும் அதிசயப்பட்டுப் போனாள். ஒருக்கால் அந்த மரமே இடம் பெயர்ந்து இங்கே வந்துவிட்டதா...! ...ஆ! எவ்வளவு பழங்கள்! ருக்மிணிக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. அளிசமரம், அளிசமரம் என்று உரக்கக் கத்த வேண்டும் போலிருந்தது. அளிசம்பழம் தின்று எவ்வளவு காலமாகிவிட்டது. அதன் ருசியே தனி! வேம்பனூரில் அவள் ஐந்தாவது வரை படித்த காலத்தில் எத்தனை அளிசம்பழங்கள் தின்றிருப்பாள். ஒரு கணக்கு உண்டா அதற்கு! பையன்களுடன் போட்டி போட்டுக் கொண்டு அவள் மரத்தில் ஏறுவாள். இரு தொடைகளும் தெரிய பாவாடையைத் தார்ப்பாய்ச்சிக்கட்டிக் கொள்வாள். மரம் ஏறத் தெரியாத அவளுடைய சிநேகிதிகள், ''ருக்கு, எனக்குப் போடுடி, எனக்குப் போடுடி'' என்று கத்தியபடி கீழே அண்ணாந்து நிற்க, மரத்தின் உச்சாணிக் கிளைகளில் இருந்தபடி, பழம் தின்று கொட்டைகள் துப்பி மகிழ்ந்ததை நினைத்போது அவளுக்குப் புல்லரித்தது. கண் துளித்தது. புளியங்கொட்டை ஸாரும், சள்சள் ஸாரும் ஞாபகம் வரவே அவளுக்குச் சிரிப்பு சிரிப்பாய் வந்தது. பாவம் அவர்களெல்லாம் இப்போது செத்துப் போயிருந்தாலும் போயிருக்கலாம் என்று எண்ணிக் கொண்டாள். மீண்டும் சின்னவளாகிப் பள்ளிக்குப் போக முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று தோன்றியது, அவளுக்கு...

மரங்கள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. ருக்மிணி கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அந்த அளிசமரத்தின் ஒரு நுனிக்கிளையில் ஒரு பச்சைக்கிளி சிவந்த மூக்குடன் பறந்து வந்து உட்கார்ந்து கிரீச்சிட கிளை மேலும் கீழுமாய் ஊசலாடியது. என்ன ஆச்சரியம்! இது எப்படி, இப்போது இங்கே வந்து சேர்ந்தது? கிளியே, வா! நீ சொல்ல வேண்டியதில்லை. என் ஓட்டு உனக்குத்தான். முன்னே நான் தீர்மானம் செய்தாயிற்று. ஆனால் என் மாமியாரிடம் போய் சொல்லிவிடாதே. பூனைக்குப் போடச் சொல்லியிருக்கிறாள் அவள். நீயே சொல்லு, கிளிக்குப் போடாமல் யாராவது பூனைக்குப் போடுவார்களா? என் மாமியார் இஷ்டத்துக்கு வித்தியாசமாக நான் இதைச் செய்ய வேண்டியிருக்கிறது. என்ன செய்ய சொல்லு... சரி, நீ இப்போது எங்கிருந்து வருகிறாய்? எங்கள் வீட்டுக்கு வாயேன், நீ எப்போது வந்தாலும் என்னைப் பார்க்கலாம். மாட்டுத் தொழுவத்தில்தான் இருப்பேன்... இப்போது வர உனக்கு செளகரியமில்லை என்றால், பின் எப்போதாவது வா. எனக்குக் குழந்தை பிறந்த பிறகு வந்தாயானால் ரொம்ப சந்தோஷமா இருக்கும். என் குழந்தையும் உன் அழகைப் பார்ப்பான் அல்லவா? வரும்போது கிளியே, குழந்தைக்குப் பழம் கொண்டு வா!

ருக்மிணி அன்றுவரை கியூ வரிசைகளை எங்குமே கண்டவளில்லை. இது அவளுக்குப் புதுமையாகவும் ஒரு நல்ல ஏற்பாடாகவும் தெரிந்தது. ரெயில் மாதிரி நீளமாக இருந்த வரிசை இப்போது குறுகிப் போய்விட்டதே. ஆண்கள் ஏழெட்டுப் பேரே நின்றனர். சாவடி அவள் பக்கம் வேகமாக வந்து கொண்டிருந்தது. அவளுக்கு முன்னால் எட்டொன்பது பெண்கள்தான். அறைக்குள் பிரவேசித்ததும், வேற்று ஆண்களின் அருகாமை அவளுக்குக் கூச்சத்தையும், ஒருவகை மனக்கிளர்ச்சியையும் உண்டு பண்ணிற்று. யாரையும் நிமிர்ந்து பாராமல், சுற்றியிருப்பவற்றை மனசில் கனவுச் சித்திரம் பண்ணிக் கொண்டுமுன் நகர்ந்தாள்.

இளம் கறுப்பாய் மயிர் இன்றிக் கொழுகொழுவென இரு கைகள். ஒரு நீள் சதுர மேசையின் காகித அடுக்குகள், சிவப்பு, மஞ்சள் பேனா பென்சில்களுக்கிடையே இயங்க, அவளுக்கு ஒரு வெள்ளைச் சீட்டு நீட்டப்பட்டது. யார் யாருடையவோ கால்கள் குறுக்கும் நெடுக்குமாய்க் கோடுகளிட்டன. ஒரு நாணயம் தரையில் விழுந்த சத்தம் காதில் விழுந்தது. கடைசியில், ஒரு ஸ்க்ரீன் மறைப்பிற்குள் எப்படியோ தான் வந்து விட்டதை ருக்மிணி உணர்ந்தாள். அவளுக்குப் பின்னால் திரைக்கு வெளியே ஒரு பெண் சிரிப்பொலி தெறித்து, நொடியில் அடங்கிற்று. ருக்குவின் நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது. பொறுக்க முடியாதபடி மூத்திரம் முட்டிற்று. ஸ்வாமி, என்ன அவஸ்தை இது! பற்கள் அழுந்தின. ''ஐயோ, பால் கறக்க நேரமாயிருக்குமே'' என்ற நினைவு வர மடியில் பால் முட்டித் தெறிக்கும் மறுகும் பசுவும், கட்டிலிலிருந்து தாவித் தவிக்கும் அதன் கன்றும் ''ம்மாம்மா'' என்று அவள் செவிகளில் அலறிப் புடைக்கலாயின. அவள் உடம்பு இப்படிப் பதறுவானேன்? மாரும் லேசாக வலிக்கிறது. ஆ, கிளி! கை ருக்மிணியின் கையைப் பற்றவும், திடுக்கிட ''யாரது'' என்று அவள் திரும்பிப் பார்த்தாள். யாரும் அங்கில்லை. ஆனால், அவள் கையை வேறொரு கை இறுகப் பற்றியிருந்ததென்னமோ நிஜம். பெண் கைதான். வேறு யாருடைய கையும் அல்ல; மாமியார் மீனாட்சி அம்மாளின் கைதான்! கிளிக்கு நேர் எதிராக இருந்த அவள் கையை, பூனைக்கு நேராக மாமியார் கை நகர்த்தவும், பளிச்சென்று அங்கு முத்திரை விழுந்துவிட்டது. ஆ! ருக்மிணியின் வாக்கு பூனைக்கு! ஆம், பூனைக்கு!

பரபரவெனச் சாவடியை விட்டு வெளியேறினாள் அவள். அவளுக்காகப் பெண்கள் காத்திருந்தனர். இவள் வருவதைக் கண்டதும் அவர்கள் ஏனோ சிரித்தனர். பக்கத்தில் வந்ததும், ''ருக்கு யாருக்குடீ போ¡ட்டே?'' என்று ஒருத்தி கேட்க, ''எங்க மாமியாருக்கு'' என்ற வார்த்தைகள் அவள் அறியாது அவள் வாயில் நின்றும் வெளிப்படவும் கூடி நின்ற பெண்கள் பெரிதாகப் சிரித்தார்கள். ருக்மிணி தலையைத் தொங்கப் போட்டபடி, அங்கு நிற்காமல் அவர்களைக் கடந்து விரைந்து நடந்தாள். முன்னைவிடவும் மார் வலித்தது. பொங்கி வந்த துக்கத்தையும் கண்ணீரையும் அடக்க அவள் ரொம்பவும் சிரமப்பட வேண்டியிருந்தது.

கிருஷ்ணன் நம்பி
Share: 




© Copyright 2020 Tamilonline