Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சிரிக்க சிரிக்க | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
அடமானம்
- சோ. தர்மன்|ஜூன் 2007|
Share:
Click Here Enlargeசுருக்கமாக 'கோனார் கம்பெனி' என்று சொல்லப்படும் அய்யனேரி ஜெகநாதன் முதலாளியின் 'கிருஷ்ணா மேச் ஒர்க்ஸ்' என்றால் சுற்றுவட்டாரத்தில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு என்றாலும் பிரதான மான காரணம் பெரிய கம்பெனி, சொந்த லைசென்ஸ், சொந்த லேபில், சொந்த லாரிகளில் ஏற்றி வடமாநிலங்களில் சொந்தமாக விற்பது இவைபோக, தன் கம்பெனியில் வேலை செய்கிறவர்களுக்கு மற்ற கம்பெனிகளைவிட நிறையப் பணம் அட்வான்ஸாகக் கொடுப்பது, கிருஷ்ணா மேச் ஒர்க்ஸில் மருந்து முக்குகிற வேலை என்பது பெரிய ஒசத்தியான வேலை இல்லா விட்டாலும், மோசமான வேலை என்றும் சொல்லிவிட முடியாது. நான்குமுழத் துண்டை மட்டும் இடுப்பில் கட்டிக் கொண்டு மேலெல்லாம் விளக்கெண்ணெய் தடவியதைப் போல் வியர்வை நசநசப்பில், உருகும் மெழுகடுப்பின் வெக்கையில் நின்று தீப்பெட்டிக் கட்டைகளை மெழுகில் தோய்த்து எடுத்து எதிரே நிற்பவனிடம் லாவகமாக விட்டெறிவது கருப்பசாமிக்கு எட்டு வருடமாகக் கைவந்த கலை. 'புது மாப்பிள... கட்டயக் கொஞ்சம் மெதுவா விட்டெறிங்க. இன்னும் நாலு நாள்தான் இருக்கு. பெறகு ஒங்க வீரத்த எங்க காட்டணுமோ அங்க காட்டுங்க.'

'மாடசாமியண்ணே, இன்னும் பத்து நாளைக்குத்தான் அய்யா சுதாரிப்பு... பெறவு கட்டையத் தூக்கக்கூட சீத்துவம் இருக்காது. நிப்பி நடந்து கிட்டப்போய்த்தான் கட்டையக் கையில வாங்கணும்.'

முனியம்மாளின் பேச்சில் சுற்றிலும் உட்கார்ந்திருந்த அத்தனை பெண்களும் முகத்தை அண்ணாந்து வைத்துக் கொண்டு சிரித்தார்கள். அத்தனைபேர் வாயிலும் பான்பராக். ஃபோர்மேன் வேல்சாமியின் கீழுதடு துருத்திக் கொண்டிருந்தது. கணேஷ் போயிலை வாயை இறுக்கிப் பூட்டி இருக்க... உதட்டைக் கடித்துக்கொண்டு சிரித்தான்.

'பொண்ணு பேரு மாரியம்மாளாம்... தெரிமில்ல... இருக்கங்குடி மாரியாத்தா, அப்படியே வெளையாடி விட்ருவா வெளையாடி... கருப்பசாமியெல்லாம் மாரியத்தாளக் கண்டா காத வழிக்கு ஓடணும்.'

வாசலில் கருப்பசாமியின் அய்யாவும் அம்மாவும் தலை காட்டியவுடன் கட்டை எறிவதை நிறுத்திவிட்டு ஓடினான். இடுப்பில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து மேலெல் லாம் வழிந்த வியர்வையைத் துடைத்தான். முதலாளியின் அறையை எட்டிப் பார்த்து விட்டு அய்யாவை நோக்கிக் கையசைத்தான்.

அய்யாவின் கையில் பெரிய எவர்சில்வர் தட்டில் தாம்பூலமும் பழவகைகளும் நடுவே பத்திரிகையும் இருந்தது.

'வாங்க, வாங்க... இதெல்லாம் எதுக்கு? பத்திரிக மட்டும் கொண்டாந்தாப் போதாதா?'

'ஏதோ எங்களால ஏண்டது.'

'சரி, ரொம்ப சந்தோஷம்! அப்ப நம்ம கம்பெனிக்கு புதுசா ஒரு ஆள் வேலைக்கு வருது.'

'நம்ம கம்பெனிக்குத்தான் மொதலாளி வருவா! நம்ம கம்பெனிய விட்டுட்டு வேற எங்க போவா?'

'பரிசம் போடப் போறன்னைக்கு ராத்திரிக்கு வேன் வேணும்னு கருப்பசாமி சொன்னான். எப்பிடி முடிவு பண்ணியிருக்கீக!'

''ராத்திரி போயி பரிசம் போட்டுட்டு, ராத்திரியே நாங்க திரும்பிருவம், காலைல பொண்ணை அழைச்சிட்டு அவங்க இங்க வந்திருவாங்க.'

'அது அவுக பொறுப்பு மொதலாளி. பொண்ணு வேல பாக்கிற கம்பெனி மொதலாளி வேன் தாரம்னு சொல்லியிருக் காராம்!'

'அப்படியா.. அப்பனாச் சரி'

தீப்பெட்டி கம்பெனிகளுக்குத் தேவையான குச்சி மூட்டைகள், அட்டைக் கட்டுகள், பண்டைல்கள் ஆகியவற்றை ஏற்றிச் செல்லும் சின்ன லாரி--மாடல் வேன். மேலே மட்டும் தார்ப்பாயால் மூடப்பட்டிருந்தது. மாப்பிள்ளை யின் அம்மா பரிசப் பெட்டியுடன் வேனின் நடுவில் உட்கார்ந்திருந்தாள். சுற்றிலும் பெண்கள், ஊரில் உள்ள சில முக்கியஸ் தர்கள். மாப்பிள்ளையின் அய்யா, டிரைவரின் பக்கத்தில் உட்கார்ந்து வழிகாட்டிக் கொண்டிருந்தார். கரடுமுரடான பாதையில் வேன் குலுங்கிக் குலுங்கிச் சென்றது. ரோட்டின் இரு பக்கங்களிலும் நீண்டிருந்த வேலிக் கருவேல மரக்கொம்புகள் தார்ப்பாயில் உரசும் போதெல்லாம் பெண்கள் தலையைக் குனிந்து கொண்டார்கள். தூரத்தில் சில தெருவிளக்குகள் எரிவது அரிச்சலாய் தெரிந்து பின்னர் துணிப்பாய்த் தெரிந்தன. வேன் ஊரை நெருங்க நெருங்க ஸ்பீக்கர் அலறும் சத்தம் பெரியதாகிக் கொண்டே வந்தது.

பெண்ணின் வீடு ஊரைவிட்டுத் தனியே உள்ள காலனியில் இருந்தது. முற்றத்தில் நிறையப் பேர் கூடியிருந்தார்கள். ஏழெட்டு டியூப் லைட்டுகள் எரிவது ரொம்ப வெளிச்சமாக இருந்தது. எல்லோருமே இவர்களை எதிர்பார்த்துதான் காத்திருந் தார்கள் போலும். வேனில் வந்தவர்கள் எல்லோரும் கூட்டமாக நடக்க... பரிசப் பெட்டி நடுவீட்டில் இறக்கி வைக்கப்பட்டது. வெளியிலிருந்து ஒரு சத்தம் அதட்டலாகக் கேட்டது.

'என்ன.. இன்னும் உக்காந்துட்டு இருக்கீக? நேரங் காணாதா? வந்தவங்களுக்கு சட்டுப்புட்டுனு சாப்பாட்டப் போடுங்க. வள்ளியம்மா எங்கே போன... ஊரைச் சத்தங்காட்டு, பத்துமணிக்கு கரண்டப் புடுங்குனாலும் புடுங்கியிருவான். பெறவு இருட்டுக்குன்ன கெடத்து சீரழியணும்.'

அந்த அதட்டல் மூலமே தான்தான் இந்த ஊரில் நாட்டாண்மை என்பதை எல்லோருக் கும் காட்டியவர், முற்றத்தில் விரித்திருந்த பாயில் சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டார்.

'எம் மக மாரியம்மாளுக்குப் பரிசம் போடப் போறம் வாங்க. வாங்க.' என்று வீடு தவறாமல் சொல்லிக்கொண்டு தெருவழியே போனாள் வள்ளியம்மாள். முற்றம் நிறைந்து விட்டது. அநேகமாக சாப்பாடும் முடிந்து விட்டது.

பொண்ணோட தாய்மாமன் எங்கய்யா, இங்கவா... இப்பிடி முன்னால வந்து உட்காரு. அங்க நின்னா எப்பிடி? பொண்ணோட அய்யா, மாப்பிள்ளையோட அய்யா ரெண்டுபேரும் இப்பிடி ஓரத்துல வாங்க. யேய் பொம்பளைகளா, இப்ப பேசாம இருக்கப் போறீகளா என்ன.. சலசலன்னு பேசாதிக!'

நாட்டாண்மையின் சத்தம் கூட்டத்தில் பலமாகக் கேட்டுக் கொண்டேயிருந்தது. பரிசப் பெட்டி, பழத்தட்டு, வெற்றிலைக்கட்டு, பரிசச்சேலை எல்லாம் நாட்டாண்மையின் முன்னால் வைக்கப்பட்டன. கூட்டம் வட்டம் சுற்றி நிற்க, வீட்டுக்குள் மணப்பெண்ணும் இன்னும் சில பெண்களும் மட்டுமே இருந்தார்கள். முற்றத்தில் பேசுகின்ற எல்லாப் பேச்சுக்களும் வீட்டுக்குள்ளும் தெளிவாகக் கேட்டன.

'எங்க வள்ளியம்மாளக் காணும்? என்ன வள்ளி.. ஊரு பூராவும் சொல்லிட்டயா? வேற யாரு வீடும் பாக்கியிருக்கா... இப்ப ஆரம்பிக்கலாமா?'

'எல்லா வீடும் சொல்லியாச்சு. இனி நீங்க செய்ற மொறையச் செய்ங்க.'

'எதுக்கும் ஒரு வார்த்த கேட்டுக்கிறணுமில்ல... பெறகு ஏங்கிட்டச் சொல்லல, ஒங்கிட்டச் சொல்லலனு ஆவலாதி வரப்படாதில்ல.'

'அதெல்லாம் சொல்லியாச்சு நீரு ஆரம்பியும்.'

'சரி, பரிசம் எவ்வளவு போடுறீக?'

'பரிசம்.. நாங்க என்ன புதுசாவா போடப் போறம்? ஊரு வழக்கப்படிதான்.'

'ஊரு வழக்கப்படியா! எங்க ஊரு வழக்கம் ஐயாயிரத்து ஒண்ணு'

'எங்க ஊர் வழக்கம் பதினொண்ணு'

'அது ஒங்க ஊர்ல வாங்கிக்கோங்க! பொண்ணு எங்க ஊர் பொண்ணு... எங்க ஊர் வழக்கப்படிதான் நீரு பரிசம் போடணும். எடும் ஐயாயிரத்து ஒண்ணை.. எண்ணி வையும் இப்பிடி..'

'.....'

'என்ன பேச்சுமூச்சுக் காணும்? யார்ட்ட வந்து வண்டிய விடுறீரு? பொண்ண அழைக்க வந்தா, பேசாம சோறு சாப்பிட்டுட்டுப் போவிரா, பரிசம் பதினொண்ணாம்!'

கூட்டம் கெக்கெலி போட்டுச் சிரித்து மகிழ்ந்தது.

மாரியம்மாள் தலைகுனிந்து உட்கார்ந் திருந்தாள். மீண்டும் நாட்டாண்மையின் அதட்டல் பலமாகக் கேட்டது.

'சொல்லுங்கய்யா.. சம்பந்திக ரெண்டு பேரும் இப்பிடி வாய மூடிக்கிட்டு ஒக்காந்திருந்தா எப்பிடி? பரிசம் எவ்வளவுய்யா பேசிக்கிட்டீக!'

'பரிசம் நூத்தியொண்ணு போட்ருவம்'

'நூத்தியொண்ணா.. மாரியம்மா வாரத்துக்கு நானூறு ரூவா சம்பவளம் வாங்குவாயா.. புள்ள வேலைக்காரப் புள்ள... ஒமக்கு யோகம்னு வச்சிக்கோரும்.'

'பொண்ணோட அப்பன் என்னய்யா சொல்றான்?'

'பரிசம் அவுக போடுறதப் போடட்டும்.'

'அப்பச் சரி. பரிசம் நூத்தியொண்ணு'

'ம்..வேற சீருசெனத்தி என்ன பேசிக்கிட்டீக?'

'பொண்ணுக்கு கம்மல்-மூக்குத்தி மட்டும் தான். பவுனு கிவுனு எல்லாங் கெடையாது. இன்னக்கி லேசா சொல்லீறலாம். பெறகு போடணுமில்ல?'

'சரி வேற ரொக்கம் ஏதும் உண்டா?'

'அதெல்லாம் கெடையாது, நாங்க பேசிக்கிறல.'

'சரி, பையனுக்கு தலத்தீபாவளிக்கு என்ன செய்யப் போறீக?'

'தலத்தீபாவளிக்கு வேட்டி துண்டுதான். மோதிரமெல்லாங் கெடையாது. வசதி இருந்தா நாங்களா செய்வம். ஆனா பேச்சுக் கிடையாது!'

'அது ஒங்க பிரியம்!'

'சரி, அப்ப பரிசம் வெளம்பிரலாமா? வேற எதும் கேக்கிறதுனா கேளுங்க.'

எல்லாப் பேச்சுகளையும் கேட்டுக்கொண்டு மாரியம்மாள் பொம்மையாக உட்கார்ந்தி ருந்தாள். பெண்கள் கசமுசவென்று பேசிக் கொண்டிருந்தார்கள். நாட்டாண்மை ஒவ்வொரு பொருளாக வெளியே எடுத்து வைத்தார். பரிசச் சேலையை எடுத்து தாம்பூலத்தின் மேல் வைத்தார்.

'இம்புட்டுப் புள்ளையிலிருந்து இன்னக்கு வரைக்கி கருமருந்தத்தின்ன புள்ளைய படுபாவி, கம்மல் - மூக்குத்தியோட அனுப்பறான்.'

'அதுக்கென்ன செய்ய முடியும்? இவ ஒருத்திதான் வேல செய்யிற வயது. மத்ததெல்லாம் நண்டும் நசுங்கலுமா இருக்கு. அவுக அப்பன் என்ன செய்வான்?'

'இந்தக் கம்மல்-மூக்குத்திகூட கம்பெனியில அட்வான்ஸ் வாங்கி அவளாச் செஞ்சது... இல்லன்னா அதுங் கெடையாது!'

'மாரியம்மா வேலைக்காரப்புள்ள! விடிஞ்சு போனா, அடஞ்சுதான் வருவா. மத்த புள்ளக மாதிரி வாய்கூடப் பேசமாட்டா. அப்புராணிப் புள்ள.'

'பொட்டக் கழுதயாப் பெறக்கவே கூடாதுக்கா.. இனி அங்கேயும் போயி கருமருந்தத் தின்னுதான் சீரழியணும்!'

'அட்வான்ஸ் ரூபாகூட இனியும் மூவாயிரம் பாக்கிருக்குனு பேசிக்கிட்டாக.'

'யே, பொம்பளைகளா, இப்ப பேசாம இருக்கப் போறீகளா என்ன? ஓலப்பாயில நாயி மோண்டாப்ல... சலசலன்னு என்னதான் பேசுவீகளோ?'

மீண்டும் நாட்டாண்மையின் கூப்பாட்டில் கூட்டம் அமைதியானது. மாரியம்மாள் மட்டும் பொம்மையாக வீட்டுக்குள் உட்கார்ந் திருந்தாள். 'சரி, அப்ப, பரிசம் வெளம் பிரலாமா, வேற எதும் கேக்கணுமின்னா சம்பந்திக கேட்டுக்கோங்க!'

பெண்ணின் அய்யா வேகமாக எழுந்து மாரியம்மாளிடம் போனார். இவர் ஏதோ கேட்க மாரியம்மாள் தலையாட்டினாள். வேகமாக வந்து உட்கார்ந்து நாட்டாண்மை யிடம் ஏதோ சொன்னார்.

'இதுக்குத்தான் திரும்பத் திரும்பக் கேட்டுகிறது! பொண்ணு வேலைபாத்த கம்பெனியில அட்வான்ஸ் ரூவா மூவாயிரம் பாக்கியிருக்காம். அத மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஏத்துக்கிறனும்னு சொல்றாரு.'

'அப்ப பொண்ணுக்கு நாங்க ரொக்கம் குடுக்கணுமிங்காரா?'

'அது ஒங்கபாடு. அவரு சொல்லிட்டாரு. ஒங்களுக்கு முடியுமா முடியாதானு மட்டும் சொல்லுங்க!'
'அப்பிடியெல்லாம் ஏத்துக்கிற முடியாதுய்யா!'

'நீரென்ன கையிலருந்தா எண்ணப் போறீரு? அங்க போயி கம்பெனிக்குத்தானே போகப் போறா.. அந்தக் கம்பெனில வாங்கி அவ குடுப்பா.. பெறவு அவ வேலைசெஞ்சு கழிப்பா..!'

'கிழிப்பா! நல்லாயிருக்கே ஒம்ம பேச்சு.. அவ வாங்கி எங்கிட்டக் கொடுப்பா.. ஒங்க கடன நீங்கதான் தீக்கணும். இன்னக்கு அட்வான்ஸ் வாங்கிக் குடும்பீரு... பெறகு நாளைக்கி சம்பளத்தக் கேப்பீரு.. நாங்க பொண்ணக் கூட்டிட்டுப் போயி சட்டி எடுத்திட்டுப் போகவா?'

'சரி முடியாதுனு சொல்லிட்டிகள்ள, அந்த மானிக்கு அந்தப் பேச்ச விடுங்க.'

கூட்டத்தில் ஒரு சத்தத்தைக் காணோம். அத்தனை பேச்சுகளையும் கேட்டுக் கொண்டு மாரியம்மாள் பொம்மையாக உட்கார்ந் திருந்தாள். நாட்டாண்மை பரிசம் விளம்பினார்.

'ஓகோ ஒறவுமுறையாரே, தோட்லாம்பட்டி கருப்பையா மகன் கருப்பசாமி, திட்டங்குளம் பேச்சிமுத்து மக மாரியம்மாளுக்கு பரிசம் போட வந்திருக்கான்.'

'அப்பிடியா என்னென்ன கொண்டாந் திக்கான்?'

'ஏழு கெட்டு வெத்தல வந்திருக்கு.'

'யே...ம்'

'ஏழாயிரம் பாக்கு வந்திருக்கு.'

'பெறவு?'

'ஏழு வண்டி பழவர்க்கம் வந்திருக்கு.'

'யேம்... ம்'

'மஞ்சளும் குங்குமமும் வந்திருக்கு.'

'பெறவு என்ன வந்திருக்கு.'

'எட்டுக் கூடையில பூ வந்திருக்கு?'

'யே.. ம்.'

'எட்டூரு ஆளும் எட்டு வண்டியும் வந்திருக்கு.'

'யே...ம்... அம்புட்டுத்தானா வேற ஒண்ணும் வரலையா?'

'பத்தாயிரம் ரூவாய்க்குக் காஞ்சிபுரம் பட்டும், பட்டுப் பாவாடையும், பட்டு ரவிக்கையும், பத்தாயிரத்தி ஒண்ணு பரிசப் பணமும் வந்திருக்கப்பா.'

'யே...ம். அதச் சொல்லும்.'

பரிசச் சேலை இருந்த தட்டை எடுத்து பெண்ணின் தாய் மாமனிடம் கொடுத்தார் மாப்பிள்ளையின் அய்யா. கூட்டத்தில் எல்லோரும் தொட்டுக் கும்பீட்டு கடேசியாய் வீட்டுக்குள் போனது. வாசலை மறைத்து இரண்டு மூன்று பெண்கள் நின்று கொண்டார்கள். ஒருத்தி ஓடிப்போய் ஜன்னலைப் பூட்டினாள். கூட்டம் பழைய படியும் கசாமுசா வென்று பேச ஆரம்பித்தது. பேச்சோடு பேச்சாக நாட்டாண்மை கேட்டார்:

'தாலி கட்டுக்கு பெண்ண அழைச்சிட்டுப் போறதுக்கு என்ன ஏற்பாடு?'

'பொண்ணு வேல செய்யிற கம்பெனி மொதலாளி வேன் தாரம்னு சொல்லியிருக் காராம். அதனால மாப்ள வீட்லருந்து வண்டி வர வேண்டாம்னு சொன்னாக.'

'அப்படியா, அப்பனா நல்லதாப் போச்சு! காலைல இங்க இருந்தே கெளம்பி வந்துரலாம். ஒங்கள எதிர்பாக்க வேண்டிய தில்லை!'

'கம்பெனி மொதலாளிக்கு ரொம்ப வருத்தம், புள்ள வேலக்காரப்புள்ள, கைச்சூட்டிகையான புள்ள, ஒரு நாளைக்குக்கூட வீட்ல இருக்க மாட்டா. கம்பெனியிலேயே வேலையில் இவதான் ஃபர்ஸ்ட். போனஸும் இவதான் ரொம்ப வாங்குவா.'

'அங்கயும் கம்பெனி பெரிய கம்பெனி - கப்பல் போல. வேல செய்யத்தான் கெதி வேணும். மொதலாளியும் தங்கமான மனுசரு!'

சில பெண்கள் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார்கள். எதற்காகவோ காத்திருப்பது போல் கூட்டம் மெளனமாக இருந்தது. நாட்டாண்மை மீண்டும் அதட்டல் போட்டார்.

'என்ன... பொம்பளகளா இன்னுமா சேல கெட்றா?'

'முடிஞ்சது... முடிஞ்சது ஆரம்பிங்க.'

'ஓகோ ஒறவுமொறையாரே.. தோட்னாம்பட்டி கருப்பையா மகன் கருப்பசாமி, திட்டங்குளம் பேச்சிமுத்து மக மாரியம்மாளுக்கு மஞ்சனை வைக்கான்.. மஞ்சனை வைக்கான்!'

'அப்பிடிச் செய்.. அப்பிடிச் செய்.. அப்பிடிச் செய்'

'கொலவ போடுங்க பொம்பளைகளா.. வேடிக்க பாக்க மட்டும் வந்திருங்க, வாயத் தொறந்துறாதிக.'

'இப்ப உள்ள கொமரிக எவளுக்கு கொலவ போடத் தெரியும்!'

மாரியம்மாள் பரிசச்சேலை கட்டி பொம்மை யாக முற்றத்துக்கு நடந்து வந்தாள். கும்பிட்டு எழுந்தாள். பொம்மையாக வீட்டுக்குள் போய்விட்டாள். வெற்றிலை பாக்கு, பூ, சந்தனம், சாக்லெட் வாங்கக் கூட்டம் முண்டியடித்தது. கூட்டம் போட்ட சத்தத்தில் வேன் கிளம்பிப் போன சத்தம் மெதுவாகக் கேட்டது.

கல்யாணம் முடிந்த மூன்றாம் நாள் மாரியம்மாள் புதுக் கம்பெனிக்குள் புகுந்தாள். தான் ஊரில் வேலை பார்த்த கம்பெனியைவிடப் பெரிய கம்பெனி. நிறையப் பெண்கள் வரிசை வரிசையா, சுவரில் எங்கே திரும்பினாலும் ஸ்பீக்கர். தான் புகுந்தவீடு மிகப் பெரிய வீடு என்று நினைத்துக் கொண்டாள். பலகையில் உட்கார்ந்து முன்னால் தீப்பெட்டிக் கட்டையைப் படுக்க வைத்துக் கிளிப்பைப் கழட்டி இரண்டு சக்கைகளில் குச்சிகளை உருவி பெட்டியில் அடைத்தாள். ஒவ்வொரு சக்கையை உருவும்போதும் தன் கை நிறையப் போட்டிருந்த கண்ணாடி வளையல்கள் சிலுக் சிலுக்கென்று சத்தம் எழுப்பியது எரிச்சலாக இருந்தது. கைக்கு இரண்டு வளையல்களை மட்டும் விட்டுவிட்டு மீதியைக் கழட்டிச் சுவரோரம் வைத்தாள். குச்சியை உருவுவதற் காக குனிந்தபொது கழுத்தில் புதிதாக தொங்கிய மஞ்சள் கயிறு உஞ்சலாடியது. அதை எடுத்து முன் ஜாக்கெட்டுக்குள் இறுக்கித் திணித்துவிட்டுத் தலைநிமிர்ந்தாள். எதிரே கணக்கப்பிள்ளை நின்றுக் கொண்டிருந்தார்.

'என்ன.. கருப்பசாமி கல்யாணமாகி மூணு நாளாகுது. இன்னும் ஒம் பொண்டாட்டி கையில வளையல் அப்பிடியே அலுங்காமக் கெடக்கு!' பெண்கள் எல்லோரும் சிரித்தார்கள். மாரியம்மாளால் சிரிக்க முடியவில்லை. திரையிட்ட கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வாசலைப் பார்த்தாள். மாரியம்மாளின் மாமனார் முதலாளியின் ரூமுக்குள் போய்க்கொண்டு இருந்தார். அட்வான்ஸ் பணம் வாங்குவதற்காக!

சோ. தர்மன்
Share: 




© Copyright 2020 Tamilonline