Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | சமயம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | தமிழக அரசியல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
சாத்தான் திருவசனம் ....
- ஆ. மாதவன்|ஜூலை 2005|
Share:
Click Here Enlargeதைக்காடு மைதானம் தாண்டி, தாணாமுக்கு அம்மன் கோயில் பக்கம் வந்தபோது, தினசரி பேப்பர் கட்டுகளுடன் சைக்கிளை அள்ளிக் கொண்டு 'சர்' வென்று நடந்து வருகிறான் நாணக்குட்டன். நேரம், பலபலவென்று வெளிச்சம் பூசத் தொடங்கியிருந்தது, மணி ஐந்தரை. எனது 'மார்னிங் வாக்' முடியப் போகும் நேரம்...

''என்ன நாணு நாயரே, இன்னைக்குக் கொஞ்சம் நேரமாயிப் போச்சே... பதிவா, மாடல் ஸ்கூல் பக்கத்தில யல்லவா நம்ம சந்திக்கிறது... புதிசா பேப்பரிலெ ஏதாவது விசேஷம் உண்டுமானா, என் பேப்பரை இங்கெயே தந்திரு.. இல்லாட்டா போற போக்கிலெ வீட்டிலெ போட்டாலும் போரும்...''

சைக்கிளைத் தள்ளிக் கொண்டு, குனிந்து ரோட்டைப் பார்த்தபடியே - யானை மரம் இழுப்பது போல, மெல்ல நடந்து வரும் நாணுக்குட்டன், அப்பொழுதுதான் நிமிர்ந்து என்னைப் பார்த்தான்.

''சாரு இன்னைக்கு நேரத்தோட எத்தியாச்சு... பேப்பரிலெ இன்னும் ஒரு விசேஷமும் இல்ல சாரே... ஆளுக்கே தெரியாம ஆப்ரேஷன் நடத்தி, கிட்னி தட்டியெடுக்கற ஒருவிதமான பிளாக் மார்க்கெட் நடக்குதாமே, ஹைதராபாத், மெட்ராசெல்லாம். இது போல, இப்போ இங்கேயும் ஒரு பெரிய பிரைவேட் ஆஸ்பத்திரியிலெ நடந்திருக்காம்...

''ஆப்ரேஷன் நடத்தின டாக்டருடைய ·போட்டோவும், அந்த பரப்பிரம்ம பேஷன்டோட படமும் எல்லாம் போட்டு லேகனம் வந்திருக்கு... இதுதான்... விசேஷம். நான், எல்லாம் முழுசா படிக்கல்ல... கொஞ்சம் புரட்டிப் பார்த்திட்டு நின்னிட்டேன். அதுதான், பத்து பதினைஞ்சி மினிட்டு தாமதிச்சு போச்சு... இல்லாட்டா இதுக்கு முன்னே, குற்றாலம் சார் வீட்டை தாண்டி, ஆஸ்பத்திரி முக்கு கடந்திருப்பேன். மணியென்ன ஆச்சு சாரே.. இந்தாங்கோ பேப்பர் கொண்டு போங்க... நான் சொன்ன வார்த்தையெ படிச்சு பாருங்கோ, நல்ல ரசம் உண்டும்...''

''எங்கெ? நடந்துக் கொண்டே படிக்க இப்பவெல்லாம் முடிய மாட்டேங்கிறது. தலை சுற்றுது. இனி, இந்த கண்ணாடியெ மாற்றணும். பிற்பாடுதான, நடந்து படிக்கிறது, ராத்திரியிலெ புஸ்தகம் படிக்கிறது எல்லாம்...''

''சும்மா இப்படி ராவும் பகலும், படிப்பு வாசிப்பும்னா கண்ணும் ஒரு அவயவம் அல்லவா, அதுக்கும் வேணுமே ரெஸ்டு... நீங்க எங்கே விட்டு வக்கறியோ, படிப்பு, எழுத்து, படிப்பு, எழுத்து இப்பிடியே தானே... பேசாமெ ஆரயாவது பிடிக்க வேண்டிய ஆளெப் பிடிச்சு ஒரு அவார்டு தட்டி யெடுக்கப் பாருங்க, ஆயுசு போயிட்டிருக்கு...''

''சரிடேய் நாணுக்குட்டா, அதெல்லாம் போகட்டும், உன் பய்யன் காணாம போனவனைப் பற்றி ஏதாவது துப்புத்துரவு வந்துதா? அதுவும் அப்பிடி, இப்பிடிண்ணு இப்போ ரெண்டு வருஷமிருக்காதா...?"

''சாரே அது ஆச்சுது சாரே, இந்த கர்க்கிடகம் வந்தா நீங்க சொன்னாப்பிலெ இரண்டு வருஷம் தெகையிது. ஞாபகப்படுத்திட்டியோ; நெனச்சாலே ஈரக்கொலை வேவு தீரமாட்டேங்கிறது... பதினெட்டு வயசு... ஆரு கண்டாலும் இரவத்தியஞ்சி மதிக்கிற ஒயரமும், தண்டியும், அந்த கள்ளச்சிரிப்பும்... எங்கெ போய் என்ன பாடுபடுத்தானோ, எப்பிடி இருக்கானோ... என்னதான் இருந்தாலும் எனக்கு நல்ல நிச்சயமிருக்கு சாரே... அவன் சாகல்லெ, உயிரோடதான் இருக்கான். சோதி நக்ஷத்திரக்காரனல்லவா, பெற்றவங்களெ நல்லா சோதனைக்கு மேலெ சோதிப்பான். அதனாலெதானே மறக்க ஒக்கல்ல... அய்யோ, ஜட்ஜி அந்நியம் நடையிலெயே நிக்காரு.. ஒரு அஞ்சு மினிட்டு லேட்டா யிட்டா கூட பொலயாடி மகனேன்னு தான் கூப்பிடுவாறு... சாரு போங்க... நான சொல்லிருக்கேன் அந்த காரியம் மறந்திரக் கூடாது. அதுதான், குற்றிமேடு சாத்தான் சேவை மடம் வரைக்கும் ஒரு தரம் போய் கேட்டு வரணும்.. அற்ற கைக்கு அதையும் கேட்டு அறிஞ்சாச்சானா இந்த புத்திர சோகத்துக்கு ஒரு அறுதி கண்டிரலாம்... சாருக்கு எப்போ சவுரியம்னு ஒரு வாக்கு சொல்லுங்கோ... நமக்கு தெரிஞ்சவன் ஒருத்தன் புதிய டாக்ஸி கார் எடுத்திருக்கான், கூப்பிட்டு போயிட்டு வந்திரலாம்...''

''சரி நாணுநாயரே... நிச்சயமா இந்த வார கடைசியில் சாந்தன் மடத்துக்கு போகலாம். இனி நான் காரணமாக தடை வேண்டாம்...'' என்று, நாணுக்குட்டனுக்கு கை அடித்துக் கொடுக்காத குறையாத வாக்களித்து விட்டு, அந்த காலை நேர தேகாப்பியாச நடையைத் தொடர்ந்தேன்.

பாவம் நாணுநாயர். அவனுக்கொரு நம்பிக்கை நானாகப் பட்டவன், சர்வக்ஞ பீடமேறிய அதிவித்வான் என்று சோழிக்காய் பரப்பி, குத்துவிளக்க சமிக்ஞையில் குறி பார்த்துச் சொல்லும் குட்டிச்சாத்தான் சேவை தேவனிடம், நான் உடனிருந்தால் கேட்க வேண்டியதையெல்லாம் சவிஸ்தாரமாக கேட்டுச் சொல்வேன் என்று அவன் நினைக்கிறான். அப்பாவி ஒருவனின் நம்பிக்கை, அதுவும் புத்திர சோகம், எந்தவிதமான முன் சமிக்ஞையும் இல்லாமல் திடுதிப்பென்று ஒரு நாள், நாணு நாயருக்கு எல்லா வகையிலும் உதவுயும், உந்துதலுமாக இருந்த - அருமைக்கு அருமையான, ஏக புத்திரன் கோபாலன் இருபது வயது கட்டிளம் குமரன் காணாமால் போய் விட்டான்.

சொந்தம், பந்தம், அயல், அன்னியமென்றல்லாம், தேடாத இடமில்லை. போலீஸ் நிலையங்களில் எழுதி வைத்து, விபத்து, தற்கொலை தடயங்களில் எல்லாம் கூட சலித்துப் பார்த்தும், ஊஹ¤ம். நாணுநாயர்தான் பத்திரிகை முகவர் ஆயிற்றே, தெரிந்த எல்லா பத்திரிகைகளிலும் வரிவிளம்பரங்களில் இலவசமாகச் செய்தி பிரசுரித்து உதவினார்கள்.

இதோ இதோவென்று இப்போ ரெண்டு வருடத்தைத் தொடுகிறது. உடலோடு சொர்க்கம் என்பது போல - மாயமந்திரம் என்று ஏதாவது ஆகியிருக்குமோ சபல நிவாரணத்திற்காக உண்டு இல்லை என்று ஏட்டைக் கட்டிவிடவேண்டுமென்ற ஆசை நாயருக்கு. குற்றிமேடு சாத்தான் பிரவசனம் என்றால் கேரளமெங்கும், தெய்வ கற்பிதமாக பிரபலம் கொண்டது. அந்த திவ்யாஸ்திர பிரயோகத்திற்கு துணை போகத்தான், நாணுநாயர் என்னையும் அழைக்கிறான். போய்த் தான் பார்ப்போமே...

நாணுக்குட்டனுடன் குற்றிமேடு சாத்தான் நிலையத்திற்கு வந்தபோது, காலை மணி ஏழரை ஆகியிருந்தது. நாங்கள் வந்தபோது அறுபது கிலோ மீட்டர் தாண்டி, டாக்ஸி காரை சாத்தனார் மடத்து வாசல் பக்கம் கலுங்கு அருகில் நிறுத்தி, டிரைவரை காலை டிபனுக்கு அனுப்பி வைத்தோம். மடத்து வாசலின் பிரம்மாண்ட கேட்டுப் பக்கம் வந்த போது, அங்கே எங்களுக்கு முன்னதாகவே, இரண்டு வயதான பெண்களும், மூன்று ஆண்களுமாக காத்திருந்தார்கள். "நல்ல வேளை ஆறாவது டோக்கன் கிடைத்து விடும்...'' என்று என்னிடம் மெதுவாக சொன்னான் நாணுநாயர்.

"பிரச்சனம் பார்க்கத்தானே? அப்படியென்றால் உங்களுக்கு மூணாவது நம்பர் கிடைக்கும். அந்தப் பெண்கள் ரெண்டும் ஒரு டோக்கன், நாங்கள் மூன்று பேரும் ஒரு டோக்கன், நீங்க மூணாவது ஆள் ரொம்ப தூரத்திலிருந்து வருவது போல இருக்கு. டாக்ஸியிலே வந்து இறங்கினதெப் பார்தோம்...'' காத்திருந்த ஆண்கள்தான் வலிய வந்து பேசினார்கள்.

''நாங்க திருவனந்தபுரத்திலேருந்து வாறோம்... டோக்கன் எப்போ கொடுப்பாங்க?''

''ஹோ.. திருவனந்தபுரமா...? அங்கேயிருந்து டாக்ஸியிலெ சிலவு பண்ணி வந்திருக்கிறதினால, உங்களுக்கு முதல் டோக்கன் கிடைக்கும். தூரத்துக்காரங்களை மொதல்லே கவனிக்க அனுப்பிச்சிருவா... கரக்டா எட்டு மணி அடிச்சு ஒடனே கேற்று திறக்கும். உள்ளபோனதும் - பரிசாரங்கள் போற்றி டோக்கன் கொடுக்க ஆரம்பிப்பாரு...''

பேசிக் கொண்டிருந்த போதே அந்த கிராம்ய சுற்றுப்புறத்தை கொஞ்சம் நோட்டம் விட்டேன். நாணுநாயர் அந்த நாட்டுக்காரர்களின் சம்பாஷணையில் லயித்து விட்டது போல இருந்தது. அவர்களிடமும் தன்னுடைய துரந்தத்தையெல்லாம் விளம்புவார். ''இப்படியாக்கும், தன்னுடைய, அருமைக்கும் அருமையான ஒரே பய்யன் பதினெட்டு வயசு, மன்மதக்குஞ்சு வேறெங்கும் அவனைப் போல காணக்கிடைக்காது...'' காணாமப் போயிட்டான். மனசு முறிஞ்சு போச்சு. தேடாத இடம் பாக்கியில்லெ கடைசியிலெ சாத்தான் சாமி சன்னதியிலெ துப்பு கிடைக்குமான்னு கேக்க வந்திருக்கோம்... அந்த சார்வாளா? அவங்க பெரிய ஒரு வித்வான் ஆக்கும். என் கூட வந்தது. ஒரு ஆஸ்ரிதவாத்சல்யம்...'' என்று என்னைப் பற்றியும் சொல்வது... பரக்கப் பார்க்கும் லயிப்பினிடையேயும் கேட்டது.

அருமையான சுற்றுப்புறம். கொடைக்கானலின் ஒரு மலையடிவார தோட்ட நடுவில் வந்தது போலிருந்தது. ஒரு எட்டடி தார்ரோடு அங்கிருந்து இறக்கமாக சரிந்து எங்கோ மரங்களிடையே போய் மறைகிறது. பக்கவாடு நிறைய உயரமாக பசேலென்று ரப்பர் மரங்கள், பறங்கிமாமரங்கள், பஞ்சணத்திப் பெருமரம், உயர உயர வளர்ந்து நிற்கும் தேக்க மரங்கள், இவ்வளவு பூத்த பொலிவை நான் கண்டதேயில்லை. மேற்கே வானச்சரிவில் பெரிய தொப்பி போல மேகங்களைத் தடுத்து நிறுத்திக் கொண்டு மலை உச்சிகள் வடக்காக வளைந்து போய்கிடக்கிறது. பற்றமாக பச்சைக்கிளி வரிசையொன்று பெருமரப் புதரிலிருந்து எழுந்து பறந்து போயிற்று... எவ்வளவு ரம்யமான, ரசசுந்தரமான, ரகவிஸ்தாரமான, விதரணையான, குளிரான, காதடைந்த அமைதியான - முக்காலத்தையும் எட்டித்தொடும் நிர்மல சாயூஜ்யம் இப்படி கிடைத்தால், எவ்வளவு படிக்கலாம், எவ்வளவு எழுதிக் குவிக்கலாம்..

''என்ன சார், இன்னும் பத்திருபது நிமிஷத்திலே வாசல் திறந்திருவா... அதுக்கிடையிலே, அதோ அந்த குடிசை, ஒரு டீ கடையாமே, தோட்டத்திலேயிருந்து அப்பிடியே பறிச்சுக் கொண்டு வந்த தேயிலையிலெ ருசியான டீ கிடைக்குமாம். வாங்க குடிச்சிட்டு வர நேரம் சரியாக இருக்கும்...'' என்றான் நாணுநாயர், என் சுகலயத்தில் கல்லெறிந்தவாறு!
தேநீர் பானத்தின் ருசி, நாக்கில் தோயத் தோய மடத்து வாசலுக்கு வந்தபோது, சாத்தான் சாமியின் முதல் அழைப்பு வெளியூர்க்காரர்களான எங்களுக்கே சித்தமாகியது.

எதிர்பார்த்தது போல் இல்லாமல் சுவாமியடிகள், கிளீன் முகச்சவரம், கிராப்தலை, மெத்த ஆரோக்கியமான ஐம்பது வயது கருகரு கம்பீரம். நெற்றி நிறைய குங்குமத் தீசலிடையே கறுப்பு வட்ட திலகம், வெள்ளி கட்டிய பவழ பாசிமாலை, ஜரிகை வேஷ்டி பூஷணாக பத்மாசன இறுக்கத்தில், உலக்கையை விழுங்கியது போன்ற அட்டென்ஷனில் மூன்றடி உயர அன்ன விளக்கடியில் கண்ணை மூடி அமர்ந்திருக்கிறார்.

''சொல்லட்டும்... வந்த காரியம் சொல் லட்டும்.. சுவாமி திருவடிகளிடம் எல்லா விபரங்களையும் விதமாக, சுருக்கமாக சொல்லணும்...'' என்றார், பரிகாரியான உதவியாள், போற்றி.

''நாணுக்குட்டன் நாயர் என்னுடைய ஒரே சினேகிதன். அவருடைய ஒரே மகன்...'' என்று நான் ஆரம்பிக்கவும் ஸ்வாமி திருவடி சட்டென்று கண் திறந்து - உருட்டி விழித்து, உக்ரமாக கண்களால் கோபம் காட்டினார்...

''அய்யோ, சாரு பேசவேண்டாம், சங்கடக்கார ஆள்தான் காரியம் போதிப்பிக்கணம்.. அது தான் ஸ்வாமி கோபம் காட்டுது...'' உதவியாள் - பரிபாஷை செய்தான்.

நாணுநாயருக்கு சங்கடகாரியம் உரைக்கச் சொல்லியா தர வேண்டும்... கண்ணீர் வராத அழுகையாக 'அடியைப் பிடியடா' என்ற வகையில் மொழியலானான்.

தனக்கு தினசரி பேப்பர்கள் போடும் வேலையென்றும், தனது ஒரே ஒரு வாரிசு - உயிருக்குயிராக நேசித்து, இருபது வயசு வரையில், தூசுபடாத செல்லத்தில் வளர்த்திய கோபாலன் என்ற ஆண் சந்ததி - திடீரென்று காணாமல் போய்விட்டான் எனவும், இனித் தேடுவதற்கு புறாக்கூடு கூட மிச்சமில்லையென்றும் அவன் கதியென்னவென்று சாத்தான் மாகாத்மியம் கொண்டு உணர்த்திட வேண்டுமென்றும், ஆதியோடந்தம் வரை வடித்துக் கொடுத்தான்..

''சொன்னது போதுமானதே...'' என்று ஹஸ்தமுத்திரை போல் வலதுகரம் தூக்கி காட்டிய சுவாமிஜி, நாணுநாயரிடம், எதிரில் தெரியும் குத்துவிளக்கின் சுடரை கண் இமைக்காமல் கூர்ந்து பார்த்திட உறுமலாக உத்தரவிட்டார். "வேறு விசாரம் வேண்டாம். சுடரை நன்றாகத் துறிச்சி பார்க்கட்டும்...'' என்றும் உரைத்தார்.

''என்ன காணுது ஹ¤ம் ..?''

''ஒன்றும் காணலியே சுவாமி தம்புரானே...'' நாணுநாயர் பயந்தே போயிருந்தான்.

''உம்... காணாது... எப்படி காணும்? உண்டென்றால் தானே காட்சி தெரியும்? பாண்டத்தில் இல்லை. அகப்பையால் பிராண்டி என்ன செய்ய? கருவை அறுத்து விற்று விட்டான்கள், ஆளும் சத்துப் போச்சு... சூன்யம்... ஹ¥ம் எழுந்து போகலாம்... பாரியாரீ.. புள்ளியை களத்திற்கு வெளியே கூட்டிப் போய் விஷயம் விளக்கி, தட்சணை அர்ப்பிச்சு போகவிடு...''

வெளி வராந்தாவிற்கு வந்த எங்களுக்கு வெளிச்சப் பிரமையிலிருந்து இருட்டை பூசி வந்தது போலாயிருந்தது. வெளியே அடுத்தாற்போல் காத்திருந்தவர்களிடமிருந்து டோக்கனை வாங்கிக் கொண்டு அவர்களை உள்ளே விட்டு விட்டு, பரிசாரகன் எங்கள் பால் முகமுயர்த்தி பரிபாஷை செய்தான்.

''சாத்தான் சுவாமி திருவசனம், சொன்னதெல்லாம் மனசிலாச்சுதா?''

''இல்லவே இல்லை. ஒரு அட்சரம் மனசிலாகவில்லை...''

''அப்படியென்றால் கேட்டுக் கொள்ளுங் கோ... காணாமல் போய்விட்ட உன் புத்திரனை யாரோ தந்திரமாக கடத்திப் போய் மயக்கி, வசீகரம் செய்து, கருவறுத்து, அதாவது கிட்னியை அபகரித்துக் கொண்டு ஆளை அம்பேல் செய்து விட்டார்கள்.''

''சுவாமீ''

''ஆமாம், பய்யன் இனி இல்லை... தேடவும் கூடவும் வேண்டாம்... இதுதான் சுவாமி சாத்தானின் வசன பாஷ்யம்.. இதோ உண்டியல் சங்கடகரமான பிரச்சனம்தான் என்ன செய்வது? விதி. கூட்டி விட்டு வளர்த்தக் கூடியதல்லவே, மனிதாயிக... இதோ இந்த உண்டியலில் உஜிதம் போல, நூறோ அதற்குக் குறையாமலோ தட்சணை இட்டு விட்டு புறப்படலாம்...''

அந்த கிராமியக் காற்றில், பாதையோடு கொஞ்ச நேரம் மெளனமாக கவிழ்ந்து நடந்து, டாக்ஸி அருகில் வந்தபோது, நாணுநாயர் அர்த்தமாக நிமிர்ந்து பார்த்தான். பத்தையாக மூங்கில் காடு வளர்ந்த ஓரத்தில் போய் உபாதை தீர்த்துவிட்டு எழுந்து வந்தான். ''இனி அவன் இல்லை. அப்படித்தானே சாரே... நான், தீர்மானிச்சது தான்... ஒரு சபலம் இருந்தது.. ரெண்டு வருஷமும் தீயை அள்ளி அள்ளி திண்ணு கடத்தினேன்... இப்போ எல்லாம் சாம்பலாயாச்சுது... கையடிச்சு சத்தியம் செய்து தந்தது போல ஆயாச்சு..''

''நாணுநாயரே மனசெத் தளர விட வேண்டாம்.. என்னதான் சாத்தான் பிரவசனமாக இருந்தாலும், தெய்வ கற்பிதம்னு ஒண்ணு உண்டே...''

''சும்மா விடுங்க சார். தெய்வம் நேரா வரமுடியாததினாலெதானே இந்த மாதிரி தெய்வ தூதர்கள் பூமியில் இருக்கிறார்கள். நான் குளிச்சு கரையேறியாச்சு...''

காரில் ஏறி இருக்கையில் சாயும் போது, நாணுநாயர் அழுத கண்களை தோள்த் துண்டால் அழுத்தித் துடைத்துக் கொண்டிருந்தான். கார் வேகத்தில் மலைகளின் தொடர் மின்னால், போய் மறைந்து கொண்டிருந்தது.

''டிரைவர் தம்பி, வண்டியை எங்கேயாவது நல்ல ஓட்டலா பார்த்து நிறுத்து, வயிறு காந்தல் ஆகுது. சாருக்கும் நல்ல பசி வந்திருக்கும்... செத்தவன் போயாச்சு... இருக்கிற நாம ஏன் அளந்த படியை மிதிச்சு எறியனும்? இல்லியா சாரே?''

நாணுநாயர் சாதாரணமாகி விட்டதாக நடித்துக் காட்டுகிறான் என்பது தெரிந்திருந்தும், அப்போதைக்கு தாம்புக் கயிற்றை விட்டுப் பிடிப்பதே சரியென்று தோன்றியது.

''ஆமாம் எனக்கும் பசியாகத் தான் ஆவுது... இங்கெல்லாம் ஏது நல்ல ஹோட்டல் தேடுறது, சுமாராக இருந்தாலே போதும் பார்த்து நிறுத்தப்பா...'' என்றேன்.

'பாலகோபால விலாஸம் ஹோட்டல் அண்டு டீ ஷாப்' என்று போர்டெல்லாம் தடபுடலாக இருந்தது. படியேறிய போது மேஜை அழிக்கவுண்டர் உள்ளே, கல்லா நாற்காலியில் உட்கார்ந்திருந்தது. அசல் திருவாதிர ஆட்டக்காரியின் நேரியல் முண்டு, இறுக்க ஜாக்கெட் எழிலே போல நடு வயசுக்காரி நாரீசிரோன்மணி ஒருத்தி! ''உள்ளே போய் அமருங்கோ!'' என்று கை ஜாடையோடு வெற்றிலை சிவப்பு உதடுகளால் மொழிகிறாள்...

''டிரைவர் தம்பி இடம் ஒண்ணும் மாறிப் போகலியே. கதைகளிவிதானம் போல இருக்கே வரவேற்பெல்லாம்...'' என்று நான்தான் வியப்பை வெளியிட்டேன்.

''இது நாட்டுப்புறம்... இங்கேயெல்லாம், ஹோட்டல்கள் இப்படித்தான். சார் உக்காருங்கோ...'' என்று நாணுநாயர் தன் வழமையை விளக்குவது போல சொல்லி இடம் பார்த்து அமர்ந்தான். எதிரே சுவரின் பெரிய புகைப்படத்தில், கல்லாவின் அந்த நாரீமணியோடு மணமாலையுடன் நிற்பது யாரைப் போல....
''சாரம்மார் என்ன சாப்பிடுறியோ, சூடு அப்பம், புட்டு, ஆட்டீறச்சியுண்டு...''

புகைப்படத்தை விட்டு எதிரே நின்றவனை பார்த்த போது, அடே! சாத்தான் சாமி வசனத்தையும் மீறிக்கொண்டு, சாட்சாத் - கோ...பா......ல.....ன்!

ஆ. மாதவன்
Share: 




© Copyright 2020 Tamilonline