Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | முன்னோடி | கவிதைப்பந்தல் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
ரயில்வே தண்டவாளங்களும் சில புறாக்களும்
- இரா. நாறும்பூநாதன்|செப்டம்பர் 2016|
Share:
திருச்செந்தூர் பாசஞ்சர் வண்டி வரும் நேரம் நெருங்கிவிட்டது.

செய்துங்கநல்லூர் ஸ்டேசன் மாஸ்டரிடம் எண்ணை வாங்கிக்கொண்டு சிக்னல் போட்டுவிட்டு கேபிள் ரூமைவிட்டு வெளியே வந்து கிழக்கே திரும்பிப் பார்த்தார் சாமிக்கண்ணு. எந்த நேரமும் ரயில்வே கேட் அடைக்கப்படும் என்ற அவசரத்தில் மோட்டார் சைக்கிள்களும் கார்களும் ஒலியெழுப்பியபடி வேகவேகமாய் தண்டவாளத்தைக் கடந்துகொண்டிருந்தன. காலை எட்டு முப்பது மணி ரொம்பவும் பரபரப்பான நேரம். கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களும் மாணவிகளும் குழந்தைகளைச் சுமந்து செல்லும் பெற்றோர்களும் அரைடவுசர் அணிந்த சாமிக்கண்ணுவின் உருவம் கண்ணில் படுமுன் தண்டவாளத்தைக் கடந்து விடவேண்டும் என்ற படபடப்புடன் கரும்புகைகளைக் கக்கியபடி தலைதெறிக்க வாகனங்களை ஓட்டிச்சென்றனர். சாமிக்கண்ணு மனசிற்குள் சிரித்துக்கொண்டார்.

"போங்க... போங்க.. பதட்டப்படாம போங்க..."

யோசித்தபடி மெதுவாக ரயில்வே கேட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அவர் தலையைப் பார்த்ததும் நூறடி தூரத்தில் வந்துகொண்டிருந்த பள்ளி வாகனங்கள் நீண்ட ஹார்ன் ஒலியை எழுப்பியபடி வேகமாக வரத்துவங்கின. தண்டவாளத்தைத் தாண்டிவிட்ட திருப்தியில் மோட்டார் சைக்கிளில் சென்ற சிலர் சாமிக்கண்ணுவைப் பார்த்து "தேங்க்ஸ் அண்ணாச்சி" என்றபடியே கையை உயர்த்திப் புன்னகைத்தவாறு சென்றனர். இது போன்ற சமயங்களில் சாமிக்கண்ணுவிற்கு சிரிப்புத்தான் வரும். தண்டவாளத்தைக் கடந்துவிட்டால் களிப்புடன் செல்வதும் மாட்டிக்கொண்டால் அதுக்குள் இவ்வளவு அவசரமா என்பதுபோல முறைத்துப் பார்ப்பதுமான முகங்களைப் பார்த்துப் பழகிப்போய் விட்டது.

கேட் அருகே நின்றுகொண்டு அடைப்பதற்குத் தயாரான பாவனையில் நின்று கொண்டிருந்தார். வெளிர்ப்பச்சை நிற மாருதி காரை ஓட்டிவரும் டாக்டரம்மா இன்று சீக்கிரமாய் கடந்துசென்றது ஆச்சரியம்தான். பழைய டூவீலர் வண்டியைப் புகை கக்கியபடி ஓட்டிவரும் கொண்டைபோட்ட டீச்சர்கூட இன்றைக்கு நேரத்தில் கடந்துசென்றது அதிசயம்தான். இவர்களெல்லாம் பெரும்பாலும் கேட் அடைப்பில் மாட்டிக்கொண்டு மனசிற்குள் முணுமுணுத்தவாறு காலைத் தரையில் தேய்த்துக்கொண்டு தவியாய்த் தவித்துக் கொண்டிருப்பவர்கள். 'சின்னப்பாப்பாவை இன்னமும் காணவில்லை. ஒருவேளை முன்னதாகப் போயிருக்குமோ? இன்றைக்கு எப்படியும் பார்த்தாகணுமே!' என்ற கவலை சாமிக்கண்ணுவின் முகத்தில் தொற்றிக்கொள்ள, கண்ணுக்கெட்டிய தூரம்வரை சைக்கிளில் வரும் சின்னப்பாப்பாவைத் தேடினார். விஷயத்தை நேற்றே சொல்லியிருக்கலாமோ என்று பட்டது. இன்றைக்குச் சொல்வதுதான் சரி என்று மனசிற்குள் தோன்றியதால் எதுவும் சொல்லாமல் இருந்துவிட்டார் சாமிக்கண்ணு.

கதவருகே நின்றுகொண்டு யோசித்துக் கொண்டிருக்கும் சாமிக்கண்ணுவை வியப்புடன் பார்த்தவாறே கடந்து சென்றனர் பள்ளி மாணவர்கள். 'ஒருவேளை இன்றைக்கு லீவு போட்டுவிட்டதோ?' மனம் சஞ்சலமடைந்தது அவருக்கு.

மூன்று வருடங்களுக்கு முன்பு விருதுநகர் பக்கத்திலிருந்து இங்கே மாற்றலாகி வந்த சாமிக்கண்ணுவிற்கு பாளையங்கோட்டை நகரத்திற்குள் இருக்கும் இந்த ரயில்வே கேட் ரொம்பவும் பிஸியான பகுதி என்பது வந்தபின்தான் தெரிந்தது. அங்கேயெல்லாம் ரயில் வரும்போது கேட் அடைத்தால் ஒரு சில மாட்டுவண்டிகள் நிற்கும். சமயங்களில் மணல் அடிக்கும் லாரிகள் டிராக்டர்கள் நிற்பதுண்டு. வெயில் சுட்டெரிக்கும் அந்த கந்தக பூமியில் நிழலுக்கு ஒதுங்கக்கூட இடமின்றி கருவேலமரச் செடியின் கீழே உட்கார்ந்து வெள்ளரிப் பிஞ்சுகளை தட்டில் வைத்து விற்றுக் கொண்டிருப்பார்கள் சிறுவர்களும் சிறுமிகளும். ரயில்வே கேட்டை சாமிக்கண்ணு மூட வரும்போது அவர்கள் மனசுக்குள் குதூகலம் பொங்க வெள்ளரிப்பிஞ்சு தட்டுக்களை கையில் எடுத்துக்கொண்டு தயாராக இருப்பார்கள். செம்மண் புழுதியைக் கிளப்பியபடி வந்து நிற்கும் லாரிக்காரர்களிடம் ஓடோடிச் செல்வார்கள்.

"அண்ணே! வெள்ளரிப் பிஞ்சுண்ணே! தட்டு மூணு ரூவான்னேன்... ஒரு தட்டு வாங்கிக்கங்கண்ணே!"

காலையில் பதினோரு மணிக்கும் மதியம் இரண்டு மணிக்கும் வேப்பிலைப்பட்டிக்குச் செல்லும் ஜெயவிலாஸ் பஸ்ஸில்தான் சிறுவர்களுக்கு வியாபாரம் நன்றாக இருக்கும். பயணிகளை புளிமூட்டையாய் அடைத்துவரும் ஜெயவிலாஸ் வண்டி மூடிய ரயில்வே கேட் அருகே நின்றவுடன் வண்டியில் உள்ள பெரும்பாலோர் புழுக்கம் தாளாமல் கீழே இறங்கிவிடுவதுண்டு. அந்த பத்து நிமிடங்கள்தான் சிறுவர்களின் இயங்கும் நேரம்.

"அண்ணே! ஒரு தட்டு மூணு ரூபா! பிஞ்சுக்காயிண்ணே!"

"எக்கா! ஒரு தட்டு வாங்கிக்குங்கக்கா! மூணு ரூவாதாங்க்கா"

பஸ்ஸின் பக்கவாட்டில் சிறுமிகள் விற்றுக்கொண்டிருக்கும்போது பஸ்ஸிற்குள் லாவகமாய் ஏறும் சிறுவர்கள் தட்டுடன் கூட்டத்தில் முண்டியடித்துச் சென்று சில நிமிடங்களில் விற்றுவிடுவார்கள். இடையன்குளம் மாரிச்சாமியின் மகன் தவசி வெள்ளரிப் பிஞ்சுகளை விற்பதில்லை. பெரிய பெரிய வெள்ளரிக்காய்களின் தோலைப் பக்குவமாகச் சீவி கத்தியால் நான்காய் பிளந்து அதில் மிளகாய்ப்பொடி, உப்புப்பொடி தூவி, ஒரு காய் இரண்டு ரூபாய் என்று விற்றுவிடுவான்.

மாரிச்சாமி சாத்தூர் பஸ்-ஸ்டாண்டில் வியாபாரம் பார்ப்பதால் அந்த தொழில்நுட்பத்தை தவசி அங்கிருந்து இறக்குமதி செய்துவிட்டான். மற்ற சிறுவர்கள் நான்கு தட்டுகள் விற்கும் நேரத்தில் தவசி பத்துப் பதினைந்து ரூபாய்க்கு வியாபாரம் பார்த்துவிடுவான்.

"ஏலேய் தவசி! நீ பொழைச்சுக்குவேலே..." சாமிக்கண்ணு சிரித்துக்கொண்டே கூறுவார். மற்றவர்களுக்கும் தவசியைப்போல விற்க முடியலையேங்கற ஆதங்கம் மனசிற்குள் இருக்கும். அவர்கள் தோட்டத்தில் விளைகிற பிஞ்சுகளை அன்றைக்கே விற்றால்தான் நாலுகாசு தேறும். காயாக வரும்வரை காத்திருக்க விடாது வயிறு. கோணிப்பையில் அள்ளிப் போட்டுக்கொண்டு வந்துவிடுவார்கள்.

கேட் மூடித் திறந்து ஜெயவிலாஸ் வண்டி சென்றபின் மயான அமைதிதான் நிலவும். அதன்பிறகு மாட்டுவண்டிக்காரர்கள், லாரி டிரைவர்கள், வழிப்போக்கர்கள் யாரேனும் வாங்கினால்தான் உண்டு. மற்ற நேரங்களில் சாமிக்கண்ணுதான் அவர்களுக்கு பொழுதுபோக்கு நண்பன்.

"ஏட்டி மாரிக்கனி! நீ போன வருஷம் வரைக்கும் பள்ளிக்கூடம் போனீல்ல... இப்ப ஏன் போகலை..."

"ம் ... போகலை அவ்வளதான்..." மாரிக்கனி இழுத்தாள்..

"அதாண்டீ கேக்கேன்... ஏன் போகலை... நல்லா படிப்பீல்லா... இதுகளோட சேர்ந்தா நீ உருப்பட்டாலதான்."

பீடியை இழுத்துக்கொண்டே சாமிக்கண்ணு மாரிக்கனியின் தட்டில் இருந்து ஒரு பிஞ்சை எடுத்து டவுசரில் துடைத்துக்கொண்டார்.

"எங்கம்மாதான் படிச்சது போதும்னுட்டா!" மாரிக்கனி சலிப்புடன் கூறினாள்.

"ஆமா..படிச்சு பெரிய்ய டீச்சர் வேலைக்குப் போகப் போறாளாக்கும்." பேச்சியும் காளியும் கிண்டல் செய்தார்கள்.

"அடச்சீ மூதிகளா படிக்காட்டியும் வாய்க்கு ஒண்ணும் கொறைச்சலில்லை. போன வருஷம் பரீச்சையிலே அறுபது எழுபதுன்னு மார்க்கெல்லாம் வாங்கிருந்தீல்ல... இங்கிலீஸ்லகூட பாஸாயிட்டயே. இதுகள மாதிரி படிப்பு மண்டையிலே ஏறலைன்னா எக்கேடும் கெட்டுத் தொலைன்றலாம்" வெள்ளரிப் பிஞ்சைக் கடித்துக்கொண்டே சொன்னார் சாமிக்கண்ணு.
"தாத்தா! ரயில்வருது! ரயில்வருது! ரயில்வருது! ஓடு! ஓடு!" இசக்கியம்மாள் பயங்காட்டினாள்.

"அட எடுபட்ட சிறுக்கி! வந்தேன்னா கைய முறிச்சுப்புடுவேன்... ஆமா" சாமிக்கண்ணு போலியாய் விரட்டுவார்.

அவரது திருநெல்வேலிப் பேச்சு பிள்ளைகளுக்கு ரொம்பப்பிடிக்கும். ஊருக்குப் போகும்போது மொத்தமாய் வெள்ளரிப் பிஞ்சுகள் வாங்கிக்கொண்டு போவார். பிள்ளைகள் ஆசையாய்க் கேட்டதால் ஒருமுறை திருநெல்வேலி அல்வா வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார். "இருட்டுக்கடை அல்வாடா" என்று பாடியவாறே தவசி அல்வாவை ஒருகை பார்த்தபடி ஆடிக்கொண்டிருந்தான்.

"ஏலே டவுசர் அவுந்துராம பாத்து ஆடுல்லே! அல்வா எப்டியிருக்கு?"

விரலை நக்கியபடி "நல்லாத்தேன் இருக்கு... எங்க ஊரு கருப்பட்டி மிட்டாய் மாதிரியில்லே..." என்றான்.

சாமிக்கண்ணு எழுந்தவுடன் ஓட்டம் பிடிப்பான் தவசி.

சொந்த ஊருக்கு மாற்றலாகி வரும்போது பிள்ளைகளைப் பிரிய மனசில்லாமல்தான் வந்தார் சாமிக்கண்ணு. கிழிந்த பாவாடையை இழுத்துக்கட்டிக்கொண்டு வெள்ளரிப்பிஞ்சுத் தட்டுகளோடு அலையும் மாரிக்கனியின் நினைவு அவ்வப்போது அவருக்கு வருவதுண்டு.

கேட்டை மூடும்போது இருபுறமும் பத்துப் பதினைந்து பேருக்கு மேலிருக்காது. "சின்னப்பாப்பாவிற்கு உடம்புக்கு ஏதும் முடியலையோ என்னவோ" மனம் வெறுமையாய்த் தவிக்க கேபிள் ரூமை நோக்கி நடந்தார் சாமிக்கண்ணு. தினமும் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் பள்ளி மாணவர்களும் இந்தப்பகுதியைக் கடந்து சென்றாலும் சின்னப்பாப்பா அறிமுகமானது சுவாரசியமான சம்பவத்தில்தான்.

மாற்றலாகி வந்த புதிதில் ஒவ்வொரு முறை கேட்டை மூடித் திறக்கும்போதும் பெரும் பிரச்னையாகத்தான் இருந்தது அவருக்கு. ஒரு கேட்டை மூடிவிட்டு அடுத்த கேட்டை மூடும்போது உள்ளே வந்தவர்கள் தங்களை மட்டும் போகவிடுமாறு கெஞ்சினார்கள். சிலர் கோபப்பட்டார்கள். ரயில் சென்றவுடன் கேட்டைத் திறப்பதற்குள் தங்களது வாகனங்களைக் கிளப்பி ஒருவரையொருவர் முந்திக் கொண்டும் உரசிக்கொண்டும் செல்வோர், எதிர்த்திசையில் வரும் வாகனங்களுக்கு வழிவிடும் வகையில் செல்லாமல் எதிரெதிரே முட்டிக்கொண்டு ஹார்ன் ஒலிச்சத்தத்தை எழுப்பிக் கொண்டு போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்வார்கள். சாமிக்கண்ணுவிற்கு பழியாய்க் கோபம் வரும்.

"இவங்கெல்லாம் படிச்ச மனுசங்கதானா?” எத்தனை முறை கூறினாலும் யார் காதிலும் எதுவும் ஏறவில்லை. போக்குவரத்து போலீஸ்காரரிடம் ஒருமுறை முறையிட்டு இரண்டு வாரம் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார். பின் அவரும் வருவதில்லை. போன வருடத்தின் கோடைகாலத்தில் என்று ஞாபகம். இப்படித்தான் கேட்டை மூடிவிட்டு கேபிள் ரூம் பக்கம் பச்சைக் கொடியுடன் நின்று கொண்டிருந்தபோது பொறுக்கமாட்டாத அவசரக்குடுக்கைகள் சிலர் சைக்கிளைத் தூக்கிக்கொண்டு தண்டவாளத்தைக் கடந்து கொண்டிருந்தனர். அவசரம், அவசரம். எல்லோருக்குமே அவசரம்தான்! அஞ்சு நிமிஷம் முன்னாடி கிளம்ப வேண்டியதுதானே! நூறடி தூரத்தில் தண்டவாள வளைவில் ரயில் வந்து கொண்டிருக்கும்போதுதான் வெள்ளைச் சீரூடை அணிந்த அந்தச் சிறுமி தனது சைக்கிளை சிரமமப்பட்டுத் தூக்கிக்கொண்டு தண்டவாளத்தைக் கடந்து கொண்டிருப்பதை சாமிக்கண்ணு கவனித்தார். ஒரு நொடியில் வெலவெலத்துப் போனவர் விறுவிறுவென்று ஓடிவந்து "ஏ பாப்பா! நில்லு.. நில்லுங்கறேன்ல. என்ன அவசரம்? வீட்லே சொல்லிட்டு வந்திட்டியா?" கேட்டுக்கொண்டிருக்கும்போதே ரயில் மிகுந்த இரைச்சலுடன் இருவரையும் கடந்து சென்றது.

படபடத்துப்போன சிறுமிக்குப் பேச வாய்வரவில்லை. நடுங்கியபடியே சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினாள். கேட்டின் இருபுறமும் வாகனங்களில் நின்றவர்கள் எதுபற்றியும் கவலையின்றி முதல் கியரில் "டுர்....டுர்" என்று வாகனங்களைக் கிளப்பிக்கொண்டு சாமிக்கண்ணுவிற்காகப் பொறுமையிழந்து காத்துக் கொண்டிருந்தார்கள்.

கதவைத் திறந்துவிட்டுப் பார்க்கும் முன்பே சிறுமி சைக்கிளில் சிட்டாய்ப் பறந்துவிட்டாள். அன்று மாலை வெயில் சாயும் நேரத்தில் நுங்கு விற்றுக்கொண்டிருந்த பழனியுடன் சாமிக்கண்ணு பேசிக்கொண்டிருந்த போது காலையில் பார்த்த சிறுமி சைக்கிளை உருட்டியபடி தன்னைப் பார்த்து வருவதை உணர்ந்தார். பத்து பதினோரு வயதிருக்கும். செழிப்பான வீட்டுப் பிள்ளை என்பது முகத் தோற்றத்திலேயே தெரிந்தது.

"தாத்தா! ரொம்ப ஸாரி! காலைல ஸ்கூலுக்கு நேரமாச்சுங்கற அவசரத்தில வேகமா க்ராஸ் பண்ணினேன்! ட்ரெயின் வர்றதக் கவனிக்கல. உங்ககிட்டே சொல்லாம போயிட்டேன்." படபடவென்று பேசினாள் அவள்.

"பாப்பா! கேட் அடைச்சுட்டானா க்ராஸ் பண்ணவே கூடாது... அஞ்சு நிமிஷம் முன்னால கௌம்ப வேண்டியதானே?"

"காலைல வீட்டிலே சொல்லிட்டுதான் வந்தேன். நீங்க எதுக்குக் கேட்டீங்க?"

சிறுமி கேட்டபோது சாமிக்கண்ணுவிற்கு ஏன் அப்படிச் சொன்னோம்னு ஆயிட்டுது. 'ஆத்திரத்தில் குழந்தைகள்கிட்டேகூட புத்தி கெட்டுதான் பேசித் தொலைச்சிருதோம்னு பட்டது அவருக்கு.

"உம் பேரு என்னம்மா?" சைக்கிள் ஹேன்ட்பாரைப் பிடித்தபடி சாமிக்கண்ணு கேட்டார்.

"சௌம்யா சிக்ஸ்த் படிக்கேன். செயின்ட் மேரீஸ் ஸ்கூல்ல."

சௌம்யா வாய்க்குள் நுழைய மறுத்தது.

"இருக்கட்டும் நல்ல பேருதான். வீடு எங்கன இருக்கு?"

தியாகராசநகர்த் தெருவைச் சொன்னாள்.

இப்படி அறிமுகமான சின்னபாப்பா (பெயர் வாய்க்குள் நுழையாததால் சாமிக்கண்ணு சூட்டிய பெயர்) இடையிடையே சாமிக்கண்ணுவைப் பார்த்துப் பேசிவிட்டுச் செல்லும் அளவிற்குக் கலகலப்பாய்ப் பழகியிருந்தாள்.

பெண்குழந்தைகளின் மீது சாமிக்கண்ணுவிற்கு தனிப்பிரியம் உண்டு. அவருக்கு இருப்பது மூன்றும் ஆம்பிளைப் பிள்ளைங்கதான். நாலாவதாய்ப் பிறந்த பார்வதிமீது பாசம் அதிகம் அவருக்கு. பத்தாம் வகுப்பிலே பெயிலாகிப் போனதால் அரளி விதையை அரைத்துக் குடித்து அந்த இளம்பிஞ்சு இறந்து போனபோது நொறுங்கிப் போனார் சாமிக்கண்ணு. யாரைக் குற்றம் சொல்ல என்று தெரியாமல் மனசுக்குள்ளேயே புழுங்கிக் கரைந்து போனார். வெறித்து நோக்கிய கண்களுடன் உடல் விரைத்துக் கிடந்த அந்த இளந்தளிரின் உருவம் திடீரென்று கனவில் தோன்றும்போது தூக்கம் கலைந்து எழுந்து உட்காருவார். தூக்கமின்றிப் பல இரவுகள் இடைவிடாத இருமலையும் மீறி பீடிகளைப் புகைத்தவாறு நட்சத்திரங்கள் இல்லாத இருள்வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பார்.

வேப்பிலைப்பட்டியில் வெள்ளரிக்காய் விற்கும் மாரிக்கனியைப் பார்க்கும்போது பார்வதி ஞாபகம் வரும். இவளை மாதிரித்தான் நல்ல கறுப்பு. பளபளவென்று மின்னும் கண்கள்கூட அவ ஜாடைதான். பெருமூச்செறிவார் சாமிக்கண்ணு. காலம்தான் எல்லாவற்றிற்கும் மருந்து. இந்தப் பத்து வருஷங்களில் அவரை ஒரு மாதிரித் தேற்றியிருந்தது.

"என்ன வேய்! ஒரு மாதிரி நெல கொள்ளாம இருக்கீரு? கடைசி நாளுங்கற டென்சன்ல இருக்கீரா?" நுங்கு சீவிக் கொண்டிருந்த பழனி தலைப்பாகையை அவிழ்த்து மேல், கை, காலெல்லாம் துடைத்துக்கொண்டே கேட்டார்.

"ஆமா இன்னியோட கடைசீதான்! நாளைலயிருந்து குப்புறப்படுத்து தூங்கவேண்டியதுதான்! அதுவுந்தான் என்ன பொழப்பு..." பீடியைப் பற்றவைத்துக்கொண்டார் சாமிக்கண்ணு.

"காலைல ரொம்ப அவசரப்படுத்தினீரு... இள நொங்கா பத்தை எடுத்துப் பார்சல் பண்ணுன்னு... ஓலைல சுத்தி வச்சிருக்கேன்... யாருக்கு பிள்ளைகளுக்கா...?" பழனிதான் கேட்டார்.

"நம்ம பிள்ளைக என்னைக்குச் சாப்பிட்டதுக... நம்மள எதிர்பார்த்து நிக்கற காலமெல்லாம் போயாச்சு..." பெருமூச்சுடன் புகையை விட்டார் சாமிக்கண்ணு.

பார்வதிக்கு நுங்கு பிடிக்கும். வெறும் நுங்கைச் சாப்பிடுவதைவிட மடித்துக் கொடுத்த பனை ஓலையில் ஆழாக்கு பதநீரை ஊற்றி அதிலே நுங்கைப் பிய்த்துப் போட்டால் ஒரு சொட்டுக் கீழே விழாமல் உறிஞ்சிக் குடிப்பாள் பார்வதி. அவளுக்குப் பிடித்தமானதையெல்லாம் ஞாபகமாய் வாங்கித் தருவார்.

"எனக்கு இங்கிலீசு வரமாட்டேங்குப்பா..." ஒருமுறை பார்வதி அழுதுகொண்டே கூறினாள்.

"படிச்சது போதும்டா... முடிஞ்சத எழுது. மண்டைல ஏறலன்னா வுடு கழுதய.. பொட்டப்புள்ளதான... படிச்சு என்ன செய்யப்போற... வெள்ளக்காரன் போனாலும் தரித்திரம் பிடிச்ச பயலோட இங்கிலீசு இருக்கறவன் உசிற வாங்குது..." சாமிக்கண்ணு மகளைத் தேற்றினார். கடைசியில் இங்கிலீசே அவளுக்கு எமனாகி விட்டது. இங்கிலீசு பாடத்தில் பெயிலாகி தோல்வியைத் தாங்கிக்கமுடியாமல் இப்படிப் பண்ணிட்டுப் போனாளே...!.

மாலை வெயிலின் வெக்கை குறைந்து லேசான காற்று வீசிக்கொண்டிருக்கும் போது அந்தப் பச்சை மாருதி கார் தண்டவாளம் அருகே பாதையை விட்டுக் கீழிறங்கி ஒதுக்குப்புறமாய் நின்றது.

காரிலிருந்து இறங்கிய சின்னப்பாப்பா "தாத்தா! நாங்க புதுசா கார் வாங்கியிருக்கோம்! வந்து பாருங்க!. காலைலே இந்த வழியாத்தான் போனோம். நேரமாச்சுன்னு பேசமுடியல...." மூச்சுவிடாமல் சாமிக்கண்ணுவைப் பார்த்துப் பேசினாள்.

எதிர்பாராமல் சின்னப்பாப்பாவைப் பார்த்த வியப்பில் சாமிக்கண்ணு விரைவாக வந்து சேர்ந்தார்.

"கார் ரொம்ப ஜோரா இருக்கே! புதுசா?" காரைச் சுற்றி வந்தார். டிரைவர் சீட்டில் கண்ணாடி அணிந்த நடுத்தர வயது இளைஞர் அமர்ந்திருந்தார். சாமிக்கண்ணுவைப் பார்த்துச் சிரிக்க முயன்றார்.

"ஆமா! புதுசு... நேத்துதான் வாங்கினோம்" என்றவள் முன்பக்கம் வந்து "அப்பா! நான் சொன்ன தாத்தா இவங்கதான்! ரொம்ப நல்லவரு. இனிமே உங்க காரைப் பார்த்தவுடனே கேட்டை மூடாம போகவிட்டுத்தான் அடைப்பாரு... என்ன தாத்தா?" என்றாள்.

"ஆமா! ஆமா!..." என்று சாமிக்கண்ணு பதில் கூறினாலும் துணிப்பையில் உள்ள நுங்குப் பார்சலை சின்னப்பாப்பாவிடம் தரவா வேண்டாமா என்ற சஞ்சலத்தில் இருந்தார்.

"தாத்தா இந்தாங்க கேக்!" சின்னப்பாப்பா நீட்டிய கேக்கை பவ்யமாய் வாங்கிக் கொண்டார் சாமிக்கண்ணு குழந்தையின் சந்தோஷ மனநிலையைக் குலைக்கும் வகையில் எதையும் சொல்லிவிட வேண்டாம் என்று தோணியது.

"நாளைக்குப் பார்ப்போம் தாத்தா!" வேகமாகக் காருக்குப் பின்புறம் வந்து கதவைத் திறந்து ஏறப்போன சின்னப் பாப்பாவின் மென்மையான கரங்களை தனது தடிப்பேறிப்போன கைகளில் பிடித்து அன்பாய் ஒரு முத்தம் கொடுத்து "போய்ட்டு வாடா" என்று வழியனுப்பினார். கண்கள் கலங்கியபடி மாருதி கார் புள்ளியாய் மறையும்வரை பார்த்துக் கொண்டிருந்தார்.

கேபிள் அறைக்குப் போகும்போது "என்ன நுங்குப் பார்சலை பாப்பாட்ட கொடுக்கலையா?" என்றார், பழனி.

"பார்சல் பாப்பாக்கு இல்லப்பா! மாரிக்கனிக்கு..." என்றவர், "இந்தா! இந்த கேக்கிலே கொஞ்சம் எடுத்துக்க.." என்று கேக்கில் பாதியை எடுத்துக் கொடுத்தார்.

"எந்த மாரிக்கனி?" கேக்கை வாயில் போட்டவாறே பழனி சாமிக்கண்ணுவிடம் கேட்டார்.

"இதுவா? வீட்டுக்குப் பக்கத்தில மாரிக்கனின்னு ஒரு பொட்டப்புள்ள சொல்லலையோ..."

செய்துங்கநல்லூர் ஸ்டேஷன் மாஸ்டர் அனுப்பிய நம்பரைப் பெற்றுக்கொண்டு வரவிருக்கும் ரயிலுக்கான சிக்னலைப் போட ஆரம்பித்தார். கடைசி முறையாய் சாமிக்கண்ணு.

இரா. நாறும்பூநாதன்
Share: 




© Copyright 2020 Tamilonline