விஜயகாந்த் வரவு!
நடைபெற்ற மதுரை மத்திய சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெறும் 19 ஆயிரம் ஓட்டுக்களே பெற்று அ.தி.மு.க இரண்டாம் இடத்தில் வந்துள்ளது. ஆளும் தி.மு.க பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதலிடத்தை பெற்றிருப்பது மட்டுமல்லாமல், சட்டப்பேரவை தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட சுமார் 7.809 வாக்குகள் அதிகம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை தமிழகத்தில் அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரண்டு திராவிட கட்சிகளும் பிரதான கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கையில், நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம் மதுரை இடைத்தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக விஸ்வரூபம் எடுத்திருப்பது முக்கியமானதாகும்.

2515 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.கவைவிட தேசிய முற்போக்கு திராவிட கழகம் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க பெற்ற ஓட்டுகளில் சுமார் 16,083 வாக்குகள் குறைவாக இம்முறை அ.தி.மு.க பெற்று, அக்கட்சி மிகப் பெரிய சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் 5,335 வாக்குகள் கூடுதலாக பெற்று தேசிய முற்போக்கு திராவிட கழகம் மூன்றாவது இடத்தைப் பிடித்து வளர்ச்சி பெற்றிருக்கிறது.

இம்முறை தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. கணிசமான வெறியை உள்ளாட்சி தேர்தலில் பறித்திருப்பதும் முக்கியமானதாகும். கிராமப்புறங்களிலும், இளைஞர்கள் மத்தியிலும் விஜயகாந்தின் தே.மு.தி.க.விற்கு ஆதரவு பெருகி இருப்பதும், இரு கழகங்களின் மேல் அதிருப்தியில் இருக்கும் கட்சி சார்பற்றவர்களின் ஆதரவு இம்முறை விஜயகாந்திற்கு சென்றதும் முக்கியமானது.

தேர்தலில் கூட்டணி பலமும், ஆட்சிக்கு வந்த இந்த மூன்று மாதங்களில் பல்வேறு விஷயங்களை - வாக்குறுதிகளை நிறை வேற்றுவதில் தி.மு.க அரசு கவனம் செலுத்தியதுமே நடைப்பெற்ற இடைத் தேர்தலில் தி.மு.கவின் வாக்கு வங்கியில் பெரும் மாறுதல் ஏற்பட்டதற்கு காரணம் என்று சொல்லலாம்.

அதுபோல் விஜயகாந்தின் பிரச்சாரமும், மக்களின் அன்றாட பிரச்சனைகளை மேடைதோறும் அவர் எடுத்துவைத்த விதமும் அக்கட்சியின் வெற்றிக்கு காரணம் என்று சொல்லலாம். அதே போல் தி.மு.க - அ.தி.மு.க எதிர்ப்பு ஓட்டுகள் தே.மு.தி.கவின் வெற்றிக்கு காரணம். அ.தி.மு.கவின் பெருவாரியான வாக்குகளை தே.மு.தி.க பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

நடைப்பெற்ற உள்ளாட்சி தேர்தல் அ.தி.மு.கவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. பல இடங்களில் அ.தி.மு.கவை பின் தள்ளிவிட்டு தே.மு.தி.க இரண்டாவது இடத்தை பிடித்திருப்பது முக்கியமானதாகும். தே.மு.தி.க வளர்ச்சி அ.தி.மு.கவிற்கு பெரிய சரிவை இம்முறை ஏற்படுத்தியிருக்கிறது.

உள்ளாட்சி தேர்தலின் மூலம் தமிழக அரசியலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுப்பதிருப்பது முக்கியமானதாகும்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com