நாளைய உலகம்
பள்ளிகளுக்கிடையேக் காற்பந்தாட்டப் போட்டி
இடைவிடாத பயிற்சி இரண்டு வாரங்களாக.
'ஒன்றாம் வகுப்புக் குழந்தைகளுக்கா'
ஆச்சரியத்துடன் அளவெடுத்தார் தையற்காரர்.
முழங்கால்வரை காலுறைகளும்
முட்களில் நிற்கும் காலணிகளும்
தேடிப்பிடித்து வாங்கப்பட்டன.
குழுவின் நம்பிக்கை நட்சத்திரமாக
பந்தைத் தடுக்கும் பணியில் அஷ்வத்.

போட்டி நாளில் பெருங்கூட்டம்
கைதட்டி உற்சாகம் தர.
எதிரணியோடு பந்தும் திணறியது
அஷ்வத்தின் திறன்முன்.

திடுமென மைதானத்தைக் கடந்த கொக்குக் கூட்டத்தை
நண்பனுக்குக் காட்டி மகிழ்ந்த ஒரு கணப்பொழுதில்
தலையை தாண்டிச்சென்றது பந்து
நழுவியது வெற்றிக்கனி.

வெளிறிய முகத்தோடு வெளியே வந்தவனை
தட்டிக்கொடுத்து வரவேற்ற ஆசிரியர்களுக்கும்
கட்டியணைத்து முத்தமிட்ட பெற்றோருக்கும்
மத்தியில்
நம்பிக்கையுடன் சிறகு விரிக்கிறது
நாளைய உலகம்.

*****


படம், கவிதை: ராமலக்ஷ்மி

© TamilOnline.com