BATS: பட்டிமன்றம்
அக்டோபர் 26, 2014 அன்று, பாரதி தமிழ்ச் சங்கம் தீபாவளி நிகழ்ச்சிகளின் ஒருபகுதியாக சான் ஹொசேயில் உள்ள ராஜராஜேஸ்வரி கோவில் அரங்கில் பேச்சாளர் டாக்டர். கு. ஞானசம்பந்தம் தலைமையில் ஒரு பட்டிமன்றத்தை ஏற்பாடு செய்திருந்தது. 'தாய்நாடு திரும்புவதால் பெறுவது அதிகமா? இழப்பது அதிகமா?' என்ற தலைப்பில் வழக்காடினார்கள்.

தாய்நாடு திரும்புவதால் பெறுவதே அதிகம் என்ற தலைப்பில் நித்யவதி சுந்தரேஷ், வெங்கடேஷ் பாபு, டி.எஸ்.ராம் ஆகியோர் பேசினார்கள். இழப்பே அதிகம் என்ற தலைப்பில் திருமுடி துளசிராம், கெளரி சேஷாத்ரி, சாந்தி புகழ் ஆகியோர் பேசினார்கள்.

கு. ஞானசம்பந்தம் அவர்கள் தனக்கேயுரிய அபாரமான நகைச்சுவை உணர்வுடன் இருதரப்பு நியாயங்களையும் அலசியபின், என்னதான் அமெரிக்காவில் வசதிகள் வளங்கள் நன்மைகள் ஆயிரம் இருந்தாலும் எதிர்காலத்தில் இந்தியாவுக்குத் திரும்புதலே நலம் பயக்கும் என்று தீர்ப்பு வழங்கினார்.

சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான சுந்தரேஷ் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார். விழாவுக்கு வந்திருந்த பிரபல நடிகரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. எஸ்.வி. சேகர் ஓர் அருமையான நகைச்சுவைச் சொற்பொழிவை ஆற்றினார். வாசுதேவன் நஞ்சன்கூடு நன்றியுரை வழங்கினார்.

அனைத்து இந்திய மாநிலக் கலைகளும் இடம்பெறும் ஒரு நிகழ்ச்சி வரவிருக்கும் நவம்பர் 1, 2014 அன்று ஃப்ரீமான்ட் ஓலோனி கல்லூரி அரங்கத்தில் மதியம் 2 மணி முதல் நடக்கவிருக்கிறது. பரதம், குச்சுப்புடி, மோகினி ஆட்டம், பாங்க்ரா, டாண்டியா, கதக்களி ஆகிய நடனங்களும் கர்நாடக சங்கீதம், வாத்திய இசை, ஹிந்துஸ்தானி, ஹிந்தி, மலையாளம்,கன்னடம், தெலுங்கு, பஞ்சாபி மொழிப் பாடல்களும் இதில் இடம்பெறும்.

திருமலை ராஜன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com