சிகாகோ: தங்க முருகன் விழா
டிசம்பர் 13, 2014 அன்று லெமான்ட் (இல்லினாய்) பகுதியில் இருக்கும் சிகாகோ மாநகர இந்துக் கோவிலில் முழுநாள் 'தங்க முருகன் விழா' கொண்டாடப்பட உள்ளது. சிறுவர் முதல் முதியோர்வரை கலந்துகொள்ளும் உற்சாகத் திருவிழாவாக இது அமையும்.

காலை ஏழு மணிக்குத் திருப்புகழ் அன்பர்கள் பாடும் திருப்புகழுடன் விழா தொடங்கும். அபிஷேகம் அலங்காரத்துக்குப் பின் கந்தசஷ்டி கவசம் ஓதுதலும், அர்ச்சனையும் நடைபெறும். ஒன்பது மணிக்கு முருகனைத் தங்கநிறப் பல்லக்கில் தாள வாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்து வருவர். குழந்தைகள் பூத்தூவி வரவேற்று, அரங்கத்தில் இருத்தி, முக்கிய விருந்தினர் குத்துவிளக்கேற்ற நிகழ்ச்சிகள் தொடரும். சிறப்புரை, முருகன் வேடம் தரித்த குழந்தைகளின் காட்சி, பஜனை, பாடல்கள், காவடி என நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த ஆண்டின் நிகழ்வுகள் 'ஸ்ரீ பாம்பன் சுவாமிகள்' என்ற கருத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.

300க்கும் மேற்பட்ட குழந்தைகளின் பங்கேற்பை ஊக்குவிக்கும் விதத்தில் இந்துக்கோவில் சார்பில் சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருள் தந்து கௌரவிக்கும். இந்த நிகழ்ச்சியைப் பல ஆண்டுகளாக நடத்திவருபவர் விழாக்குழுத் தலைவர் திரு கோபாலகிருஷ்ணன் ராமசாமி அவர்கள்.

உமாபதி பட்டர்

© TamilOnline.com