நவம்பர் 2014: வாசகர் கடிதம்
'மோடி' வைத்தல் என்றால் மாயாஜாலச் செயல். பாரதப் பிரதம நரேந்திர மோதியும் அரசியலில் 'மோடி வைத்து' காய் நகர்த்துபவர். அதற்குச் சமீபத்திய தேர்தல் வெற்றிகளே சாட்சி. விசா மறுத்துவந்த அமெரிக்கா இதுவரை எந்த நாட்டுப் பிரதமருக்கும் தராத வகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு தந்திருக்கிறது. ஐ.நா. சபையில் G-1, G-7 என்றெல்லாம் சிறு சிறு குழுக்களாகக் கூடுவது மாறி G-All என இருக்க வேண்டும் என்று அவர் கூறியிருப்பதை தென்றல் தெளிவுபடுத்தி இருக்கிறது. மோதி 'வசுதைவ குடும்பம்' (பூவுலகம் முழுதுமே எங்கள் குடும்பம்) என்று தொடக்கத்திலேயே பாரதப் பாரம்பரியத்தைச் சுட்டி உரை நிகழ்த்தியுள்ளார். சிகாகோவில் நரேந்திரர் (சுவாமி விவேகானந்தர்) ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அதுபோன்று அமெரிக்காவில் நரேந்திர மோதி பேசிய உரையும் வரலாறு படைத்தது. தென்றல் தலையங்கத்தில் சுட்டிக் காட்டியுள்ளபடி அமெரிக்காவும், இந்தியாவும் மக்களாட்சியின் மாண்பை உணர்ந்த நாடுகள். Made in India என்பதிலிருந்து Make in India என்ற அறைகூவலையும் அமெரிக்கத் தொழிலதிபர்கள் முன் வைத்துள்ளார் பிரதமர். தக்க சமயத்தில் உலகத்தவரின் கண்களுக்கு இவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டிய தென்றலுக்குப் பாராட்டுக்கள்.

அரிமளம் தளவாய் நாராயணசாமி,
ஹூஸ்டன், டெக்சஸ்

*****


அக்டோபர் மாதத் தென்றலில் எஸ்.வி.வி. எழுதிய சிறுகதை 'புளுகு' படித்து மகிழ்ந்தேன். அதிபர் ஒபாமா National Science Board அமைப்புக்கு நியமித்த பேரா. சேதுராமன் பஞ்சநதன் அவர்களைப் பற்றிய தகவல்கள் தமிழர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விஷயம். "நான் வெறும் கருவிதான். கடவுள், தான் செய்ய விரும்புவதை என்னை ஒரு கருவியாக உபயோகித்துச் செய்து முடிக்கிறார்" என்று கூறியுள்ளது அவர்மீது பெருமதிப்பை ஏற்படுத்துகிறது. பலர் அமெரிக்காவை நோக்கி வரும்போது, மிக வித்தியாசமாக இந்தியாவை நோக்கிச் சென்று தன் புது வாழ்க்கையை ஆரம்பித்துள்ள பிரியங்கா ஆச்சார்யாவின் வார்த்தைகள் மகிழ்ச்சியைத் தருகின்றது.

ஆமையின் வழித்தத்தைப் பின்பற்றி ஆராய்ந்து உலகெங்கிலும் வாழ்ந்த பழந்தமிழர் அடையாளங்களைக் கண்டுபிடித்தும், தமிழனின் தொல்வரலாறு குறித்து ஆய்வு மேற்கொண்டும் உலகிற்கு நிரூபித்து வரும் தனிமனிதர் ஒரிசா பாலு அவர்களின் நேர்காணல் மிக ஆச்சரியகரமானது. தமிழ் மொழிக்கு, அதன் வளர்ச்சிக்கு அருந்தொண்டுகள் செய்த, செய்கிற அறிஞர்களைப் பற்றிய விபரங்களை உலகெங்கும் அறிந்திடச் செய்யும் தென்றலுக்கு மனமார்ந்த நன்றிகள்.

சசிரேகா சம்பத்,
யூனியன் சிட்டி. கலிஃபோர்னியா

*****


தென்றல் அக்டோபர் இதழைப் படித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். தமிழில் இத்தனை தரமான இதழைக் கொண்டுவரும் உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். தூய தமிழில் வளமான உள்ளடக்கத்தோடு வரும் ஒரு நல்ல தமிழ் இதழை, தமிழ்நாட்டிலிருந்து தொலைதூரத்தில் இருக்கும் ஒரு தேசத்தில் வாசிக்கக் கிடைப்பது உற்சாகமூட்டுகிறது.

எஸ்.வி.வி. போன்ற, தமிழ்நாட்டிலேயே மறக்கப்பட்ட பழைய எழுத்தாளர்களை நினைவுக்குக் கொண்டுவருவதைப் பார்க்கவும் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. புதிய எழுத்தாளர்களின் படைப்புக்களைத் தமிழக இதழ்களே ஊக்குவிக்காத இந்த நாளில், சிறுகதை, நாவல் போன்றவற்றை நீங்கள் வெளியிடுகிறீர்கள்.

ரமேஷ் P. கார்க்,
ஃபேர்ஃபாக்ஸ், வர்ஜீனியா

*****

© TamilOnline.com