அரங்கேற்றம்: நிவ்யா வேல் காமத்
ஆகஸ்ட் 23, 2014 அன்று செல்வி நிவ்யா வேல் காமத்தின் பரதநாட்டிய அரங்கேற்றம் Woodside Center of Performing Arts (Woodside, CA) வளாகத்தில் நடைபெற்றது. நிவ்யா ஆறு ஆண்டுகளாக குரு. ஷீர்னி காந்த் அவர்களிடம் நடனம் பயின்று வருகிறார்.

திரு. பாலமுரளி கிருஷ்ணாவின் ஆரபி ராகப் பாடலுடன் சிற்றம்பலவாணனுக்குப் புஷ்பாஞ்சலி செய்து தொடங்கி, பின்னர் 'சந்திரசூடா' என்ற புரந்தரதாசர் கீர்த்தனைக்கு நடனமாடினார். ஜதிஸ்வரத்தில் திரு. லால்குடி ஜெயராமனின் நீலாம்பரி ராக வர்ணத்தில் 'வேலவா என்னை ஆளவா' என்ற பாடலுக்குத் தன் அபிநயம் மற்றும் முத்திரைகளால் சபையோரைக் கட்டிப்போட்டார். இடைவேளைக்குப் பின், வந்த அன்னமாசார்யா கீர்த்தனையில் 'நமோ நமோ' என்று ராமனைத் துதித்து, சீதா சுயம்வரத்தில் ராவணன் வில்லைத் தூக்க முடியாமல் தோற்றபின், ராமன் எளிதாக எடுத்து ஒடித்துச் சீதையை மணந்ததை சிறப்பாக அபிநயித்தார். ஜயதேவர் அஷ்டபதியில், அழகாக அலங்கரித்துக் கொண்டு கண்ணனை எதிர்பார்த்து ஏங்கும் ராதையின் ஏக்கத்தையும், வராத சோகத்தையும் அழகாக வெளிப்படுத்தினார்.

இறுதியாக நிவ்யாவின் பெற்றோர் திரு. ரமேஷ் காமத், திருமதி. அபிராமி நன்றி கூறினர். நிவ்யா, நடனம் தவிரப் பாட்டு, இரண்டு 'அரை மாரத்தான்' ஓட்டங்கள் ஆகியவற்றிலும் பரிசு வாங்கியுள்ளார். கராத்தே பிளாக் பெல்ட் இரண்டாம் நிலை வீராங்கனையும் ஆவார். கூப்பர்டினோ உயர்நிலைப் பள்ளியின் இறுதியாண்டு பயில்கிறார்.

சுபத்ரா பெருமாள்,
கூப்பர்டினோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com