பாரதி தமிழ்ச் சங்கம்: காவ்யா முரளிதரன் பரதநாட்டியம்
ஆகஸ்ட் 31, 2014 அன்று பாரதி தமிழ்ச் சங்கம் காவ்யா முரளிதரனின் பரதநாட்டிய நிகழ்ச்சியை சான்ட கிளாரா நகரின் சனாதன தர்ம கேந்திரா அரங்கத்தில் நடத்தியது. இளம் நாட்டியக் கலைஞர் காவ்யா சென்னை வைணவக் கல்லூரியில் விஷுவல் மீடியா படித்து வருகிறார். நாட்டியப் பேரரசு மதுரை ஆர். முரளிதரன் அவர்களது புதல்வியும், மாணவியும் ஆவார்.

நிகழ்ச்சியில் காவ்யா, புஷ்பாஞ்சலி, சூர்ய கவுத்துவம், மயில் பாடல், மழைப் பாடல், ஹனுமான் பஜனைப் பாடல் ஆகியவற்றுக்கு அற்புதமாக ஆடினார். தில்லானாவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. அவரது தந்தை இயற்றி இசையமைத்த பாடல்களுக்கு அவர் நடனம் ஆடினார். நவரசங்களையும் வெளிப்படுத்தியும், ஒரு சிறகுபோல மிதந்தும் மின்னல் போன்ற ஒளியுடனும் பிரமிக்கத்தக்க வகையில் அவரது நடனம் அமைந்திருந்தது. அனுமன் குறித்த பக்திப் பாடலுக்கும், மழையை வரவேற்கும் பாடலுக்கும் அவரது பாவங்களும் அபிநயங்களும் நடனமும் காண்போரை மயக்க வைத்தன. அபாரமான திறன் உள்ள ஒரு பரதநாட்டிய நட்சத்திரத்தின் சிறப்பான நடனமாக அன்றய நடனம் அமைந்திருந்தது. இப்பகுதி வாழ் நடன ஆசிரியர்களும் மாணவிகளும் ரசிகர்களும் வந்திருந்து, காவ்யாவின் நடனத்தை ரசித்துப் பாராட்டினார்கள்.

நிகழ்ச்சியைத் திருச்சிற்றம்பலம் நடனப்பள்ளி நிறுவனர் தீபா மகாதேவன் தொகுத்தளித்தார். சிறப்பு விருந்தினர்களான குரு இந்துமதி கணேஷ், திருமதி. கவுசல்யா ஹார்ட், திருமதி. கலா ஐயர் ஆகியோர் பாராட்டிப் பேசினார்கள். சங்கத்தின் சார்பாக திருமதி. கெளரி சேஷாத்ரி வரவேற்புரையும், திரு. வெங்கடேஷ் பாபு நன்றியுரையையும் வழங்கினார்கள்.

திருமலைராஜன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com