டெக்சஸ்: சிவகாமியின் சபதம்
செப்டம்பர் 13, 2014 அன்று டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் மெஜஸ்டிக் அரஙகத்திலும், சான் அன்டோனியோ தமிழ்ச்சங்கத்தின் சார்பில், செப்டம்பர் 14 ம் தேதியன்று OLU's Thiry Auditorium அரங்கிலும் மதுரை ஆர். முரளிதரன் இயக்கத்தில் அமரர் கல்கியின் 'சிவகாமியின் சபதம்' நாட்டிய நாடகம் நடந்தது. நூறு பேர் கொண்ட குழுவினருடன் ஆங்கில ப்ராட்வே ஷோவுக்கு நிகராகத் தமிழ்க் காவியம் அரங்கேறியது.

இரட்டைவேடத்தில் முரளிதரன் அவர்களுடன், காவ்யா முரளிதரன், உமா முரளி, எத்தின் அகர்வால், அன்னாசாமி, டாக்டர். ஸ்ரீதரா அக்கிஹெப்பாலு, ரவி சுப்ரமணியன், சுப்ரா சொக்கலிங்கம், அலீனா தாமஸ், கிரிஜா ஆனந்த் என எண்ணற்ற கலைஞர்கள் சிறப்பாகப் பங்கேற்றனர். டாலஸில் வசிக்கும் நடன ஆசிரியர்களான ராதிகா கணேஷ், வந்திதா பரேக், பிரதிபா நடேசன், சூர்யா ரவி உள்ளிட்டோர் 6 மாத காலம் நடனப் பயிற்சி அளித்தனர். டாலஸ் நகரின் மையத்தில் சுமார் 1000 தமிழர்கள் குழுமிவிட்டனர். இடைவேளை நேரத்தில் ஏதோ சென்னை சபாவுக்கு வந்துவிட்டோமோ என்பதுபோலக் காட்சி அளித்தது.

டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொருளாளர் தமிழ்மணி வரவேற்புரை கூறினார். தலைவர் கீதா அருணாச்சலம் நன்றி கூறினார். மதுரை முரளிதரன் ஏற்புரை ஆற்றினார். தலைவர் கீதா அருணாச்சலம், உபதலைவர் செல்வமணி பழனியப்பன், செயலாளர் கஸ்தூரி கோபிநாத், பொருளாளர் தமிழ்மணி கமலநாதன், இணைச்செயலாளர் இளங்கோவன் சிங்காரவேலு, இணைப் பொருளாளர் ராம் ராமனாதன் ஆகியோர் தொண்டர்களின் உதவியோடு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். நிகழ்ச்சியை BIHL HAUS Arts, காவேரி நாட்டிய யோகா மற்றும் Two Hearts Yoga அமைப்புகளுடன் இணைந்து சான் அன்டோனியோ தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

சின்னமணி,
டாலஸ், டெக்சஸ்

© TamilOnline.com