சிகாகோ உலக இசை விழா: சித்ரவீணை ரவிகிரண் மற்றும் கிருத்திகா ராஜகோபாலன்
செப்டம்பர் 13, 2014 அன்று உலக இசை விழா சிகாகோவில் நடைபெற்றது. இதில் சித்ரவீணை என். ரவிகிரணின் மயக்கும் இசைக்கு நடனமணி கிருத்திகா ராஜகோபாலன் அபிநயித்தது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. சுவாதித் திருநாள் பாடலான "வலப்புதால வசமா" பாடலுக்கு காதலனின் பிரிவை நினைத்து, அவன் செய்த சத்தியத்தை நினைவில் வைத்திருப்பான் என்றெண்ணி ஏங்கும் நாயகியாகச் சிறப்பாக ஆடினார்.

அடுத்து பூர்விகல்யாணி ராக இசைக்கு, 'நீ கொடுத்த சத்தியம் என்னவாயிற்று?' என்று அனல் பறக்கக் கோபத்தை வெளிப்படுத்தினார். இந்தியரல்லாதோரையும் பிரமிக்கச் செய்தது இது. ஊத்துக்காடு வேங்கடகவியின் பாடலுக்கு ரவிகிரண் இசையமைக்க, கண்ணனை நினைந்துருகும் ராதையாகக் காதலைப் பொழிந்தார். மல்லாரி மற்றும் தில்லானாவுக்கு நாட்யா டான்ஸ் கம்பெனியின் அனு கரண், சாந்தா நாயர், வித்யா கோவிந்த் ஆகியோர் சிறப்பாக ஆடினர். ரோஹன் கிருஷ்ணமூர்த்தி (மிருதங்கம்), ஆர்த்தி நாதன் (வீணை) ஆகியோர் பக்கம் வாசித்தனர்.

செப்டம்பர் 12ம் தேதியன்று சிகாகோ கலாசார மையத்தில் ரவிகிரணும் கிருத்திகாவும் வழங்கிய "ராகமாலா" நிகழ்ச்சியும் அனைவரையும் கவர்வதாக அமைந்தது. இந்தியரல்லாதார் மிகுந்திருந்த அந்த ரசிகர் கூட்டம் இந்தக் கலைநிகழ்ச்சியை வெகுவாக ரசித்தது. இதில் கௌரவக் கலைஞராகப் பங்கேற்ற கிருத்திகா, ரவிகிரணின் த்விஜாவந்தி ராகத் தில்லானாவுக்கு ஆடினார். இதுவும் உலக இசைவிழாவின் ஓர் அங்கமே. உலகெங்கிலுமிருந்து கலைஞர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இதில் பங்கேற்பது குறிப்பிடத் தக்கது.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com