மாண்டலின் ஸ்ரீனிவாஸ்
கர்நாடக இசையுலகின் பொக்கிஷங்களுள் ஒருவரான மாண்டலின் யு. ஸ்ரீனிவாஸ் (45) சென்னையில் செப்டம்பர் 19, 2014 அன்று காலமானார். ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலகோலு என்ற ஊரில் 1969 பிப்ரவரி 28 அன்று பிறந்த ஸ்ரீனிவாஸ், இளவயது இசைமேதையாகத் திகழ்ந்தார். ஸ்ரீனிவாஸ் முதலில் தந்தையிடமிருந்தும், பின் செம்பையின் சீடர் சுப்பராஜுவிடமும் இசை பயின்றார். ஒன்பது வயதில் குடிவாடா தியாகராஜ ஆராதனையில் இவரது அரங்கேற்றம் நிகழ்ந்தது. (இவருடனான நேர்காணல் வாசிக்க: தென்றல், மார்ச் 2004;) அதுமுதல் வாய்ப்புகள் பெருகின. 1981ல் சென்னைக்குக் குடிபெயர்ந்த ஸ்ரீனிவாஸ், இத்தாலிய இசைக்கருவியான மாண்டலினில் கர்நாடக சங்கீதத்தை வாசித்துப் புகழ்பெற்ற இசைமேதைகளைக் கவர்ந்தார். உலககெங்கும் சுற்றுப் பயணம் செய்தார். 'பத்மஸ்ரீ', 'சங்கீதரத்னா' உள்படப் பல விருதுகளுக்கு இவர் சொந்தக்காரர். கல்லீரல் பாதிப்பால் நோய்வாய்ப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றிக் காலமானார். சாதிக்க இன்னும் எதுவும் இல்லாமலிருக்கலாம். ஆனால் ரசிகர்களுக்காக இன்னும் இருந்திருக்கலாம். இசைமேதைக்கு எமது அஞ்சலி.



© TamilOnline.com