அரங்கேற்றம்: ரூபா ராமநாதன்
ஆகஸ்ட் 2, 2014 அன்று டெட்ராய்ட் மாநகரத்தின் Plymouth Arts Council அரங்கில் செல்வி. ரூபா ராமநாதனின் மேற்கத்திய வயலின் இசை அரங்கேற்றம் நடந்தது. இதற்கு திருமதி. லிண்டா லூகென்ஸ் பியானோவில் பக்கவாத்தியம் இசைத்தார். திரு. ஹை சின் வூ ரூபாவின் ஆசானாவார். அவர் வேய்ன் ஸ்டேட் பல்கலைக்கழக இசைத்துறை சிறப்பு இசையாசிரியர். அவர் Detroit Civic Orchestraவின் சிறப்பு வழிநடத்துபவராக இருப்பதோடு மேற்கத்திய வயலினிசை கற்பித்தும் தருகிறார். நான்கு வயதிலிருந்தே வயலின் கற்றுவரும் ரூபா, பல போட்டிகளிலும் முதல் பரிசைத் தட்டிச் சென்றவர். வயலின் இசைப்பதை வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டுள்ளார். அரங்கேற்ற நிகழ்ச்சியில் செல்வி. ரூபா, ஆறு வித்தியாசமான பாடல்களை இசைத்துப் பாராட்டுப் பெற்றார்.

ஆகஸ்ட் 3 அன்று ரூபாவின் கர்நாடக இசை அரங்கேற்றம், கேன்டன் இந்து கோவிலில் திரு. நெய்வேலி சந்தானகோபாலன் அவர்கள் தலைமையில் நடந்தது. திரு. ஜெயஷங்கர் பாலன் வயலினிலும், திரு. வினோத் சீதாராமன் மிருதங்கத்திலும், திரு. கார்த்திக் வெங்கட்ராமன் கஞ்சிராவிலும் துணை நின்றனர்.

கானடா ராக வர்ணத்தில் கச்சேரியை ரூபா தொடங்கினார். தொடர்ந்து, நெய்வேலி சந்தானகோபாலன் எழுதிய கமல மலரினை என்ற ஹம்சத்வனி ராக கீர்த்தனையைப் பாடினார். பட்டணம் சுப்பிரமணிய ஐயர், முத்துஸ்வாமி தீட்சிதர், ஶ்ரீ தியாகராஜர், பெரியசாமித் தூரன், அருணாசலக் கவிராயர், சுத்தானந்த பாரதியார், அன்னமாசாரியார், சூரதாசர் ஆகியோரின் பாடல்களை ஒரு பல்சுவை விருந்தாகப் படைத்தார். ராகம்-தானம்-பல்லவி காபி ராகத்தில் விஸ்தாரமாகப் பாடி, நெய்வேலி சந்தான கோபாலன் அவர்களின் பல்லவியை விரிவாகப் பாடி, ராகமாலிகையில் வழங்கிப் பாராட்டுப் பெற்றார். மதுரை திரு. T.N. சேஷகோபாலன் அவர்களின் அமீர்கல்யாணி ராகத் தில்லானாவோடு, மங்களம் பாடி நிறைவுசெய்தார்.

ரூபாவின் குரு திருமதி. கஸ்தூரி சிவகுமார் நெய்வேலி சந்தானகோபாலன், சங்கீத கலாநிதி பி. ராஜம் ஐயர் ஆகியோரிடம் கற்றவர். இசைத்துறையில் பட்டமேற்படிப்பைச் சென்னை பல்கலைக் கழகத்தில் முடித்தவர். தற்போது, International Academy Of Indian Music (IAOIM) அமைப்பின் இயக்குனராகச் சங்கீதம் கற்பிக்கிறார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக டாக்டர். B. ராஜன் நடராஜன் வந்திருந்தார்.

ப்ரியா ராமசந்திரன்,
அட்லாண்டா

© TamilOnline.com