வானத்தையாவது விட்டுவிடுங்களேன்
இந்த விமானம்
விண்ணகத்திலிருந்து
மறையலாம்
மண்ணகத்திலிருந்து
மறையலாம்
ஊடகத்திலிருந்தும்
மறையலாம் - நம்
ஞாபகத்திலிருந்து
மறையலாமா?

இவ்வளவு பெரிய
விமானத்தை
விஞ்ஞானத்தால்
எப்படி கண்டுபிடிக்க
இயன்றதென்று
இதுவரை
வியந்தோம்.

ஆனால் இன்று
இவ்வளவு பெரிய
விமானத்தை
விஞ்ஞானத்தால்
எப்படிக் கண்டுபிடிக்க
இயலவில்லை என்று
வியக்கிறோம்.

விழுந்தது வெறும்
விமானமல்ல
239 உயிர்களை
கொண்ட பெரும்
விமானம்

நாம் உண்ணும்
அவசர உணவைப்போல்
இச்செய்தி
இன்னமும்
செரிக்கவில்லை..

தீவிரவாதம்
விளையும்போதே
வேரறுக்க
ஒன்றுகூடா உலக
நாடுகள் - இந்தத்
தீவிரவாத
விளைவின் வேரைக் காண
ஒன்றுகூடியது.

இங்கு விமானம்
வீழ்ந்திருக்காலமென்று
இந்தியப் பெருங்கடலில்
தேடிய இடத்திலெல்லாம்
தேசங்கள் சிந்திய
குப்பைகள்...

இது
கோணிக்குள்
குண்டூசி தேடும்
காரியமல்ல - இது
கோணியையே
தேடும் காரியம்

இது
கடலில் கரைத்த
பெருங்காயமாய்
போய்விடக்கூடாது - இது
நம் உள்ளத்தில்
ஆறாத
பெருங்காயம்

ஆனால்
உண்ணாவிரதத்தை
உடனே விட்டுவிடுங்கள்
நீதி கிடைக்கும்போது
நீங்கள் இருக்க வேண்டும்

விமான நிலையம்
சென்று பெற்றோரை
வரவேற்கும் போதெல்லாம்
இதை நினைத்தால்
உடல் வேர்க்கிறது..

பேருந்திலும்
ரயிலிலும்
குண்டுவைத்து
பூமியைப் பாழாக்கிய
தீவிரவாதிகளே!
அழகான விமானங்கள்
பறக்கும் எங்கள்
வானத்தையாவது
விட்டுவிடுங்களேன்..

குருப்ரசாத் வெங்கடேசன்,
எல்லிகாட் சிடி, மேரிலாந்து

© TamilOnline.com