தெரியுமா?: பெர்க்கலி தமிழ் விரிவுரையாளர்: பாரதி சங்கரராஜுலு
திருமதி. பாரதி சங்கரராஜுலு, பெர்க்கலிப் பல்கலைக்கழகத்தில், செப்டம்பர் 2013ல் தமிழ் விரிவுரையாளராகப் பொறுப்பேற்றார். மதுரையைச் சொந்த ஊராகக் கொண்டவர் இவர். மதுரை ஃபாத்திமா கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ் இலக்கியம் பயின்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் சு. வேங்கடராமன் அவர்கள் மேற்பார்வையில், கரிசல் வட்டார எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் படைப்புகள் குறித்த ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றார். இதழியல், சுற்றுலாவியல், தெலுங்கு இவற்றில் பட்டயப் படிப்பும் கற்றார்.

நூற்றாண்டு கண்ட 'மதுரைக் கல்லூரி'யில் தமிழ் விரிவுரையாளராக ஆறாண்டுகள் பணியாற்றினார். 1991ல், American Institute of Indian Studies அமைப்பில் தமிழ் பயிற்றுநராகப் பொறுப்பேற்று, 2007ல் அந்நிறுவனத்தின் தென்னிந்திய மொழி மையங்களின் இணை இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார். தமிழ் இலக்கியத்திலும் மொழியிலும் அதீத ஈடுபாடு கொண்டுள்ள இவர், 2005ல் வருகைதரு பேராசிரியராக, பெர்க்கிலிப் பல்கலைக்கழகத்திற்கு அழைக்கப் பெற்றிருந்தார்.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில், அமெரிக்க மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இவருக்கு, பெர்க்கலியில் தமிழ் கற்பித்தல் சிறந்த வாய்ப்பாகும். தமிழ் மொழி மற்றும் கலாசார வளமையில் ஆர்வமுள்ளவர்கள் தொடர்புகொள்ளலாம். தம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய ஆயத்தமாக உள்ளார்.

தொடர்புக்கு:
முகவரி
Ms. Bharathy Sankara Rajulu,
Lecturer in Tamil,
Dept. of South & Southeast Asian Studies,
Berkeley CA 94720-2520.
தொலைபேசி - 650-430-2473
மின்னஞ்சல் - bharathy@berkeley.edu

© TamilOnline.com