சாம்பியன்களை உருவாக்கும் நார்த்-சௌத் ஃபவுண்டேஷன்
"எழுமின்! விழுமின்! இலக்கை அடையும்வரை ஓயாது உழைமின்!" என்கிற விவேகானந்தரின் வாக்கைத் தாரக மந்திரமாகக் கொண்டவர் டாக்டர். ரத்னம் சித்தூரி. இந்தியாவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக அவரால் ஆரம்பிக்கப்பட்ட நார்த் சவுத் ஃபவுண்டேஷன் இன்று இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் மேற்படிப்புக்கு உதவுகிறது. இது அமெரிக்காவில் 85 கிளைகளும், இந்தியாவில் 25 கிளைகளும் கொண்டுள்ளது. 1993-94ல் டாக்டர். முரளி கவானி, Spelling Bee, Vocabulary போட்டிகளை NSFல் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து கணிதம் ,விஞ்ஞானம், புவியியல், அறிவாற்றல், கட்டுரை, பேச்சுப்போட்டி என்று விரிவடைந்துள்ளன. இதில் பங்குபெறும் மாணவர்கள் அமெரிக்காவில் நடைபெறும் அனைத்துப் பிரபல போட்டிகளிலும் தேசிய, மாநில அளவில் வெற்றி பெற்று இந்தியருக்குப் பெருமை சேர்க்கின்றனர்.

வெற்றி மேல் வெற்றி.
NSF போட்டி வெற்றியாளர்கள், Scripps Spelling Bee போட்டிகளில் ஏழு வருடங்களும், நேஷனல் ஜியாக்ராஃபிக் புவியியல் போட்டியில் மாநில அளவில் தொடர்ந்து 2 வருடங்களும் வெற்றி பெற்றுள்ளனர். இவ்வமைப்பு தனது வெள்ளி விழாவைக் கொண்டாடும் இவ்வாண்டில் இதன் மாணவர்கள் மாநில அளவில் கணிதம், அறிவியல், புவியியல் மற்றும் பலுக்கல் (spelling) போட்டிகளில் சாம்பியன்ஷிப்களை வென்றுள்ளனர். இவ்வாண்டு Spelling Bee போட்டியில் பங்கேற்ற ஸ்ரீராம் ஹத்வார், கடந்த 52 வருடங்களாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளைச் சொல்லி சாதனை படைத்தார். எட்டாம் வகுப்பு பயிலும் NSF மாணவரான ஸ்வப்னீல் கர்க் 2014 ரேதியான் (Raytheon) கணிதப் போட்டியின் தேசிய வெற்றியாளர். இவர் NSF மூலம் பங்குகொண்ட முதல் போட்டியாளரும் கூட. NSF மாணவர்களான அகில் ரேகுலபள்ளி, அமேயா மஜும்தார் மாநில அளவிலான புவியியல் போட்டியில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர். நடுநிலைப் பள்ளிகளுக்கான அறிவியல் போட்டியில் மாசசூசட்ஸ் மாநிலத்தின் ஸ்னிக்தா அல்லமார்த்தி, அபிஜீத் சம்பங்கி ஜோடி முதலிடம் வகித்துள்ளது.

NSF அறக்கட்டளை இந்திய வம்சாவளியினர் எந்தப் போட்டியையும் எதிர்கொள்ளத் தயார் செய்வது குறிப்பிடத் தக்கது. இவ்வமைப்பு தன்னார்வத் தொண்டர்களால் நடத்தப்படுவதால் இதில் பங்கேற்புக் கட்டணம் குறைவு. அத்தோடு இதன்மூலம் ஈட்டப்படும் தொகை இந்தியாவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகையாகச் செல்கிறது. 1989ம் ஆண்டு ஒரே ஒரு மாணவரில் தொடங்கிய இந்த உதவித்தொகை. 2013-14ல் 2500 க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது. வருடத்திற்கு ஒருவருக்கு $250 வீதம், நான்கு ஆண்டுகளுக்கு $1000 வழங்கப்படுகிறது. 1990ல் பயனடைந்தவர், தானே ஓர் அமைப்பை உருவாக்கி, இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவியிருக்கிறார்.

இதன் தலைவர் டாக்டர்.சித்தூரி "நிறைய தன்னார்வத் தொண்டர்கள் கிடைத்தால் இன்னும் நிறையக் கிளைகள் துவங்க முடியும்" என்கிறார். மேலும் விவரங்களுக்கு:
வலைமனை - www.northsouth.org
மின்னஞ்சல் - Dr. Ratnam Chitturi - chitturi9@gmail.com

செய்திக்குறிப்பிலிருந்து
தமிழாக்கம்: நித்யவதி சுந்தரேஷ்

© TamilOnline.com