அரங்கேற்றம்: திரிவேணி கோர்
ஏப்ரல் 6, 2014 அன்று குரு இந்துமதி கணேஷ் அவர்களின் சிஷ்யை செல்வி. திரிவேணி கோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஒலோனி கல்லூரியில் உள்ள ஜாக்சன் அரங்கில் நடைபெற்றது.

புஷ்பாஞ்சலியைத் தொடர்ந்து அர்த்தநாரீஸ்வரர் ஸ்லோகத்திற்கு ஆடினார். ஜதிஸ்வரமும் பின்னர் வந்த வர்ணமும் அற்புதம். வர்ணத்தில் ஜதி, பாவம், தாளக்கட்டு எல்லாமே சிறப்பாக இருந்தன. கண்ணன், கண்ணனின் காதலி, தாய், தோழியர் என்று பல பாத்திரங்களை மாற்றி மாற்றி அற்புதமாக நடனத்தில் கொண்டு வந்து பாராட்டுகளைப் பெற்றார். தொடர்ந்து 'கிரிதர கோபாலா' என்கிற பாபநாசம் சிவன் பாடலுக்கும், துளசிதாசரின் பாடலுக்கும் ஆடினார். தீமையை அழித்து, தடைகளைக் களையும் துர்க்கையாக ஆடியபின், சிறந்த தாளக்கட்டுடன் தில்லானா ஆடி முடித்தார்.

நிகழ்ச்சியின் சிறப்பம்சம் இதில் பங்கேற்ற கலைஞர்கள் அனைவரும் இங்கேயே பிறந்து வளர்ந்த இளைய தலைமுறையினர் என்பது. ரூபா மகாதேவன் ஆடுபவரின் முகத்தில் இருந்த பாவத்தைக் குரலில் கொண்டு வந்து இனிமையாகப் பாடினார். லக்ஷ்மி பாலசுப்ரமண்யாவின் வயலின் பாட்டுடன் இழைந்தது. மிருதங்கம் வாசித்த ஆதித்யா கணேஷ், கம்பீரமாக வாசித்தார்.

நித்யவதி சுந்தரேஷ்.

© TamilOnline.com