பாரதி வித்யாஸ்ரமம் ஆண்டு விழா
மே 18, 2014 அன்று, நியூ ஹாம்ப்ஷயர் இந்து ஆலயத்தின் கலாசாரப் பள்ளியான "பாரதி வித்யாஸ்ரமம்" தனது மூன்றாவது ஆண்டு விழாவைஆலய அரங்கில் கொண்டாடியது. பால கோகுலம் என்ற பெயருடன் துவக்கப்பட்ட இப்பள்ளி, திரு. லக்ஷ்மி முனுகூரின் தலைமையில், தமிழ், ஹிந்தி, சமஸ்கிருத மொழிகள், கர்நாடக சங்கீதம், யோகாசனம், மற்றும் இந்து சமயம் குறித்த அறிவு போன்ற பல்வேறு அம்சங்களை போதிக்கிறது என்று ஆலய நிறுவனர் திரு. வீரமணி ரங்கநாதன் விளக்கினார்.

பங்கேற்ற ஏராளமான குழந்தைகள் அருமையான நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். "ப்ரணம்ய சிரஸா தேவம்" என்ற விநாயகர் துதியில் ஆரம்பித்து, "தீராத விளையாட்டு பிள்ளை" என்று விஷமக்காரக் கண்ணனின் லீலைகளக் கொண்டாடும் நாட்டியத்துடன் நிறைவுபெற்றது. இந்த விழாவை அழாக நடத்தினார் திரு. பிரேம் ஆனந்த ராவ்.

"வந்தே மாதரம்" பாடலை திருமதி உஷா துவாரக்கின் சங்கீத மாணவர்கள் பாடினர். இந்தி வகுப்பு மாணவர்கள், ஷாருக் கான் நடித்த "My Name is Khan" படத்தின் "ஹம் ஹோங்கே காமியாப்" பாடலை அருமையாகப் பாடினர். தவிர "ஏறு மயிலேறி" (திருப்புகழ்), "பச்சை மயில் வாகனனே" போன்ற தமிழ்ப் பாடல்கள், மகிஷாஸுர மர்த்தினி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், அன்னமாச்சாரியார் கிருதி, ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் இயற்றிய இங்கிலீஸ் நோட்ஸ் என்று பல மொழிகளில் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தினர். திரு. சிவஹரன் துரைராஜா மிருதங்கத்திலும், திருமதி உமா சுப்பிரமணி கீபோர்டிலும் பக்கவாத்திய உதவி அளித்தனர்.

பஞ்சதந்திரக் கதை, தசாவதாரம், "ஃப்ளோரிடாவாழ் தவளை" என்று பல நாடகங்களை சமஸ்கிருத பாரதியின் உதவியுடன் நடத்தப்படும் சமஸ்கிருத வகுப்பு மாணவர்கள் அளித்தனர். உயர்வகுப்பு மாணவர்கள் பகவத் கீதையை தங்கள் கண்ணோட்டத்தில் விளக்கினர். இந்திய காலக் கணக்கில் வரும் யுகம், கல்பம், மன்வந்தரம் போன்ற பதங்களின் அர்த்தங்களை விளக்கும் காட்சி ஒன்றையும் அளித்தனர். திருமதி. லதா தாசரி நடத்திய புராணங்களைப் பற்றிய வினாடி வினா ரசிக்கும்படி இருந்தது. நீல் தனராஜ் என்ற மாணவர் Eagle Scout நிலை பெறுவதற்காகத் தலைமையேற்று நடத்திய ஒரு ஆலயப் பணியைப் பற்றிப் பேசினார். இந்து கலாச்சாரத்தை அறியாத அமெரிக்க மாணவர்களுடன் இவர் உருவாக்கிய ஒரு அழகான மண்டபம், கோவிலின் ஒரு சந்நிதியை இப்பொழுது அலங்கரிக்கிறது. திரு ராயுடு ராயசம் கல்வியின் உண்மையான பலன் அடக்கம் மற்றும் நேர்மை மூலமே அடைய முடியும் என்று "வித்யா ததாதி வினயம்" என்ற சுலோகத்தின் மூலம் விளக்கினார்.

மேலும் அறிய: www.hindutemplenh.org.

அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி,
நியூ ஹாம்ப்ஷயர்

© TamilOnline.com