BATM: முத்தமிழ் விழா
ஜுலை 19, 2014, சனிக்கிழமை அன்று சான் ரமோன் விண்ட்மியர் நடுநிலைப் பள்ளியில் மதியம் 4 மணிக்கு வளைகுடாப் பகுதித் தமிழ் சங்கம் முத்தமிழ் விழாவை ஏற்பாடு செய்துள்ளது.

இதன் சிறப்பு நிகழ்ச்சியாக அம்மாப்பேட்டை திரு. கணேசன் வழங்கும் 'தோல்பாவை கூத்து' என்னும் பழந்தமிழ்க் கலை அமையும். இவருடன் திரு. ஹரிகிருஷ்ணன் வருகிறார்கள். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் (www.fetna.org) 27வது ஆண்டு விழாவில் இக்கலை இடம்பெறவுள்ளது. தமிழின் தனித்தன்மையை நிறுவிய அறிஞர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின் இருநூறாண்டு விழாவாகக் கொண்டாடப் படவிருக்கும் பேரவை விழா இது.

தோல்பாவைகள் மிருகங்களின் தோலைக் கொண்டு செய்து வண்ணம் பூசியவை ஆகும். பின்புலத்தில் இருந்து பாய்ச்சும் ஒளி, பாவையை ஊடுருவி, முன்னே உள்ள வெண்திரையில் விழும். ராமாயணத்தில் அனுமன் தூதுப் படலம், சூர்ப்பனகைப் படலம், நாயன்மார்கள் வரலாறு போன்றவை சிறப்பாகக் காட்சிப்படுத்தப் படுகின்றன. இதை இயக்கும் கலைஞர்களின் குரல் வழியே வெளிப்படும் பாவனைகளும், நகைச்சுவையும் மறக்க முடியாத அனுபவத்தைத் தருவனவாக இருக்கும்.

திரு. கணேசன், வாலிபத்தில் ராவணன், மயில் ராவணன், இரண்யன், கீசகன், துரியன், சைந்தவன் உள்ளிட்ட பெரும் கதாபாத்திரங்களில் நடிக்கத் துவங்கினார். அதன் செயல்முறையில் காலத்துக்கேற்ற புதிய அழகியல், உடல்மொழி, ஆட்ட வகைகளைப் புனைந்து, அவற்றின் தொன்மக் கூறுகள் பிறழாத வண்ணம் நிகழ்த்தி வருகிறார். வேடங்கள் தரிப்பதோடு மத்தளம், பெட்டி வாசிப்பது, தோற்பாவை செய்தல், ஆண் வேடத்திற்குரிய தொழிற்கருவிகள், ஆடையணி வடிவமைத்தல் என்று கணேசனின் கலையாளுமை பன்முகத்தன்மை கொண்டது.

இதையடுத்து வளைகுடாப் பகுதியின் இசையாசிரியரான திரு. அசோக் சுப்பிரமணியம், செல்வி. அனன்யா அசோக் ஆகியோர் இணைந்து 'கவிஞன் கண்ட கனவு' என்ற தமிழிசை நிகழ்ச்சியை வழங்கவுள்ளனர். யுகக்கவியாம் பாரதி இந்திய விடுதலை, அதன்பின் இந்திய மக்கள் எவ்வாறு வாழ்வர் என்றெல்லாம் கண்ட கனவுகளை அவன் கவிதைகள் வாயிலாகக் கூறும் சேர்ந்திசை நிகழ்ச்சி.

இதையடுத்து திரு. அறிவொளி திருவேங்கடம் தலைமையில் விவாதக் களம் 'உண்ண உண்ணத் திகட்டாதது, உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது – சைவமா? அசைவமா?' என்னும் தலைப்பில் நடைபெறும். பின்னர் வரும் 'தமிழில் பேசலாம் வாங்க' நிகழ்ச்சியில் பெரியோரும், குழந்தைகளும் தூய தமிழில் பேசிக் கலக்க ஒரு வாய்ப்பு.

மேலும் விவரங்களுக்கு:
சோலை அழகப்பன் - president@bayareatamilmanram.org
ஆறுமுகம் பேச்சிமுத்து - vp-admin@bayareatamilmanram.org

தில்லை க. குமரன்

© TamilOnline.com