ஹுஸ்டன் தமிழ்ப்பள்ளிகள் ஆண்டுவிழா
மே 24, 2014 அன்று ஹூஸ்டன் தமிழ்ப்பள்ளிகள் பியர்லேண்ட் பகுதியில் ஆண்டு விழாவைக் கொண்டாடின. மாநரத்தின் மிகப்பெரிய தமிழ்ப்பள்ளியான இதில் 235 மாணவர்கள் தமிழ் பயில்கின்றனர். பியர்லேண்ட், கேட்டி, உட்லண்ட்ஸ், வெஸ்ட்ஹெய்மெர் ஆகிய நான்கு கிளைகள் புறநகரப் பகுதிகளில் இயங்குகின்றன. இந்த ஆண்டுவிழா நான்கு கிளைப் பள்ளிகளின் சங்கமம்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. அடுத்து, பள்ளித்தலைவர் முனை. கோபாலகிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தி விழாத் தலைமையேற்று துவக்கி வைத்தார். அவரது உரையில் பள்ளிக்கு உலகத்தரம் வாய்ந்த மதிப்பீட்டுக்குழு (AdvancED) அங்கீகாரம் (Accreditation) வழங்கப் பரிந்துரைத்திருப்பதையும், பள்ளிக்கல்வி நிறுவனம் அண்மையில் டெக்சஸ் மாகாணத்தின் வரிவிலக்குத் தகுதி பெற்றிருப்பதையும் அறிவித்தார். கல்வித்தரக் கட்டுப்பாட்டு முறையின்படி ஒரு தமிழ்ப்பள்ளி அங்கீகாரம் பெறுவது வட அமெரிக்காவில் இதுவே முதல்முறையாகும்.

பின்னர் இளநிலை முதல் நடுநிலை வரையிலான அனைத்து வகுப்புக் குழந்தைகள் ஒன்றன்பின் ஒன்றாக பேச்சு, பாட்டு, நடனம், நாடகம், நகைச்சுவை எனப் பல வகைகளிலும் தமிழ்த்திறனை வெளிப்படுத்தினர். சிறப்பு விருந்தினராக டாலஸ் மெட்ரோபிளக்ஸ் தமிழ்ச்சங்கத் தலைவர் திருமதி. கீதா அருணாச்சலம் வந்திருந்து சிறப்புரை நிகழ்த்தியதோடு, விருதுகளும் வழங்கிச் சிறப்பித்தார்.

தமிழ்த்திறன் போட்டி, வகுப்புத்தேர்வுகளில் முதன்மை இடம்பெற்ற பள்ளி மாணாக்கர்களுக்கு அவரவர் வகுப்பு ஆசிரியர்கள் விருதுகள் வழங்கினர். இறுதியாக விழா ஒருங்கிணைப்பாளர் திரு. கரு. மாணிக்கவாசகம் நன்றியுரை வழங்க நிறைவடைந்தது.

கரு. மாணிக்கவாசகம்,
ஹூஸ்டன், டெக்சஸ்

© TamilOnline.com