தமிழ் நாடு அறக்கட்டளை மாநாடு
தமிழ் நாடு அறக்கட்டளையும் சிகாகோ தமிழ்ச் சங்கமும் முறையே தமது 40 ஆண்டு மற்றும் 45 ஆண்டு நிறைவுகளை மே மாதம் 24, 25 தேதிகளில் சிகாகோவின் செயின்ட் சார்ல்ஸ் நகரில், ஃபெசன்ட் ரன் ரிசார்ட் என்னுமிடத்தில் சிறப்பாக நடத்தின. மாநாட்டின் மையக்கருத்து 'ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்பதாக இருந்தது.

திருவிளக்கேற்றி, தமிழ்த்தாய் வாழ்த்து, பாரதம் மற்றும் அமெரிக்க தேசிய கீதங்களோடு விழா துவங்கியது. அறக்கட்டளைத் தலைவர் திரு. P.K. அறவாழி வரவேற்றுப் பேசினார். சிகாகோ தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. சோமு, அறக்கட்டளையின் சிகாகோ பிரிவுத் தலைவர் திரு. வீரா வேணுகோபால் ஆகியோர் மாநாட்டின் அவசியத்தை விளக்கிப் பேசினர்.

இரண்டு நாள் நிகழ்ச்சிகளையும் சின்னத்திரை புகழ் தீபக் மற்றும் அர்ச்சனா நகைச்சுவை கலந்து தொகுத்து வழங்கினர். சிகாகோ பகுதி இந்திய தலைமை தூதுவர் ஔசஃப் சயீத் தொடக்க விழாப் பேருரை அளித்தார். தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் திருமதி. வெங்கடேஸ்வரி சுப்பிரமணி விழா மலரை வெளியிட அதை அறக்கட்டளை முன்னாள் தலைவர் C.K. மோகனம் பெற்றுக்கொண்டார். மலரின் ஆசிரியர் மணி குணசேகரன் இளந் தலைமுறையினரின் படைப்புகள் இடம் பெற்றுள்ளதே இந்த மலரின் சிறப்பு என்று கூறினார்.

'பெண்: அன்றும் இன்றும்' என்ற தலைப்பில் முன்னாள் சென்னை ராணி மேரி கல்லூரிப் பேராசிரியர் தமிழச்சி தங்கபாண்டியன் உரையாற்றினார்.

சிகாகோ இளையோர் 'Tamil Nadu's Got Talent' நிகழ்ச்சி மூலம் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். திரு. Y.G. மகேந்திரா, சிகாகோ திரிவேணி கலைக்குழுவுடன் இணைந்து 'சுதேசி ஐயா' என்ற நாடகத்தை அளித்தார். அதைத் தொடர்ந்து, 'சங்கத்திலிருந்து 'சிலிகான்' பள்ளத்தாக்கு வரை' என்ற ஒத்திசையை (symphony) சின்சின்னாடியைச் சேர்ந்த இசையமைப்பாளர் திரு. கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரன் வழங்கினார். தமிழகத்திரை உலகின் புதுமணத் தம்பதிகள் ஸ்நேகா, ப்ரசன்னா நட்சத்திர இரவினைச் சிறப்பாக்கினர்.

இரண்டவது நாள், மருத்துவத் தொடர்கல்விச் சொற்பொழிவுகள், இளையவர் குழுவின் 'பணியிடத் தலைமை', பெண்கள் அவையினரின் 'யோகா பயிலரங்கு', 'சத்துள்ள உணவுண்டு சொத்துடன் வாழ்', 'பெண்களின் நலமும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தலும்' ஆகியவை இடம்பெற்றன.

ஆசிரியர். லேனா தமிழ்வாணன் 'தமிழ் இனி மெல்ல வாழும்', கவிஞர். மகுடேசுவரன் 'இன்றைய வாழ்க்கை முறையில் திருக்குறள்', திருமதி. மேகலா இராமமூர்த்தியின் 'திரைப்படப் பாடல்களில் இலக்கியத் தாக்கம்', முனைவர். இராமமூர்த்தியின் 'தமிழ்த் திரையுலகம்–ஒரு பார்வை' ஆகிய சொற்பொழிவுகள் மக்களைக் கவர்ந்தன.
'கவிநேரம்' பகுதியில், கவிஞர்கள் மகுடேஸ்வரன், தமிழச்சி தங்கபாண்டியன், கோம்ஸ் கணபதி, ஆனந்த் அனந்தன் ஆகியோர் கவிதை வழங்கினர். தொடர்ந்து சிகாகோ தமிழ்ச் சங்க உறுப்பினர் நடன நிகழ்ச்சி ஒன்றை வழங்கினர்.

சங்கத்தின் 45 ஆண்டு பயணத்தை துணைத்தலைவர் திரு. சாக்ரடீஸ் பொன்னுசாமி படவடிவில் காட்டினார். அறக்கட்டளையின் பணிகளைத் திரு. சஞ்சீவி வேணுகோபால், திருமதி. கவிதா, திருமதி. மன்மதா தேவி, திருமதி. வசுமதி, திரு. சோமலெ சோமசுந்தரம், திரு. ராம்மோகன் ஆகியோர் எடுத்துக்கூறினர். டெக்சஸ் மாநிலத்தைச் சேர்ந்த சங்கவை, தன் நடன அரங்கேற்றத்தில் பரிசுப் பொருளுக்கு மாற்றாக TNF-ABC விருதுநகர் திட்டத்துக்குக் காசோலையாகத் தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். சாந்தி மற்றும் பிரீத்தி பாஸ்கர், பிறந்த நாள் பரிசுகளைத் தமிழ்நாடு கிராம நூல்நிலையங்களுக்குத் தருவதற்குப் புத்தகங்களாக தருமாறு வேண்டினர். இண்டியானபொலிஸ் பகுதியைச் சேர்ந்த நேகா மற்றும் சரவணன், வாழ்த்து அட்டைகளை வடிவமைத்து விற்பனை செய்து கிடைத்த 1000 டாலர்களை சீர்காழியில் உள்ள அன்பாலயம் அமைப்பிற்குக் கொடுத்துள்ளனர். அறக்கட்டளையின் தனித்தகுதிப் பரிசு (Excellence Award) லேயா (Laia) அறக்கட்டளை மூலம் தமிழத்தில் தொண்டு செய்துவரும் திரு. லூயிஸ் காம்படேவுக்குத் திரு. ராம் துக்காராம் வழங்கினார்.

உச்சக்கட்டமாக பாடகர் கார்த்திக்கின் மெல்லிசை நிகழ்ச்சி அமைந்தது. சக்திஸ்ரீ மற்றும் மாளவிகாவுடன் சேர்ந்து அவர் மெலடி, குத்துப் பாடல்கள் என அரங்கத்தில் இசைமழை பொழிந்தார். திரு. P.K. அறவாழி மற்றும் திரு. சோமு திரு நன்றி கூறினர். மாநாட்டுக் குழுவினர் சிறப்பான விழாவை நடத்திய கையோடு கணிசமான தொகையொன்றையும் வழங்கியபோது வந்திருந்தோர் கண்களில் நிறைவும் பெருமிதமும் ஒளிர்ந்தது.

ஒரு மாணவருக்கு ஓர் ஆண்டிற்கான கல்விச்செலவு $99 மட்டுமே. நன்கொடை தர விரும்புவோர் www.tnfconvention.org வலையகம் மூலம் கொடுக்கலாம்.

மணி குணசேகரன்,
சென்னி இந்திரராஜ், சிகாகோ, இல்லினாய்

© TamilOnline.com