என் வழியே நான்.....
சினம் எனும் சிலம்பு
என்று கழன்று கொள்ளும்?
கர்ணனின் கவச குண்டலமா
உதிரம் கொட்ட அரிந்துவிட...
விரயமானது என்ன
கை நழுவிய நாணயங்களா
கட்டிக் காத்த மௌனமா

ஒவ்வொரு செயலுக்கும்
எதிர்ச்செயல் உண்டு

கனமில்லாத எழுதுகோலும்
நிலைகுலைய வைக்கும்
நிலை நிறுத்தும்
எழுத்தின் வீச்சு...
கலைஞர்கள் இல்லையெனில்
மானுடம் என்னாவது?

மெலிதாக ஆடும் ஊஞ்சலும்
வேப்பமரக் காற்றும்
கனமில்லாத எழுதுகோலும்

வேறென்ன வேண்டும் வாழ்வில்?
சுயநலம்தான். மறுக்கவில்லை

ஆனால் நான்
யார் உயிரையும் எடுக்கவில்லை
யார் கனவையும் நசுக்கவில்லை
யார் நிலத்தையும் பறிக்கவில்லை

என் வழியே நான்.

சிவசுந்தரி போஸ்

© TamilOnline.com